Search This Blog

9.4.08

சீதை ஒழிக இராமன் ஒழிக

தந்தை பெரியார் அவர்கள் 1959 பிப்ரவரி மாதம் 1ந் தேதி முதல் 28ந்தேதி முடிய வடநாட்டின் பல முக்கிய நகரங்களில் அகில இந்திய ரிப்பப்ளிகன் கட்சியின் சார்பாக அழைக்கப்பட்டு சாதியொழிப்புப் பிரசாரம் புரிந்தார்.

பெரியார் அவர்கள் இதற்கு முன்பு அதாவது 29 - 30-31-12-1944 ல் கான்பூரில் கூடிய அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றதும் - அம்மாநாட்டிற்கத் தலைமைதாங்கி சாதி ஒழிப்புத் திட்டம் தரும்படி வேண்டப்பட்டார்.
சாதியொழிப்பு என்பது புண்ணுக்குப் புனுகு பூசுவது போன்ற லேசான காரியத்தால் ஆகாது. அது அறுவைச் சிகிச்சையின் மூலம் தான் சாத்தியம் என்பதை தந்தை பெரியார் அவர்கள் அங்கக் கூடிய பத்தாயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெள்ளத்தெளிய எடுத்துரைத்தார்கள். சாதியின் ஆணிவேர் இந்துமதம் இந்துமத சாஸ்திரங்கள் வேதங்கள் இதிகாசங்கள் ஆகியவைதான். ஆகவே சாதி ஒழிய வேண்டுமென்றால் சாதிக்கு ஆதாரமான இந்து மதம் இந்துமதக் கடவுள்கள் இந்து மத சாஸ்திர வேத இதிகாச புராணங்கள் இந்துமதப் பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒழியவேண்டும் என்பதை அவர்களுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தார்கள்.

இதைக் கேட்டு உணர்ந்த அப்பொதுமக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆயிரக்கணக்காகக் குழுமியிருந்த பிரதிநிதிகளும் இக்கருத்துக்களை மனதார ஒப்புக் கொண்டதோடல்லாமல் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் இராவணாக்கி ஜே. சம்புகிக்கி ஜே. இராமன் நாஸ்தி சீதே நாஸ்தி ( சீதை ஒழிக இராமன் ஒழிக) என இடி முழக்கஞ்செய்தனர்.

---------- "குடிஅரசு" 13-01-1945

0 comments: