Search This Blog

29.11.08

பெரியார், அம்பேத்கர், ராம் மனோலோகியா கருத்துக்களின் அடிப் படையிலேயே மண்டல் பரிந்துரை


எத்தகையவரை இழந்தோம்?



யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் இன்று மறைந்திருக்கலாம். (27.11.2008 பிற்பகல் 2.45 மணிக்கு டில்லியில் அப்பலோ மருத்துவமனையில் மரணமுற்றார்).

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் நிலை நிறுத்திய செயல்பாடுகள் அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கச் செய்யும்.

அவர் எத்தகைய மனிதர்? அவரால் அளிக்கப்பட்ட பேட்டியை (சன் ஒளிபரப்பு 16,17.9.1995) ஒளிபரப்பியது. அதில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அவரின் உயர்நிலையையும் தன்னடக்கத் தையும் தன்னிலை விளக்கத்தையும் பறையடித்துக் கொண்டேயிருக்கும்.

கேள்வி: இந்த தேசத்தைப்பற்றி மிகுந்த கவலையோடு பேசுகிறீர்கள். ஆழ்ந்த அறிவோடு பேசுகிறீர்கள். தொடர்ந்து சமூக சேவையில், பொதுத் தொண்டில் ஈடுபட ஆவல் என்று கூறு கிறீர்கள். ஆனால் இந்த நூற்றாண்டின் இறுதிவரையில் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள். நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்? தந்தை பெரியாரைப் போல சமூக சீர்திருத்தவாதியாக மாறப் போகிறீர்களா? உங்களுடைய திட்டம் என்ன?

பதில்
: தந்தை பெரியார் ஓர் மாபெரும் மனிதர். தந்தை பெரியார் ஒரு மகத்தான வீரர். சமூகப் புரட்சியாளர். அவரோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் ஒரு சாமான்யன். நாம் இல்லை என்றால் இந்த உலகம் இருக்காது என்கிற வெற்று மாயையில் யாரும் இருக்க வேண்டாம். எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் பூமியின் சுழற்சி நிற்கப் போவதில்லை. நாளையே ஒரு விபத்தில் என் உயிர் போகலாம். நான் இல்லை என்பதற்காக எது நிற்கப் போகிறது? அரசியலுக்கு என்னுடைய 38-ஆவது வயதில் எனது சகோதரர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவருக்கு துணையாகச் சென் றேன். விஞ்ஞானம் படிக்க வேண்டும்; கவிதை, ஓவியம் பயில வேண்டும். பூமிதான் இயக்கத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள்தான் சிறுவயதில் என்னை ஆட் கொண்டிருந்தன. நம் மனது எதை விரும்புகிறதோ அதை செய்வது பெரும் மகிழ்ச்சிக்குரியது. எனக்கு இப்போது 64 வயது ஆகிறது. நான் சிறு வயதில் ஆசைப்பட்டதை இப்போதே செய்ய நினைக்கிறேன். அரசியலி லிருந்து நான் ஓய்வு பெற முடியாது. தேர்தலில் போட்டியிடா விட்டாலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க இயலாது. அரசியலுக்காக நான் ஒதுக்கும் நேரம் குறைவாக இருக்கும்; அவ்வளவுதான். மனது எதில் லயிக்கிறதோ அதைச் செய்து விடுவது இன்பம். சாவின் விளிம்பில் இதைச் செய்ய விரும்பினோம்; ஆனால் முடியவில்லை என்று வருந்துவதைவிட, வாழ்கின்ற நாளில் நாமும் எண்ணியதைச் செய்து முடித்திடல் வேண்டும். இப்போது ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது போன்றவற்றிற்குக் கூடுதல் நேரம் அளித்து செயல் படுகின்றேன். எனது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகளைப் பார்த்து விட்டேன், புதிதாக என்ன வேண்டும்?

என்மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு எனது நன்றி; வாழ்த்துகள் என்றார் வி.பி.சிங்.

இவர் பிரதமராக இருந்த காலம் ஓராண்டுகூட அல்ல; ஆனாலும் அய்யாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட அடிமைச் சங்கிலி ஒன்றுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர் அவர்;அதற்காக அவர் கொடுத்த விலை

பிரதமர் பதவியை இழந்ததாகும்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மிக அழகாகவே சொன்னார்! அது மண்டலுக்காகக் கொடுக் கப்பட்ட விலை என்றார். முன்பின் அறியாத அந்த நிலையிலேயே திராவிடர் கழகம் அதன் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள் மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்கைப் பார்வையில் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.

இந்த மாமனிதர் மண்ணுக்குள் போய் விட்டது என்று மகிழ்ச்சி வெள்ளத்திலே திளைத்திருந்த கூட்டத்தின் ஆசையை மண் மூடப் போகச் செய்வார் என்ற நம்பிக்கை இருந்ததுதான் அதற்குக் காரணம்.

மாண்புமிகு பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) அவர்கள் நாடாளுமன்றத்தின் வரலாற்றில் என்றும் வீறு கொண்டு நிற்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் (7.8.1990)

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு அளிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு!

இந்த அறிவிப்புக்கு இரு நாள்களுக்குமுன் (5.8.1990) ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் களின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு தந்தி அனுப்பினார். மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல் செய்யப்படுவதன் அவசியத்தை விளக்கும் தந்தி அது.

பெரியார் பெயரை உச்சரித்த பிரதமர்

பெரியார், அம்பேத்கர் ராம் மனோலோகியா ஆகியோர் வற்புறுத்திய கருத்துக்களின் அடிப் படையில்தான் மண்டல் பரிந்துரை அமலாக்கப் பட்டிருக்கிறது என்றார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் வி.பி. சிங் (9.8.1990) நன்றி உணர்ச்சியோடு மட்டுமல்ல - வரலாற்றுக் காரணத்தோடும் இப்பெரு மக்களின் பெயரை உச்சரித்து நாடாளுமன்றத்தில் பதிவும் செய்தார்.

சென்னையில் பிரதமர்

பிரதமர் பொறுப்பேற்ற மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் 3.2.1990 அன்று மாலை சென்னை வந்தார்.

விமான நிலையத்திருந்து திறந்த ஜீப்பால் - முதல் அமைச்சர் கலைஞருடன், வழி நெடுக அளித்த மக்களின் வரவேற்பை ஏற்று சென்னை பெரியார் திடலுக்கு வந்தார். ஜனதா தளம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அது.

பெரியார்திடலில் பொன்னாடை போர்த்தி பிரதமரை வரவேற்றார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி. மண்டல் குழுப் பரிந்துரைகளில் இடம் பெற்ற முக்கிய பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றினை பிரதமரிடம் அளித்தார் கழகப் பொதுச் செயலாளர் மேடையிலேயே அதன் முக்கிய பகுதிகளைப் படித்த பிரதமர் தன் உரையில் மண்டல் குழுப் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

சொன்னபடியே அமலாக்கும் அறிவிப்பினையும்

நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் (7.8.1990). பிரதமர் வி.பி. சிங் அவர்களின் இந்த அறிவிப்பு - இந்துத்துவா வாதிகளை நிலை குலையச் செய்துவிட்டது. நாம் வெளியி லிருந்து ஆதரவு கொடுப்பதன் காரணமாகவே ஆட்சியில் இருப்பவர்கள், நம் ஆதிக்கத்துக்கே உலை வைத்து விட்டார்களே - மண்ணுக்குள் போன மண்டலை வெளியில் கொண்டு வந்து உயிர்ப்பித்து விட்டாரே என்கிற ஆத்திரம் அவர்களை புரண்டுப் புரண்டு படுக்கச் செய்தது.

ஆட்சியை விட்டு கீழே தள்ளி விட வேண்டியதுதான்; ஆனாலும் ஒரு கஷ்டம் - மக்கள் தொகையில் 52 சதவீதம் உள்ள பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்தது காரணமாகவே ஆட்சியைக் கவிழ்த்தது விட்டனர் என்ற அவப் பெயர் வந்து சேருமே, தேர்தலில் பெரும்பான்மையினரான அம்மக்கள் தக்க வகையில் பாடம் கற்பித்து விடுவார்களே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுத்தது!

என்ன செய்யலாம்? யோசித்தார்கள், ஆம் அவர்களுக்கு ஒன்று பிடிபட்டது. அதுதான் அயோத்தியில் ராமன் கோயி லைக் கட்ட வேண்டும் என்ப தற்காக அத்வானி தலைமையிலே ரத யாத்திரை என்று அறிவித்தனர் - அவ்வாறும் செய்தனர் - செல்லும் வழிகளில் எல்லாம் மதக் கலவரம் என்ற தீயை மூட்டவும் செய்தனர்.

ரத யாத்திரையைத் தடுத்தார் உ.பி முதல்அமைச்சர் முலாயம் சிங் - அத்வானியையும் கைது செய்தனர் என்று காரணம் காட்டி - ஆடு ஓநாய்க் கதையாக - வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவினை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

இவர்களின் சூழ்ச்சியினை அறியாதவரா அந்த மண்டல் நாயகர்? அதனை அவர் அம்பலப் படுத்தி விட்டார். 7.11.1990 அன்று இரவு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குகள் கோரி பிரதமர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் ஆற்றிய உரை காலத்தை வென்று நிற்கக் கூடியதாகும்.

மண்டல் பரிந்துரையை அமல்படுத்த முயன்றதுதான் எல்லாவற்றுக்குமே அடிப்படைக் காரணம். அதை நேரடியாக எதிர்க்க முடியாத சக்திகள் வேறு காரணங்களைக் காட்டி திரை மறைவிலிருந்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு செயல்பட்டனர் என்று அவையிலேயே கூறினார் பிரதமர் வி.பி. சிங்.

நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 142 வாக்குகளும் எதிராக 346 வாக்குகளும் கிடைத்தன.

எதிர்த்து வாக்களித்தவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

காங்கிரஸ்,

பாரதிய ஜனதா

அதிருப்தி ஜனதா தள உறுப் பினர்கள்

அஇஅதிமுக

அகாலிதளம்(மான்) (நடுநிலை வகித்தது)

பகுஜன் சமாஜ்கட்சி (நடு நிலை வகித்தது)

திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று இன்றைக்குக்கூட சொல்லிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கோரும் அத்தீர் மானத்தில் பேசிய பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பா.ஜ.க.வை நோக்கி மட்டுமல்ல - நாட்டை நோக்கி வைத்தது நறுக்கான கேள்விகள் நான்கு.

1) ஒரு சமூகத்தின் மத நம்பிக்கை அரசியல் சட்டத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமா?

2) மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மதப் பிரிவினரும் அணி திரளும் முயற்சி இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமா?

3) மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைப்பதற்கு நாம் வழி திறந்திட வேண்டுமா?

4) இந்த நாட்டில் ஒருமைப்பாடு உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை காப்பாற்ற வேண்டாமா?

இந்த நான்கு கேள்விகளும் அன்று மட்டுமல்ல - இன்றைக்கும் விடை காணப்பட வேண்டியவை அல்லவா?

எந்த பா.ஜ.க.வை நோக்கி 1990 நவம்பர் 7-இல் நாடாளுமன்றத் தில் வி.பி. சிங் வினா எழுப்பினாரோ - அதே பா.ஜ.க. அந்தக் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மூடு திரை போட்டு வாக்காளர்களைச் சந்திக்கவும் இருக்கிறது.

மாண்புமிகு வி.பி. சிங்கின் உடல் இன்றைக்கு எரிக்கப்படு கிறது. ஆனால் அவர் எழுப்பிய வினா உயிருடன் ஓங்கி நிற்கிறது; மதவாதச் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் எனும் அபாய சிகப்பு விளக்கு அந்த நான்கு வினாக்கள் என்ற தம்பத்தில் ஒளியை உமிழ்ந்து கொண்டு தானிருக்கின்றன.

அறிவைச் சொன்னவர்களுக்கு மரணம் என்ற ஒன்று கிடையாதே!

பதவி விலகும்போதுகூட...

பதவி விலகும்போதுகூட அவர் காட்டிய பண்பாடு அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடமாகும்.

மரியாதையோடு ஆட்சியை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம். அதற்காகப் பெருமைப்படுகிறோம். அரசியல் நாள்காட்டிகளில் கடைசி தேதி எதுவும் கிடையாது என்று சொன்னரே!

அடடே, எத்தகைய மாமனிதர் அவர். அவர் விட்டுச் சென்ற எச்சம் இது.

தன்னை முதுகில் குத்தி அவரைத் தொடர்ந்து பிரதமர் நாற்காலியைப் பிடித்த சந்திரசேகர் பதவி ஏற்ற விழாவில்கூட, தன் துணைவியாருடன் கலந்து கொண்ட கண்ணிய மனிதர் வி.பி.சிங்!

இதுவும் நம் அரசியல்வாதிகளுக்கு அவர் விட்டுச் சென்ற மாபெரும் கருவூலமே!

இலட்சியத்துக்காக பதவியைப் பறிகொடுத்த அந்த மனிதர் இப்பொழுது மாமனிதராக காட்சியளிக்கிறார். அவரை புதுடில்லியில் வீட்டில் சந்தித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புகழ் மாலையைச் சூட்டினாரே - தமிழ்நாட்டுக்கு வர அழைப்பும் கொடுத்தாரே (12.11.1990) பதவியைத் தூக்கி எறிந்த 4-ஆம் நாள்)

தமிழ்நாட்டில் மறு மாதமே (டிசம்பரில்) முதல் அமைச்சர் கலைஞர் அவர்களுடன் இணைந்து ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அந்தக் கூட்டங்களில் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், திராவிட இயக்கத்தைப் பற்றியும் அவர் உதிர்த்த அனைத்தும் மணி முத்துகள் ஆகும்.

கோடானு கோடி சூத்திரர்களில் நானும் ஒருவன் என்று விருது நகரிலே வீர முழக்கமிட்டார் ("விடுதலை" 12.12.1990)

சமூக நீதியை நிலை நாட்டுவதற்காக ஆயிரம் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று விழுப் புரத்திலே வீறு கொண்டெழுந்து பேசினார் ("விடுதலை" 9.12.1990)

வகுப்புரிமையைக் காத்திட நூறு அரசுகளையும் தியாகம் செய்வோம் என்று நெல்லையிலே நெற்றியடி கொடுத்தார் ("விடுதலை" 11.12.1990)

நாம் எப்படிப்பட்ட மாணிக்கக் குன்றை -கொள்கைச் செங்கோலை - அரசியல் ஞானியை - இழந்து நிற்கிறோம் என்பதை இப்பொழுது நினைத்துப் பாருங்கள் அதன் கனபரிமாணம் புரியும்.


------------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் - "விடுத்லை" ஞாயிறுமலர் 29-11-2008

2 comments:

அது சரி(18185106603874041862) said...

//
திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று இன்றைக்குக்கூட சொல்லிக் கொண்டிருக்கும் அஇஅதிமுக சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
//

அதே ஜெயலலிதாவுக்கு உங்கள் தலைவர், மானமிகு வீரமணி "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டம் வழங்கியதும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்..இல்லாவிட்டால் உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா!

என்ன சமூக நீதியோ, என்ன மானமோ! உண்மையில் வீரமணியின் அகராதியில் மானம், சமூக நீதி என்பதற்கு என்ன பொருள்???

தமிழ் ஓவியா said...

அது சரி சரியாகப் புரிந்து கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதலாமா?


இங்கு ஒன்றை நன்கு க்அவனிக்க வேண்டும்

"சமூகநீதியை நிலை நாட்டிய ஒரு ஆட்சியை மதவாத சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு கவிழ்த்ததை தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்."

மதவாதச் சக்திகளுடன் யார் கை கோத்தாளும் எதிர்க்கத்தான் செய்வார்கள்.

இதே வகையில் கலைஞரையும் எதிர்த்தார்களே.

சமூக நீதிக்காகா யார் பாடுபட்டாலும் பாரட்ட வேண்டியதும் ஒரு நல்ல செயல்தானே.