Search This Blog

1.12.08

மதவெறியின் காரணமாக பார்ப்பனர் செய்த கொலைகள்


இந்துப் பயங்கரவாத சாமியார்கள்


சைக்கிள் குண்டு வெடிக்கும். பலர் இறப்பார்கள் சைக்கிள் விற்பனைக்குத் தடைவரும். புதிய சைக்கிள் வாங்கினால் பெயர், முகவரியைப் பதிவு செய்வார்கள்.

கார் குண்டு வெடிக்கும். பெரும்பாலும் பழைய கார்களாக இருக்கும்!

டிபன்பாக்ஸ் குண்டுகள், பை குண்டுகள் ரயில் குண்டுகள் பலப்பல குண்டு வெடிப்புகள்.

வெடிகுண்டு வைத்தது யார் எனக் கேள்வி பிறக்கும். கணிணியின் முன் அமர்வார்கள். அது முதலில் தொப்பியை வரையும், பிறகு தாடியை வரையும், அதன் பிறகுதான் கண், மூக்கு, காது என காட்டும்.

உடனே, சிமி, ஹூஜி, அய் எம், லஸ்கர் என்றெல்லாம் கற்பனைக் குதிரையிலேறி ஊகங்களைச் செய்தியாக்குவார்கள். சிலரைப் பிடிப்பார்கள். அவர்களில் சிலரைச் சுட்டுக் கொன்று விடுவார்கள். பயங்கரவாதிகளின் படலம் பரிதாபமாக முடிந்துவிடும்.

இதுதான் இதுவரை நாம் கண்ட காட்சிகள்.

கடந்த பத்து நாள்களாகக் கதையே மாறிவிட்டது. வருகின்ற செய்திகள் எல்லாமே-செய்திகள்; ஊகங்கள் அல்ல. எல்லா ஊடகங்களும் ஒரே மாதிரியாகச் செய்திகளைக் கூறுகின்றன. சென்னையிலிருந்து வெளிவரும் இரண்டு, மூன்று இங்கிலீசு நாளேடுகள் முக்கிய செய்திகளை ஒரு நாள், இரண்டு நாள் மறைத்தாலும், வேறு வழியில்லாமல் மூன்றாம் நாள் வெளியிட்டு விடுகின்றன. அமுக்க முடியாத அளவுக்கு அவை உண்மைச் செய்திகள்.

அவாள் தமிழ் ஊடகங்களுக்கு இதுவெல்லாம் செய்தியே அல்ல. வெளியிடுவதே இல்லை. வாழ்க பத்திரிகா தர்மம்!

என்ன அப்பேர்பட்ட செய்திகள்? இந்துப் பயங்கரவாதிகள் பற்றிய செய்திகள்? இந்தச் சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று கோபம் மிகக் கொண்டு கொதித்திருக்கிறார்கள், இந்துக்களின் தலைவர்கள். ஏனென்றால் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என்கிறார் திரிசூலம் புகழ் பிரவீண் தொகாடியா.

உண்மை நிலை என்னவென்றால், இந்துப் பயங்கரவாதம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முதல் நபரே சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர் என்பவர்தான். சுக்ரபால் சிங் எனும் சூரத் நகரின் பிரபல ஆயுர்வேத மருத்துவரின் மகள். வரலாறுப் பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 2002ஆம் ஆண்டு கும்பமேளாவில் சாமியார் அவதேசானந்தகிரி என்பவரிடம் உபதேசம் பெற்று சாமியாரிணியாகி பூரண சதானந்த்கிரி என்று பெயர் மாறியவர்.

ஃபயர் பிராண்டு (FIRE BRAND) என்று வருணிக்கப்பட்ட சாத்வி ரிதம்பாராவைப் போல் காலித்தனமாகப் பேசுபவர். உமாபாரதியையும் சேர்த்து இம்மூவரும் இந்துமத வெறிப் பிரச்சாரகர்கள். படிக்கும்போது சங் பரிவார்களின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் (ABVP) தீவிர உறுப்பினர். படித்து முடித்ததும் ராஷ்டிரிய ஜாக்ரன் மஞ்ச் அமைப்பில் முக்கியஸ்தர். இந்து ஜாக்ரன் மஞ்ச் என்பது ஆர்.எஸ்.எசின் அங்கம். இந்துக் கோயில்களைக் காப்பது, இசுலாமிய மசூதிகளை உடைப்பது என்கிற விசயங்களைக் கவனிக்கும் அமைப்பு. இதன் செயல்பாடுகளின் காரம், மணம், குணம் போதுமான அளவில் இல்லை எனக் கூறிக் கோபித்துக் கொண்டு வெளியேறிய தீவிரவாதிகள் கண்ட அமைப்பு-தான் ராஷ்டிரீய ஜாக்ரன் மஞ்ச் என்பது. சாத்வி பிரக்யா சிங்குக்கு இதுதான் சரியான இடம்.

வந்தே மாதரம் ஜன கல்யாண் சமிதியுடன் தொடர்பு கொண்டவர். ராஷ்ட்ரவாதி சேனா என்ற கா(லி)விப் படையுடனும் நெருங்கிய தொடர்பு. பயங்கரவாதம் மனதில் இருந்தால் மட்டும் போதாது, பயங்கரமாகத் தோற்றமும் இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ, என்னவோ, ஆண்களைப் போல பாய்கட் செய்துகொண்டு கிராப் வைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் (ஸ்கூட்டரில் அல்ல) சுற்றி வருவார். அவருடைய மோட்டார் சைக்கிளில்தான் வெடிகுண்டு வைத்து மசூதிக்கு அருகில் நிறுத்தி வெடிக்கச் செய்தார். இந்த மோட்டார் சைக்கிளை விற்று விட்டதாகப் பொய் சொன்னார். மோட்டார் சைக்கிளின் எந்திர எண்ணை அழித்து விட்டிருக்கிறார் என்பதைக் காவல்துறை கண்டு பிடித்துவிட்டது.

இந்த ஆர்.எஸ்.எஸ். ஆள்களின் செயல்முறை பற்றி (MODUS OPERANDI) பற்றி நமக்கு முன்னமே அறிமுகம் உண்டு. காந்தியாரைக் கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து விலகினார், அதன் பிறகுதான் சுட்டார். அதேபோல், தம்கையில் இசுமாயில் என்று பச்சை குத்திக் கொண்டு ஆண்குறியின் முன்தோலையும் வெட்டி எறிந்து இசுலாமியத் தோற்றம் கிடைக்கவேண்டும் என்று செய்தார். சாத்வி பிரக்யா 1997ஆம் ஆண்டிலேயே ஏபிவிபி-இல் இருந்து விலகிவிட்டதாகக் கூறி, எனவே அவர் இந்துப் பயங்கரவாதி அல்ல என்று எதிர்கால(?) இந்தியப் பிரதமர் கனவில் உலாவரும் லால் கிஷன் அத்வானி கூறிவிட்டார்.

உறுப்பினர் அட்டையைத் தேடக்கூடாது, உள்ளத்துக் கொள்கையைப் பார்க்கவேண்டும்; அதன்படி சாத்வி சங் பரிவாரைச் சேர்ந்தவர். ஆகவே, அவரைக் கைகழுவக் கூடாது என்கிறது வி.எச்.பி. இது எல்லா வகையிலும் சரியே! அபினவ் பாரத் எனும் அமைப்பின் பிரமுகர் என்ற நிலை இன்றைக்கும் சாத்விக்கு உண்டு. 1920களில் இருந்த இந்துமகா சபையின் தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்ச்சே என்பவரால் உருவாக்கப்பட்டது. காலாவதியாகிப் போன இந்த அமைப்பின் தற்கால உரு 2000களில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. என்றாலும் பொறுப்பாளர்கள் எல்லாம் புனேயைச் சேர்ந்தவர்கள். தலைவரே புனேயைச் சேர்ந்த ஹிமானி சவர்க்கார். ஆம், நீங்கள் நினைப்பது சரியே! சவர்க்காரின் தம்பியின் மருமகள். அதைவிட மற்றொன்று, காந்தியாரைக் கொன்ற விநாயக் கோட்சேயின் மகள். வழக்குரைஞராக இருந்தும் அதைக் கைகழுவிவிட்டு இந்துத்வ வெறியைத் தழுவிக் கொண்டவர். இந்த அமைப்பின் தொண்டர்கள் இந்துப் பயங்கரவாதிகள் என்றாலும் சிக்கிக் கொண்டு சிறையில் இருப்பவர்கள் இதன் உறுப்பினர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய ஆள் சிறீகாந்த் பிரசாத் புரோகித். புனேயைச் சேர்ந்த புரோகிதப் பார்ப்பன ஜாதிக்காரர். இந்தியப் போர்ப்படையில் லெப்டினைட் கர்னல் எனும் பதவியில் இருந்து கைதான ஆள். போர்ப்படை அதிகாரி என்ற நிலையில் பயங்கரவாதச் செயல்களுக்காகக் (இதில் கொலைக் குற்றமும் உண்டு) கைது செய்யப்பட்ட முதல் ஆள் எனும் பெருமை(சிறுமை அல்லவா?)க்குச் சொந்தக்காரர். வெடிகுண்டு செய்வது பற்றிச் சொல்லிக் கொடுத்த இருவரில் ஒருவர். இன்னொருவர் மிதுன் சக்ரவர்த்தி எனும் புனே நகரக்காரர்.

புரோகித் போல ஆயிரம் பேருக்கு சொல்லிக் கொடுத்து போர்ப்படையின் முப்பிரிவுகளிலும் சேர்த்துவிட்ட போன்சலா மிலிட்டரிப் பள்ளி, மகாராட்டிரா மிலிட்டரி ஃபவுண்டேசன் ஆகியவை புனே நகரிலேயே உள்ளன. இவை தனியார் நடத்தும் பள்ளிகள். போன்சலா மிலிட்டரிப் பள்ளியின் 160 ஏக்கர் வளாகத்தின் பெயரே ராம்பூமி என்பது. இதில் பயிற்சி எடுப்போர்க்குப் பெயர் ராம்தாண்டிகள். இங்கே வழிபடும் தெய்வம், சுடப்பட்ட தோட்டக்களால் உருவாக்கப்பட்ட ராமன் பொம்மை. மதபோதனை, ராமனின் பெருமை எல்லாம் பாடத்திட்டங்களில் உண்டு. இதில் 1993 பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் சேர்ந்து, படித்து இந்துப் பயங்கரவாதியாக வெளியேறியவன்தான் புரோகித்.

மாலேகான் பகுதியில் 2007 செப்டம்பர் 29இல் வைக்கப்பட்ட குண்டு வெடிப்புச்சதி தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே அபினவ் பாரத் அமைப்பின் உறுப்பினர்களே! சஞ்சய் எனப்படும் பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி, ராகுல் மனோகர் பான்டே, லட்சுமண் ராஜ் கொண்டவார், நரேஷ் ராஜ் கொண்டவார், ஹிமான்சு பான்சே, மிதுன் சக்ரவர்த்தி, மரோட்டிவாக், யோகேஷ் ரவீந்திர விடுல்கர், சமீர் குல்கர்னி, மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாயா, அபய் ரகிர்கர், ராகேஷ் தாவ்டே, போன்ற அனைவருமே அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள். பல நூற்றாண்டு-களாகக் கொல்லப்பட்ட இந்துக்களின் உயிர்களுக்குப் பழி தீருங்கள் என்பதுதான் இவர்களுக்கான கட்டளை உபதேசமாகும். இசுலாமியர்கள் இந்து தரும சத்ருக்கள் என்றுதான் சொல்லித் தரப்படுகிறது. இவர்கள், தற்கொலைக் கமாண்டோக்கள் (SUICIDE COMMANDO SQUAD) என்றும் அர்ப்பணிக்கப்பட்ட மராட்டிய இளைஞர்கள் (DEDICATED MAHARASHTRIAN YOUTH) என்று மாதிரி-யெல்லாம் மிலிட்டரிப் பள்ளிகளில் உருவேற்றப்பட்டவர்கள் இந்த அமைப்பில் அதே மாதிரியில் உருவாக்கப்படுகிறார்கள்.

அபினவ் பாரத்தின் தலைவி ஹிமானி சவர்க்கர் வெளிப்படையாகவே கூறுகிறார் ஜெர்மனியில் இருப்பவர்கள் ஜெர்மானியர்கள், இங்கிலாந்தில் இருப்பவர்கள் இங்கிலீசுகள் என்பதைப் போலவே இந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் இந்துக்கள் என்று மட்டுமே அழைக்கப்பட வேண்டும். இதற்குச் சம்மதம் இல்லையென்றால் முசுலிம் நாடுகள் நிறைய இருக்கின்றனவே அவற்றுக்குப்போய் வசிக்கட்டும் என்கிறார் கோல்வால்கர், ஹெக்டேவர் வரிசையில் கோட்சே குடும்பப் பெண் மணி!

சதி தொடர்பாக தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமிர்தானந்தா சாமியார் என்றழைக்கப்படுபவர். இயற்பெயர் சுதாகர் துவிவேதி. இரண்டு வேதம் படித்துள்ள இப்பார்ப்பனர் தன்னை சங்கராச்சாரியாரின் வாரிசு எனக் கூறிக்கொண்டு ஜம்முதாவியில் திரிகூட நகரில் சாரதா சர்வக்ய பீடம் எனும் மடத்தைக் கட்டிக் கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்தவர். பான்டே சங்கராச்சாரி என்றுதான் இவரை அழைப்பார்களாம். இவர் கான்பூரில் கைது செய்யப்பட்டு மும்பைக்குக் கொண்டுவரப்படுகிறார். இவரும் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

வாரணாசியில் உள்ள சுமேரு பீட மடத்தின் சுவாமி நரேந்திரானந்தா எனும் சாமியாரும் பயங்கரவாதத் தடுப்புப் படையின் விசாரணை வலையில் சிக்கியுள்ளார். தனக்கு பிரக்யா சிங்கைப் பற்றி எதுவும் தெரியாது என்று இவர் கூறுகிறார். வடநாட்டில் பத்திரிகைகளில் மற்றும் ஒரு சாமியாரின் பெயர் அடிபடுகிறது. கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்-பினரான ஆதித்திய நாத் எனும் காவியுடைக்காரர் விசாரிக்கப்படுகிறார் என்று சேதி. மும்பைக் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை.

இப்படியாகக் காவி உடை கட்டிக் கொண்டு இந்துத்வா பேசுபவர்களும் பச்சைக் காக்கிச் சீருடை அணிந்து போர்ப்படையில் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு இந்துத்வா மனப்பான்மையுடன் இருப்பவர்களும் கைகோத்துக்கொண்டு இந்துப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
போர்ப்படையினர் எப்படி இதில் ஈடுபட முடிந்தது? அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் போர்ப்படை நுண்ணறிவுப் பிரிவினர் என்ன செய்தார்கள்? செய்கிறார்கள்? ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து போர்ப்படையிடம் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதுஎப்படி சாத்வி கம்பெனிக்குக் கிடைத்தது? புரோகித் வழங்கினாரா என்பது பற்றிய விவரம் விசாரிக்க விசாரிக்கத்தான் தெரியும்.

நார்கோ அனலைசிஸ் சோதனையில் உண்மகளைப் புரோகித் உள்பட பலரும் கக்கிவிட்ட நிலையில், சாத்வி பிரக்யா மட்டும் உண்மையைச் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. அழுத்தமான ஆள் போலும்! ஆனால், புரோகித்தின் மடிக்கணினி கிடைத்துவிட்டது. அதன் பதிவுகளை அக்குஅக்காகக் கவனித்துப்பார்த்தால் பலர் அகப்படும் வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

எங்கப்பன் ஏழாம்எண் குதிருக்குள் இல்லை என்கிற பாணியில் அசோக் சிங்கால், ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி போன்றவர்கள் பேசிக் கொண்டு காவி மீது கைவைக்காதே, வைத்தால் நாடு கிடுகிடுக்கும் என்கின்றனர். குற்றம் புரிந்ததைப் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் என்ன போர்வையைப் போர்த்திக் கொண்டு நடமாடுகிறார்கள் என்பதையா பார்க்க வேண்டும்? காவல்துறை கடமையைச் செய்கிறது என்றால் சோனியா காந்தியைக் குற்றம் சாற்றுகிறார், உலக உத்தமர் அசோக் சிங்கால்!

சிரித்திடும் ஓநாய் சிவ சொரூபத்தில் என்பதைப் போல இந்துமதக் காவிக்கும்பல் இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து சதிச் செயல்களில் ஈடுபட்டதை இப்போதுதான் இதழ்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. ஆனால், 2003 முதலே புலன் விசாரணை நடந்து வந்துள்ளது. சிக்கலான நூல் கண்டின் ஒரு முனை தற்போது கையில் கிடைத்துள்ளது. அதனை இழுக்க இழுக்க, அதன் நீளம் கூடுதலாக, கூடுதலாக பலர் மாட்டுவர்.

மவுரிய மன்னனைக் கொன்றவன் படைத்தலைவனாக இருந்த பார்ப்பன புஷ்யமித்திர சுங்கன், சதித்திட்டம் தீட்டிச் சதிகாரர்களை வளர்த்தவன் சாணக்கியன், தூத்துக்குடி ஆஷ் துரையை மதவெறியின் காரணமாகக் கொன்றவன் வாஞ்சி அய்யர், கொல்லக் கற்றுக் கொடுத்த வ.வே.சு. அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி, இந்துக் கடவுள் பிள்ளையாரின் வாகனமான எலியைக் கொன்ற சுகாதார அதிகாரி சான்டர்சைக் கொல்ல சபேகர் சகோதரர்களைத் தூண்டிய திலக் என்று, இந்துமதப் போர்வையில் இந்துப் பயங்கரவாதத்தை நடத்திக் காட்டிய வரலாறு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இதை முற்றிலும் ஒழித்து அமைதியை நிலைநிறுத்த திடசித்தமும், வாக்கு வங்கிகளைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படும் மனோபாவம் ஆட்சியாளர்க்கு வரவேண்டும்! வருமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.


-------------------- "உண்மை" நவம்பர் 16-30 2008 இதழில் - செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை

4 comments:

Unknown said...

பூலாவாரி சுகுமாரன்,வத்தலக்குண்டு ஆறுமுகம் என்று தொடங்கி அதிமுக
துவங்கிய காலத்தில் திமுகவினர்
செய்த கொலைகள் எத்தனை. அதிமுக-திமுக மோதலில் தமிழ்நாட்டில் பலியான உயிர்கள்
எத்தனை.
2007ல் மதுரையில் தினகரன்
அலுவலகத்தில் மூன்று பேரை
கொன்றது பார்பனர்களா.
பார்பனர்களை திட்டி வயிறுவளர்க்கும்
தி.க வினர் இதையெல்லாம் விடுதலை/உண்மையில் கொன்றவர் சாதி, கொல்லப்பட்டவர் சாதி ரீதியாக பட்டியலிட்டு எழுதுவார்களா.

சுந்தரவடிவேல் said...

மீள் பதிவுக்கு நன்றி!
தமது தீவிரவாதச் செயல்களின் மூலம் மதவெறியைத் தூண்டி, மீண்டும் ஒரு இந்துத்துவ ஆட்சியை அரியணையில் ஏற்றிவிடத் துடிக்கிறார்கள். நடவாது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சுந்தரவடிவேல்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களைத் திட்டுவது என்று சொல்வதே தவறு. அவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கிறோம். அவ்வளவே.

வெத காலத்திலிருந்தே பார்ப்பனர்கள் தமிழர்களை தஸ்யூக்கள், தாசர்கள் என்று திட்டித் தீர்த்துள்ள விபரங்கள் எல்லாம் வரலாற்ரு நூல்களில் காணலாம்.

இப்போது தேவை என்றால் உண்மையை அறிய வேண்டும் என்றால் இரமனுஜ தாத்தாச்சாரி எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்துமதம் எங்கே போகிறது? என்ற நூல் மூலம் அறியலாம்.

பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டு இருக்கும் கொடுமைகள் சொல்லிமாளாது?