Search This Blog

8.8.09

பிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்! ஆபாசமா?




பிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்!



கடவுள்களில் முதன்மைப் பெற்றதும், மக்களிடம் மிக செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக்கொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது இதனை கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இது போன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பது உண்டு.

நிற்க;

இந்தப் பிள்ளையார் என்ணும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்துக்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதற் கடவுளாக வணங்குவதுமாக இப்போது அமலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புக்கொள்ளக்கூடியதும், அதிக செல்வாக்குள்ளதும், முதற்கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைச் சற்று கவனிப்போம்.

1. ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்துக்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும் அது உடனே ஆண் குழந்தையாகி விட்டதாகவும், அந்த ஆண்குழந்தையைப் பார்த்து - நான் குளித்து விட்டு வெளியில் வரும் வரை யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லி அதை வாயிலில் காவலாக உட்கார வைத்ததாகவும், அந்தச் சமயத்தில் பார்வதியின் புருஷனாகிய பரமசிவன் வீட்டுக்குள் புகுந்ததாகவும் அழுக்குருண்டையான வாயிற்காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக் கூடாது என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்கு கோபம் ஏற்பட்டு தன்கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக்கீழே தள்ளி விட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி பரமசிவனைப் பார்த்து, காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்? என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன் என்று சொன்னதாகவும் இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஒட்டவைத்து உயிர் கொடுக்கலாம் எனக்கருதித் உடனே வெளியில் வந்து பார்க்க, வெட்டுண்ட தலையே காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகின்றது. இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்களும் இருக்கின்றனவாம்.


2. ஒரு காட்டில் ஆண் பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் - பார்வதியும் கண்டு கலவி நினைவு ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்றிருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்றுவடிவமாகச் சென்று அக்கருச்சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாகப் பார்வதி யானையின் தலையைவைத்து உயிர் உண்டாக்கிக் குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்தகுமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் கணபதியின் தலையை வெட்டி விட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டிவைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப்பரணி என்னும் புத்தகத்தில் இருக்கின்றதாம்.


எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ, பார்வதிக்கோ மகனாகப் பிரசவிக்கப்பட்டவர் என்பதும், அந்தப் பிள்ளையாருக்கு யானைத் தலை செயற்கையால் ஏற்பட்டது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தின் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படிப் பலவிதமாகச் சொல்லப்படுவதும் அவைகளிலும் எல்லாவிதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு,வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்தால், மற்றக் கடவுள்கள் சங்கதியைப் பற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க;

ஒரு கடவுளுக்குத் தாய்தகப்பன் ஏற்பட்டால், அந்தத் தாய் தகப்பன்களான கடவுள் களுக்கும் தாய் தகப்பன்கள் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளைப் பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புக் கொள்ள முடியும் ? ஆகவே, இந்தக் கடவுள்களும், உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கின்றது.

கடவுளைப் பற்றிய விவரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்த மற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாகவே யுண்டானவர் என்று சொல்லுவதும், மற்றும் அது ஒரு சக்தி என்றும், கூறுவதும் ஒரு தன்மை அல்லது குணம் என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களைக் கோடி கோடியாக உண்டாக்கிக் அவைகளுக்கு இதுபோன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாகக் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்கள் நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள் தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம்; சிதம்பரம் கோயிலில் யானை முகங் கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக் காட்சிக்குத் தினமும் முறைப்படி பூஜையும் நடந்துவருகின்றது. பல ஆண் பெண் பக்தர்கள் அதைத் தரிசித்து கும்பிட்டும் வருகின்றார்கள்.
சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் புகுத்தி அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டிருப்பது போலவும், அந்தப் பெண் இரண்டு காலையும் அகட்டிக் கொண்டு அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டிருக்கிறது.





இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, ஏதோ ஒரு அரசனுடன் மற்றொரு கடவுள் யுத்தம் செய்ததாகவும், அந்த யுத்தத்தில் தோன்றிய அந்தக்கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவு சூரர்கள் அசுரப் ஸ்திரீயின் பெண் குறியிலிருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல் பல லட்சக்கணக்காக வந்து கொண்டேயிருந்ததாகவும் இதையறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், ஈசல் புற்றிலிருந்து கரடி ஈசல்களை உறிஞ்சுவது போல், தனது தும்பிக்கையை அந்தப் ஸ்திரீயின் பெண் குறிக்குள்விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாகச் சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரியான காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளையெல்லாம் கடவுள் என்று சொல்லும் ஆஸ்திகர்கள் என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கிறோம்.


எவனோ ஒருவன் ஒருகாலத்தில் இப்படி எழுதி விட்டான் என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினமும் அவ்வெழுத்துக் கொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா? அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாகத் தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்லுவதானால், இவைகளுக்குத் தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்கவில்லையா? என்பது போன்றவைகளைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம்.

சீர்திருத்தக்காரர்கள் அப்படி இருக்கவேண்டும், இப்படி இருக்கவேண்டும் என்றும், மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து, கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் வக்காலத்து பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன் வந்தார்களா? என்று கேட்கின்றோம்.

இவற்றையெல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிது கவலையில்லா விட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கிற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் விவாதத்துக்கும், ஆராய்சிக்கும், குறைவில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாசங்களை யெல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக் கொண்டு இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுளையும், எந்தச் சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்வோம்.


----------------சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தந்தைபெரியார் அவர்கள் 26.8.1928 குடியரசு இதழில் எழுதியது

0 comments: