Search This Blog

17.4.08

கோபுரத்து மீதிருந்து கூவுவேன்

லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். " இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம் - ஒழித்துவிட்டோம் " என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு பொய் வெற்றிமுரசு அடிக்கிறார்கள். லார்டு லிட்டனோ இவர்களுக்குப் புத்தி வரும் வரை இதுதான் இவர்கள் தலையெழுத்து என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சித் தலைவர்களுக்கு இனிமேல் என்ன செய்கின்றதென்கிற விஷயத்தில் தங்களுக்கும் புத்தி இல்லாமல் போய்விட்டது. சொல்புத்தி கேட்பதற்கும் சொல்லுவாரற்றுப் போய்விட்டது. சுயராஜ்யக் கட்சியார் முட்டுக்கட்டை போடுவோம் என்று ஜனங்களிடை வீரப்பிரதாபம் பேசும்பொழுதே எப்படிப் போடப்போகிறீர்களென்று பொது ஜனங்கள் கேட்டார்கள். மந்திரிகளை ஒழித்து, அரசாங்கத்தை அழித்துவிடுவோம் என்று சொன்னார்கள். மந்திரிகளை ஒழித்துவிட்டால் அரசாங்கத்துக்கு லாபமேயன்றி நஷ்டமில்லை. அதற்குமேல் என்ன செய்யப் போகின்றீர்களென்று கேட்டார்கள். செய்வதின்னதென்று அந்த சமயத்தில் நாங்கள் சொல்லுவோம் என்று சொன்னார்கள். அந்த சமயமும் வந்துவிட்டது; இன்னது செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். யாரிடத்தில் போனாலும் ஆதரவைக் காணோம். மகாத்மா காந்தியோ இவர்களுக்குப் புத்தி வரும்வரை ஒன்றும் சொல்லப்போவதில்லை என்கின்ற முடிவின் பேரில் இவர்கள் கூடவே சும்மா இருந்து கொண்டிருக்கிறார்கள். மிஞ்சியிருக்கும் தலைவர்களோ எல்லோருக்கும் மூக்குப்போய் விட்டால் யாரை யார் மூக்கரையன் என்று கூப்பிடுவார் களென நினைத்துக்கொண்டு எல்லோரையும் தங்கள் கட்சியில் சேருங்கள் என்று ஜனங்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

"வேகின்ற வீட்டில் பிடுங்கியது லாபம்" என்பதுபோல் சிலர் இந்த சமயத்தில் முனிசிபாலிட்டியிலும், தாலுகா போர்டிலும், ராஜாங்க சபையிலும் பதவிப் பெற மிகவும் அவசரமாய் அலைந்து கொண்டிருக் கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் சுயராஜ்யக் கட்சிக்கோ கட்சி எப்படி ஆயினும் சரி, சுயராஜ்யம் எப்படி ஆயினும் சரி, பிராமணர்களுக்கு எப்படி உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பது என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

அவர்கள் சென்ற வருஷத்தில் சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தலின்போது முதல் முதல் ஜனங்களை ஏமாற்ற வேண்டியிருந்ததால் எல்லா அபேட்சகர்களையும் பிராமணரல்லாதவர்களாகவே போட்டு தங்களுக்கு வகுப்பு வித்தியாசம் இல்லையென்று ஜனங்கள் நம்பும்படியாக நடந்து நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்கள். இப்பொழுது இந்த வருஷத்திய தேர்தல்களுக்கோ பிராமண அபேட்சகர்களையே அளவுக்கு மிஞ்சி கொண்டுவந்து நிறுத்தி அபாரப் பிரசாரங்கள் நடைபெறுகின்றன. ஒரு வருஷத்திலேயே இவ்வளவு மாறுதல்கள் இருக்கும்பொழுது இன்னும் அடுத்த வருஷம் எப்படி நடக்கும் என்பதை வாசகர்களே கவனித்துக் கொள்ள வேண்டும். ராஜாங்க சபையிலும் இதே மாதிரியாகவே சுயராஜ்யக் கட்சி என்கின்ற பெயர் வைத்து எல்லா ஸ்தாபனங்களும் பிராமணர்களுக்கே கிடைக்கும்படியான மாதிரிக்கு பிரசாரங்கள் ஆரம்பமாகிவிட்டன.

"பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பதுபோல்" சுயராஜ்யக் கட்சியின் பேரால் தமிழ்நாட்டில் அட்டகாசம் செய்யப்பட்டு வருகின்றது. பிராமணர்களே கூடாதென்றாவது, பிராமணரல்லாதார்களே இருக்கவேண்டுமென்றாவது என்னுடைய அபிப்பிராயமல்ல. மிதவாதக் கட்சியின் பெயர் சொல்லிக் கொண்டு பிராமணர்கள் பட்டமும், பதவியும், உத்தியோகமும் பெறுவதைப் பற்றியாவது ஐஸ்டிஸ் கட்சியின் பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணரல்லாதார் பட்டமும், பதவியும், உத்தியோகமும் சம்பாதிப்பதைப் பற்றியாவது நமக்குக் கவலையில்லை. அதற்காகவே அவர்கள் கட்சி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் பெயரையும், மகாத்மா பெயரையும் சொல்லிக் கொண்டு எத்தனையோ தேசபக்தர்களும், தொண்டர்களும் செய்த தியாகத்தையும், அவர்கள் ஜெயிலுக்குப்போய் அனுபவித்த கஷ்டங்களையும் “கரையான் புற்றெடுக்க பாம்பு குடிவருவதுபோல்” சில பிராமணர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளப் பார்ப்பது யோக்கியமாகுமா? இதை அனுமதிக்கலாமா? என்பதுதான் எனது கேள்வி. அல்லது காங்கிரஸ்காரர்கள் போய்த்தான் ஆகவேண்டும். அவர்கள் மேற்படி இரண்டு கட்சிக்காரரைவிட யோக்கியர்கள் என்று சொல்லப் படுவார்களேயானால் அவரவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பதவி, பட்டங்கள் உபயோகப்பட வேண்டுமென்பதுதான்.

பிராமண ரல்லாத மற்றவர்களில் இந்த ஸ்தானத்திற்கு தகுதி உள்ளவர்கள் இல்லையென்கின்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டால் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். தகுந்த ஆட்கள் இருக்கிறார்களென ஒப்புக்கொண்டு அவர்களுக்காகவே தாங்கள் பாடுபடுவதாக வேஷமும் போட்டு, சமயம் வருகிற காலத்தில் இம்மாதிரி மோசம் செய்வதும் அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கட்சியை அமைத்துக்கொண்டு பொது நன்மைக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தால் எத்தனை காலத்திற்கு ஜனங்கள் ஏமாறுவார்கள்.

கொஞ்ச காலத்திற்கு எல்லோரையும் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்பொழுதும் ஏமாற்றலாம். எப்பொழுதும் எல்லோரையும் ஏமாற்றமுடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழி சுயராஜ்யக் கட்சிக்காரருக்கு ஞாபகத்திற்கு வரும்படியாக தமிழ் மக்கள் எப்பொழுது நடந்துகொள்கின்றனரோ அப்பொழுதுதான் தமிழ்நாட்டுக்கும், தமிழர்க்கும் விடுதலையும், சுயமரியாதையும் ஏற்படும் என்பதை கோபுரத்து மீதிருந்து கூவுவேன்.


தமிழர் கதி

வைக்கம் சத்தியாக்கிரகமும் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் தமிழ்மக்களுக்கு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏதாவது சுயமரியாதை உண்டா என்பதைப் பற்றியும் இந்துமதத்தில் தங்களுக்கு ஏதாவது இடமுண்டா என்பதைப் பற்றியும் தீர்ப்பளிக்கப் போகின்றது. இது தமிழர்க்கோர் பரீட்சைக் காலமாகும். வைக்கம் சத்தியாக்கிரகமோ தமிழரைப் பார்த்து நான்கு வீதியில் மூன்று வீதிகளை உங்களுக்குத் திறந்து விட்டாய்விட்டதே ஒரு வீதியில்தானா உங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது? இதற்காக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்கிறீர்களே இதென்ன பயித்தியமா என்று கேட்கிறது.

குருகுலப் போராட்டமோ பதினெட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பதினேழு பிள்ளைகள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டு ஓர் பிள்ளை மாத்திரம் தான் சாப்பிடுவதை மற்றவர்கள் மற்றவர்கள் பார்க்கக் கூடாதென்றால் என்ன குடிமுழுகிப் போய் விட்டது ? இதற்காகவா இவ்வளவு பெரிய கிளர்ச்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வதல்லாமல், உட்சண்டைகளையும் கிளப்பி விட்டுக்கொண்டிருக்கிறது. வைக்கம் சத்தியாக்கிரகமும் குருகுலப் போராட்டமும் அந்த வீதிகளில் நடப்பதினாலும், ஒரு குழந்தை உண்பதைப் பார்ப்பதினாலும் தமிழர்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்கிற எண்ணத்தைக் கொண்டதல்ல. வீதிகளில் நடக்கக்கூடாதென்று சொல்லும் பொழுதும், கண்ணால் பார்க்கக்கூடாதென்று சொல்லுகிற பொழுதும், சொல்லுகிறவர்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்லுகின்றனர் என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.

அன்னிய மதஸ்தர்களான மகமதியர்கள், கிருஸ்தவர்கள், பார்சிகள் முதலியோர்கள் நடக்கலாம். பன்றியும், நாயும், பூனையும், எலியும் வீதியில் நடக்கலாம்; சாப்பிடும் பொழுதோ இதர சமயங்களிலோ பார்க்கலாம்; ஆயிரக்கணக்கான வருஷங்களாக தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, தமிழ்நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொண்டிருக்கும் இந்துவாகிய தமிழனை அவனுடைய நாட்டில் மற்றொருவன் " நீ வீதியில் நடக்காதே, என் முன் வராதே " என்று சொன்னால் மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் அதை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் வைக்கம் சத்தியாக்கிரகத்தினுடையவும் குருகுலப்போராட்டத்தினுடையவும் தத்துவம். இதே தத்துவத்திற்காகத்தான் மகாத்மா காந்தி தென்னாப் பிரிக்காவில் செய்த சத்தியாகிரகமும், கெனிய ஏகாதிபத்திய பகிஷ்கார தினக்கொண்டாட்டமும் நடத்தப்பட்டனவென்பதை ஞாபகப் படுத்திப் பாருங்கள்.

---------------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை "குடி அரசு" 5 . 7 . 1925 ---- "பெரியார் களஞ்சியம்" தொகுதி - 7 - "ஜாதி-தீண்டாமை" பாகம் - 1 பக்கம் 9 முதல் 12 வரை

0 comments: