Search This Blog

14.4.08

நமது இயக்கமும் கம்யூனிசமும்!

நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூ னிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமுமல்ல. கம்யூனிஸ்டுகள், ‘பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும், மக்களிடையே உள்ள பேதாபேதம் ஒழிந்துவிடும்’ என்று கருதி இருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் கடவுள், மத, மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசாமலே இருந்து வருகிறார்கள்.

பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்த மானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லாருமே ஒரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல் லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்ப தோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப் பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பேதாபேதம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.

பணக்கார முதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன முதலாளிகளும், கல் முதலாளிகளும், மடமுதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, முதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.


கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

------------- பம்பாயில், 12-2-1950-இல் தந்தைபெரியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு, "விடுதலை" 22-2-1950

0 comments: