Search This Blog

19.2.09

14. பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்?




இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************

வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரை அழுத்தமாகப் பாதித்த சம்பவம்.இளமைப் பருவத்திலேயே - அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.

வைதீகர்கள் வந்தார்கள். ‘பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே...’ என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.

‘இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...’ என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.

சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.

சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும்.என்ற சங்கரர்... சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.


சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது?ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் சந்யாச ஸ்மிருதி.‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...’சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால்கூட அது மிகப்பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.

எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்லவேண்டும். அல்லது பல்லக்கில் போகவேண்டும்.இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.“வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது...”என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கவேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும்.அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது.உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.

பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும்.என ‘வாகன’த் தீட்டுபற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.

இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.

தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில்தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).
இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.

மூடமதே... அதாவது மூட மனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் - ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக... அறிவூட்டக்கூடியதாக அமைந்திருக்கின்றன.

பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்? (ஜெயேந்திர சங்கராச்சாரி ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல --தமிழ் ஓவியா)என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆதிசங்கரர்.அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம்.


------------------------- தொடரும்


-------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:- 56 - 60

2 comments:

Unknown said...

//சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது?ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் சந்யாச ஸ்மிருதி.‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...’சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால்கூட அது மிகப்பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.//

சந்நியாசிகளும், சங்கராச்சாரிகளும் இது போல் நடந்து கொள்ளவில்லையே?

பணம், பெண் என அனைத்து ஆசைகளையும் தீர்த்துக் கொண்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்து கொண்டுதான் இருக்கிரது.

சங்கராச்சாரிகள் ஆபாச படம் பார்த்ததாகக்கூட பத்திரிக்கைய்ல் செய்தி படித்த ஞாபகம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு