Search This Blog

1.4.08

கடவுள் கருணை

இந்த இரண்டு நூற்றாண்டுகளில் பூகம்பத்தால் கடவுள் தன்னடி சோதிக்குச் சேர்த்துக் கொண்ட மக்கள் கணக்கு: பெக்கிங் (சீனா) 1,00,00 கெய்ரோ 40,000 காஷான் 40,000 லிஸ்பன் 50,000 மொராக்கோ 12,000 தென் அமெரிக்கா 50,000 அலப்போ 20,000 தென் இத்தாலி 14,000 மென்சோடா 12,000 பெருஎக்வாடா 25,000 கராகாடோ 37,000 ஜப்பான் 30,000 இந்தியா 20,000 பிரான்சிஸ்கோ, சிசிலி 77,000 மத்திய இத்தாலி 30,000 கான்சுசினா 3,00,000 ஜப்பான் 2,20,000 சில்லறையாக பல இடங்களில் 1,00,000; ஆக மொத்தம் சுமார் 10 இலட்சத்திற் மேற்பட்ட ஜனங்களாகும்.

இது தவிர இடியாலும், மின்னலாலும், எரிமலை நெருப்பாலும், வெள்ளத்தாலும், புயல் காற்றாலும், தன்னடி சேர்த்துக் கொண்ட மக்களின் அளவு இதைப்போல் பல மடங்குகள் இருக்கும். இவ்வளவு ஜீவ காருண்யமுள்ள கடவுளின் கருணையை எப்படிப் புகழ்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதலால் இதைப் பண்டிதர்களுக்கே விட்டு விடுவோம். ஏனெனில், அவர்கள் அதற்கே பிறந்தவர்கள் நிற்க;

வினா - விடை

வினா: நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும்படியான ஆகாரம்கூட கிடைப்பதில்லை. ஆனால், பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறு புடைக்கக் கிடைக்கின்றது. இதற்கு என்ன காரணம்?

விடை: நமது மதமும் ஜாதியும்.

வினா: நாம் பாடுபட்டு சம்பாதித்தும் நம்ம பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100-க்கு 90 பேருக்கு மேலாக தற்குறியாயிருக்கிறோம். ஆனால், பாடுபட்டு சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100-க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

விடை: மதமும் ஜாதியும்

வினா: நமது பணக்காரக் குடும்பங்கள் வர வர பாப்பராய்க் கொண்டே வருவதற்குக் காரணமென்ன?

விடை: வினையின் பயன். அதாவது, நம்மவர்கள் தங்கள் சமூகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்கு பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து மேல்படி பார்ப்பனரல்லாதவர்களைப் பாப்பராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்!

வினா: எந்தவிதமான விபச்சாரக் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?

விடை: வெளியார்க்குத் தெரியும்படியாகச் செய்த விபச்சாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும். வினா: கிருஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின்பேரால் குடிக்க வேண்டாம்.

வினா: மகமதியனாவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியுமில்லை. ஆனால், பெண்களுக்கு மூடி போடாதே.

வினா: உண்மையான கற்பு எது?

விடை: தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

வினா: போலி கற்பு என்றால் எது?

விடை: ஊரார்க்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனத்திற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாதபோது இணங்கி இருப்பதே போலி கற்பு.

வினா: மதம் என்றால் என்ன?

விடை: இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டப்படுத்துவதும்தான் மதம்.

வினா: நாட்டுக்கோட்டையார் சமூகத்தில் உள்ள சுயமரியாதை என்ன?

விடை: பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டுவது இல்லை என்பதாகும்.

வினா: தொழிலாளர்களுக்கு பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு (லீவு) கொடுக்கப்படுகின்றது?

விடை: பாடுபட்டு சம்பாதித்து மீதி வைத்ததை பாழாக்குவதற்காக.

வினா: பெண்களை படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவில்லை; ஆற்றல் இல்லை என்று சொல்லி சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

வினா: மனிதனுக்கு கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்து போகும்.

வினா: பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

விடை: தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா: பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும் (இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்).

வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்து விடும்.

வினா: பெரிய மூடன் யார்?

விடை: தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற்கும் தோன்றுவதை நம்பாமல், எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா: ஒழுக்கம் என்பது என்ன?

விடை: ஒழுக்கம் என்பது தனக்கும், அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்ளுவதாகும்.

வினா: சமயக் கட்டுப்பாடு, சாதிக் கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை: மனிதனை தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவதுதான் சாதி, சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

வினா: உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை: கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து அவரைக் காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா: இந்தியாவுக்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? விடை: இந்தியர்கள் 100-க்கு 90 பேர் கல்வி அறிவில்லாத - எழுத்து வாசனைகூடத் தெரியாத பாமர மக்களாய் இருப்பதை முன்னிட்டு, அவர்கள் நன்மை தீமை இன்னதென்று அறிய முடியாதவர்களாய் இருப்பதால் தான்.

வினா: ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

விடை: தடி எடுத்தவன் தண்டல்காரனென்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா: இந்தியாவுக்கு நல்ல ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: அதிகமாகப் பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும்.

வினா: இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை: இந்தியா சீர்பட்டு இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால், நாஸ்திகமும், நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா: இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

விடை: இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுள்களுமேயாகும்.

வினா: கிருஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? விடை: கிருஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப்பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமும் ஆகும்.

வினா: பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை: மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால் அவர்கள் (பார்ப்பனர்கள்) எல்லோரையும் விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய் விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத் தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.

வினா: ஆண் விபசாரகர்கள் விபூதி பூசுவதன் மூலம் மோட்சத்திற்குப் போக நேர்ந்து விட்டால் அங்கு போய் விபச்சாரத்திற்கு என்ன செய்வார்கள்?

விடை: அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுபவரும் பயப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதி பக்தர்களுக்கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும், சமையல் செய்ய வேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்து விடும்.

வினா: பார்ப்பனர்களில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாய் இருக்கிறது?

விடை: அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள்; படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

வினா: பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

விடை: கடவுள் இருக்கிறார்; போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். சும்மா சொன்னேன்

வினா: கடவுள் ஏன் காண முடியாதவராய் இருக்கிறார் தெரியுமோ?

விடை: அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்குமென்றுதான். என்ன அக்கிரமம் என்றா கேட்கிறீர்கள். மூட்டை, கொசு இரண்டையும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

கார்த்திகை தீபம் பாலர் பாலுக்கழ பட்டினியால் பலர் மடிய எத்திசையோரும் இகழும்படி வெண்ணெயும் நெய்யும் கொண்டு கல்லிலும் நெருப்பிலும் கொட்டும் கயமையே கார்த்திகை தீபமாகும். நமது மதமும், தெய்வமும், உற்சவமும், முட்டாள்தனமான தென்றும், அது செல்வத்தைப் பாழாக்குகின்றதென்றும், மக்களுக்கு யாதொரு பலனையுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதற்கு உதாரணம், சமீபத்தில் திருவண்ணாமலையிலும், திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீபம் (கூம்பு-சொக்கப் பனை) என்கின்ற உற்சவத்தின்போது குடம் குடமாய், டின் டின்னாய் நெய்யையும் வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் கொட்டப் போகும் முட்டாள்தனமும், வீண் செலவும், அதனால் செல்வம் பாழாவதும் போதாதா என்று கேட்கின்றோம். இதற்கு பார்ப்பன - தேசியப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன என்பதைக் கவனிப்போம்.



- சித்திரபுத்திரன் எனும் புனைபெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது, (குடிஅரசு 16.11.1930).

0 comments: