Search This Blog

27.7.08

இந்துமதம் என்றால் உலகெமெல்லாம் நாறுகின்றதே!



வெளிநாடுகளில் பிரசாரம்


சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டோடு மட்டிலும் நிற்கவில்லை. உள்நாட்டிலும் பல மாகாணங்களிலு; பரவிறறு. தென் ஆப்பிரிக்கா மலேயா இலங்கை பர்மா முதலிய வெளிநாடுகளிலம் பரவிவிட்டது. அங்கெல்லாம் "குடிஅரசும்" "ரிவோல்ட்"டும் ஏராளமாகச் சென்றன. அவ்விடங்களில் சுயமரியாதைச் சங்கங்கள் தோன்றின. வெளிநாடுகளிலிருந்து ஈ.வெ.ராவுக்கும் அவர் தோழர்களுக்கும் அழைப்புகள் வந்தன. நமது நாட்டிலும் மலையாளத்திலும் இவ்வியக்கம் மிகவும் வலுப்பெற்றது. அங்குள்ள ஈழத்தவர்கள் முழுவதும் இதை ஆதரித்து நின்றனர்.

1930 ஜீலை மாதத்தில் திருநெல்வேலியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் ஈ.வெ.ரா. வின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. படத்திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்கியவர் மாஜி உயர்தர நீதிமன்ற நீதிபதியும் S.N.D.P யோகமென்ற ஈழுவர் சங்கத்தின் காரியதரசியுமாகிய திரு.எம். கோவிந்தன் அவர்கள் அச்சமயம் அவர் கூறியதாவது :

"கோட்டயத்தில் நடைபெற்ற S.N.D.P மாநாட்டில் பத்தாயிரத்துக்கு அதிகமான மக்களுக்க இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப்பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு மிக எளியதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும் உண்மை உணர்வோடு வந்தது. மிக்க கவனத்துடன் மக்கள் கேட்டனர். எனது நாட்டில் (மலையாளம்) சுயமரியாதை விதைகள் முளை கண்டிருந்தவை இவரால் போஸிக்கப்பட்டன.மிகுந்த விளைவு கட்டாயம் ஏற்படும்".

மலையாளத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் எவ்வளவு தூரம் பரவியிருந்தன என்பதை நிருபித்துக்காட்டுவதற்கு இது தக்க சான்றாகும்.இவ்வியக்கத்தின் மூலம் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி பெற்றது கண்டு வைதீகப் பார்ப்பனர்களும் தேசீயப் பார்ப்பனர்களும் திடுக்குற்றனர். எங்களுக்குச் சுயராஜ்யம் வேண்டாம். வெள்ளைக்காரர்களே இருக்க வேண்டும் என்று சொல்லவும் தொடங்கினர். 1929 ஜீலை மாதம் 20 மூம் நாள் திருநெல்வேலி ஜில்லா 2 வது சுயமரியாதை மாநாடு திருநெல்வலியில் நடைப்பெற்றது. அம்மாநாட்டை நடது மாகாண மந்திரியாக இருந்த எஸ். குருசாமி ரெட்டியார் திறந்து வைத்தார். அவர் அச்சமயம் இச்செய்தியைத் தெளிவாக விளக்கியுள்ளார். அது வருமாறு :


"இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு - தாழ்வையும் ஒpப்பதற்கு ஏற்பட்டதாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் தேசத்தில் எவ்வளவு பரவியிருக்கின்றதென்பதற்குப் பம்பாய் முதலிய வெளி மாகாணங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவற்றில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்.

நம்மியக்கத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதற்கு சைமன கமிசன் விசாரணையில் பார்ப்பன் கொடுத்த சாட்சியமே போதுமானது. அதாவது தேசீயப் பார்ப்பனரும் வருணாசிரமப் பார்ப்பனருமாகிய ஒரு பிரபல பார்ப்பனர் சைமன கமிசனிடத்தில் சாட்சியம் கொடுக்கும் போது ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமைப் பதவிகளாகிய ஜில்லா போர்டு தலைவர் முதலிய பதவிகளை வகிக்கத் தகுந்த இந்தியர் நமது நாட்டில் இல்லையென்றும் இந்தியர்கள் சுயராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள அல்லர் என்றும் என் முன்னேயே எடுத்துச் சொன்னார். நான் அவரை இது உம்முடைய அபிப்பிராயமா? என்று கேட்டேன். அவர் சற்றும் வெட்கமின்றி இதுவே தான் இந்நாட்டு எல்லாப் பார்ப்பனர்களுடைய அபிப்பிராயம் என்று சொன்னார். நான் நீங்கள் ஜில்லா போர்டு தலைமைப்பதவி வகித்தீர்களே அப்போது நீங்கள் தகுதியுடையவர்களாக இருந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த நண்பர் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். அப்போது திரு. சைமன் அவர்கள் நண்பர் மீது பரிதாபப்பட்டு போதும் விட்டுவிடுங்கள் என்றும் அவரது அபிப்பிராயம் விளங்கிவிட்டது என்றும் சிரித்துக்கொண்டே சொன்னார். சுயராஜ்யமே வேண்டாமென்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு அவர்களைக் கொண்டுவந்து விட்டதற்கக் காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும்.


1929 இறுதியில் மலேயா நாட்டுத் தமிழர்கள் ஈ.வெ.ரா. வை அந்நாட்டிற்கு அழைத்தனர். இச்சமயம் "குடிஅரசும்" "ரிவோல்ட்"டும் சென்னையில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. மலேயா நாட்டில் ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்தச் சங்க மாநாடு உன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்மாநாட்டைத் திறந்து வைப்பதற்காக ஈ.வெ.ரா. அழைக்கப்பட்டார். அந்நாடு முழுவதும் சுற்றுப்பிராயாணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.இதன் பொருட்டு அவருடைய தோழர்களும் அழைக்கப்பட்டனர். 1929 டிசம்பர் 15 ஆம் நாள் ஈ.வெ.ரா. வும் நாகம்மையாரும் தோழர்கள் எஸ். ராமநாதன், அ. பொன்னம்மபலனார், சாமி சிதம்பரனார், சி.நடராஜன் முதலியவர்களும் நாகையில் கப்பலேறினர்.

அந்நாட்டிலும் தேசீயத்தின் பெயரால் சிலர் கொள்ளையடித்து வந்தனர். மதத்தின் பெயரால் ஏமாற்றி வந்தனர் இக்குழுவினர் ஈ.வெ.ராவின் வருகை கேட்டுத் திகைத்தனர். தங்கள் பிழைப்பில் மண்விழுந்துவிடும் என்று நடுங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். தங்கள் சூழ்ச்சிகள் வெளிப்பட்டுவிடும் என்று கலங்கினர். இவர்கள் ஈ.வெ.ரா.வையும் அவர் தோழர்களையும் மலேயாவுக்கு வராமல் தடுக்கவேண்டுமென்று பலமான முயற்சி செய்தனர். மலேயா அரசாங்கத்தாரிடம் இராமசாமியும் அவர்கள் தோழர்களும் பெரிய புரட்சிக்காரர்கள் காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களைக் கலகம் பண்ணும்படி தூண்டுகிறார்கள். அவர்கள் இங்கு வந்தால் அரசாங்கத்திற்கு ஆபத்து. பொதுமக்களிடையில் குழப்பம் உண்டாகும். ஆதலால் அவர்களை இறங்கவிடாமல் கப்பலிருந்தபடியே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று முறையிட்டனர். இம்முறையீடு பலிக்கவில்லை. ஆயினும் இக்கூட்டத்தார் சும்மா விடவில்லை. தேசத் துரோகிகள் வருகின்றார்கள். நாஸ்திகர்கள் வருகின்றார்கள். மதத்துரோகிகள் வருகின்றார்கள். அவர்களை ஒருவரும் வரவேற்கக் கூடாது. தமிழ்மக்கள் ஒருவரும் அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கக்கூடாது. தமிழ்மக்கள் ஒருவரும் அவர்களுடைய கூட்டங்களுக்கு செல்லக்கூடாது என்று நாடு முழுவதும் விளம்பரம் செய்தார்கள். இக்காரணத்தால் ஈ.வெ.ரா வையும் அவர் தோழர்களையும் வரவேற்க எண்ணற்ற மக்கள் கூடிவிட்டனர். இவர்கள் பினாங்கு துறைமுகத்தில் இறங்கும் போது 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அங்குக் கூடியிருந்தனர்.


இறங்கியதும் இவர்களுக்கு பல சங்கத்தினர் மாலைகள் சூட்டினார்கள். வரவேற்பிதழ்கள் வாசித்தனர். இந்துக்கள் முஸ்லீம்கள் அனைவரும் இவ்வரவேற்பில் கலந்திருந்தனர். பாமர மக்கள் பலர் அறியாமையால் ஈ.வெ.ரா. வின் பாதத்தில் விழுந்து வணங்கினர். அவர் நடந்து சென்ற அடிச்சுவட்டைக் கண்களில் ஓத்திக் கொண்டனர். பினாங்கில் வெளியான பத்திரிகைகள் எல்லாம் இவ்வரவேற்பைப் பாராட்டி எழுதின. இதுவரை எந்த இந்தியத் தலைவர்களுக்கும் இத்தகைய வரவேற்பு நடைபெற்றதில்லை என்று குறித்திருந்தன. இவ்வரவேற்பைக் கண்டவுடன் எதிரிகள் நடுநடுங்கினார்கள். இதில் கலந்து கொள்ளாதிருந்தவர்கள் எல்லோரும் திகைப்புற்றார்கள். விலகியிருந்த ஒருசில இந்து முஸ்லீம் கனவான்களும் பிறகு கலந்து கொண்டனர். 20-10-1929 ல் இவர்கள் பினாங்கில் இறங்கினர். அன்று மாலையே அதைவிட்டுப் புறப்பட்டு கோலப்பிறை கோலாகஞ்சார் முதலிய ஊர்களுக்குச் சென்றுவிட்டு 23-12-1929 ல் ஈப்போவுக்குச் சென்றனர். அங்குத் தமிழர் சீர்திருத்த மாநாடு நடைப்பெற்றது. மாநாட்டை ஈ.வெ.ரா. திறந்து வைத்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர். அந்த மாநாட்டில் தமிழர்கள் முஸ்லீம்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் யாழ்பாணிகள் அனைவரும் கலந்திருந்தனர். ஈப்போ மாநாடு முடிந்த பின் நேரே சிங்கப்பூர் சென்றார்கள். சிங்கப்பூரில் ஈ.வெ.ரா. வுக்கு நடந்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்குப் பல பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஈ.வெ.ரா. சிங்கப்பூருக்குச் சென்ற 26-12-1929 ல் மலேயா இந்திய சங்க மாநாடு நடைப்பெற்றது. அதற்கு ஈ.வெ.ரா. அழைக்கப்பட்டிருந்தார். இவரும் அங்கே சென்று அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு விரிவுரை செய்தார்.

"இந்த மாநாடு எங்கள் நாட்டுக் காங்கிரசைப் பின்பற்றாமல் அரசாங்கத்தாரை உத்தியோகமும் பதவியும் கேட்காமல் நாட்டின் நலனுக்கும் பொதுமக்களின் நன்மைக்குமான முறையில் ஆட்சி செலுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தும்படியான மாதிரியில் நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மார்க்கம் மக்களை உன்றுபடுத்தி அவர்களுக்கு அறிவையும் சுயமரியாதையையும் உண்டாக்குவதே தவிர உத்தியோகங்களை இந்திய மயமாக்க வேண்டும் என்பதல்லவென்பதே எனது அபிப்பிராயம். இந்தியர்கள் என்பவர்களாகிய நாம் ஒரு மதம் ஒரு ஜாதி ஒரு வகுப்பு ஒரு கொள்கை ஒரு லட்சியம் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. முதலாவது லட்சியத்தை ஒன்றுபடுத்திக் கொண்டாலொழிய ஒரு காரியமும் செய்ய முடியாது".

இவ்வாறு அங்குப் பேசினார். இதைப் பெரும்பாலான மக்கள் வரவேற்றனர். அவ்வூர் நகர மண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதற்கு நகரப் பெரியார்களில் ஒருவரான பார்ஸ்டன் என்னும் ஒரு ஆங்கிலேயர் தலைமை தாங்கினார். அம்மண்டபத்தின் மாடியில் நான்னு புறங்களிலும் மக்கள் நிரம்பியிருந்தனர். ஊசி விழுந்தாலும் கணீர் என்று ஒலி கேட்கும். அவ்வளவு அமைதி குடிகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் ஈ.வெ.ரா. பெசும் போது அமெரிக்க மாதாகிய மிஸ். மேயோ என்பவர் இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கம் ஊழல்களைக் குறிப்பிட்டார். அத்தகைய ஊழல்களையெல்லாம் போக்குவது தான் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஒருவர் கேள்வி கேட்டார். ஈ.வெ.ரா.வும் தக்க விடை கூறினார்.

கேள்வி : மேயோ எழுதியதன் கருத்து என்ன?

பதில் : கருத்து என்ன என்பதை நாம் பிறகு கவனிப்போம். அந்தம்மாள் எழுதியிருப்பவை உண்மையா? பொய்யா? என்று நாம் முதலில் பார்க்க வேண்டும்.

கேள்வி : காந்தியார் அந்தம்மாளைச் சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியிருக்கிறாரே?

பதில் :காந்தியார் சாக்கடைப் பரிசோதனை என்று சொல்லியது உண்மையாயிருந்தாலும் சாக்கடை இல்லாத இடத்தையாவது சிங்காரவனத்தையாவது காட்டி அவற்றைப் பார்க்க அந்தம்மாளைக் கூப்பிட்டிருக்கலாம். அப்படிக் காட்டுவதற்கு ஆதாரமில்லாததால் தான் காந்தியார் இந்தியர்களைப் பார்த்து மேயோ எழுதிய புத்தகத்தை மறந்துவிடாமல் எப்போதும் ஒரு பக்கத்தில் வைத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதன் கருத்து சாக்கடையைச் சுத்தம் செய்யுங்கள் என்பதேயாகும்.

கேள்வி : வேறு பலர் மறுப்பு எழுதியிருக்கிறார்களே?

பதில் : மேயோ சொன்னவற்றை யாரும் முழுதும் மறுக்கவில்லை. மிஸ். மேயோ நாட்டிலும் இவ்விதம் இல்லையா என்றுதான் எழுதியிருக்கிறார்கள். நீ மாத்திரம் யோக்கியனா என்றால் இதற்குப் பெயர் மறுப்பு ஆகுமா? ஓப்புக் கொள்வதாகும்.

இவ்வாறு அவர் கேள்விகளுக்கு விடை கூறி மேயோ கூற்று ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டி பேசினார். கேள்வி கேட்டவர் வெட்கமடைந்தார்.


மலேயா சுற்றுப்பிரயாணம் ஒரு மாதத்திறகு மேல் இல்லை. டிசம்பரில் சென்று ஜனவரியில் திரும்பினார். இக்குறைந்த காலத்தில் அந்நாடெங்கும் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், தைப்பிங், மூவார், ஜோகூர்பார், பத்துபகார், மலாக்கா, தம்பின் கோலப்பிறை, கோலாகுபுதஞ்சமாலிம், சுங்கைகுருட், செலுக்கான்சர். கம்மார் கோலா கஞ்சார், சுங்கபட்டாணி முதலிய ஊர்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. காலைப் பொதுக்கூட்டம் ஒரு ஊரில். மாலைப் பொதுக்கூட்டம் மற்றோர் ஊரில் நடுப்பகலில் ஒரு ஊர் இரவில் வேற்றூர். நள்ளிரவிலும் பொதுக்கூட்டம் பொதுககூட்டங்களுக்கு கணக்கில்லை. ஓரே காலத்தில் இரண்டு பொதுக் கூட்டங்கள் வெவ்வேறு ஊர்களில் நடைப்பெறும். பெரும்பாலும் பொதுக்கூட்டங்களில் தோழர்கள் ஈ.வெ.ரா. எஸ்.ராமநாதன் அ.பொன்னம்பலனார் சாமி சிதம்பரனார் சி.நடராஜன் என்.பி.காளியப்பன் முதலியவர்கள் பேசுவார்கள். பொதுக்கூட்டங்களுக்குச் சீனர்கள் ஜப்பானியர் மலேயர்கள் திரளாக வந்தனர். இந்தியப் பெரியாரைப் பார்க்க வேண்டுமென்பதே இவர்கள் ஆவர். செல்வாக்குள்ள தமிழர்கள் ஈ.வெ.ரா.வைத் தனியாகச் சந்தித்துப் பேசுவார்கள். பத்திரிகைப் பிரதிநிதிகளும் சந்திப்பார்கள். அவர்கள் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றி வாதம் புரிவார்கள். அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் தக்க விடை கூறுவார். அனைவரும் மகிழ்ச்சியுடன் திரும்புவார்கள்.

மலேயாவில் உள்ள தமிழர்களிடத்தில் நம் நாட்டைப் போல சாதிச் சண்டைகள் இல்லை. மதப்போராட்டங்கள் இல்லை. மூடப் பழக்க வழக்கங்களும் குறைவு. பல தலைமுறைகளுக்கு முன் குடியேறிய அந்நாட்டிலேயே நிலையாக வாழும் தமிழர்களும் இருக்கின்றனர். அங்குள்ள சீனர்கள் ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்கள் மு);லீம்கள் முதலியவர்களின் பழக்கத்தால் தமிழர்களும் ஓரளவு ஓற்றுமை பெற்றுள்ளனர். ஆதலால் அவர்களுக்குச் சுயமரியாதைக் கொள்கைகள் புதியவையல்ல. சாதிப் போர் சமயவெறுப்பு வீண் சடங்குகள் ஒழிய வேண்டும் என்பது அவர்களுக்கு முற்றிலும் உடன்பாடு. இவை ஓரளவு பழக்கத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பவையே. இந்தியாவில் இக்கொடுமைகள் நிலைத்துள்ளன. இவற்றை ஒழித்துத் தமிழர்களை ஒன்றுபடுத்தவே சுயமரியாதை இயக்கம் பாடுபடுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் இவ்வியக்கத்துக்குப் பேராதரவு தந்தனர்.

மலேயா நாட்டில் ஈ.வெ.ரா. வின் சொற்பொழிவைக் கேட்பதற்கென ஓவ்வொரிடத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவரைப் பார்ப்பதற்கெனப் பலர் திரண்டனர். இராமசாமியார் என்ற பெரைக் கேட்டவுடன் பாமர மக்கள் பலர் அவரை ஒரு பெரிய சாமியார் என்றே நினைத்துக் கொண்டனர். இந்த இந்தியச் சாமியாரைத் தரிசிக்க வேண்டுமென்று அவாகளில் பலர் வந்தனர். இதற்கு உதாரணமாக அங்கு நடந்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியைக் கூறுகிறோம்.

ஒரு சிறு கிராமத்தில் மாலை 6 மணிக்கு ஒரு பொதுக்கூட்டம் போடப்பட்டிருந்தது. சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். பொதுக்கூட்டம் முடிநதுவிட்டது. இரவுச் சாப்பாடும் முடிந்தது. நல்ல நிலவு. தெருவில் நாற்காலிகள் போட்டு ஈ.வெ.ரா. வும் தோழர்களும் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். இச்சமயம் சுமார் 40 வயதுள்ள ஒரு பெண்மணி சுமார் 20 வயதுள்ள தன் பெண்ணுடன் வந்தாள்.

இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமியார் எங்கே? என்று தேடினாள். அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டு இராமசாமியாரைக் காட்டினர். அவள் உடனே தன் பெணணுடன் வந்து அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். எழுந்தாள் சுவாமி நான் பத்துக் கல்லுக்கு அப்பாலிருந்து வருகிறேன். ஆதலால் நேரமாகிவிட்டது. உங்கள் உபதேசத்தைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. இவள் என் பெண். (தன் பெண்ணைக் காட்டி) இவளுக்குக் கல்யாணமாகி நான்கு வருஷங்கள் ஆயின. இன்னும் பிள்ளை பிறக்கவேயில்லை. நீங்கள் ஏதாவது நல்வாக்குக் கொடுக்க வேண்டும். தங்கள் வரத்தால் தான் பிள்ளை பிறக்க வேண்டும் என்று பரிதாக் குரலிற் கூறினாள்.

இதைக் கேட்டதும் பக்கத்திலுள்ளவர்கள் நகைத்தனர். ஈ.வெ.ரா.வும் நகைத்தார். அப்பெண்மணியின் அறியாமைக்க இரங்கினார். அவளை நோக்கி அம்மா நான் சாமியாரல்ல வெறும் ஆசாமிதான். எனக்கே30 வருஷமாகப் பிள்ளையில்லை. நான் சொல்வதை நம்பாவிட்டால் இந்த அம்மாவைக் ( நாகம்மையாரைக் காட்டி) கேட்டுப்பார். தனக்கே பிள்ளையில்லாவிட்டால் என்ன? இங்கிருக்கும் வரையிலும் நன்றாகச் சம்பாதித்துச் சாப்பிடுங்கள். சிக்கனமாகச் செலவு செய்து மீதம் பிடியுங்கள். அப்பொழுதுதான் இந்தியாவுக்குப் போனால் சுகமாயிருக்கலாம் என்றார். அப்பெண்பிள்ளை சாமி நீங்கள் சொல்லுவதை நான் நம்பமாட்டேன். பெரியவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ஏழையின் மேல் பெரிய மனது வைத்து ஆசிர்வாதம் பண்ணவேண்டும் என்று பிடிவாதம் பண்ணினாள். இறுதியில் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சரி உன் மகளுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிள்ளைக் கவலை வேண்டாம். பிறகு நல்ல ஆண் குழந்தை பெற்றுச் சுகமாக வாழ்வாள் என்று சொன்னார். அவளும் சமாதானமடைந்து சென்றாள். நண்பர்கள் யாவரும் வேடிக்கையாகப் பரிகாசஞ் செய்தனர்.


மலேயா நாட்டில் இவர் சொற்பொழிவைக் கேட்ட எதிரிகள் கூட சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டனர். ஓரிடத்திலாவது கூட்டத்தில் குழப்பம் நேரவில்லை. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெரிய மனிதர்கள் என்பவர்கள் வந்து கூடியிருப்பார்கள். சில சமயங்களில் ஈ.வெ.ரா. விடம் மதங்களைப்பற்றி மிகுதியாகக் கண்டிக்காமலிருந்தால் நலம் என்று யாராவது சொல்லுவார்கள். இவருக்கு எப்பொழுதும் முக தாட்சண்யம் அதிகம். தமது பரம்பரைப் பகைவரானாலும் நேரில் கண்டுவிட்டால் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வார். ஆதலால் அப்படிப்பட்ட சமயங்களில் ஈ.வெ.ரா. வின் சொற்பொழிவு வழவழா கொழகொழா என்றிருக்கும். தமக்கும் தம் தோழர்களுக்கும் அளித்த வரவேற்பைப் புகழ்ந்து கொண்டிருப்பார். விருந்தைப் பாராட்டிக் கொண்டிருப்பார். சமூக விஷயங்களைப் பற்றிச் சொற்களை அடுக்கிக் கொண்டே போவார். அவருடைய உண்மையான கருத்து எளிதில் வெளிப்படாது. சொற்பொழிவில் உயிர் இராது வீரம் இராது. கூட்டத்தில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரிந்தால் தான் நன்றாகப் பேசுவார். கேள்விகள் கேட்டுவிட்டால் போதும். விரிவுரை வீரவுரையாகிவிடும். எதிரிகள் வெட்கித் தலைகுனிவார்கள். எந்த இடத்திலும் இதுவரையிலும் இவர் தம்மைக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறாமல் போனதேயில்லை. பதில் ஆணித்தரமாக இருக்கும். இதற்கு ஓர் உதாரணத்தைக் காட்டுகின்றோம்.

1928ம் ஆண்டில் சிதம்பரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிப் பேசினார். அச்சொற்பொழிவில் மதத்தைப்பற்றியும் அதில் உள்ள ஊழல்களைப் பற்றியும் பேசும்போது ஒரு பார்ப்பனர் வந்து கேள்வி கேட்டார். அக்கேள்விகளும் அவற்றிந்த இவரளித்த விடைகளும் இவை. இந்தக் கேள்வி இவர் மீது பொது ஜனங்களுக்கு வெறுப்பு வரட்டும் என்பதற்கு ஆகவே.

நீங்கள் சாமியைக் கல் என்று சொன்னீர்களே! இது சரியா? என்று கேட்டார்.

அதற்கு ஈ.வெ.ரா. உடனே ஆம் வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் (என்று மேஜை மேலிருந்த கைத்தடியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார் கோவில்பக்கம். எல்லோரும் கைகொட்டி நகைத்தனர்.

மற்றொரு பார்ப்பனர் : ஆனால் அந்தக் கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது என்றார். ஈ.வெ.ரா. அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்குச் செய்த மந்திர உச்சாடனத்துக்கு உண்மையில் சக்தி இருக்குமானால் இதோ எதிரில் இருக்கும் உயிருள்ள மனிதருக்கும் கொஞம் அதே மந்திரத்தை உபதேசம் செய்து அவரை அந்தக் கல்லுச் சாமிக்குப் பக்கத்திலிருந்து பூசனை செய்யும்படியாவகவாவது செய்யக் கூடாதா? என்றார்.

முதலில் கேட்டவர்: இந்துமதம் என் ஒன்று இல்லையென்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நீங்களாவது ஒரு பது மதம் சொல்லக் கூடாதா? என்றார்.

ஈ.வெ.ரா: நான ஒரு புது மதத்தைப் போதிக்க வரவில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் உண்மையாகவும் மற்ற மக்களிடத்தில் அன்பாகவும் சம பாவிப்பாகவும் பரோபகார எண்ணத்துடனும் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்று தான் சொல்லுகிறேன் என்றார்.

கேட்டவர்: இருக்கின்றதை ஒழிப்பதானால் மற்றொன்றைக் காட்ட வேண்டாமா? என்றார்.

ஈ.வெ.ரா. வீட்டிற்குள் அசிங்கம் இருக்கின்றது நாற்றம் அடிக்கிறது எடுத்து எறியுங்கள் என்றால் அதற்குப் பதில் அந்த இடத்தில் என்ன வைக்கின்றது என்று கேட்பது சரியாகுமா? இந்துமதம் என்றால் உலகெமெல்லாம் நாறுகின்றதே! அந்தத் துர் நாற்றம் போய்விட்டால் அதுவே போதம் என்றார்.


மேலே கூறியது போல் ஈ.வெ.ரா. பிறர் தாட்சண்யத்திற்குக் கட்டுப்பட்டு அதிக விறுவிறுப்பின்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய தோழர்கள் சும்மா இருப்பதில்லை. அவர்களே சில நல்ல கேள்விகளை எழுதுவார்கள். எதிரிகள் கேட்பது போல் ஈ.வெ.ரா.விடம் அனுப்பிவிடுவர்கள் பிறகு சொல்லவா வேண்டும்! நீர் வீழ்ச்சி தான் ! அறிவு வெள்ளந்தான்! இந்நிகழ்ச்சி மலேயா நாட்டில் பல இடங்களில் நடைப்பெற்றது.
ஈ.வெ.ரா.வின் மலேயா சுற்றுப்பயணத்தால் பெரும் பயன் விளைந்ததது. அந்நாட்டுத் தமிழர்கள் ஒற்றுமையடைந்தனர். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி முற்றும் நன்றாக உணர்ந்தனர். அவர்களிடம் கிளர்ச்சியும் சமூகச் சீர்திருத்தத்தில் அளவு கடந்த ஆவலும் தோன்றின.

மலேயா நாட்டில் ஈ.வெ.ரா. வின் சுற்றுப்பிராயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் முதன்மையானவர்கள் பலர். சிங்கப்பூரிலும் இப்பொழுது தமிழ்முரசு என்னும் பத்திரிகையை நடத்தி வரும் தோழர் ஜி.சாரங்கபாணி, ஈப்போ ஆர்.ஆர்.அய்யாறு, தாமேதரம் சுப்பையா சுவாமி அற்புதானந்தா முதலியவர்கள் சுற்றுப்பிராயாணம் முடியும் வரையிலும் கூடவே இருந்தனர். ஈ.வெ.ரா. வும் அவரது தோழர்களும் 1930 ஜனவரி 16 ல் இந்தியாவுக்குத் திரும்பினர்.

-------------- சாமி.சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற நூலில் இருந்து... பக்கம் : 95 -104

0 comments: