Search This Blog

24.11.08

முசுலிம் குல்லாய் அணிவதும், தாடி வளர்ப்பதும், கிறித்துவர்கள் சிலுவைக்குறி அணிவதும் அடுத்தவர்களை இழிவுபடுத்துகிறதா?


மொட்டைத் தலைக்கும் - முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுவது ஏன்?


எம்மதமும் சம்மதம் என வாழ்ந்த திருநாட்டில் எதற்காக நெற்றிக்குறி? நெடிய பூணூல் என்று கவிதை எழுதிய கருணாநிதியால் சட்டமியற்றி அதைத் தடை செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி என்ன பதில் எழுதுகிறார்?

குல்லாய் அணிவது, தாடி வளர்ப்பது, சிலுவைக் குறி அணிவது போன்றவற்றை முதல்வர் ஆட்சேபிக்க மாட்டாரே என்று எழுதியுள்ளார். (துக்ளக், 26.11.2008).

பூணூல் அணிவது என்பது பார்ப்பான் துவிஜாதி - (இரு பிறப் பாளன்) பிரம்மாவின் நெற்றியில் பிறந்த உயர்ஜாதி என்பதற்கான ஆணவத்தின் சின்னம்.

இந்து மதத்தில் உள்ள நான்காவது பிரிவான சூத்திரர்களுக்கு சாஸ்திர ரீதியாகப் பூணூல் அணிய அதிகாரம் கிடையாது.

பூணூல் அணியும் பிராமணன் பிரம்மாவின் நெற்றியில் பிறந் தவன். பூணூல் அணிய அதிகாரமற்ற சூத்திரனோ பிரம்மாவின் காலில் பிறந்த நான்காம் ஜாதி - பார்ப்பனர்களின் வைப்பாட்டி மகன்.
பூணூல் அணியும் பார்ப்பான் உயர்ஜாதி என்றும், பூணூல் அணியாத சூத்திரர்களை இழிவான ஜாதி என்றும் பறைசாற்றும் ஜாதித் திமிரின் சின்னம்தான் பூணூல்!
இதைத்தான் முதலமைச்சர் கலைஞர் கவிதையில் குறிப்பிடுகிறார்.

முசுலிம் குல்லாய் அணிவதும், தாடி வளர்ப்பதும், கிறித்துவர்கள் சிலுவைக்குறி அணிவதும் அடுத்தவர்களை இழிவுபடுத்தும் சின்னங்கள் அல்லவே!

அப்படியிருக்கும்பொழுது திருவாளர் சோ அய்யர் வாள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது ஏன்?

--------------------நன்றி: "விடுதலை" 24-11-2008

7 comments:

Nilavan said...

மிகச் சரியான நெத்தியடி..

Unknown said...

திருநீறு பூசுவதும், திருமண் இட்டுகொள்வதும் சாதி தொடர்புடையவை அல்ல.
அது போல் முப்புரி நூலையும் இந்துக்கள் யாரும் அணிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

//முப்புரி நூலையும் இந்துக்கள் யாரும் அணிந்து கொள்ளலாம்.//

பூணுல் அணிவது தொடர்பாக ஏற்கனவே நடந்த விவாங்களை தருகிறேன். படியுங்கள் உண்மையை உணருங்கள்.


"பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியாரும் இந்து மதத்தில் சமதகுதி உடையவர்கள்தானா?

அண்ணா தி.மு.க.வும் - தொழில் எழுத்தாளர்களும்

அண்ணா தி.மு.க. என்ற ஒரு அரசியல் கட்சியில் அண்ணாவின் கொள்கை மருந்துக்கும் இல்லை என்பதை பல நேரங்களிலும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். தந்தை பெரியார் அவர்களின் பெயரை சம்பிரதாய ரீதியில் உச்சரித்தாலும், அய்யாவின் கொள்கைப் பக்கம் தலைவைத்துப் படுக்கக்கூட அச்சப்படுகின்ற அமைப்பாக அது உருக்குலைந்த ஒன்றாகும்.

அதுவும் அக்கட்சிக்குப் பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய அம்மையார் தம்மை பச்சையாகப் பார்ப்பனப் பெண் என்று அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு அக்கிரகார தி.மு.க. என்று பெயரிட்டுக் கொண்டால் மிகவும் பொருத்தமானதாகவே இருக்கும்.

மண் சோறு சாப்பிடுவது வரை சென்றுவிட்டவர்களைப்பற்றி வேறு எப்படித்தான் கணிக்க முடியும்?

இந்த நிலையில், பகுத்தறிவுக் கருத்துக்களை யாரேனும் எடுத்துக் கூறினால், சமதர்மச் சிந்தனைகளை எவராது எழுதினால், அது ஏதோ வேண்டத்தகாத ஒரு பொருளாக அந்தக் கட்சியின் எழுத் தாளர்களுக்கு, பேச்சாளர்களுக்குத் தோன்றுவதாகத் தெரிகிறது.

மனிதனுக்குப் பகுத்தறிவு இருந்தும் அதனைப் பக்திப் பூட்டுப் போட்டு அழுத்தமாகப் பூட்டி வைத்திருப்பதால் பகுத்தறிவு என்பது அவர்களுக்கு ஒவ்வாமையாகவே ஆகிவிட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்,

எதற்காக நெற்றிக் குறி? நெடிய பூணூல்?

என்று முரசொலியில் (6.11.2008) உரைநடைக் கவிதை எழுதிவிட்டாராம்.

அண்ணா தி.மு.க.வின் கட்சிச் சுற்றறிக்கை போல பயன்படும் நமது எம்.ஜி.ஆர். ஏட்டில், ஒரு எழுத்தாளர் அதனைப் பிடித்துக்கொண்டு கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

பிராமணர்கள் மட்டுமா பூணூல் போடுகிறார்கள்? வேறு ஜாதியினர் போடுவதில்லையா? என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான் அது. சூத்திரர்களுக்குப் பூணூல் போட இந்து மத சாத்திரத்தில் எங்குமே இடமில்லை.

இதுகுறித்து மனுதர்ம சாத்திரம் அத்தியாயம் 2; சுலோகம் 44 என்ன கூறுகிறது?

பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு க்ஷணப்ப நாரினாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகப் பூணூல் தரிக்க வேண்டியது என்றுதான் கூறப்பட் டுள்ளதே தவிர, சூத்திரர்களுக்குச் சொல்லப்படவில்லையே!

நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் எழுதும் எழுத்தாளர் குறிப்பிடுகிறாரே, கிராமப் பகுதிகளில் யார் யார் எல்லாம் பூணூல் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்டுகிறாரே, அவர் களுக்குப் பூணூல் போட அருகதையில்லை என்பது மனுதர்ம சாத்திரத்தின்மூலம் தெரிந்துகொள்வாராக!

அவர் கூறுவதை விவாதத்துக்காக ஏற்றுக்கொண்டாலும், பூணூல் போடும் பார்ப்பானும், பூணூல் போடும் செட்டியாரும் இந்து மதத்தில் சமதகுதி உடையவர்கள்தானா?

கோயில் கருவறைக்குள் பூணூல் போடும் பார்ப்பான்தான் போக முடியுமே தவிர, பூணூல் போட்ட செட்டியாரோ, ஆசாரியாரோ செல்ல முடிவதில்லையே! இந்த வேறுபாட்டைத்தான் கலைஞர் சுட்டிக் காட்டுகிறார்? மனிதன் பிறவியில் பிறப்பின் அடிப்படையில் ஏன் இந்தப் பேதம் என்ற வினாவை எழுப்புகிறார்.

பெரியார் கொள்கையை, அண்ணா கொள்கையைத் தெரிந்து கொண்டவர்கள்தான் அ.இ.அ.தி.மு.க.வில் இருக்கவேண்டும் என்று கட்சி ஒரு நிபந்தனையை வைத்தால், இவர்கள் எல்லாம் துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று ஓட்டம் பிடிக்கவேண்டியதுதான்.

காலமெல்லாம் திராவிட இயக்கத்தைத் திட்டித் தீர்த்தவர்களுக்கு அண்ணா தி.மு.க. ஒரு புகலிடமாக ஆகிவிட்டது என்பதுதான் வேதனை!

எல்லாம் கழகம்தான், அதில் பல பிரிவுகள் ஏன்? கொடிகளில் ஏன் வேறுபாடு என்று புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக் கொண்டு, கேள்வியை எழுப்பியுள்ளார்.

கட்சிகள் கொள்கைகளால், அணுகுமுறைகளால் வேறுபட்டு நிற்கின்றன? அதனால் பல பெயர்கள் - பல கொடிகள் இருக்கின்றன.

ஆனால், ஒரே இந்து மதத்துக்குள் - இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்குள் பிராமணன் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்றும், பிரம்மா இந்த உலகத்தைப் பிராமணனுக்காகப் படைத்தான் என்றும், சூத்திரன் அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காகப் படைக்கப்பட்டவன் என்றும் கூறப்படுகிறதே! இந்தப் பிறவி ஏற்றத் தாழ்வை ஏற்றுக்கொள்ள முடியுமா என்கிற கேள்விக்கு - கட்சிகள் பல உள்ளன, கொடிகள் பல உள்ளன என்று மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் விளக்கெண்ணெய்த் தடவி முடிச்சுப் போடப் பார்க்கலாமா?

ஒரே கட்சிக்குள் பல கொள்கைகள் - பல கொடிகள் இருக்க முடியாது; ஆனால், ஒரே இந்து மதத்துக்குள் மக்களைப் பிளவுபடுத்தும், பேதப்படுத்தும் ஏற்பாடு இருக்கிறது - இரண்டும் ஒன்றல்ல. மானமிகு கலைஞர் அவர்கள் எழுதிய கவிதையின் சாரத்தைப் புரிந்துகொண்டு எழுத்தாளர்கள் எழுத முனையட்டும்!

--------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 10-11-2008 "

தமிழ் ஓவியா said...

பூனூல் தொடர்பாக திருச்சி தி. அன்பழகன் அவர்கள் 15-11-2008 "விடுதலை" ஞாயிறுமலர் பக்கம் 7 இல் எழுதியுள்ள கட்டுரையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நடுநிலையுடன் சிந்தியுங்கள். தெளியுங்கள்.

""அண்ணா திமுகவும் பூணூலும்!"

"அண்ணா திமுகவும் - தொழில் எழுத்தாளர்களும்" தலையங்கம் (திருச்சி (10.112008), "பூணூல்" பற்றிய புரிதலை அதிமுகவினருக்கு நன்கு புகட்டியுள்ளது என லாம்.

தலையங்கத்தில் குறிப்பிட் டுள்ளதைபோல, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதைதான் இந்தப் பூணூல் விவகாரமாகும். பூணூல் அணிவது என்பது துவிஜர் - எனப்படும் இரு பிறப்பாளர்களுக்கு உரிய மதச் சடங்காகும். இப்பூணூல் அணிவதற்குக் காலவரையறை யுண்டு. இச்சடங்கை உபநயன சமஸ்காரச் சடங்கு என்றும் கூறுவதுண்டு.

பார்ப்பனர்கள் கருவறையி லிருந்து 8 வயது முதல் 16 வயதிற்குள்ளும், சத்திரியர்கள் 11 வயது முதல் 22 வயதிற் குள்ளும், வைசியர்கள் 12 வயது முதல் 24 வயதிற்குள்ளும் பூணூல் அணியும் சடங்கை பூர்த்தி செய்திட வேண்டும். இதன்பிறகு தான் ஒருவனுக்கு சமிதாதானம் முதலிய விரதா நுஷ்டானமும் வேதாந்திய யனமும் கிரமமாக விதிக்கப் பட்டிருப்பதாக மனுதர்மம் (அத்:2, சுலோ: 173) கூறுகிறது.

உரிய வயதிற்குள் ஒருவன் இப்பூணூல் சடங்கை மேற் கொள்ளாவிட்டால் விராத்தி சாதியினர் எனப்படும் புறச் சாதியினராக் கருதப்பட்டு, குடிநீக்கம் செய்யப்படுவர். மேலும், இவர்கள் காயத்திரி மந்திரத்தின் நலன் பெற (!) தகுதியற்றவர்களாவதோடு, வைதிகக் காரியங்களையும் செய்ய தகுதியற்றவர்களாகி விடுவர். ஒருவன் பூணூல் அணிவதற்கு முன்பு அவனுக்குப் பெற்றோர்கள் தாயும் தந்தையுமாவர். இது அவனுக்கு முதல் பிறப்பு. பூணூல் அணியும் சடங்கு முடிந்துவிட்டால், அது அவனுக்கு இரண்டாவது பிறப்பாகும். இப்போது அவனுக்குத் தாய் காயத்திரி, தந்தை ஆசாரியான் என்பது மனுதர்மத்தின் (அத்;2, சுலோ: 170) விளக்க மாகும். மேலும், அவன் சர்ம நாமம் என்னும் இரண்டாவது பெயரை வைத்துக் கொள்ளும் உரிமையும் பெற்றவனாகி விடுகிறான்.

எவன், உபநயனம் செய்து வித்து, யாக மந்திரங்களையும் வேத வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனை ஆசாரியனென்று சொல்கிறார்கள் என்று சொல்கிறது மனுதர்மம் (அத்: 2, சுலோ: 140) என்பது உணரத்தக்கதாகும்.

கோயில் கருவறைக்குள் பூணூல் போடும் பார்ப்பான் தான் போக முடியுமே தவிர, பூணூல் போட்ட செட்டியாரோ, ஆசாரியாரோ செல்ல முடிவதில்லையே என்னும் தலையங்க விளக்கத்தை அந்த அண்ணா திமுக தொழில் எழுத்தாளர் விளங்கிக் கொண்டால், நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியேயாகும்.

ஆசாரிகள் பூணூல் அணிந்து கொள்வது தொடர்பான ஒரு வரலாற்றுச் செய்தியை, அந்த அண்ணா திமுக தொழில் எழுத்தாளருக்கு நினைவுபடுத்துவது, அவர் இன்னும் தெளிவு பெற உதவும் என நம்புவோமாக!

பொற்கொல்லர்களான ஆசாரிகள் பார்ப்பனர்களைப் போல பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை வேண்டி அரசனிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை பரிசீலிக்குமாறு அரசன், பார்ப்பனர்கள் அடங்கிய சபைக்குத் தெரிவித்தான். அப் பார்ப்பனச் சபையினர், ஆசாரிகள் எங்களுக்குப் பிறந்த அநுமோலர்கள் என்பதால் (பார்ப்பானுக்கும், ஆசாரிப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்) அவர்களுக்கு பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை மட்டும் உண்டு. அதுவும் அப்பூணூல் பருத்தி, சணல் ஆகியவற்றால் இருக்கக் கூடாது. மேலும், இச்சடங்கை பார்ப்பனர்களைப் போன்று காயத்திரி மந்திரம் ஓதி செய்யக் கூடாது. அக்கினி கோத்திரம், அவ்பாசனம் முதலியவற்றையும் செய்யக் கூடாது.

இவ்வுண்மையை, திருச்சிராப்பள்ளி உய்யக் கொண்டான் திருமலை எனப்படும் திருக்கற் குடிக்கோயிலில், முதற் குலோத்துங்கனது 48-ஆம் ஆட்சியாண்டுக் கல் வெட்டு ஒன்றில், இன்றும் காணலாம் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

வேதங்கள் கற்கவும், ஓதவும் உரிமைப் பெற்றவர்களுக்கான அடையாளமே பூணூல் ஆகும். இந்த அடையாளம் குறிப்பாக ஆசாரிகளுக்கு அறவே இல்லை என்பதோடு, பூணூல் அணிய அவர்களுக்குக் கூறப்படும் காரணம் பூணூலுக்குள் இவ்வளவு அசிங்கமா? எனவும் எண்ணத் தோன்றுகிறதல்லவா! அதிமுக தொழில் எழுத்தாளர் புரிந்து கொண்டால் சரி!

"சுரண்டல் சுயநலம் சூழ்ச்சி மயக்குதல்
ஆரியக் கூத்தாம் அறி" "

இப்போது உண்மை புரிந்திருக்கும், புரியாவிடில் இன்னும்
ஆழ்ந்து படியுங்கள் உண்மையை உணருங்கள்.
சந்திப்போம்.
நன்றி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி நிலவன்.

Joe said...

பிரமாதம்!

சோவிற்கு சரியான சாட்டையடி!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி joe