Search This Blog

29.11.08

ஆயுதப் பேராட்டத்தை முதன் முதலில் விதைத்தவர்கள் யார்?


நாட்டிலே ஆயுதப் போராட்டத்தை முதன்முதலில் விதைத்தது
பார்ப்பன மதமான இந்துமதம்-புராணம் - இதிகாசம் - கீதை


சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

சென்னை, நவம். 29- ஆயுதப் போராட்டத்தை முதன் முதலில் விதைத்தது பார்ப்பன மதமான இந்து மதம், புராணங்கள், இதி காசங்கள் கீதை போன்றவைகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்க வுரையாற்றினார்.

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் 20-11-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ். என்பது பயங்கரவாதம்

ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாதம் என்பது புதிதல்ல. இந்து மதம் என்ற பார்ப்பன மதம் அதனுடைய மூலவேர். எங்கே இருக்கிறது என்று நாம் தோண்டித் துருவிப் பார்ப்போமேயானால், மனு தர்மத்திலேயிருந்து வருகிறது. வருணாசிரம தருமத்தை விலக்கிவிட்டு இந்து மதம் என்பது என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை, பூஜ்யம் என்பதுதான் அதற்கு எளிய விடை.

எனவே இந்துவாக ஒருவன் பிறக்கிறான் என்று சொல்லும் பொழுதே அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப்போல ஜாதியோடுதான் அவன் பிறக்கிறான். இந்து மதத்தினுடைய தத்தவப்படி ஜாதியோடுதான் அவன் வாழுகிறான்.

புதைக்கிறவரையில் ஜாதி தொடருகிறது

ஜாதியோடுதான் அவன் மறைகிறான். மறைந்த பிற்பாடும் சுடுகாட்டிலும் அந்த ஜாதிதான் அவனை வரவேற்கிறது - புதைக்கிறது - எரிக்கிறதே தவிர அவனுக்கு மனிதத் தன்மையை நிலைநாட்டக் கூடிய அந்த நிலையை உரிமையை வழங்காத ஒரு அமைப்பு பார்ப்பன மதமான இந்து மதம் என்பதாகும்.

அந்த மனு தர்மத்திலே மிக முக்கியமான ஒரு பகுதி என்ன வென்று சொன்னால் தருமம் கெட்டுப்போகும் பொழுது, தர்மம் அழியும்பொழுது, ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும்.

ஆயுதப் பேராட்டத்தை முதன் முதலில் விதைத்தவர்கள்

சாம, பேத, தான, தண்டம் என்று சொல்லுகின்றபொழுது தண்டம் எடுத்துப் போராட வேண்டும். எனவே ஆயுதப் போராட் டம் என்பதை இந்த நாட்டிலே முதல் முறையாக மக்கள் மத்தி யிலே விதைத்த ஒரு கருத்து இருக்கிறதென்றால் அது பார்ப்பன மதமான இந்து மதத்தினுடைய இதிகாசங்கள் - கீதை போன்றவைகள்தான்.

சொந்த அண்ணன் தம்பிகளாக இருந்தாலும் பார்க்காதே. நீ ஆயுதத்தை எடுத்து போரிடு. களத்தில் நீ போரிடாவிட்டால் என்ன ஆகும் என்று சொன்னால், அதனுடைய விளைவைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கீதையைப் படிக்காத பலபேருக்கு

கீதையைப் படிக்காத பலரும் பகவத் கீதையிலே கண்ணன் சொன்னதைப்போல என்று ஆரம்பிப்பார்கள். ஆனால், இது வரையிலே கீதையை நாம் படித்த அளவுக்கு நாம் ஆய்வு செய்த அளவுக்கு வேறு எவரும் ஆய்வு செய்ததில்லை (பலத்த கைதட்டல்).

கீதையின் மறுபக்கத்திற்கு இதுவரை மறுப்பு தரவில்லை

இன்னமும் அதற்கு அதிகாரப் பூர்வமான உரை கீதையின் மறுப்பக்கத்திற்கு இதுவரை வரவில்லை. அந்தக் கீதையிலே எல்லோரும் ரொம்ப சுலபமாகச் சொல்லுவது ஒரு பெரிய நிகழ்ச்சி என்னவென்று சொன்னால், கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே, என்று என்ன அற்புதமாகச் சொல்லப்பட்டி ருக்கிறது என்று சொல்லுவார்கள். அந்த இரண்டு வரிகளை மட்டும் எடுத்துவைத்துக் கொண்டு சொல்லுவார்கள்.

கீதையின் கருத்து தவறு ரஜினிகாந்த் சொன்னது வரவேற்கத்தக்கது

எந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எதற்காக சொல்லியிருக்கின்றார்? ஆனால், இப்பொழுது கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே என்பது தவறு என்று ரஜினிகாந்த் போன்றவர்களுக்குக்கூட புரியக் கூடிய அளவிற்கு நம்முடைய இயக்கம் வளர்ந்திருக்கிறது.

கடமையைச் செய்; பலனை எதிர் பார் என்று சொல்லவேண்டிய அளவிற்குக் கீதையின் கருத்து தவறு என்று சொல்லக்கூடிய அளவிற்கு ரஜினிகாந்த் போன்றவர்களுக்குக் கூட அந்த உணர்வு வந்திருக்கிறது (பலத்த கைதட்டல்).

பெரியார் படத்தை ரஜினிகாந்த் அவர்கள் ரொம்ப ஆழமாகப் பார்த்ததன் விளைவாகவும் இருக்கலாம். அல்லது சொந்தமாக சிந்திக்கக் கூடியதன் விளைவாகவும் இருக்கலாம். அதை நாம் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம் - அந்தத் துணிச்சலுக்காக, அந்தத் தெளிவிற்காக!

அர்ஜூனன் ஏன் போரிட மறுக்கிறான்? இப்படியெல்லாம் தெளிவு ஏற்பட்டால் நாட்டிற்கும் நல்லது, கலைத்துறைக்கும் நல்லது. ஆனால், கீதையின் மறுபக்கம் நூலிலே நீங்கள் பார்த்தீர்களேயானால், பலபேர் கீதையைப் படித்தவர் களுக்குத் தெரியாது. போர்க் களத்திலே அர்ஜூனன் ஏன் போரிட மறுக்கிறான்? கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான். இவை யெல்லாம் நடைமுறையில் நடந்ததா? பகுத்தறிவுக்கு ஒத்ததா?

அது வேறு ஆராய்ச்சி, அது அடுத்த பக்கம். ஆனால், சொல்லும்பொழுது என்ன சொல்லுகின்றார்கள்?

போர்க்களத்தில் அவர்கள் வெற்றி பெற்றால்

நீ போரிடாவிட்டால் அவர்கள் போர்க்களத்தில் வெற்றி பெற்றால் உன் குலம் நாசம் ஆகும். உன் குலம் நாசமானவுடனே வெறும் ஆண்கள் எல்லாம் போரிலே ஈடுபடுகின்ற காரணத்தால் அவர்கள் எல்லாம் இறந்துவிடுவார்கள்.

பெண்கள் மாத்திரம்தான் மிஞ்சுவார்கள். உன்னுடைய வீடுகளிலே இருக்கின்ற பெண்கள்தான் மிஞ்சுவார்கள். அப்படி பெண்கள் மிஞ்சுகின்ற நேரத்திலே பிறகு அவர்களோடு இனக் கலப்பு ஏற்படும்.

இனக் கலப்பு ஏற்படும்பொழுது தர்மம் ஒழிந்து போய்விடும். எனவேதான் நீ போரிடவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை. வர்ணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக கரும வினைப் பயன், தருமத்தைக் காப்பாற்றிட நீ போரிட வேண்டும் என்று தான் கண்ணன் சொன்னதாக அந்தக் கீதை சொல்லுகிறது.

கீதை கற்றுக் கொடுப்பது வன்முறையை

எனவே கீதையின் மிக முக்கியமான அடிநாதம் என்னவென்று சொன்னால் வன்முறைக்குப் பயப்படாதே என்பதுதான் மிக முக்கியம்.

அதேபோல மனுதர்மம் இவைகளிலும் தாராளமாக அதிலே வலியுறுத்தக் கூடிய கருத்து உள்ளது. தருமத்திற்கு ஆபத்து ஏற்படும் பொழுது தண்டம் எடுத்துப் பேராட வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

நீ எந்த முறையை வேண்டுமானாலும் கையாளலாம். அதைப் பற்றிக் கவலைப்படாதே. முறைகேடாக நீ நடந்தாலும் பரவா யில்லை. உன்னுடைய நோக்கம் நிறைவேற வேண்டும். அதற்காக நீ எதை வேண்டுமானாலும் செய் என்று அறவழிப்பட்ட முறையோ நேர்மையான முறையோ, நியாயமான முறையோ, வன் முறையற்ற முறையோ எடுக்கவேண்டும் என்று அதில் சொல்ல வில்லை.

இதிகாசங்களில் - புராணங்களில் இருப்பது

இதை ஒட்டித்தான் பல இடங்களிலே இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலெல்லாம் இருக்கிறது. இன்று இவைகளைப் பற்றி எல்லாம் ஆதாரப்பூர்வமாக வந்திருக்கின்ற செய்திகளை உங் களுக்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். ஆழமாக எல்லோரும் புரிந்துகொண்டு, இங்கு வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் ரொம்ப விசயம் தெரிந்தவர்கள் வந்திருக்கின்றீர்கள். அருள்கூர்ந்து நீங்கள் ஒரு பத்துப்பேருக்குச் சொல்லுங்கள்.

இது குறுந்தகடாக வரும்பொழுது யார் யாருக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அவர்கள் மற்ற இடங்களில் இந்தக் கருத்துக்களை எல்லாம் பரப்புங்கள். ஏனென்றால் இந்தத் தகவல்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன.

ஈழத்திலே மிருகங்களைவிடக் கேவலமாக

ஈழத்திலே வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். காடுகளிலே நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள், மிருகங்களைவிடக் கேவலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களைக் கப்பாற்றுகின்றவர்களை தீவிரவாதிகள் என்று அழைக்க கூச்சப்படாதவர்கள் எல்லாம் இன்றைக்கு நம்முடைய நாட்டிலேயே இருக்கிறார்கள். நம்முடைய நாட்டின் எல்லைக் குள்ளேயே அதுவும் டெல்லித் தலைநகரத்திலே தீவிரவாதம் படமெடுத்து ஆடுகிறது.

ஆனால், அதைப் பார்த்து மென்மையாக பாம்புக்குப் பால் வார்ப்பதைப் போல கண்டும் காணாதவர்களாக, பாம்புக்கும் நோகக் கூடாது, பாம்படித்த கோலுக்கும் நோகக் கூடாது என்று சொல்லுவதைப்போன்ற ஒரு அணுகு முறையைக் கையாளுகி றார்கள் என்று சொன்னால், அதை இன்றைய தினம் தொடங்கி தொடர்ந்து நாம் அதைக் கண்டிக்க வேண்டும், வற்புறுத்த வேண்டும். இருவகை சிறுபான்மைச் சமுதாயங்கள் ஏனென்றால் இங்கே இருக்கின்ற சிறுபான்மைச் சமுதாயம், ஒரு ஜனநாயகத்திலே ஆதிக்கம் செலுத்தாத சிறுபான்மைச் சமுதாயம், சிறுபான்மை என்று சொல்லுவதிலேகூட இரண்டு வகை இருக்கிறது.

ஒன்று ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிறுபான்மையினர். இன்னொன்று ஆதிக்கம் செலுத்த வாய்ப்பில்லாத சிறுபான்மையினர். அதிலே பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சிறுபான்மையினர். இசுலாமியர்களும், கிறித்தவர்களும், ஆதிக்கம் செலுத்த இயலாத வாழ்வுரிமைக்காகப் போராடக் கூடிய சிறுபான்மையின
ர். இங்கே ஒரிசாவிலே நடைபெற்ற சம்பவத்தை பற்றி எடுத்துச் சொன்னார்கள், வழக்கறிஞர் அருள்மொழி, அறிவுக்கரசு அவர்கள் சொன்னார்கள்.

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு


ஒரிசாவிலே எப்படிப்பட்ட கொடுமை நடைபெற்றது? மத்திய அரசின் உள்துறை ஒரிசா அரசுக்குத் தகவல் கொடுக்கிறது. ஒரிசாவிலே ஆர்.எஸ்.எஸ். மாநாட்டை விசுவ இந்து பரிசத் மாநாட்டை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அங்கே கொதிக்கின்ற சூழ்நிலை இருக்கிறது. பதட்டமான சூழ்நிலை இருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த செய்தியை நான் சொல்லுகின்றேன்.

அதாவது ஒன்றாம் தேதியன்று காலையிலே வந்த இந்து பத்திரிகையிலே நான் சொல்லுகின்ற செய்தி விளக்கமாக இருக்கிறது.

மத்திய அரசின் தாக்கீதை மதிக்காமல்

ஒரிசாவிலே இருக்கிற மாநில அரசு பி.ஜே.பி. ஆதரவோடு நடந்துகொண்டிருக்கின்ற பட்நாயக் அரசு என்ன செய்கிறது? மத்திய அரசினுடைய தாக்கீதை கொஞ்சம்கூட மதிப்புக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை - அனுமதி கொடுக்கிறார்கள்.

அதிலே வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுப் பயங்கரமாக நடந்துகொண்டிருக்கின்றது. மறுபடியும் உங்களுக்குத் தெரியும். கிறித்தவர்கள் எந்த அளவுக்கு அவர்கள் சங்கடப்படுத்தப் பட்டார்கள் என்று.

அவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். யார் யார் அகதிகள்? ஒரு பக்கத்திலே இலங்கையிலே சிறுபான்மையினராக இருக்கக் கூடிய தமிழர்கள் அகதிகளாக அவர்களது சொந்த ஊரிலே இருக்கின்றார்கள்.

அதேபோல இங்கேயும் அகதிகளாக இந்த நாட்டின் மண்ணுக்குரியவர்கள் இங்கே மண்ணிலே பிறந்தவர்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் இங்கே அகதிகளாக இருக்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் மதங்களை விரும்பாதவர்களாக இருக்கலாம்.

மதம் என்ற பெயராலே

ஆனால் அதே நேரத்திலே மதம் என்ற பெயராலே மனித நேயம் கொல்லப்படக் கூடாது என்பதிலும் எங்களுக்கு அக் கறை உண்டு (கைதட்டல்). எதுநம்மைப் பிரிக்கிறது என்பதை விட, மனிதநேயம் என்பது முக்கியம். அந்த மனித நேய அடிப் படையிலே பார்க்கின்றபொழுது எவ்வளவு கொடுமைகள் நடக் கின்றன?

விசுவ இந்து பரிசத் சாமியாரின் மடம்

விசுவ இந்து பரிசத் சாமியார் ஒரு மடம் நடத்துகிறார். பார்ப்பனர்கள் அங்கு மடம் நடத்துகின்றார்கள். பெயரை மாற்றி வைத்துக் கொள்கின்றார்கள். நம்மூர் மஞ்சக்குடி அய்யர் இருக்கிறார் அல்லவா? மஞ்சக்குடி என்பது குடவாசலுக்குப் பக்கத்திலே திருவாருக்குப் போகிற பகுதியிலே இருக்கின்ற ஒரு ஊர். அந்த ஊரைச் சார்ந்த ஒரு அய்யர்தான் நடராஜ அய்யரோ, குப்புசாமி அய்யரோ, யாரோ ஒரு அய்யர்.

காவியைப் போட்டுவிட்டால் சரசுவதி சுவாமியாக

அவர்தான் இப்பொழுது ஸ்ரீலஸ்ரீ தயானந்த சரசுவதி சுவாமிகள். எல்லோரும் திடீரென்று சரசுவதிக்கே பிறந்தவர்கள் ஆகிவிடுவார்கள் (கைதட்டல்).

இப்படி பெயரை மாற்றிவிட்டால் எல்லோரும் உடனே காலில் விழுவார்கள். காவியைப்போட வேண்டும் - அவ்வளவுதானே தவிர, உடனே சரசுவதி சுவாமிகள் என்று அழைக்கின்றார்கள். நம் முடைய நாட்டு அரசியல் தலைவர்கள் குடியரசுத் தலைவரிலிருந்து ஆரம்பித்து சாதாரண குப்பன் வரையிலே, அவர்களைத் தான் சொல்லுவார்கள்.

பாபநாசத்திலிருந்து விரட்டப்பட்ட பார்ப்பனர்

அதுபோல கும்பகோணத்திற்குப் பக்கத்திலே பாபநாசம் என்ற ஊரிலே ஒழுங்காகப் பள்ளிக்கூடத்திற்குப் போகாமல் அந்தப் பள்ளிக்கூடத்திலேயே பிள்ளைகள் மத்தியிலே விசமத்தை செய்து சில பொருள்களைத் திருடியவன், ஊர் மக்களால் விரட்டப்படு கின்றான். அந்த ஊரை விட்டே ஒடிப்போனவன், இப்பொழுது அவர் யார் தெரியுமா? ரவிசங்கர் மகாராஜ் அவர் வளத்தோடு இருக்கின்றாரா? என்பதை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ளவேண்டும்.

அவருக்காக ஸ்பெஷல் ரயில்

அவருக்காக ஸ்பெஷல் ரயில்விடப்படும். அவருக்காக மத்திய அமைச்சர்கள் போவார்கள். பெருந்தலைவர்கள் போய் அவருடைய காலடியிலே விழுவார்கள். அவருடைய குடும்பமே வைரத் தோடோடு அங்கே வந்து நின்று வாழும் கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

நம்முடைய ஏமாளிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இப்படிப்பட்ட ஒரு சூழல் நிறைய உண்டு. சாமியார்கள் ஜாக்கிரதை

இதை எல்லாம் தெரிந்துதான் சாமியார்கள் ஜாக்கிரதை என்று நீண்ட நாட்களுக்கு முன்னாலே குரல் கொடுத்தோம். ஒரே ஒரு உதாரணம் சொன்னார்கள். காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது - எங்கே? ஒரிசாவிலே - காந்தமால் பகுதியிலே என்ப தைச் சொன்னார்கள்.

சில வருடங்களுக்கு முன்னாலே கிரகாம் பாதிரியாரை எப்படி ஒரிசாவிலே கொன்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே. அதை இங்கே விரிவாகப் பேசவேண்டிய அவசியமில்லை.

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த பாதிரியார்

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பாதிரியார் கிரகாம் இங்கே இருக்கிற மலைவாழ் பகுதியிலே மற்றவர்கள் செல்ல அஞ்சக் கூடிய பகுதியிலே தொழு நோயாளிகளுக்கு மருந்தோடு வந்து, தன்னுடைய பிள்ளைகளோடு வந்து சிகிச்சை கொடுத்தார்.

அவன் இன்னொரு நாட்டுக்காரன். ஆனால் நம்முடைய நாட்டிலே உள்ளவன் தேச பக்தி மட்டுமே பேசுகிறான். ஆனால், தேசத்தைத் தாண்டி வந்த அவன் மனித பக்தியோடு இங்கிருக் கின்ற மக்களுக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றான். ஆனால் என்ன நடக்கிறது? தொண்டு செய்ய வந்த ஆஸ்திரேலியப் பாதிரியார் இரவிலே தன்னுடைய பிள்ளைகளோடு உறங்குகின்றார்ர்.

உயிருடன் எரித்து விடுகின்றனர்


அவர் ஒரு வெளிநாட்டுக்காரர். கடும் குளிர். கிராமங்களுக்குச் சென்று அந்த பிள்ளைகளும் சேர்ந்து சேவை செய்வதற்காகவே தயாராகி தன்னுடைய தந்தையோடு வந்து உறங்குகின்றார்கள்.

ஆஸ்திரேலியப் பாதிரியாரையும் அவருடைய பிள்ளைகளையும் உயிரோடு எரித்து விடுகின்றனர். மதவெறிக் கும்பலைச் சார்ந்தவர்கள்.

விருத்தாசலத்தைச் சார்ந்த கன்னியாஸ்திரி

அந்த காலகட்டத்திலே நம்முடைய ஊர் விருத்தாசலத்திலேயிருந்து, கன்னியாஸ்திரியாக போன ஒரு பெண்ணைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அந்த அம்மையார் ஒரு பேருந்து நிறுத்தத் திலே நின்றுகொண்டிருக்கின்றார். அப்பொழுது ஒரு கார் வருகிறது.

அந்தக் காருக்குள் இரண்டு, மூன்று பெண்கள் அமர்ந்திருக்கின்றார்கள். ஓட்டுநர் இருக்கின்றார். அது ஒரு வாடகைக் கார். அந்தக் கார் வந்த பேருந்து நிறுத்தத்திலே நிற்கின்ற கன்னியாஸ்திரி அவர்களிடம் அருகில் வந்து நிற்கிறது.

மனிதாபிமானத்துடன் அழைப்பதுபோல்

50 மைலுக்கு அப்பால் அந்த கன்னியாஸ்திரி வேலைக்குப் போகவேண்டும். பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இந்த கார் வந்து நிற்கிறது. அந்தக் காரில் இருந்தவர்கள் கேட்கிறார்கள் கன்னியாஸ்திரி அவர்களே, நீங்கள் எங்கே போகவேண்டும்?

ஏன் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்கிறார்கள். இல்லை நான் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். நான் போய்விடுவேன் என்று சொல்லுகின்றார். இல்லை, இல்லை உங்களை அங்கே கொண்டுபோய் விடுகின்றோம் - வாருங்கள் என்று ரொம்ப மனிதாபிமானத்தோடு அழைப்பதைப் போல அழைக்கின்றார்கள்.

காரில் பெண்கள் இருக்கிறார்கள். ஆகவே இந்த அம்மையார் கன்னியாஸ்திரி என்ன செய்கிறார். இவர் விருத்தாசலத்தைச் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் அங்கே கன்னியாஸ்திரியாகப் போயிருக்கின்றார். இவர் இன்னொரு இடத்திலே தொண்டு ஊழியம் செய்துகொண்டிருக்கின்றார்.

காரில் பெண் வேடமிட்ட மதவெறியர்கள்

அந்த அம்மையாரைக் காரில் ஏறச் சொல்லுகின்றார்கள். அந்த கன்னியாஸ்திரி காரிலே ஏறி உட்கார்ந்தவுடனே எங்கே அவர் போகவேண்டுமோ - அந்தப் பாதைக்கு அந்தக் கார் போகவில்லை. வேறு இடத்தை நோக்கிப் போகிறது.

உடனே அந்த அம்மையார் வேறு பக்கம் போகிறதே என்று கேட்கின்றார். அந்தக் காரில் பெண்கள்போல் வேடம் போட்டிருந்தார்களே, அவர்கள் அத்தனை பேரும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.


------- தொடரும்


-----------------------------"விடுதலை" 29-11-2008

1 comments:

Anonymous said...

RSS Tree BJP
http://marayar.blogspot.in