Search This Blog

22.4.08

ஒழுக்கமில்லாக் கடவுள்கள்

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நசகாலர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்; பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் ஜாதி ஒழிய வேண்டும் என்று ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள்; பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர்; இதைப்பற்றிய கவலை எங்களுக்கில்லை. ஜாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு? நாங்கள் கடவுள் இல்லையென்று சொல்லுபவர்கள் அல்ல; கடவுளை நம்ப வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. மேலும் எங்களுக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு சங்கதி, கடவுள் என்பது என்ன? கிறிஸ்தவர்களுக்கும் கூட கடவுள் இருக்கிறார். அதை ஏன் நீ கடவுள் என்று ஒப்புக் கொள்ளக்கூடாது? அவர்கள் கடவுளுக்கு இறப்புமில்லை, பிறப்புமில்லை, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறுகிறார்கள். ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது?

அன்பான கடவுள், கருணையுள்ள கடவுள், ஒழுக்கமுள்ள கடவுளை நான் வேண்டாமென்று சொல்லவில்லை. ஒரு கடவுள் என்று சொல்லிய பிறகு இத்தனை கடவுள்கள் எங்கிருந்து வந்தன? உருவமில்லாத கடவுளுக்கு இத்தனை உருவங்கள் எப்படி வந்தன? ஒன்றுமில்லாத கடவுளுக்கு மனைவி ஏன்? கல்யாணம், கருமாந்தரமேன்? ஒரு மனைவி இருந்தால்கூட பரவாயில்லையே! எந்தக் கடவுளுக்கு இரண்டுக்குக் குறைந்து இருக்கிறது? எந்தக் கடவுள் தேவடியாள் வீட்டுக்குப் போகாமல் இருக்கிறது? மலத்தைத் தின்றால்தான் கடவுளை நம்புகிறவன் என்று ஒருவன் சொன்னால், நீ மலத்தைத் தின்றுகாட்ட வேண்டுமா? கடவுள் அன்பு, கருணை வடிவானவர் என்று கூறுகிறாயே; நீ கும்பிடும் கடவுளுக்கு வேல், சூலம், அரிவாள், கத்தி எதற்கு? நீ வணங்கும் கடவுள்களில் கொலை செய்யாத கடவுள் எது? பிறகு எப்படி அன்பு, கருணை என்று கூறுகிறாய்? ஒழுக்கமுள்ள கடவுள் என்கிறாய்; பிறர் மனைவியைக் கைப்பிடித்து இழுக்காத கடவுள் எது? இருந்தால் ஒரு கடவுளைக் காட்டேன். இதைச் சொன்னால், ராமசாமி நாயக்கர் கடவுளைத் திட்டுகிறார், கடவுள் இல்லையென்று சொல்கிறார் என்று பத்திரிகையில் எழுதிவிடுகிறார்கள். கடவுள் இப்படிச் செய்கிறார் என்று நானா சொல்கிறேன்? பார்ப்பனர் எழுதி வைத்திருப்பதைப் பார்த்துப் படித்துவிட்டுச் சொல்கிறேன். ஏழைப் பிள்ளைகளை படிக்கவைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே; அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப்பற்றிக் கவலையில்லாமல் ஜாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை `ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள்! இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம்? கள் குடித்தால், சூதாடினால், தேவடியாள் வீட்டுக்குப் போனால் மக்கள் பணம் பாழாகிவிடுகிறது. ஆனால், கோயிலுக்குப் போனால் மட்டும் வரும்படியா வருகிறது? வருடத்திற்கு கோயில்கள்மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?


இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி செய்தால் மக்களுக்கு இதனால் சோறு வருமா என்று கேட்கிறார்கள். கேட்கிறவர்கள் சோற்றுக்காக என்ன பாடுபட்டார்கள்? இதை அழித்தால், இன உணர்ச்சி வந்தால், ஜாதி அழிந்தால், தானாகச் சோறு கிடைக்கிறது. அவனே தெரிந்து கொள்கிறான். இந்த நாட்டைப் போல வேறு எந்த நாட்டில் ஆண்டவன் பெயரால் கோடிக்கணக்கில் பணம் பாழாகிறது? ஆகவேதான் இந்த இழி தன்மையைப் போக்கப் பாடுபடுகிறோம். யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று, நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன் தான்; புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா? கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ்நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான் - யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.

இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனி மேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்கவேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? யார் கடவுள் இருக்கிறார் என்று வாசற்படியைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்? பெட்டியில் எண்ணி வைத்த பணத்தை திரும்பி எண்ணிப் பார்க்காதவர்கள் யார்? யார் பணப்பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? பக்தியோடு இருக்கிறவன் சாமியிடத்தில் வந்து கும்பிட்டு விட்டு, சாமிமேல் இருக்கும் ஆபரணங்களையும், பெண்சாமியை நிர்வாணமாக்கி விட்டு சேலையையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுகிறான். இதைப்பற்றி சாமியாவது மற்றவர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களை பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று? அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்லவேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்பவேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்துவிட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதனாலும், உற்சவம் கொண்டாடுவதனாலும் பயனில்லை; இலாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில் தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல் தண்ணீரை இறைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்து நம் பைத்தியகார மக்கள் `பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்'' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள். வடநாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய க்ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக்கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

--------- தந்தைபெரியார் - "விடுதலை" 10.9.1956

0 comments: