Search This Blog

24.2.09

"நான் கடவுள்" திரைப்படம் - ஒரு பகுத்தறிவுப் பார்வை




மனநிலை பாதிக்கப்பட்டோர், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வளர்ந்தவர், பிணம் எரிக்கும் தொழில் செய்பவர், பிழைப்புக்காகக் கஞ்சா விற்கும் பெண் என்று சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் வாழ்க்கையைப் பாசாங்கில்லாமல் படம்பிடித்துக் காட்டுவன இயக்குநர் பாலாவின் படங்கள்.



இம்முறை அவர் கோயில், குளம், சர்ச், மசூதி என்று சகல கடவுள் கடைகளின் முன்பும் தட் டேந்தியபடி தர்மம் கேட்கும் பிச்சைக்காரர் களோடு வந்திருக்கிறார். ஊர்விட்டு ஊர் வந்து, மாநிலம் விட்டு மாநிலம் வந்து தங்கள் பாவங்களைப் போக்கிப் புண்ணியம் பெறக் கடவுளைத் தரிசிக்கும் கூட்டத்தில் யாருக்கும் புரிவதில்லை வாசலில் வரிசை கட்டி அமர்ந்திருக்கும் யாருக் கும் கடவுள், தன் கடைக்கண் பார்வையை வீசி, கருணை காட்டவில்லை என்பது! இதை மண்டையிலடித்துப் புரியவைக்கிறார் பாலா.

ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு, தனது மகனை 14 ஆண்டுகள் காசியில் ஒரு சத்திரத்தில் விட்டுவிட்டுப் போனபிறகு மறந்தும் காசிப்பக்கம் தலைவைத்தும் படுக்காத ருத்ரனின் தந்தை (அழகன் தமிழ்மணி),காசியில் தர்ப்பணம் பண் ணும் பார்ப்பனர் உதவியுடன் கங்கைக் கரை களில் சாமியார்கள் மத்தியில் தேடுகின்றார். எரிந்து கொண்டிருக்கும் சிதைக்கு ஆசி வழங் கியபடி அமர்ந்திருக்கும் ருத்ரா (ஆர்யா)வைப் பார்த்து, இவனே தன் மகன் என அடையாளம் காட்டுகிறார் தந்தை. அகோரி எனும் சாமியார் கூட்டத்தைச் சேர்ந்தவன் ருத்ரா என்றும், அவனைப் போலிருக்கும் சாமியார் கூட்டத்தவர் உறவை அறுத்தவர்கள் என்றும் ருத்ரனின் தந்தையிடம் விளக்குகிறார் பார்ப்பனர். பின்னர் ருத்ராவின் குருவைச் சந்தித்து நிலைமையை விளக்கி தென்தமிழ்நாட் டின் மலைக்கோவில் நகரத்துக்கு அழைத்துச் செல்கின்றனர் ருத்ராவை! எப்போது என்னிடம் திரும்பிவர வேண்டும் என்பது உனக்கே தெரியும். நானே கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி) என்பதை உணர்ந்தவன் நீ. உனக் கிருக்கும் உறவுகளை அறுத்து எறிந்துவிட்டு வா என்று வழியனுப்பி வைக்கிறார் குரு.

தொடர்வண்டியில் தமிழகம் வரும்போதும் வீட்டினுள் நுழைந்தபின் விநோதமாய்ப் பாக்கும் தாயை அலட்சியப்படுத்தி விட்டும் தன் போக்கில் பூஜைசெய்துவிட்டு கஞ்சா அடித்து நேரடியாகக் கடவுளாக மாறிவிடுகிறார் ருத்ரா.

இன்னொரு பக்கம் ஊனமுற்றவர்கள், மன நிலை பிறழ்ந்தோர், கண் தெரியாதவர்கள் என மனிதர் களை தட்டிக்கொட்டி உருப்படிகளாகத் தயார் செய்து பிச்சையெடுக்க வைத்து பிழைப்பு நடத்தும் முதலாளி தாண்டவன் மற்றும் அவன் கீழ் இருக்கும் சில்லறை ஏஜென்டுகள். இவர்களுக்கு பாதுகாப்பும் ஆள் சப்ளையும் செய்யும் காவல்துறை. இதில் ஒரு சில்லறை ஏஜென்டான முருகனின் (கிருஷ்ண மூர்த்தி) கண்ணில் பாட்டுப்பாடிப் பிச்சையெடுக்கும் நாயகி அம்சவள்ளி (பூஜா) பட, தனது உருப்படிகளுக்குள் ஒன்றாக்கிக் கொள்கிறான். கஞ்சா தேடி சாமியார்கள் உலவும் இந்த மலைக் கோயிலுக்கு வந்து அங்கேயே குடி கொண்டு விடுகிறார் ஆர்யா. அதே மலையில் இருக்கும் மாங்காட்டுச் சாமியாரிடம் தினப்படி தன் பாவக்கணக்கைத் தீர்க்க மனறாடியபடி, தன் தொழிலைத் தொடர்கிறான் முருகன்.

இந்நிலையில் காவல்துறை ஆய்வாளரின் அறிமுகத்தோடு மொத்தமாக பிச்சைக்காரர்களை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள வருகிறான் சபரி மலையின் பிச்சைக் குத்தகைதாரான மலையாளி ஒருவர். அவர் சொல்லும் யோசனை நல்லதாய்ப் பட முருகனின் கூட்டத்திலிருந்து வேண்டிய உருப்படிகளை அள்ளிக்கொள்ளச் சொல்லி அனுப்பிவிடுகிறான் தாண்டவன். ஒன்றாய்க் குடும்பம்போல இருந்து பிச்சை யெடுக்கும் கூட்டத்தி லிருந்து பகுதிபேர் பிரித்துச் செல்லப் படுகிறார்கள்.

அங்கு, தான் பார்த்த குருட்டுப் பெண்ணான அம்சவள்ளிக்கு பத்து லட்ச ரூபாய்க்கு வியா பாரம் பிடித்து வருகிறான் மலையாளி. மிகக் கொடூரமான முகஅமைப்பு கொண்ட ஒருவ ருக்கு விற்பதற்காக அம்சவள்ளியை அனுப்பத் தாண்டவன் முடிவு செய்கிறான். அது தெரிந்த முருகன் அம்சாவை இழுத்துச் சென்று மாங் காட்டுச் சாமியிடம் விட்டுச்செல்ல, அவன் நான் கடவுள் இல்லை; மேலே ஒருத்தன் இருக்கிறான் என்று ருத்ராவிடம் அனுப்புகிறான். மலையாளி யைக் கொன்று இழுத்துச்சென்று அந்த நேரத்தில் அம்சாவை விடுவிக்கிறான் ருத்ரா. பின்னர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு ருத்ரா காவலில் வைக்கப்பட்டு, தாண்டவன் பழிவாங்க வேண்டும் என்ற தூண்டுதலால் வழக்கிற்கும், ருத்ராவுக்கும் தொடர்பில்லை என்று விடுவிக்கப்படுகிறான். இதற்கிடையில் விற்பனைக்கு இணங்க மறுத்து வியாபாரத்தைக் கெடுத்த அம்சவள்ளியின் முகத் தைச் சிதைத்து அலங்கோலப்படுத்தி, அங்கஹீ னப் படுத்துகிறான் தாண்டவன். வழக்கிலிருந்து விடுபட்டு வெளிவரும் ருத்ரா தாண்டவனுக்கு தண்டனை கொடுக்கிறான். தனக்கு இப்பிறவியிலி ருந்து விடுபட வாய்ப்புக் கேட்கும் அம்சவள்ளி யின் கழுத்தை அறுத்து, எரித்து விடுதலை தருகிற ருத்ரா, இறுதியில் தன் குருவை வந்தடைகிறான்.

முதல் பாதி வரை கதாபாத்திர அறிமுகம், பின்னர் யார் வில்லன் என்று அடையாளப் படுத்தும் போதே, கடைசியில் அவன் கொல்லப்படுவான் என்பது தெரிந்துவிடுகிறது.

அஹம் பிரம்மாஸ்மி என்கிறார்; சமஸ்கிருத மந்திரங்கள், பூஜைகள், மண்டையோட்டு மாலை, மனிதனைத் தின்னும் அகோரி வகை சாமியார்கள், இம்மையிலிருந்தும், மறுமையிலி ருந்தும் விடுதலை கொடுப்பதாக சொல்கிறார்கள் என்றெல்லாம் நாம் குழம்ப வேண்டியதேயில்லை. இதெல்லாம் கதாநாயகனுக்கான பின்புலமே தவிர, கதை அதுவன்று.

தனது காலடியிலேயே கர்ணகொடூரமாகச் சிதைக்கப்பட்டு, இழிநிலையாக்கப்பட்டு, பிச்சை யெடுக்க வைக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்குக் கொஞ்சமும் கருணை காட்டாதது கடவுளா? நெற்றி நிறைய விபூதியும், கடவுள் படங்களுக்கு பக்கத்திலேயே அமர்ந்தபடி மனிதர்களை உருப் படிகளாகக் கணக்குப் பண்ணும் தாண்டவன் பக்தன்தானே? பழமும் தேங்காயும் தந்து வழிபட்டு தன் பாவக் கணக்கை பைசல் பண்ண ஏங்கி நிற்கும் முருகன் கதாபாத்திரத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்? இத்தனைக் கொடுமையையும் அனுபவிக்கும்படி தங்களைப் படைத்ததுதான் கருணையே வடிவான கடவுளா என்று அம்சவள்ளி கேட்கும் கேள்விக்கு என்ன பதில்? இவைதான் மக்கள் மனதில் பதியும் செய்திகள்.

கதாநாயகன், நாயகியை அகோரமாகக் காட்டவும், அவர்களுக்கு காதல் பாடல் வைக்காததும் திரைத்துறையில் துணிச்சலான செய்திகள் என்றால், கதாநாயகியைவிட பிச்சையெடுப் போரைக் கண்காணிக்கும் திருநங்கையை அழகானவராகக் காட்டியதும், அவரை அக்கா என்று கதாநாயகியை அழைக்க வைத்ததும் உண்மையில் பாராட்டுக்குரியவை. பண்பாட்டிற்குரியவை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி வேடமிட்டு பிச்சையெடுப்போரை வைத்து, காவல்துறை, சமூகம், இன்றைய சினிமா என்று சமூக விமர்சனம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு. அதே வேளையில் கடவுள் வேடமிட்டுப் பிச்சை யெடுக்கும் முருகனின் உருப்படிகள் செய்யும் விமர்சனத்தின் கடவுள் உருவங்கள் காணாமல் போகின்றன. முக்குமுக்கென்று முக்கி மருத மலைக்கு நீங்க வந்துபாருங்க என்று பாடுபவரைக் கிண்டலடிப்பதில் தொடங்கி, முருகன், சிவன், பார்வதி என்று கடவுளரைக் கிண்ட லடிக்கும்போது அரங்கம் அதிர்கிறது.

இங்க பாரு, இந்தப் பயல நம்பவே கூடாது, சின்ன வயசிலேயே உள்பாவாடையக் களவாண்டு போன பய என்று கிருஷ்ணனை அறிமுகப்படுத்த, அவன்தான் இன்னிக்கு இளம்பெண்களுக்கு ஹீரோ என்று ஒரு குத்தல் வேறு!

இவன வச்சு ஆட்சியையே புடிச்சிட்டாங்க என்று இராமனை அறிமுகப்படுத்திவிட்டு, ஒவ் வொருவருக்கும் ஒரு இலாகா என்று ஒதுக்கும் பட்டியலில் முதலில் அய்யனாருக்கு காவல் துறையும், பின்னர் குடிச்சே அழியட்டும் என்று டாஸ்மாக் துறையும் ஒதுக்கப்படுகிறது. இப்படி வெளிப்படையான நக்கல் தமிழ்த்திரையில் இதுவரை வந்ததேயில்லை எனும் அளவிற்கு, கடவுளரைக் கண்டந்துண்டமாக்கும் இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைத்தட்டல் பிளக்கிறது.

எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் பார்த்துக்கிட்டுதான் இருக்கான் என்பவரிடம் ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் பார்த்துகிட்டு புளுத்தினான்.... தேவடியாப் பய என்று வெளிப்படையாகத் திட்டும்போது அரங்கத்திலிருந்து வரும் ஆதரவு, மக்கள் மனநிலையைக் காட்டுகிறது.


சடை வச்சவனெல்லாம் சாமின்னு சொல்லிட்டு அலையுறான்

கல்லைக் கண்டாலும் சாமி; கை கால் இல்லைன்னாலும் சாமி; பேசினாலும் சாமி; பேசாட்டாலும் சாமி - எவன்டா சாமி

நாங்களே போலீசுக்குப் பயந்து சாமியார் வேசத்திலே திரியுறோம்

இவங்கள மாதிரிதான் ஒருத்தன் வடநாட்டில் இருந்துகிட்டு சி.எம்.மோட தலையைக் கொண்டு வான்னு சவால் விடுறான் என்று கடவுள்களையும், சாமியார்களையும் சுளுக்கெடுக்கும் வசனங்கள் நறுக்கென்று ஆங்காங்கே தைக்கிறது. எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணே நீங்க பாடுனது எல்லாம் ரசிச்சு ஓட்டைத்தானே போட்டான். ஒருத்தனும் திருந்தலையே என்று சிவாஜி வேடமிட்டவர் கேட்பதில் தொடங்கி, அம்பானின்னா யாருடா? என்பவனிடம், செல்போன் விக்கிறவங்க... உனக்குத் தெரியாது என்று விளக்கம் சொல்லும் இடம்வரை ஒவ்வொரு வசனமும் அழுத்தம். வசனம் ஜெய மோகன் என்று தலைப்பில் வருகிறது. இந்த ஆர்.எஸ்.எஸ். காரரா இப்படி எழுதியிருக்கிறார் என்று வியப்படைய வேண்டும். காசு கொடுத்தால் கடவுள் இல்லை; கடவுள் இல்லை என்று சுமங்கலி படத்தில் பாட்டெழுதவும் முடியும் என்று காட்டிய வாலியைப் போல ஜெயமோகனும் எழுத்து வியாபாரிதானே! ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


அநியாயத்தைத் தட்டிக்கேட்க மேலே இருந்தா ஒருத்தன் இறங்கி வருவான். அப்படிக் கேட்கிற நீதான் கடவுள்; அவதாரம் என்று நந்தா படத்தில் பாலா வைத்த வசனத்தின் விரிவு தான் நான் கடவுள். மற்றபடி அஹம் பிரம் மாஸ்மியெல்லாம் ஒட்டிக்கொண்டவைதான். எவனைக் கூப்பிட்டாலும் கடைசியில் மனிதன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இறுதியில் அவர் சொல்வது!

கடுமையான சித்ரவதையால் சிதைக்கப்பட்ட அம்சவள்ளிக்கு கழுத்தையறுத்து ருத்ரா விடுதலை தருவது சரியா? - வாழவழியற்றோருக்கு மரணம்தான் பரிசா? என்னும் கேள்வி கருணைக்கொலை சரியா? தவறா? என்பதைப் போல சூழலைப் பொறுத்து விடை தரவேண்டிய கேள்வியாகும்.

படத்தின் வெற்றிக்கு அடிப்படையான அற்புத நடிப்பை வழங்கிய ஆர்யா, பூஜா, தண்டவனாக நடித்தவர், பிச்சைக்காரர்கள் வேடமேற்ற அனைத்து நடிகர்கள். இசையில் நம்மை படத்தோடு ஒன்றச் செய்த இளையராஜா அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பாலாவிடம் நாம் எதிர்பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது; ஏனெனில் சமூகத்தில் இன்னும் அழுக்கு நிறைய இருக்கிறது.

--------------- நன்றி:- சமா.இளவரசன் அவர்கள் "உண்மை" பிப்ரவரி 15-28 2009 இதழில் எழுதிய திரை விமர்சனம்

3 comments:

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
Unknown said...

//எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி வேடமிட்டு பிச்சையெடுப்போரை வைத்து, காவல்துறை, சமூகம், இன்றைய சினிமா என்று சமூக விமர்சனம் செய்யும் காட்சிக்கு திரையரங்கில் பெரும் வரவேற்பு. அதே வேளையில் கடவுள் வேடமிட்டுப் பிச்சை யெடுக்கும் முருகனின் உருப்படிகள் செய்யும் விமர்சனத்தின் கடவுள் உருவங்கள் காணாமல் போகின்றன. முக்குமுக்கென்று முக்கி மருத மலைக்கு நீங்க வந்துபாருங்க என்று பாடுபவரைக் கிண்டலடிப்பதில் தொடங்கி, முருகன், சிவன், பார்வதி என்று கடவுளரைக் கிண்ட லடிக்கும்போது அரங்கம் அதிர்கிறது.

இங்க பாரு, இந்தப் பயல நம்பவே கூடாது, சின்ன வயசிலேயே உள்பாவாடையக் களவாண்டு போன பய என்று கிருஷ்ணனை அறிமுகப்படுத்த, அவன்தான் இன்னிக்கு இளம்பெண்களுக்கு ஹீரோ என்று ஒரு குத்தல் வேறு!

இவன வச்சு ஆட்சியையே புடிச்சிட்டாங்க என்று இராமனை அறிமுகப்படுத்திவிட்டு, ஒவ் வொருவருக்கும் ஒரு இலாகா என்று ஒதுக்கும் பட்டியலில் முதலில் அய்யனாருக்கு காவல் துறையும், பின்னர் குடிச்சே அழியட்டும் என்று டாஸ்மாக் துறையும் ஒதுக்கப்படுகிறது. இப்படி வெளிப்படையான நக்கல் தமிழ்த்திரையில் இதுவரை வந்ததேயில்லை எனும் அளவிற்கு, கடவுளரைக் கண்டந்துண்டமாக்கும் இந்தக் காட்சிக்கு திரையரங்கில் கைத்தட்டல் பிளக்கிறது.//

கடவுள்களின் மோசமான குணத்தை தோலுரித்ததை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்பதைத்தான் கைத்தட்டல்
உணர்த்துகிறது

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி