Search This Blog

5.3.09

உலக மகளிர் நாள் கொண்டாடுபவர்களின் சிந்தனைக்கு...


மகளிர் நாள் சிந்தனை


*இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம சொத்துரிமை வேண்டும்.

-----------26 27.5.1928-இல் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாட்டுத் தீர்மானம்.


*பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலையில் பெண்களையே அதிகமாக நியமிக்கவேண்டும். ஆரம்பப்பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும்.

*ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை இருப்பதுபோலவே எல்லாப் பெண்களுக்கும் புருஷன் இறந்துபோனால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை வேண்டும்.

*ஒவ்வொரு வாலிபர்களும் கூடுமானவரை தங்களுக்கு ஏற்ற விதவைகளையே விவாகம் செய்துகொள்ள வேண்டும்.


-------------------17,18.2.1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்றமுதல் சுயமரியாதை மாநில மாநாட்டுத் தீர்மானம்


*சொத்தில் உரிமைப் பாத்தியம் குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளல் இவற்றில் ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமை தேவை.

*மணமக்களுக்குள் வாழ்க்கை நடத்துவதில் கசப்புணர்வுகள் வந்தால் அவர்கள் விவாகத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றவேண்டும்.

*பெண்களுக்கு விலை கொடுக்கும் வழக்கம் ஒழியவேண்டும்.



-----------------7 8.4.1931-இல் செட்டிமார் நாட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம்


*பெண்கள் உண்மையான விடுதலையும் சுதந்திரமும் சமதர்ம ஒழுக்கமும் பெறவேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ள பிள்ளைகளைப் பெறுதல் என்னும் கர்ப்பத்தை அடக்கி ஆளவேண்டும்.

---------------- 8, 9.8.1931-இல் விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதைப் பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்


*விவாகங்களைப் பதிவு செய்யவேண்டும்.

*சென்னையில் உள்ள விதவைகள் விடுதியில் பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும் தனிச்சலுகை இருப்பதை மாற்றவேண்டும்.

*பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங்களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரிசமமான பிரதிநிதித்துவமும் கிடைக்கும்படி செய்யவேண்டும்.


------------------ 30,31.3.1935-இல் விருதுநகரில் முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டுத் தீர்மானம்


*சர் ஹரி சிங்கோர் அவர்கள் விவாகரத்துச் சம்பந்தமாய் இந்திய சட்டசபையில் கொண்டுவர இருக்கும் சட்டத்தை ஆதரிக்கிறோம். பொது ஜனங்களும் இந்தச் சட்டத்தை வெகுவாக ஆதரிக்கவேண்டும்.

---------------- 2.12.1933 இல் சிவகங்கை சுயமரியாதை மாநாடு

*பெண்களின் திருமண வயது 16-க்குமேல் இருக்கவேண்டும்.


--------------------20.11.1943-இல் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதே மாதிரிதான் இவை எல்லாம்.ஒரு சொட்டு ரத்தத்தில் உடலின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பதுபோல ஒரு சில தீர்மானங்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று கொண்டாடப்படுகிறதே - அத்தகைய அமைப்புகளுக்கு திராவிடர் கழகத்திற்கென்று உள்ள இத்தகைய பின்பலமும் வரலாற்றுப் பெருமையும் சாதனைகளும் இருக்க முடியுமா? கண்டிப்பாக இல்லை - இல்லவே இல்லை. கற்பனை செய்துகூடப் பார்க்கப்பட முடியாத காலங்களில் பகுத்தறிவுப் பகலவனின் ஒளியில் பூத்த கருத்து மின்னல் பூக்கள் இவை.இந்தத் தீர்மானங்கள் சிலவற்றை இன்றைக்குக் கூட சீரணிக்க முடியாத அளவுக்கு ரத்தக் குழாய் வெடிப்புக்கு ஆளாவோர் உண்டு. தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்களோ அவரின் காலத்தை வெல்லும் வேக ஓட்டத்தில் போகிற போக்கில் உதிர்ந்துவிட்டுச் சென்றவை இவை!உலக மகளிர் நாள் கொண்டாடும் அன்பர்கள் அமைப்புகள் அரசுகள் இந்த இயக்கத்தின் சீர்மையை உள்வாங்கிக் கொண்டு உரத்த பார்வையோடு மக்களிடம் இச் சிந்தனைகளை கொண்டு செல்ல ஒத்துழைப்பார்களா? உலக மகளிர் நாளில் கழகம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்.



--------------------நன்றி - "விடுதலை" -08-03-07

0 comments: