Search This Blog

15.7.08

இந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே, இது பிராமண ஆதீனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும், பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கில் ஒரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மத்திய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்துக்கும் இடமளிக்கக் கூடியதாகு மென்றும், இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான் முக்கிய காரணமாகச் சொல்லி வருவதால், வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற் பட்ட இந்து - முஸ்லிம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகு மென்றும், நமது குடிஅரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும் பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

அது மாத்திரமல்லாமல், நமது தமிழ் நாட்டில் - இந்து மகாசபைக்குக் கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளி லெல்லாம் வருணாச்சிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்ளுபவர்களும், அக் கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும், நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அனுபவத்தில் தெரிந்த விஷயம் பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையிலிருக்கும் பொழுது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாச்சிரம சபையென்று ஒன்று கூட்டி அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதமென்றும் மநுதர்ம விதியென்றும் வருணாச்சிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்கவேண்டுமென்றும் தீர்மானங்கள் செய்வதை நாம் பார்க்கின்றோம்.

சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத் தலைவர் ஸ்ரீமான் டி.ஆர். ராமச்சந்திர அய்யர் என்பதை வாச கர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்து பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில நடக்கக் கூடாது, கண்களில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி, கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்த மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருககு இளைத்தவர்களல்ல, கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக் கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க, இந்து மகாசபையை நாட்டில் பரப்புவது எப்படி, இந்து மதத்திற்கு நன்மை பயப்பதாகும்? ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால், அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா? ஸ்ரீமான் டி.ஆர். இராமச்சந்திர அய்யர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கை யாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்ராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவ தாகுமா?

நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படிப் பாமர ஜனங்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம், என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்கக் கருத்தாய் இருக்கின்றார்களே யல்லாமல், உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவரு மில்லை. இந்து மகாசபையின் ஸ்தாபகர் ஸ்ரீமான் மாளவியா அவர்களே, தீண்டாதாரைப்பற்றிப் பேசும்போது, கண்ணில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதா ருக்கும் வித்தியாசம் இல்லையென்பதை ஒப்புக் கொள்ளுவதே யில்லை. தன்னை பெரிய வருணாச்சிரம தர்மியாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார். முஸ்லிம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்லிம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலாலஜபதிராய் அவர்களும், இந்து மகாசபையில் சேர்ந்து, இந்து மகா சபைக்கு உழைக்க முன் வரவேண்டிய தாயிற்று.
இந்துக்கள் அதிகமாகயிருக்கிற பாகங்களில் இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர் கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கின்ற பாகங்களில் மகமதியரல்லாதாரைத் தாழ்மையாக கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், கிறிஸ்தவரல்லா தாரைத் தாழ்மையாகக் கருதுவதும், பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு கொஞ்சம் செல் வாக்குள்ளவர்களும், செல்வாக்கில்லாதவர்களைத் தாழ்மையா கவே கருதுவதும், சுபாவமாகத்தானிருக்கிறது.

உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும் கிறித்தவர்களையும் மிலேச்சர் களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால், தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லா தார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும் பிராமணர், பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசி மகன், சூத்திரன் என்று எழுதி வைத்துக் கொண்டிருப்பதையும், மகமதி யர் இந்துக்களைக் காபர் அதாவது நாஸ்திகர்களென்று சொல்லு வதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகளென்று சொல்லுவதையும் தினமும் பார்த்தும், கேட்டும் வருகிறோம்.

இத் தத்துவத்தினாலேதான் இன்றையத்தினம் நாம் நமது ராஜ் ஜியத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல் பிரிட்டிஷ் அரசாங்கமாக செய்து வைத்துக் கொண்டி ருக்கின்றோம். நமது பொய்க் கிளர்ச்சிகளின் பலனாக ஒரு சமயம், பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அர சாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ, அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல், ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில் லாமலிருக்கிறது.. லாலாலஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத் தில், முஸ்லிம்கள், முஸ்லிம் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டு மென்று வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டதாவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் வெகு எளிதில் சொல்லி விட்டார்.

இந்திய அரசாங்கத்தில், இந்திய ஜனசங்கையில் சாதிவொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர் களுக்குப் பங்கு உண்டா? இல்லையா?
அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை விட்டு போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழவேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மத விஷயத்திலும் நமக்குள் சரியான அந்தஸ்துப் பெற்றுத்தானே ஆகவேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமில்லா விட்டால் அவர்களுக்குச் சம உரிமை கிடைத்துவிடுமா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன், மகமதியர் கொஞ்ச மாயுள்ள எந்தப் பிரதேசத்திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்வம் பெற்றிருக்கிறார்களா? அல்லது எந்தக் கிறிஸ்த வர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருடங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டிபோட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டா தானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொரு பங்கு எண்ணிக்கை உள்ளவன்தானே. அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய வோட்டைக் கொடுத்து, நமது அரசியல் சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று, ஸ்ரீமான்கள், மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும், சமசுதந்தரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவுது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படி யிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப் படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால், அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்லுவது சமத்வ மனித தர்மமாகுமா? இந்தியாவில், இந்துக்களும், கிறித்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக் கொருவர் பரஸ்பர நம்பிக்கையும், சுய உரிமையும் பெற்றாலல் லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம்.

சம உரிமையும், நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்து போடா மல் மூடிவைத்து விடுவதினால், அது ஆறிப்போகுமென்று நினைப் பது போல்தான் முடியும். இந்து மகா சபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால், அவ்விந்து மகாசபை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும், ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றி இந்துப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதி யிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்தவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்துக்குக் காரணமாகியிருக்கிறதென்பதையும் அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலக்ஷியமாயிருந்த வகுப்பினருக்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணி யிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது என்று எழுதியிருக் கிறது.
இந்துக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கியிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங்களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகப் பயன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா? ஆதலால், இந்து மகா சமூகமானது ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல் தேசப் பொது நன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் சஞ்சீவியென்பதை நாம் உறுதியாகச் சொல்லுவோம்.


-------------தந்தை பெரியார் - "குடிஅரசு" 13-12-1925

2 comments:

Thamizhan said...

இன்றைய இந்துத்துவா பேசுபவர்களுடன் உறவாடும் தமிழினத்திற்கு அற்பணிப்பு!
நீங்கள் இந்து என்றால் பார்ப்பானுக்கு அடிமை என்பதை ஒப்புக் கொள்வதாகத்தானே பொருள்.
இல்லை பார்ப்பனர்கள் உங்களை உடன் பிறப்புக்களாக நடத்தப் போகிறார்களா?
காஞ்சி சுப்புணி காலிலே சாக்குப் போட்டுக் கொள்வதும்,தீண்டாமையைத் தீவிரமாகக் கடைப் பிடிப்பதும் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லையா?
சோமாரிகள் மாமாக்களாகத்தான் இருக்க முடியுமே தவிர உங்கள் உடன் பிறப்புக்களாக முடியுமா?
இந்துத்துவா என்ற புதிய இந்து மகாசபையில் மயங்கியுள்ள தமிழர்களே ஏமாந்தது போதும்,
சமத்துவம் வேண்டும் சனாதனம் வேண்டாம் என்று சொல்லி வெளியேறுங்கள்.

தமிழ் ஓவியா said...

சரியாகச் சொன்னீர்கள். இப்படிப்பட்ட சவக்கடிகள் கொடுத்தால்தான் பார்ப்பான் மட்டுமல்ல தமிழனும் திருந்துவான்.