Search This Blog

17.2.09

பார்ப்பனப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்களாம்!


விபச்சாரமே ஜாதிக்குக் காரணம்

ஒரே நாட்டு மக்களை பிறவியில் பல ஜாதியாகப் பிரிக்கப்பட்டிருப்பது நமது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர வேறெங்கும் இல்லை என்பது உலகக் கல்வி ஞானமுடையவர்கள் யாவரும் அறிந்ததாகும்.

அந்தப்படி இந்தியாவில் பிரிக்கப்பட்டிருக்கும் ஜாதியும் எவ்வித கொள்கைக்கும் பொருத்தமில்லாமல் வெறும் பிரிவுக்கும் இழிவுக்கும் மாத்திரம் ஆதாரமாய் இருப்பதைத் தவிர மற்றபடி அவற்றால் யாதொரு பயனும் இல்லாமல் இருப்பதும் யாவரும் அறிந்ததாகும்.

எனவே இப்படிப்பட்ட ஜாதி உயர்வும் தாழ்வும் எப்படி ஏற்பட்டதென்றும் இதற்கு ஆதாரம் என்ன என்பதையும் சற்று கவனிப்போம்.பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர்களுக்குள் மாத்திரம் தான் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர்- ஷத்திரியர்- சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

இவை முறையே ஒன்றுக்கொன்று தாழ்ந்ததாகவும் கடைசி ஜாதி என்பது மிக்க இழிவானதாகவும் கருதப்படுவதாகக் குறிக்கப்பட்டு இருக்ருக்கின்ற விபரம் யாவரும் அறிந்ததேயாகும். இப்படி இருந்தாலும் என்ன காரணம் என்று கவனித்துப் பார்த்தோமானால் அவருக்குக் கிடைக்கும் சமாதானம் மிகமிக இழிவைத் தரத்தக்கதாகவே இருப்பதை உணரலாம். அதாவது ஆதியில் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான்கு வருணத்தாரும் தங்களில் ஜாதி முறைத் தவறி கலப்பு விவாகம் செய்து கொண்டதாலும் கலப்பு விபச்சாரம் செய்து கொண்டதாலும் ஏற்பட்ட பிரிவுகளென்றும் அப்படிப்பட்ட பிரிவுகளுக்கு பஞ்சம ஜாதியர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கின்ற தென்றும் ஆதாரங்களில் இருக்கின்றன.

அப்படிச் சொல்லப்படுவதிலும் இப்பஞ்சம ஜாதிகள் என்பது இப்போது நமது நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் பல முக்கியமான ஜாதிக்காரர்கள் என்பவர்களே பெரிதும் இந்த விபச்சாரப் பெருக்கால் ஏற்பட்ட பஞ்சமஜாதிகள் என்றே காட்டப்படுகின்றன. அந்த விபரத்தை தமிழ் அகராதியில் உள்ளபடி மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கின்றோம்.

ஆகவே அதில் உதாரணமாக இன்று தமிழ் நாட்டில் பிரபல ஜாதியும் பிரமுக ஜாதியும் என்று சொல்லிக் கொள்ளப்படுவதான வேளாள ஜாதியார் எனப்படுபவர்களே பஞ்சம ஜாதியில் சேர்ந்தவர்கள் என்றும் பஞ்சம ஜாதியிலும் பிராமணன் ஷத்திரிய குலப் பெண்ணைச் சோரத்தால் கலந்ததால் பிறந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறன.

இவர்களில் இந்தப்படியான வேளாளர் என்பவர்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தால் அவர்களுக்குக் காணியாளர் என்று பெயர் என்றும் மற்றபடி சிற்றரசு மந்திரித்துவம் முதலிய பதவிகளில் இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேளாண் சாமந்தர் என்கின்ற பெயர் என்றும் குறிக்கப்பட்டிருப்பதுடன் இவற்றிற்கு ஆதாரம் சுப்பரபோகம்- பிரம்ம புராணம் மாதவியம் சாதி விளக்கம் என்கின்ற நூல்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

தவிர மேற்கண்ட பிராமண ஜாதி ஆண் ஷத்திரிய பெண்ணை விவாகம் செய்து கொண்டதால் பிறந்த பிள்ளைகளே சவர்ணர் எனவும் தெலுங்கர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதுபோலவே பிராமணன் வைசியப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்த பிள்ளை அம்பட்டன் என்றும் சோரத்தால் பிறந்த பிள்ளைகள் குயவர் என்றும் நாவிதர் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

அது போலவே பிராமணன் சூத்திரப் பெண்ணுடன் கல்யாணத்தால் பிறந்தபிள்ளை பரசவர் அதாவது செம்படவர் என்றும் சோரம் செய்ததால் பிறந்தவர் வேட்டைக்காரர் அதாவது வேடுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறந்தவர்கள் சண்டாளர்கள் என்றும் குறிப்பிடபட்டிருக்கின்றன. பிராமண குலப் பெண்களுடன் சண்டாளர் கூடிப் பிறந்த பிள்ளைகள் சருமகாரர் அதாவது சங்கிலிகள் என்று குறிப்பிடுகின்றது. ஷத்திரிய குலப்பெண்ணுடன் சண்டாளர் முதலியவர்கள் சேர்வதால் பிறந்த மக்கள் வேணூகர் (அதாவது வேணுகானம் செய்பவர்களும்) கனகர் (அதாவது தங்கவேலை செய்பவர்களும்) சாலியர் (அதாவது சாலியர் முதலிய நெசவு வேலை செய்வோர்களும்) ஆவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த மாதிரி கீழ்மேல் ஜாதிகள் கலந்து கலந்து வந்ததால் ஏற்பட்ட ஜாதிகளில் ஒன்றாகிய அயோவகச் சாதிப் பெண்ணிடம் நிடாதனுக்குப் பிறந்த பிள்ளைகள் பார்க்கவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தப்படியே இப்போது அமுலில் உள்ள ஜாதிகளையெல்லாம் குறிக்கும்படியாகவே இன்றும் அநேக விஷயங்கள் காணப்படுகின்றன.

இது போலவே இன்னும் இரண்டொரு ஆராய்ச்சி நூல்களில் அதாவது அபிதான கோசம் அபிதான சிந்தாமணி முதலிய எல்லா இந்து பண்டிதர்களாலும் ஆதாரமாய் கொண்டாடும் புத்தகங்களில் மற்றும் பல ஜாதிகளை இதைவிடக் கேவலமாகவும் குறிக்கப்பட்டிருக்கின்றது.

அதோடு 4-ஜாதி தவிர மற்ற ஜாதிகள் எல்லாம் மேல் கண்ட நான்கு ஜாதிக்குள் மேல் கீழாகவும் கீழ் மேலாகவும் கல்யாணம் செய்தும் விபச்சாரம் செய்தும் பிறந்த பிள்ளைகளாக ஏற்பட்டவர்கள் என்றே கூறப் பட்டிருக்கின்றன.

செட்டிமார்களையும், ஆசாரிமார்களையும் பற்றி மிக மிக இழிவாகவே கூறப்படுகின்றது. ஆகவே ஜாதியைக் கட்டிக் கொண்டு அழுவது இவ் இழிவுகளை மறைமுகமாய் ஏற்றுக் கொள்ளுவதையே ஒக்குமென்பதைத் தவிர வேறில்லை.

உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவைக் கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்தகாரியமே ஜாதிப் பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிக்கவும் ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.

-------------------------தந்தை பெரியார் -- "குடிஅரசு" - 16-11-1930 நூல்: "பெரியார் களஞ்சியம்" தொகுதி - 7 (ஜாதி- தீண்டாமை-பாகம் -1) பக்கம் 172-175

4 comments:

கிருஷ்ணா said...

இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும்.. எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும்.. நம்மவர்கள் திருந்தப் போவதில்லை!

Unknown said...

//உண்மையில் யாருக்கு யார் பிறந்திருந்தாலும் அதனாலேயே குற்றம் சொல்வதற்கில்லை என்பது நமது கொள்கையானாலும் ஒரு இழிவைக் கற்பித்து அதை நம் மக்கள் மீது சுமத்தி ஒரு பெரிய சமூகம் நிரந்தரமாய் அடிமையாயும் காட்டுமிராண்டியாயும் இருப்பதற்குச் செய்தகாரியமே ஜாதிப் பிரிவும் பாகுபாடும் என்பதை எடுத்துக் காட்டவும் அவ்விதம் கொடுமையை ஒழிக்கவும் ஒழிப்பதற்காகவுமே இதை எழுதுகிறோம்.//

அப்படியானால் இதற்கு காரணமான கடவுள் மதம் உட்பட எல்லாத்தையும் ஒழிக்க வேண்டும். அதற்கு மேலாக இவைகளைக் கட்டிக் காத்து வரும் பார்ப்பனர்களையும் ஒழிக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கிருஷ்ணா.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி



திருநாவு