Search This Blog

31.8.09

தந்தைபெரியார் -கலைவாணர்(என்.எஸ். கிருஷ்ணன்) ஒரு பார்வை



நாகரிகக் கோமாளி

இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்

--------------------(குடிஅரசு 11.11.1944)
கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு _ வரைபடம் இது.

அந்தப் புகழுக்குரிய நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (1957).

சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கலைக் கோட்டம் அவர்.





கலைவாணரின் கொள்கை என்ன? 1952 தென்றல் பொங்கல் மலரில் அவரே சொல்லுகிறார்:

வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?

விடை: இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றாலும் பரவாயில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது, விரும்புவது சுயமரியாதைக்கட்சிதான்.

வினா: உங்கள் கொள்கை என்ன?

விடை: ஆதி முதல் குடிஅரசு கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரிகைகளை நான் படித்து வந்தேன்; அப்போது நான் சிறுவ. நாடகக் கம்பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும் நாடகத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

வினா: உங்கள் முடிவு?

விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.


கலைவாணரின் இந்தப் பதிலைப் படிக்கும்போது என்.எஸ்.கே. அவர்களைப்பற்றி தந்தை பெரியார் கணித்ததன் உண்மை புரியும்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்வார்களே _ அது கலைவாணர் அவர்களுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். யார் பையன்? என்ற ஒரு திரைப்படம்.

கலைவாணரின் துணைவியார் டி.ஏ. மதுரம் ஒரு கீழ் ஜாதிக்காரருக்குத் தண்ணீர் கொடுப்பார். அவரும் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைத் திண்ணையில் வைப்பார். டி.ஏ. மதுரம் உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பாத்திரத்தின்மீது தெளித்து, அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்லுவார். சிறிது நேரம் கழித்து ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் கலைவாணரிடம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; கலைவாணர் என்ன செய்தார்? அந்த ரூபாய் நோட்டுகள்மீது தண்ணீரை ஊற்றுவார். அய்யயோ பணம் எல்லாம் பாழாய்ப் போச்சே! என்று மதுரம் கத்துவார். தாழ்த்தப்பட்டவர்கள் கொண்டு வந்து கொடுத்த நோட்டாச்சே அதை உயர்ந்த ஜாதிக்காரர்களான நாம் கையால் தொட்டால் தீட்டாச்சே! என்பார்.
என்னே நையாண்டி! இவர்தான் நம் கலைவாணர். வாழ்க! வாழ்கவே!!


--------------- மயிலாடன் அவர்கள் 30-8-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: