Search This Blog

28.11.08

வீரமணியிடமிருந்து பெறும் உணர்ச்சி: வி.பி. சிங்




நான் என்னுடைய நன்றியை வெளிப்படையாக நண்பர் வீரமணி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில், மண்டல் ஆணையை நான் நடைமுறைக்குக் கொண்டு வந்தேன். அப்போது, வடபுலமே எனக்கு எதிராக கிளிர்ந்தெழுந்தது. ஆனால், ஒரு மாபெரும் கருங்கற் கோட்டையாக, மாபெரும் எஃகுக் கூடாரமாக நின்று எனக்கு நீங்கள் ஆதரவு அளித்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.

இரண்டு நாட்களாக நான் தமிழகத்திலே உலா வந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கே சென்றாலும் திராவிடர் கழகத் தோழர்கள் கருப்புச் சட்டையுடனும், திராவிடர் கழகக் கொடியுடனும் நின்று வரவேற்கிற காட்சியினை காண்கின்றேன். அது என் மனதை விட்டு அக லாத காட்சியாக இருந்து கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய தலைவர் தந்தைபெரியார் தாம் வாழ்ந்த காலத்திலே, இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமுதாயக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். அதன் காரணமாக இந்த சமூக அநீதியை - கொடுமையை துடைத்தெறிய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டார்கள். அதற்காகவே உழைத்தார்கள். ஒரு மனிதனுக்கு சாவைவிட மிகக் கொடுமையானது அவமானம் என்றே நான் சொல்லுவேன். இந்த நாட்டிலே கோடிக்கணக்கான மக்கள் சமூக அநீதியால், அவமானத்தால் பாதிக்கப்பட்டார்கள். நெருப்பிலே வெந்து கொடு மைப்படுவதைவிட கொடுமையானது தான் இந்த அவமானத்தால் ஏற்படுகின்ற கொடுமை. எனவேதான் அந்தக் கொடுமையை துடைத்து எறிவதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டார்கள்.

சாதி என்ன செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது உள்ளத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டிலே இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களை - மனத்தை அடிமைப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். கைகளிலே போடப்பட்ட இரும்புக் கை விலங்குகளை நாம் உடைத்தெறிய முடியும். ஆனால், மனத்திலே, அறிவிலே பூட்டப் பட்டிருக்கின்ற விலங்கினை நாம் உடைத் தெறிய முடியாது. அந்த விலங்குகளை உடைத்தெறியத்தான் நமக்கு சுயமரியாதை என்ற உணர்வு வேண்டும்.

இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை, சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப் பட்ட மக்களை, வருணம் என்று சொல்லக்கூடிய சாதி என்கிற அமைப்பு, அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி, அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார், சுயமரியாதை என்ற ஆணியை, அந்த சாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாகவே அடித்தார்கள்.

நாம் 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள வரலாற் றுக்குச் செல்வோம். 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர், போலன் கணவாய் வழியாக இந்த நாட்டுக்குள் படையெடுத்து வந்தவர்கள் இங்கே உருவாக்கி வைத்த அடிமைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சினைக்குத் தீர்வே இல்லை.

மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல. அதிகார வர்க்கத்தில் நமக்கு பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால், சாதாரணமான ஏழை மக்களுக்கான ரேசன் கார்டு கிடைப்பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான், மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே, திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால், அது அரசியலிலே ஈடுபடக்கூடிய இயக்கமல்ல. ஆனால், அரசியலில் ஈடுபடு கின்ற கட்சிகளில், எங்களுடைய ஜனதாதளம்தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட - சிறுபான்மை மக்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதேபோல நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.

வீரமணி அவர்களே, உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால், இங்கே இருக்கக் கூடிய மக்களுக்கு கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்த சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு, அந்த அடித்தளத்தைத் தொட்டு, பணி யாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஏனென்று சொன்னால், புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியை விட, உயர்ந்த பணியை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, உங்களைப் பாராட்டுகிறோம்.

அரசியலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதே போல், சமுதாயப் பணியிலே, நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.

-------------------23.12.1992 அன்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள், பெரியார் - மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, முன்னாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையிலிருந்து "விடுதலை" 30.12.1992

0 comments: