Search This Blog

26.3.09

பெரியார் அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது?




பெரியார் பதவி, புகழைப்பற்றி கவலைப்படாததால்தான்
அவருடைய சிந்தனை எல்லா துறைகளிலும் வெற்றி கண்டது

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழர்தலைவர் விளக்கம்


தந்தை பெரியார் பதவியைப் பற்றி, புகழைப் பற்றிக் கவலைப்படாததால் தான் அவருடைய சிந்தனை எல்லா துறைகளிலும் எல்லையில்லாமல் சென்று வெற்றி கண்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரை யாற்றினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 6.2.09 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நம்முடைய பேராசிரியர் அரசு அவர்கள் சொன்னபொழுது புத்தரைச்சுட்டிக்காட்டினார்.

புத்தருடைய ஜாதகக் கதைகள்என்பதிலே கூட, பல அற்புதங்கள், பல அதிசயங்கள் இவை கள் எல்லாம் இருந்தன என்று சொல்லி, புத்தரையே மகாவிஷ்ணுவினுடைய ஒன்பதாவது அவதாரமாக ஆக்கிவிட்டார்கள். எனவே தான் இந்த ஆபத்து இருக்கக் கூடிய இந்த நிலையிலே துணிந்து பல்வேறு கருத்துகளை எடுத்து வைக்கின்ற நேரத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகள் ஒவ்வொரு துறையிலும் எடுத்துச்சொல்லப்பட வேண்டும். இளைஞர்கள் மத்தியிலே எடுத்து வைக்க வேண்டும். அது விவாதப் பொருளாக ஆக வேண்டும். விவாதப் பொருள் ஆனால்தான் அறிவுப்பூர்வமான சிந்தனை வரும்.

தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பத்திலும் சரி, முடிவிலும் சரி எப்படி பேச்சைத் துவக்கி முடிப்பார்கள் என்பது இந்த அவையிலே இருப்பவர்களுகுத் தெரியும்.

பெரியாரைப் பார்த்த தலைமுறை, பெரியாரைக் கேட்ட தலைமுறை, பெரியாரைப் பார்க்காத தலைமுறை, பெரியாரைக் கேட்காத தலை முறை எல்லாம் கலந்திருக்கின்ற நிலையிலே இப்பொழுது பார்த்த தலைமுறையினருக்கும் கேட்ட தலைமுறையினருக்கும் தெரிந்த செய்தி.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார். நான் சொல்லுகிறேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று தான் அவருடைய பேச்சை தொடங்குவார்கள்.

உங்களுடைய அறிவு என்ன சொல்கிறது? உங்களுடைய பகுத்தறிவு என்ன சொல்கிறது? என்று சொல்லி அதைத் துவங்குவார்கள்.

அதேபோல முடிக்கும் பொழுது நான் இவ்வளவு நேரம் பேசினேன் நீங்கள் கேட்டீர்கள். உங் களுக்கு உடன்பாடானால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் நான் சொன்னேன் என்பதற்காக நம்ப வேண்டிய அவசியமில்லை என்று சொல்லுவார்.

எனவே தன்னுடைய கருத்தாக இருந்தாலும், அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான் சொன்னேன் என்பதற்காக எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சொல்லுவார்கள்.

எனவே தன்னுடைய கருத்தாக இருந்தாலும், சுதந்திர அறிவுக்கு முக்கி யத்துவம் கொடுத்து சிந்திக்க வேண்டும் என்று கருதிய காரணத்தால் தான் ஒவ்வொரு கருத்தும் ஆழமாக இருந்தது.
நான் இந்த நேரத்திலே ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

அடுத்து அய்யா வா. செ. குழந்தைசாமி அவர்கள் ஆழமான கருத்துகளுடன் உரையாற்ற இருக்கின்றார்கள். அண்மையிலே தந்தை பெரியார் அவர்களுடைய பிரபல எழுத்துகளை, உரைகளைக் கொண்டு பகுத்தறிவு ஏன்? எதற்கு? என்று ஒரு நூலை நாங்கள் வெளி யிட்டோம். இது தமிழ் நாட்டிலே பல ஆயிரக் கணக்கிலே பல பதிப்புகளாக இந்த நூல் பரப்பப்பட்டன, குறுகிய காலத்திற்குள்ளாக. மனிதனுக்குப் பகுத்தறிவு ஏன்? எதற்காக? என்று விளக்கியிருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்களுடைய பார்வையே முற்றிலும் மாறுபட்ட பார்வையாக இருக்கிறது. எது பகுத்தறிவு என்று விளக்கமெலாம் சொன்ன பிற்பாடுகூட அந்தப் பகுத்தறிவினாலே மனிதன் எவ்வளவு தொல்லைப் படக்கூடியவனாக ஆகிறானே என்று ஒரு தனித்தன்மையோடு கூட அவர்கள் சிந்தித்து சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தொரு வாய்ப்பாக அமைத்துவிட்டார்கள்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கொடுமைகள் இருக்கின்றன சமுதாயத்திலே. பகுத்தறிவு என்றால் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்று இவைகளை எல்லாம் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கத்திலே பகுத்தறிவை மதம் எப்படி அடிமைப்படுத்துகிறது என்றெல்லாம் விளக்கிச் சொல்லிக் கொண்டே வருகின்ற நேரத்திலே ஒரு பகுதியிலே தந்தை பெரியார் அவர்கள் மிக அற்புதமாகச் சொல்லுகின்றார்.

பகுத்தறிவால் மனிதன் தொல்லைப்படுகின்றான் என்று எழுதியிருக்கின்றார். இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. பகுத்தறிவு மனிதனுக்குத் தேவை. பகுத்தறிவு ஆழமானது. ஆனால் அதே பகுத்தறிவினாலே மனிதன் எப்படித் தொல்லைப்படுகின்றான் என்பதை பல கருத்துகளோடு தனித்தன்மையோடு அவர்கள் சொல்லு கின்றார்கள்.

ஒரே ஒரு பகுதியை மட்டும் சொல்லுகின்றேன். அய்யா அவர்கள் சொல்லுகிறார். பகுத்தறி வில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை.

தன் இனத்தை கீழ்மைப்படுத்துவது இல்லை. தன் இனத்தின் உழைப்பாலேயே வாழ்வ தில்லை. தன் இனத்தின் மீதே சவாரி செய்ததில்லை. எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார்கள் பாருங்கள். பகுத்தறிவு உள்ள மனிதன் தன் இனத்தை சீர்படுத்துகின்றான். அதற்கும் அவன் கருத்தையே பயன் படுத்தியிருக்கின்றான் - வருத்துகிறான். வாகனமாய்- உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து தன் இனத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான்.

பாடுபட ஒரு கூட்டமாகவும், பயன் அனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரித்துக் கொள்ளுகிறான்.

உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கிற இழிவான மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, முதலியார் ஜாதி என்கிற பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கம்தான் தன் இனத்தையே பிரித்து பிரிவுபடுத்துகிறது.

பகுத்தறிவின் பயன் இதுவாக இருக்கும் பொழுது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன் மையானவன் மனிதன் என்று எப்படி சொல்ல முடியும்? என்று தந்தை பெரியார் அவர்கள் ஆழமான கேள்வியைத் தொடுத்தார்.
எதிர்பார்க்காத கேள்வி-மற்றவர்களுக்கு இல்லாத பகுத் தறிவு அதற்கு இருக்கிற தென்று. ஆனால் அந்தப் பகுத்தறிவு எதற்குப் பயன்பட்டது? எல்லா வற்றிற்கும் நல்லதிற்கே பயன்பட்டதா? அல்லது புதிய சமுதாயத்தை உரு வாக்குவதற்கே பயன் பட்டதா? என்று ஒரு கேள்வி கேட்டுவிட்டுச் சொல்லுகின்றார்கள்.

மனிதன் மீது மனிதன் சவாரி செய்கிறான். மனி தன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளு கிறான். மனிதனை மனி தன் வஞ்சிக்கிறான். பகுத் தறிவின் பயன் இதுவாக இருக்கும்பொழுது பகுத் தறிவு இருப்பதாலேயே மேன்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்?

பொதுவாகவே மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தியும் கொண்டதாகவே இருக்கிறது என்று சொல்லுகின்றான்.

தந்தை பெரியார் அவர்களுடைய பார்வை ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக அல்ல. தந்தை பெரியார் அவர்களுடைய பார்வை விசாலப் பார்வை.

விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை. என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக்கமே எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது? சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? என்ற தலைப்பில் ஒரு நூல் வெளிவந்திருக் கிறது.

தந்தை பெரியார் அவர்கள் எழுதி 1932, 1935இல் வெளிவந்த கட்டுரைகளை எல்லாம் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இந்த நூலிலே தந்தை பெரியார் அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிருக்கின்றார். இதை ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் குறுக்கிக் கொள்ள முடியாது. மனித வர்க்கம் எங்கு இருக்கின்றதோ அந்த மனிதனுடைய சிந்தனைக்கு மனிதன் என்று சொன்னாலே சுயமரி யாதை உடையவன் என்ற அளவிலே வருகிற பொழுது உலகளாவிய இயக்கம் என்ற தத்துவத்தை இன்றும் பிரதிபலிக்கின்றார்கள்.


பொதுவாகவே, மனித வாழ்க்கையில் தன்மை மிக்க குறைபாடும், கவலையும் அதிருப்தியும் கொண்டதாகவே இருக் கிறது. இந்தக்குணம் எல்லா தேசத்திலும் எல்லா மனிதர்களிடமும் அரசன்-குடிகள், பணக் காரன்-ஏழை, மேல் ஜாதிக்காரன்-கீழ் ஜாதிக் காரன், முதலாளி- தொழி லாளி என்கிற பேதங் களாக எல்லா மக்களி டமும் இருந்து வந்தது.

அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லா மல் பகுத்தறிவு இருந்தும் மனிதன் ஏன் இத்தன் மையில் இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடைதான் தந்தை பெரியார் அவர்களு டைய 95 ஆண்டுகால வாழ்க்கையின் விளைவு. தந்தை பெரியார் அவர் களுடைய சிந்தனை. அவர்களுடைய உழைப்பு. அவர்களுடைய முனைப்பு. தந்தை பெரியார் அவர்கள் பல்கலைக் கழகத்திற்குச் செல்லவில்லையே என்று நான் முதலில் சொன்னேன்.

அதுதான் அவர்களுடைய பலம் -அதுதான் அவர்கள் பெற்ற ஆற்றல். நாம் எல்லாம் பட்டதாரிகள் தான். வெளிப்படையாக ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நம்முடைய சிந்தனை என்பது ஒரு வட்டத்திற்குள்ளே ஒரு வளையத்திற்குள்ளே தான் இருக் கும். அதைத் தாண்டுவதற்கு அவ்வளவு துணிவு வருவதில்லை. எவ்வளவுக் கெவ்வளவு அதிகம் படிக் கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு துணிவு குறைவு.

ஆனால் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையிலே ஒப்பற்ற சுயசிந்தனை யாளராக ஆனதிற்குக் காரணம் எதைப் பற்றியும் கவலை இல்லை. பதவியா அது எனக்குத் தேவையில்லை. புகழா? அதை நான் விரும்பாதவன், கெட்டபெயரா? நான் எடுக்க விரும்புவது என்ற தெளிவான ஒரு நிலையிலே இருந்து மக்கள் பின்னாலே நான் செல்ல மாட்டேன். என் பின்னாலே மக்கள் வர வேண்டும். அது தான் ஒரு புதிய உலகத்தை உரு வாக்குவதற்கு அடித்தளம்.

எனவே மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலையில்லை. எப்படி யிருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

இப்படிப் பேசினால் திருப்தி அடைவார்கள் என்று அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

எதை எடுத்துக்கொண்டாலும், எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனை நுழையாத இடமே இல்லை. எல்லாவற்றைப் பற்றியும் அவர்கள் சிந்தித்திருக்கின்றார்கள். எல்லாவற்றைப் பற்றியும் பேசி யிருக்கின்றார்கள். எல்லா வற்றையும் ஆய்வு செய்திருக்கின்றார்கள். நீங்கள் எந்தப் பிரச்சினையைக் கேட்டாலும், தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்துகள் இன்றைக்கு வாழ்க்கைக்கு நடை முறைக்கு வருகின்றன.

கே.என்.பணிக்கர் இண்டியன் ஹிஸ்ட்ரி காங்கிரஸ் என்ற தலைப்பில் 6வது நிகழ்ச்சியிலே கேரளப் பல்கலைக் கழகத்தில் அவர்கள் தலைமை தாங்கி ஆற்றிய உரையிலே ஒரு கருத்தைச் சொல்லுகின்றார்.

Culture as a right of struggle - பண்பாட்டுத் துறையே ஒரு போராட்டம். இதில் யாரெல்லாம் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்கள் பிற்போக்குத் தனமாகவும் ஈடுபட்டிருக் கின்றார்கள். அதே நேரத்திலே பிற்போக்குத் தனம் இல்லாமல் எதிர்த்துச் சொல்லக்கூடியவர்களும் சமுதாயத்திலே இருக் கிறார்கள். இந்த தளத்தைப் பயன்படுத்தியவர்கள் என்ற வரலாற்றுப் பேராசிரியர்கள் வரலாற்று ஆய்வு நடத்தக் கூடிய நிலையிலே 69-வது காங்கிரஸ் நிகழ்ச்சியிலே பணிக்கர் அவர்கள் சொல்லு கின்றார்கள். கேரளாவில் இருக்கின்றவர்களுக்குத் தெரியாத செய்திகளைச் சொல்லுகின்றார்.

----------------தொடரும் ..."விடுதலை" 25-3-2009

0 comments: