Search This Blog

22.4.08

கிழிந்து தொங்கும் "ஞாநி"யின் முற்போக்கு முகமூடி

பார்ப்பனர்களின் குணம் பற்றி பல அறிஞர் பெருமக்கள் சொல்லியுள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். ஏன் என்றால் முற்போக்கு பேசும் பார்ப்பனர்கள்,அவர்கள் என்னதான் முற்போக்கு பேசினாலும் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய உண்மையான பார்ப்பனிய குணாம்சத்தை காட்டி விடுவார்கள். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உண்மைகள். தற்போது ஞாநி என்ற பார்ப்பனர் குமுதம் இதழில் உண்மைகளை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப் போட்டு கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆனந்த விகடனில் இருப்பார்; அப்புறம் திடீரென்று குமுதத்துக்கு போவார். குமுததின் மீது குற்றம் சாட்டி விட்டு தனியாக பத்திரிக்கை ஆரம்பிப்பார். அப்புறம் குமுதத்துக்கே வந்து விடுவார். என்ன குழப்பமாக இருக்கிறதா? பார்ப்பனியம் என்பதே குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதானே! இந்த ஞாநி ஒரு காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் முற்போக்கு முகமூடியுடன் "அய்யா" ( பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர்) எடுத்து பெரியாரின் தொண்டர்களுடன் ஊரெல்லாம் சுற்றுப்பயணம் செய்து தன் முற்போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டி அவர்களை வசப்படுத்தப் பார்த்த கதைகள் எல்லாம் உண்டு.

இப்போது குமுததில் தன்னுடைய பார்ப்பனிய மையை ஊற்றி தமிழர்களுக்கு விரோதமாக எழுதிவருகிறார். சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு தோழர் அதிஅசுரன் இரண்டு மறுப்புக் கட்டுரைகளை சரியான ஆதாரங்களுடன் எழுதி இணையத்தில் உலவவிட்டுள்ளார். பல தோழர்கள் படித்து உண்மையை உனர்ந்து வருகின்றனர். தோழர் அதிஅசுரனுக்கு நமது பாராடுதழ்களையும் நன்றிகளையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

ஞாநியின் முற்போக்கு முகமூடிகளை அம்பலப்படுத்தி பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். படியுங்கள். உண்மையை உணருங்கள். பார்ப்பனர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

1.'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.
இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.

அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.
1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.

ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.

`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு.



சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.

குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.
திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.

அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?

ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ! ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?

தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.
அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!



திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.

`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.

``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர் களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? - இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?

மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:

`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?

நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?



அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?

உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?
இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!


புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).

கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.


--------"மயிலாடன்" அவர்கள் "விடுதலை" 30-3-2008 இதழில் எழுதியது.


2. ஞாநியின் ‘முற்போக்கு’ முகம்

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-------------- சுப.வீ அவர்கள் செப்டம்பர் - 2007 "கருஞ்சட்டைத்தமிழர்" இதழில் எழுதிய கட்டுரை.

3. ஞாநி எந்தப் பக்கத்தில்?


“சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்களை உடைக்கும் சர்ச்சையை, போலிபக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அதுராமர் பாலம் என்கிற, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக்கனவு என்று இன் னொரு வகையான மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் பக்திக்கும் அத்வானிக்கும் தொடர்பு இல்லை. அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை.

-இப்படிச் சொல்கிறார் சங்கரன் ஞாநியார். போலி பக்தியையும் போலி பகுத்தறிவையும் சாடித் தகர்க்கும் இவர் ‘அசல் பக்திக்கும்’ ‘அப்பட்டமான பகுத்தறிவுக்கும் இடையே பாலம் கட்டுவதில் தீவிரம் காட்டும் ஓர் அனுமார் பக்தரேதான்.

அத்வானி ஒரு போலி பக்தர். பகுத்தறிவில்லாதவர் என்று சங்கரன் எழுதுவ தால் அக்கிரகாரமோ, சங்கப் பரிவாரமோ, சாமியார் கூட் டமோ ஞானியின் தலையை வெட்டு, நாக்கை அறு என்று ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும், ‘இவன் நம்ப பிள்ளை’ என்று. என்ன சாதுரியமாய் சூத்திரவாள் மீது தாக்குதல் நடத்துகிறான் என்று ‘அவாள்’ கூட்டம் மெச்சிக்கொள்ளவே செய்யும்.

அத்வானி பற்றிய ஞாநியின் மதிப்பீடு உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கலைஞரின் பகுத்தறிவு போலித்தனமானது என்று அவரை அறிந்த எவரும் சொல்லத் துணியார்.

ஓட்டு அரசியலில் நம்பிக்கையுள்ள எந்த அரசியல் தலைவரும் ஏட்டில், எழுத்தில், அரசியல் மேடையில், திருமண விழாக்களில் பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் தனது பிள்ளைப் பருவம் முதல் இன்றுவரை எங்கும் எப்போதும் அறிவை முன்னிறுத்துகிறவர் கலைஞர். “கருணாநிதியைத் திருத்தவே முடியாது’’ என்று இராம கோபாலன் பலமுறை சாபம் இட்டது ஏன்? இராம கோபாலன் போன்றோரின் வகையும் வயிற்றெரிச்சலும் கலைஞரின் பகுத்தறிவுப் பற்றுக்குச் சூட்டப்படும் புகழாரங்கள் அல்லவா!

ஞாநி போன்றோரின் வாதங்கள் பல நேரங்களில், பலரது மனங்களில் இது வன்றோ நடுநிலை வாதம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் இம்மாதிரியான `பெருந்தன்மையான’ பேச்சுக்கள் ஒரு கபடதாரியின் நேர்மையற்ற உளறல் என்பது புரிந்து விடும்.

கருத்துக்கள் மோதுவதும், வர்க்கங்கள் பகைமை கொள்வதும், இனங்கள் எதிரெதிராய் நிற்பதும் அறியாமையாலோ, போலித்தனத்தாலோ அல்ல. அது போலவே கருத்து மோதல்களில், களத்துப் போர்களில் நடுநிலை என்பதும் சமரசம் என்பதும் புனிதமானதோ போற்றுதற்குரியதோ அல்ல.

தாய்வழிச் சமூகத்திலிருந்து, தந்தைவழிச் சமூக உறவுக்கு மாறும்போது, பொது உரிமைக் கருத்திலிருந்து தனிச்சொத்துரிமைக்கு மாறும்போது நேரும் போர்க்களக் காட்சி தான் குருச் சேத்திரம்!

உறவினர்களுக்குள் நேர்ந்த சண்டையில் கூட சமரசமற்ற, கண்டிப்பு மிகுந்த பேராசிரியராகவே காட்சி தருகிறான் கண்ணன். “இந்தப் போரிலே வென்றால் சொத்து கிடைக்கும்; இறந்தால் சொர்க்கம் கிடைக்கும். தயங்காதே துணிந்து போரிடு’’ என்பது தான் கீதோபதேசம்.

எல்லா உயிர்களையும் நேசிப்பதாகச் சித்திரிக்கப்படும் பரமாத்மா, கொலையை ஆதரிப்பது ஏன்? ஒருபக்கம் சார்ந்து நிற்பது ஏன்? போர்க் களத்திலே நடுநிலை சாத்தியமில்லை சங்கரா!


இரண்டாயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இங்கேயும் ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது திராவிட - ஆரியப் போர். இதிலே ஆதிசங்கரனிலிருந்து ஞாநி சங்கரன் வரை ஓர் அணியில் நிற்கிறார்கள். புத்தனிலிருந்து குப்பன்வரை எதிரணியில் நிற்கிறார்கள். ஆரியப் பிரதிநிதியாக அத்வானியும் திராவிடப் பிரதிநிதியாகக் கலைஞரும் களத்தில் நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. இங்கே அத்வானியின் பக்தி மெய்யானதா, போலியானதா? கலைஞரின் பகுத்தறிவு மெய்யானதா போலியானதா என்பதல்ல பிரச்னை. மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்குமான போராட்டத்தில் யார் எந்தப் பக்கத்தில் என்பதுதான் பிரச்னை.

ஞாநி போன்றவர்கள் அத்வானிகளை - அதாவது ‘போலி பக்தர்களை’ - எதிர்ப்பதுபோல் காட்டிக் கொள்வது கலைஞரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒடுக்கப்பட்ட மக்களையும் எதிர்ப்பதற்காக நடத்தப்படும் போலித்தனமான காரியங்களே!

இம்மாதிரியான போலி மனிதர்கள் பதுங்கிக் கொள்வதற்குக் கிடைத்த ‘தத்துவப் புதர்’ தான் பாரதி, இவர்களுக்கு, உலகில் இதற்கு முன் இருந்த, இப்போது இருக்கிற, இனிமேல் வரப்போகிற எல்லாப் பிரச்னைகளுக்கும் பாரதிதான் தீர்வு!

சேது சமுத்திரத் திட்டம் குறித்து, பாரதி என்ன சொல்கிறான்?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்; சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’’ என்கிறான் பாரதி.

பாரதி சொல்வதுபோல் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குப் பாலம் அமைக்கலாம்? அப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஞாநியார் கூட்டம் அதையும் எதிர்க்கும். விடுதலைப் புலிகள் எளிதாகத் தமிழ் நாட்டுக்குள் வந்து போவார்கள். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடும் என்றுதான் அப்போது கூச்சலிடுவார்கள்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே கடல் வழிப்பாதை ஏற்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறதா? போக்குவரத்து எளிதாகிறதா? வேலைவாய்ப்பு பெருகிறதா? தொன்மையான ‘வரலாற்றுச் சின்னம்’ அழிகிறதா? இந்துக்களின் மனம் புண்படுகிறதா? என்கிற அறிவு பூர்வமான, அல்லது குருட்டுத்தனமான, மெய்யான, அல்லது போலியான வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இந்தப் புதிய கடல்வழிப்பாதையை ஆதரிப்போர் யார்? எதிர்ப் போர் யார்? என்று கூர்ந்து கவனித்தால் இது திராவிட - ஆரியப் போராட்டத்தின் தொடர்ச்சி என்பது தெளிவாகப் புரியும். மேம்போக்கான பார்வையில் இது ‘வழக்கொழிந்த’ வர்ண இனப் போராட்டம் என்பது போல் தோன்றினாலும் இதன் சாரப்பொருள் வரலாற்றை இயக்குவது கடவுள் நம்பிக்கையா, மனித முயற்சியா? என்பதுதான்!

கடவுள் நம்பிக்கை எப்போதும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவானதே! மனித முயற்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையானதே!

“மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறிவாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால் ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபடமாட்டார்கள். காரணம் அசல் ஆன்மீகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்ப தில்லை. வெறுமே பயன்படுத்திக் கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்து கொண்டு இருக்கிறார்கள் - என்று ஒரு நடு நிலையாளனின் பாத்திரத்தில் திறம்படவே நடிக்க முயற்சிக்கிறார் சங்கரன்.

மதம், கடவுள் பக்தி, இறை நம்பிக்கை என்கிற இந்த சமாச்சாரங்கள் உண்மையில் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதனின் பய உணர்ச்சியின் அடையாளமே அன்றி, அது மனித நேயத்தின் அடையாளமாக வரலாற்றின் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக மதம் அல்லது கடவுள் நம்பிக்கை இப்போதும் இருக்கிறது என்றால் அது தன்மீதும் தான் சார்ந்திருக்கிற சமூகத்தின் மீதும் மனிதன் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தோன்றும் சுய ஆறுதலே தவிர மனித நேயத்தில் பிறந்த மறு மலர்ச்சித் தீர்வல்ல. சிலுவைப் போர்களும், ரத யாத்திரைகளும், இஸ்லாமியத் தீவிரவாதங்களும் ஆதிக்க சக்திகளின் அரசியல் போராட்டங்களேயன்றி, மனித நேயத்தை வளர்க்கும் செயல் திட்டங்கள் அல்ல.

இவர்கள் போலி பக்தர்கள். உண்மையான பக்தி ஆயுதம் ஏந்தாது. வள்ளலாரைப் பாருங்கள்... என்று பேசுகிறவர்கள், பற்றி எரியும் ஒரு பிரச்னையிலிருந்து விலகிச் செல்லும் கபட தாரிகளே தவிர யோக்கியர்கள் அல்ல.

வள்ளலாரே மனங்கசந்து விரக்தியில் பேசுகிறாரே! “கடை விரித்தேன்; கொள்வாரில்லை!’’ என்கிற அவரது சுயவிமர்சம் என்ன சொல்கிறது? நிலவுகிற சமூக அமைப்புக்கும் நினைப்புக்கும் தொடர்பில்லாமல் இருப்பது பயனற்றது என்பதையே வள்ளலார் வாக்கு ஒளியுறுத்துகிறது. முரண்பாடுகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டு தூய அன்பின் பெயரால் துறவிக்கோலம் கொள்வது சுயநலம் மிகுந்த கோழைத் தனமாகும்.

சங்கர ஞாநியார் குறிப்பிடுவது போல் இங்கே ‘போலி பக்தர்’ அத்வானிக்கும், ‘போலி பகுத்தறிவார்’ கலைஞருக்கும் இடையே நடக்கும் ‘யுத்தம்’ போலித் தனமானதல்ல. சாந்தி, சமாதானம், சமதர்மம், என்கிற இந்தக் கருத்துரு வாக்கம் இனியதுதான். ஆனால் அமைதி எப்போதும் அமைதியான முறையில் வந்ததே இல்லை!

உலகில் சாந்தி நிலவ வேண்டும்; சமாதானம் செழிக்கவேண்டும்; சமதர்மம் நிலைக்கவேண்டும். என்றால் வரலாறு கேட்டும் ஒரே கேள்வி இதுதான்: “நீங்கள் எந்தப் பக்கத்தில்!’’


----------ஆனாரூனா அவர்கள் அக்டோபர் -2007 "தமிழ் சான்றோர் பேரவை செய்தி மடல்" இதழில் எழுதிய கட்டுரை.

தற்போதைக்கு ஞாநியின் உண்மை முகம் தெரிய இந்தளவுக்கு போதுமானது. தேவைப்பட்டால் இன்னும் நிறை செய்திகள் தேடி வரும். படியுங்கள் தெளிவடையுங்கள்.


------------- நன்றி: "www.jaathiolippu.blogspot.com"

0 comments: