Search This Blog

30.11.08

நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டும்


மாறுதல்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அடைந்துகொண்டே வருகின்றான். இதற்காகத் தனி இலட்சியம் தேவையில்லை. மரக்கட்டைபோல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன்கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும் முற்போக்கும் அடைந்துதான் தீருவேன்.

ஆனால், அப்படிப்பட்ட விஷயங்களில் நம்போன்றவர்கள் செய்யும் விசேஷ காரியம் என்னவென்றால், எப்படிப்பட்ட மாறுதல் எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும்.

தானாகப் போய்க்கொண்டிருக்கும் முற்போக்குக்கும் மாறுதலுக்கும் தடையாயிருந்து அவற்றை வேறு வழியில் திருப்புவதனால் சில சமயங்களில் பெருத்த கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு எதிர்ப்பும் பழிப்பும் பலமாய் ஏற்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் சிலர் பழமையை யதாஸ்திதியைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு உபத்திரவப்படுகிறார்கள்; தொல்லைகளை விளைவிக்கிறார்கள்; இத்தொல்லையும் உபத்திரவமும் தங்கள் அறியாமையால் செய்வதுண்டு.

எப்படியிருந்தாலும் அபாயகரமான வழியில்கெடுதி உண்டாக்கும் வழியில் மாறுதலும் முற்போக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மக்கள் கடமையாகும். மாறுதல் வரும்போது அதைக் கையாளுபவர்கள் துன்பத்துக்கும் பழிப்புக்கும் ஆளாவது என்பது புதிதல்ல; சரித்திரகால இயற்கையாகும். சாக்ரடீஸ், புத்தர், கிறித்து, முகமதுநபி ஆகிய பெரியார்கள் இன்று எவ்வளவோ மக்களின் வணக்கத்திற்கும் மதிப்பிற்கும் உரியவர்களானாலும், அவர்கள் காலத்தில் எவ்வளவோ தொல்லைக்கம், இழிவுக்கும் பழிப்புக்கும் ஆளானதாகச் சரித்திரங்கள் சொல்கின்றன.

அதுபோலவே, சில மாறுதல்கள் தற்கால மக்களுக்குக் கசப்பாய் இருந்தாலும், பிற்கால மக்களால் மதிப்பும் பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின் பேரில்தான் நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டுமே ஒழிய, நாம் இன்றே பாராட்டப்படவேண்டும் என்று கருதிக்கொண்டு செய்வது பயன்படாது.

கலியாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தான் என்று முழுவதும் கூறுவதுதகாது. காலதேச வர்த்தமானம் மக்களை அப்படிக் காலத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளச் செய்கின்றது. அதில் சிலவற்றிற்குச் சுயமரியாதை இயக்கம் துணை புரிந்தது என்று சொல்லலாம்.

---------------- தந்தைபெரியார்- புதுக்கோட்டையில், 7-10-1934-இல் சொற்பொழிவு- 'பகுத்தறிவு' 14-10-1934

0 comments: