Search This Blog

23.12.08

9.சண்டாளர்கள் யார்? எதனால்?


இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************


யார் அந்த சண்டாளர்கள்?

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் என குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம். சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்கவேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர்என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார். என்ன விவகாரம்? என கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonitpte young men? என கேட்டார்
நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.

பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர்.

இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை"

என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.


முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.


--------------தொடரும்


-------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:-40-43

0 comments: