Search This Blog

29.7.08

பகுத்தறிவுக்கும் நம் மனத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்

இப்போது நடைப்பெறும் திருமணத்தில் நாம் ஒன்றும் பெரிய மாறுதலைக் காணவில்லை. தலைக் கீழாக ஒன்றும் நடைப்பெறப் போவதில்லை.

ஒரு சிறிய மாறுதல் மட்டும் உண்டு. மாறுதல்கள் இயற்கையாகவே பல இனங்களாலே பல இடங்களில் இன்று கையாளப்படுத்தான் வருகின்றன. இங்கே நாம் மாறுதலைக் காண்கிறோம். சடங்கில்லை, வேற இனத்தவன் எவனும் மணத்தை நடத்துவதில்லை.

சுயமரியாதைக்கும் பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருந்திய மணம் வேண்டுகிறோம். அப்படிப்பட்ட இந்தத் திருமணத்தைத் நாஸ்திகத் திருமணம் என்று பலர் சொல்லக் கூடும். மற்றும் நமது தாய்மார்கள் கலிகாலம்! அய்யர் இல்லை என்றாலும் அம்மியாவது இருக்கக் கூடாதா? நெருப்பாவது (ஓமம்) இருக்கக் கூடாதா? விளக்காவது இருகக் கூடாதா? என்றெல்லாம் சொல்லுவார்கள்.

நமக்குப் பார்ப்பனர் மீதோ, அம்மி மீதோ, நெருப்பின் மீதோ, குத்து விளக்கின் மீதோ தனிப்பட்ட வெறுப்பு ஒன்றுமில்லை. நெருப்பு அடுப்பில் இருக்க வேண்டியது தான். அம்மி அரைக்கப் பயன்பட வேண்டிய இடத்தில் இருக்கட்டும். பகுத்தறிவுக்கும் நம் மனத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும் என்று தான் சொல்லுகின்றோம்.

ஒவ்வொன்றிற்கும் ஏன்? என்ற கேள்வியைப் போட்டு ஆராய்ச்சி நடத்தும் காலம் இது. மனிதருக்கு எவ்வளவு தூரம் பயன்படுகின்றது என்பதைப் பொறுத்து தான் ஒரு பொருளுக்கு மதிப்பு வருகிறது. இதற்காகத் தான்
நாம் உழைக்கின்றோம்.இந்தத் திருமணத்தின் முதல் வெற்றி பார்ப்பான் இல்லாதது. ஆதலால் இதைச் சுயமரியாதைத் திருமணம் என அழைக்கிறோம்.

தான்தான் உயர்ந்த சாதி என்ற ஆணவங் கொண்டு நம்மைத் தொடாதே,
கூட உட்கார்ந்து சாப்பிடாதே என்று சொல்லும் ஒருவனை மணையில் உட்கார வைத்துக் காரியம் நடத்தினால் தமிழனுக்கு மானமுண்டு! என்று சொல்ல முடியுமா?

இரண்டாவது வெற்றி என்னவென்றால் இது பகுத்தறிவுத் திருமணம். பகுத்தறிவு என்று சொல்லுவதும் மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவற்றை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப்பழக்கங்கள் எனத் தள்ளப்படும். நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே பழைய கருத்துக்களெனத் தள்ளிவிடவில்லையா?

அதைப் போலத் தான் நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட ஒரு காலத்தில் இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான் என்று சொல்லுவார்கள்.அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி காலத்தின் சின்னம். எனவே பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்துக்கு அவர்கள் செய்தது சரி என்பதனாலும், அப்போது அவ்வளவுதான் முடிந்தது என்பதனாலும், இன்று மாறித்,தான் ஆக வேண்டும்.

சக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அக்காலத்து எடிசன். அப்புறம் பலப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித் தான்
தீர வேண்டும்.இப்போத நாம் எவ்வளவு மாறியிருக்கிறோம்? அய்ம்பது வருடங்களுக்கு முன்பிருந்ததை விட கடவுளைப் பற்றிய எண்ணம் தெய்வீக சக்தி படைத்தவர்கள் பெரிய மனிதர்கள் என்பவர்களைப் பற்றிய எண்ணம் வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள் வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எவ்வளவோ எண்ணங்களில் பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம்.

பெண்களின் புடைவை, இரவிக்கை, நகைகள், புருஷன், பெண் ஜாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்.அடுத்தப்படியாக இங்குப் பொருள் செலவு அதிகமில்லை. நேரமும் பாழாவதில்லை. முன்பெல்லாம்பல நாள்கள் திருமணம் நடைப்பெற்றது. இப்போது பார்ப்பனர்கள் கூடOne day only - அதாவது ஒரு நாள் திருமணம் என்பதாக அழைப்பிலேயே குறிப்பிடுகிறார்கள். மற்றும் இந்தத் திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை இருக்கின்றது.

ஆரியர்களின் 8- வகைத் திருமண முறைகளில் ஒன்றில் கூட பெண்
ஒர் உயிருள்ள பொருளாக மதிக்கப்படுவதில்லை.ஒத்த அன்பும், காதலும் ஏற்பட வேண்டுமென விரும்பினால் அந்த முறையில் நாம் மக்களை வளர்ப்பதில்லை. பக்குவம் வந்தவுடன் பெண்ணை அடைக்கிறோம். பெண்களுக்குத் தக்க கல்வி அனுபவம் தருவதில்லை. இப்படிப்பட்ட பெண்களைத் தங்களுக்கு வேண்டியவற்றைப் தெரிந்தெடுத்துக் கொள்ளும் படிச் சொன்னால் டிராமா (நாடகம்) காரனாகத் தான் தெரிந்தெடுப்பார்கள். அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு முறையைக் கற்றுக் கொடுப்பதில்லை.

மேல் நாடுகளில் சிறு குழந்தைகளுக்குக் கூட (Freshair ) அதாவது நல்ல காற்று முதலியவற்றின் அருமை தெரிகின்றது. ஆணும் பெண்ணும்
ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுக்கும் உரிமை இந்த நாட்டில் அறவே இல்லை. யாரோ தெருவில் போகும் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொன்னால் அவனுக்கு மணமக்களைப் பற்றி என்ன தெரியும்? அண்ணன் தங்கை ஆகிய இருவர் சாதகங்களைக் கொடுத்தால் ஒருவருக்கொருவர் கணவன் மனைவி ஆவதற்குப் பொருத்தம் சொல்லுவான்.

மனிதனுக்கும், நாய்க்கும், குட்டிக்கும் கூட ஜாதகத்தில் பொருத்தம் காணலாம்.ஜாதகம் இல்லையென்றால் பெயரைச் சொல்லிச் பொருத்தம் பார்ப்பான். அதற்கு மேல் பல்லி ஆகியவைகளுடன் ஒப்புதல் வேண்டும். வாழ்க்கையைப் பிணைக்கக் கூடிய திருமணத்தில் இவ்வளவு பேதமை. அநேக நல்ல பொருத்தங்கள் என்பவை பெண்ணின் முதுகுக்கும் கணவனின் கைத்தடிக்கும் ஓயாத பொருத்தமாக முடிகிறது.

வரும் காலத்தில் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் உரிமை தரவேண்டும். இல்லையென்றால் உரிமையுடனிருக்கப் போகும் அவர்கள் நம் தடைகளை விலக்கி முன்னேறுவார்கள். எனவே முதலிலேயே உரிமையளித்து விடுவது நல்லது.

---------------12-07-1944- அன்று பேரளத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 22-07-1944- குடிஅரசு இதழில் வெளியானது.

0 comments: