Search This Blog

27.11.08

நமது குறிக்கோள்




திராவிட மன்னர்கள்

தருமராஜன் போல் நாட்டைச் சூதாட்டத்தில் தோற்றதில்லை.
அரிச்சந்திரன் போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை.

திராவிடக் கவிஞர்கள்


அதல சுதல பாதாளமென அண்டம் புளுக எழுதவில்லை.
கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டவில்லை.
காலடியில் புரண்டு தொழுதால் கடாட்சம் என்று கூறவில்லை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றனர்.

திராவிடர்

உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை.
உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை.
சூது, சூட்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை.
சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர்.

திராவிடம்

அன்னிய ஆட்சிக்கு அடிமைப் பட்டிருக்கவில்லை.
பஞ்சமும், பிணியும், பதைப்பும் கண்டதில்லை.
பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சகித்ததில்லை.
உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில்.

திராவிடம்: இன்று

திராவிட மன்னர்கள் மறைந்தனர்; மக்கள் பண்பை மறந்தனர்.
வீரம் கருகிவிட்டது! வீணருக்கு ஆதிக்கம் ஏற்பட்டது.
திராவிடக் கலைக்கும் மொழிகட்கும் மதிப்பில்லை.
திராவிடத் தொழில் தூங்குகிறது. திராவிடன் தேம்புகிறான்.
திராவிடச் செல்வம் கோயிலில், கொடி மரத்தில், கொட்டு முழக்கில், வெட்டி வேலையில், வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது.
திராவிடன், தேயிலை - கரும்பு - ரப்பர் தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகிறான்.
திராவிட நாட்டிலே, மூலை முடுக்குகளிலெல்லாம் மார்வாடிக் கடைகள், குஜராத்திகளின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்களின் கம்பெனிகள்.

பெரிய வியாபாரங்கள் எல்லாம் வட நாட்டாரிடம்.

தொழிற்சாலைகளிலே, துரைமார்கள் இல்லை - பனியாக்கள்!

டால்மியாவுக்குத் திருச்சிக்குப் பக்கத்திலே நகரமே இருக்கிறது.

ஆஷர் சேட்களுக்கு திருப்பூர் - கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கட்டியம் கூற வேண்டிய நிலைமை.

சென்னையிலே, சவுகார்பேட்டை இருக்கிறது பாரத் பாங்க் இருக்கிறது.

தினம் ஒலிக்கும் மணி. ஒரு வடநாட்டு கோயங்கா உடையது.

சென்னையில் பெரிய கட்டடங்கள் இன்று வடநாட்டாருக்குச் சொந்தம்!

இந்நிலையில் உள்ள திராவிடத்திலே, ஆடை முதல் ஆணிவரை, வட நாட்டிலிருந்து வருகிறது, வருகிறது என்னும்போது, ஏராளமான பணம் இங்கிருந்து வடநாட்டுக்குப் போகிறது என்று பொருள்.

வளம் இழந்து, இருக்கும் கொஞ்சம் நஞ்சம் வளத்தையும் வடநாட்டுக்குக் கொட்டி அழுதுவிட்டு, வறுமைப் பிணியுடன் வாடும் திராவிடம் தலைதூக்க, அதன் மக்களுக்கு முழு வாழ்வு கிடைக்க, வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ளவர்கள் திரும்பி வர, வாழ்க்கைத் தரம் உயர, திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது திட்டம் தவிர வேறு திட்டம் இல்லை!

பொருளாதாரத்தையே அடிப்படையில் கொண்ட இப்பிரச்சினையை, வெறும் கட்சிக் கண்களுடன் நோக்காமல், நாட்டுப்பற்று நிரம்பிய கண் கொண்டு காணும்படி, திராவிடர் கழகத்தைச் சாராத அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தலையிலே பிரி பிரியாக வர்ணத் துணியைச் சுற்றிக் கொண்டு, போர் போராக உள்ள சாமான்களின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு, வட்டிக் கணக்கைப் பார்த்துக் கொண்டே வயிற்றைத் தடவிக் கொண்டுள்ள மார்வாரியையும் பாருங்கள், பாரம் நிறைந்த வண்டியை, மாட்டுக்குப் பதிலாக இழுத்துச் செல்லும் தமிழனையும் பாருங்கள்! மெருகு கலையாத மோட்டாரில் பவனிவரும் சேட்டுகளையும் பாருங்கள், கூலி வேலைக்கு வெளிநாடு செல்ல, கிழிந்த ஆடையும், வறண்ட தலையும், ஒளியிழந்த கண்களும் கொண்ட தமிழன், கப்பல் டிக்கட்டுக்குக் காத்துக் கொண்டிருக்கும் காட்சியையும் காணுங்கள். இங்கே பச்சைப் பசேலென்று உள்ள நஞ்சை புஞ்சையையும் பாருங்கள். அதே போது நடக்கவும் சக்தியற்று, பசியால் மெலிந்துள்ள தமிழர்களையும் பாருங்கள் - எங்களை மறந்து இந்தக் காட்சிகளைக் காணுங்கள். நாங்கள் கூறுகிறோம் ஒரு திட்டம் என்பதைக் கூட மறந்து - நீங்களாக யோசித்து ஒரு திட்டம் கூறுங்கள். பண்டைப் பெருமையுடன் இருந்த ஒரு நாடு பல்வேறு வளங்கள் நிரம்பிய நாடு, இன்று வடநாட்டுடன் இணைக்கப்பட்டு, இப்படி வதைபடுவது நியாயமா? இந்த இணைப்பிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று தனி அரசு நடத்தி, நாட்டு வளத்தைப் பெருக்கி அந்த வளம் நாட்டு மக்களுக்கே பயன்படும்படிச் செய்வது குற்றமா? அதற்கு திராவிட நாடு திராவிடர்க்கே என்பதன்றி வேறென்ன திட்டம் இருக்க முடியும்? இருந்தால் கூறுங்கள்!

------------------- பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

2 comments:

E.Parthiban said...

முதல் முதல் பிரிவினையை தமிழ் மக்கள் மனதில் துண்டிய கட்டுரைகள்.
இந்தியாவின் இறையாண்மையும், ஒரு தேசமாய் இருக்கவேண்டிய நம்மை கலங்க படுத்திய நயவஞ்சக சொற்கள் .....அண்ணாவின் சொற்கள்.

தமிழ் ஓவியா said...

பிரிவினையைத்தூண்டியது அண்னாவா? பார்ப்பனர்களா? என்பது பற்ரித்தான் அண்ணாவின் கட்டுரையே, அதையே தாங்கள் புரிந்து கொள்ளாமல் அதி புத்திசாலி அண்ணாச்சியாக நயவஞ்சகச் சொற்களைப் பயன்டுத்தியுள்ளீர்கள்.

பிரிவினையை தூண்டப்பட்டதற்கு யார் காரணம் என்பது பற்றி அறிந்து கொள்ள இந்த வலைப்பூவில் உள்ள கட்டுரகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

தங்களின் வருகைக்கு நன்றி.