Search This Blog

5.4.08

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும்

கடந்த 40 வருடங்களாக மராட்டியத்திலும், மலேசியாவிலும், ஈழத்திலும், இப்போது கர்நாடகத்திலும் தமிழனின் கண்களைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை இனியும் தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் தலைமுடி மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள். நமக்கு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

----4-4-2008 அன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நடிகர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேச்சு.

---நன்றி:தட்ஸ்தமிழ்

0 comments: