Search This Blog

23.2.09

பெரியார் கண்ணீர் விட்ட நிகழ்வு


கண்களில் தண்ணீர் வந்துவிட்டது

(சென்னை ஆதிதிராவிட மகாஜனங்களின் சுயமரியாதை மாநாடு சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லை வனம்) வெகு விமரிசையாய் நடந்தேறியது. திருவாளர்கள் ஈ.வெ.இராம-சாமியாரும், குருசாமி, அய்யாமுத்து ஆகியவர்-களும் சனிக்கிழமை 13.07.1929ஆம் தேதி மாலை 5 மணிக்கு மோட்டார் வாகனத்தில் பாண்டு வாத்தியங்களுடன் சிந்தாதிரிப்-பேட்டை வழியாக ஆண்களும், பெண்களு-மாக சுமார் ஆயிரம் பேர் சூழ்ந்து ஆதிதிரா-விடர் தெருக்கள் முழுவதும் சுற்றி நேப்பியர் பார்க்குக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு தந்தை பெரியார் இரண்டு நாளும் சொற்பொழிவு ஆற்றினார். அவர்தம் பேச்சின் இறுதியில் சொன்ன வரலாற்றுக் குறிப்பு).

சமீபத்தில் திருவாங்கூரில் கூடிய ஈழவ சமுதாய மகாநாட்டில் திரு.மாளவியா இந்துமதப் பெருமையைப் பற்றிப் பேசும்போது அச்சமுதாயத்தார் இந்து மதம் வேண்டாம், அது தொலையட்டும் என்று ஒரே அபிப்பிராயமாகச் சொல்லிவிட்டார்கள். அம்மகா சங்கக் காரியதரிசி திரு. கோவிந்தன் பி.ஏ.பி.எல். மாஜி ஜில்லா ஜட்ஜ் இதோ இங்கு உட்கார்ந்திருக்கிறார் பாருங்கள். இவரை நான் கண்டவுடன் ஆச்சரியப்பட்டு தாங்கள் எங்கு வந்தீர்கள் என்று கேட்டதும் அவர் நானும் தீண்டப்படாதவன் தானே. ஆதலால் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன், என்னையும் ஆதிதிராவிடரில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

எனக்கு அது கேட்டதும் கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. இவர் முன்சீப்பாக இருந்து ஜில்லா ஜட்ஜாகி நாணயமும் பரிசுத்தமும் உள்ள ஜில்லா ஜட்ஜு என்று பேர் பெற்று பென்ஷன் வாங்கினவர். இப்போது இவரும் அநேக தெருக்களில் நடக்கமுடியாது. பிறகு கோயிலைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

எனவே இவ்வளவு கொடுமையுள்ள ஒரு கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொள்ள ஆதி திராவிடர் ஆகிய நீங்கள் ஆசைப்படுவது மிகவும் நியாயமும் அவசியமுமாகும். ஆனால், விடா முயற்சியாய் வேலை செய்ய வேண்டும். இடையில் தளர்ச்சிக்கு இடம் விட்டால் நம் திராவிட இனம் மோசம் போய்விடும்.


---------------------'குடிஅரசு' 21.7.1929 - பக்கம் 7, 8,

1 comments:

பகுத்தறிவு? said...

-நாஸ்திகம்-
இவ்வாறே நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான தந்தை பெரியார் கூறுகிறார்

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)

இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

###இவ்வாதம் அறிவியல்வாதமா?
###அல்லது அடிப்படைவாதமா?
###தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
###தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?

எவர் எவ்வாறிருப்பினும் இன்று நாம் மிக ஆழமான தேடலின் தேவையை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டியது கடமை என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன். காரணம் முழு உலகிடமும் இன்று மிகைத்து நிற்பது மரணத்திற்கு பின் அமையப்போகும் வாழ்க்கை குறித்த அச்சம் கலந்த பார்வையே ஆகும்.