Search This Blog

6.12.08

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?


டிசம்பர் 6

டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் - முக்கியமான வரலாற்றுக் குறிப்பு நாள்! இந்த நாளில் திட்டமிட்ட வகையிலே கறுப்பு நாளாக ஆக்கியவர்கள் இந்துத்துவா என்ற பெயரில் வன்முறைக் கொடி பிடித்து வக்கிரங்களை அரங்கேற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல்.

450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுச் சின்னமான பாபர் மசூதியை இந்தக் கும்பல் திட்டமிட்டு அடித்து நொறுக்கியது.

இடித்தவர்கள் ஏதோ சாதாரண அப்பாவி மக்கள் அல்ல! பிற்காலத்தில் இந்தியாவில் துணைப் பிரதமராக இருந்த திருவாளர் எல்.கே. அத்வானியாவார்.

இந்தப் பெரிய மனிதர்தான் பா.ஜ.க.வின் சார்பில் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பிரதமருக்கான வேட்பாளர் ஆவார்.

இவர் மட்டுமல்ல; பிற்காலத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவிருந்த டாக்டர் முரளி மனோகர்ஜோஷி, வினாய் கட்டியார், விசுவ இந்துபரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், கிரிராஜ் கிரோன், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வீ ரிதம்பரா, செல்வி உமாபாரதி உள்பட 49 பேர்கள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.


எந்தெந்தப் பிரிவுகளில்?

இந்தியக் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குகள் இவர்கள்மீது கலவரம் விளைவித்தல், மதக்குரோத உணர்வை ஏற்படுத்துதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமூகத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் மக்களிடையே பீதியை உண்டாக்குதல் என்பன போன்ற குற்றங்கள் இந்த விளம்பரம் பெற்ற மனிதர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.

16 ஆண்டுகள் ஓடிய பிறகும், இந்த மாபெரும் குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை பெற்றுத்தரப்பட வில்லை என்பது - இந்தியாவின் நடைமுறையில் உள்ள நிருவாகம், நீதித்துறை இவற்றின்மீது விழுந்துள்ள அழிக்க முடியாத கரும்புள்ளியாகும்.

தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிதான் என்று ஏட்டில் உள்ளதே தவிர, யதார்த்தத்தில் கிடையவே கிடையாது.

பாதிப்புக்கு ஆளான முசுலிம் மக்களின் மனம் இந்த 16 ஆண்டுகாலமாக எப்படி எப்படியெல்லாம் வேதனைப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

ராமன் பாலம்பற்றிப் பேசினால், இந்துக்களின் மனம் புண்படும் என்று ஒப்பாரி வைக்கும் இந்துத்துவா வெறியர்கள்தான் - இன்னொரு மதக்காரர்களின் வழிபாட்டுச் சின்னத்தை உடைத்து நொறுக்கினர் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.


குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படாவிட்டால், மக்கள் மத்தியிலே வன்முறை நடவடிக்கைகள் சரியானதுதான் என்கிற மனோபாவத்தைத்தானே வளர்க்கும்? இந்தியாவில் நடக்கும் பல்வேறு வன்முறைகளுக்கு - பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படாததும் ஒரு முக்கிய காரணமே!

உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் என்கிற மிகப்பெரிய பொறுப்பான பதவிகளில் அதிகாரப் பீடத்தில் இருந்த அத்வானி போன்றவர்கள் வழக்கினைத் துரிதமாக நடத்திட ஒத்துழைக்காமல், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பியதும், வேண்டுமென்றே காலதாமதம் செய்துவருவதும் எந்தத் தரத்தைச் சார்ந்தது? பொதுமக்கள்தான் உணரவேண்டும். இதுபோன்ற தகுதியில் உள்ளவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமர்வது என்பது பெருமைக்குரியதாக இருக்குமா? என்ற கேள்வி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் நெஞ்சிலும் எழ வேண்டிய அர்த்தமிக்க நேர்மையான வினாவாகும்.

ஒரு பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்தும் எந்தவிதத் தண்டனையையும் குற்றவாளிகள் பெற்றுவிடவில்லை என்ற தைரியத்தில் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு அரசே அதிகாரத்தைப் பயன்படுத்தி - அரசப் பயங்கரவாதம் என்ற தன்மையில் வேட்டையாடித் தீர்த்தது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.

அரசு புள்ளி விவரப்படி 2000 முசுலிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்! கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களின் வீடுகளும், தொழில் நிறுவனங்களும் சூறையாடப்பட்டன, கொளுத்தப்பட்டன என்றால், இது நாடா? - கடும்புலிகள் வாழும் காடா? என்று நினைக்கத்தானே தோன்றும்.

இந்த வன்முறை வேட்டைக்குத் தலைமை தாங்கிய குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி - உச்சநீதிமன்றத்தால் நவீன நீரோ மன்னன் என்று அடையாளப்படுத்தப்பட்டார்.


ஆனால், இந்த நாட்டில் சோ போன்ற பார்ப்பனக் கூட்டம் இந்த நீரோ மன்னன் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார்கள் என்றால், பார்ப்பனர்களின் பிறவிக் குணம் 2008-லும் மாறவில்லை என்றுதானே பொருள்!

மீண்டும் நினைவூட்டுகிறோம் - பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலேயே இன்னும் எத்தனை டிசம்பர் ஆறை நாம் சந்திக்கப் போகிறோம்?

---------------------"விடுதலை" தலையங்கம் 6-12-2008

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு. நானும் எதிர்பார்க்கும் கேள்விதான்? எப்பொழுது திர்ப்பு வரும்... வராது வரவே வராது என்றுதான் தோன்றுகின்றது..

தமிழ் ஓவியா said...

தங்களின்
வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி ஞானசேகரன்.