Search This Blog

28.12.08

வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல்' மகிமையை அறிந்து கொள்வீர்!


இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியதாம். பக்தர்கள் பெருந்திரளாகக் கூடி (ஆ)சாமி தரிசனம் செய்தார்களாம். வைகுண்ட ஏகாதசி பற்றியும் அதன் தாத்பரியம் என்ன என்பது பற்றியும் அறிந்து கொள்ள பெரியார் எழுதிய கட்டுரையை ஒன்றைத் தருகிறேன். படித்து அதன் உண்மையை உணர்ந்து தெளிவடைய வேண்டுகிறேன்.

-------------------------------------------------------------------------------------

சொர்க்கவாசல்' மகிமை

மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச் சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்பதும், வெட்டித் துண்டாக்கப்பட்ட குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்கமில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும் 'பஞ்சாமிர்தம்' எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டதுதானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன?


சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே, அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் :

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோயிலின் மதில்களைக் கட்டினான். ஆனால் , அக்கோயிலின் மதில்களையும் கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகட்கோ அந்தக் கோயிலின் சின்னத்தையே அதாவது 'நாமத்தையே' சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டுபோய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான்- ஓடக்காரன் துணையோடு. அவர்களை ஆற்றுவெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் 'பார்வானத்துறை' ( பார் வானம் - சுடுகாடு, பார்வணம் -சிரார்த்தம் செய்யும் இடம் ) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு அன்று கொல்லப்பட்டவர்க் கெல்லாம் 'முக்தியும்' அளிக்கப்பட்டதாம் ('திருமங்கை ஆழ்வார் வைபவம்' என்ற நூல் ஆதாரப்படி)

சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின் போது திறக்கப்படுகின்றதே 'சொர்க்கவாசல்' -அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வானத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?

--------------------தந்தைபெரியார் - நூல்:-"இந்து மதப் பண்டிகைகள்" பக்கம் 5-6

5 comments:

அக்னி பார்வை said...

:))))))))))))))

Unknown said...

சொர்க்க வாசல் என்பது இதுதானா?

தமிழ் ஓவியா said...

இந்த அடையாளத்திற்கு என்ன பொருள் அக்னி.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்.

பகுத்தறிவாளர் கழகம் said...

நல்ல பதிவு