Search This Blog

17.4.08

விதவா விவாகம்

பழுத்த ஞானமும் நீடிய அனுபவமும் கொண்ட அறிஞர் திருசிரபுரம் திருவாளர் சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய விதவா விவாக விளக்கம் என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப்பிராயத்தை எழுதுமாறு எழுதியிருந்தார்.

விதவா விவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய அமயமும் அவகாசமும் வாய்த்திலாமையான் அஃதினை ஊன்றிப்படித்து விரைவில் எனது கருத்தினை வெளியிடவியலாது போயிற்று. பிறகு அந்தப் புத்தகம் முடிவு பெற்று புத்தக ரூபமாய்க் கிடைக்கப் பெற்றேன். அஃதினை அமைதியுடன் படித்து எமக்குத் தோன்றிய சில கருத்துக்களை எழுத முற்பட்டேன்.

இந்திய நாட்டின் ஆளுகை உரிமை இந்தியருக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப் பிரிவினையும் ஜாதி வேற்றுமையும் தொலைய வேண்டுமென்பதாக சமூக சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி பெண் மக்களுள் ஒரு பகுதியார் அழிந்து வருவதை பாரா முகமாகவே பார்த்து வருகின்றனர்.

சிருஷ்டிக் கர்த்தா, மக்கட் படைப்பிலடங்கிய ஆண் பெண் களை ஏற்றத் தாழ்வுடன் படைக்கவில்லையென்பதை அறிவுடைய உலகம் ஏற்கும். அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமோ? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும் அறிவிலிகளும், பேடிகளும் உண்டு. இவ்வாறிருக்க, திமிர் படைத்த இந்த ஆண் உலகம் சாந்த குணபூஷணமான பெண்ணுலகைத் தாழ்த்தி அடிமைப்படுத்தி வருதல் முறையும் தர்மமுமான செயலாகாது.

ஹிந்து மத ஆண் உலகம் தங்களது பெண் உலகத்தின் மாட்டு பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றிற் இங்கு நாம் விதவைகளைப் பற்றி மட்டும் கவனிக்க வேண்டியுளது.

உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும், தன் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த-எழில் பொருந்திய இளஞ் சகோதரிகளையே தன் மணத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றான். ஆயின் ஓர் பெண் மகள் தன் கொழுநனை இழந்துவிட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளாயிருப்பினும் தன் ஆயுட்கால முற்றும் அந்தோ தன் இயற்கைக் கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து, வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டு விடுகிறது. என்னே அநியாயம்!

ஹிந்து சகோதரர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்து வருவதை பார்த்துக் கொண்டு வருவது பெரும் பாபகரமான செயலாகும்.

முன்நாளில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவியும் உடன்கட்டையேறுதல் வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக்காலத்தில் ஆங்கிலோ இந்திய வியாபாரக் கூட்டத்தின் தலைவரா யிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸூம், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியால் நிறுத்தப்பட்டது. உடன்கட்டை யேறுதலை நிறுத்துதற்காகப் போராடிய அக்காலத்திலும் ஆச்சாரமே அழிந்து போவதாகவும் மதமே கெட்டுப் போவதாகவும் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் நாளடைவில் அக் கூக்குரலும் அடங்கி 'ஸககமனம்' என்னும் உடன்கட்டையேறுதலான கொலை வழக்கமும் அறவே மறைந்தது.

இதுபோழ்து நம் நாட்டில் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளலாகாதென்னும் வழக்கமிருப்பது பாரபட்சம் நிரம்பிய கொடுமையான செயலாகும். தன் மனைவியை இழந்த கிழவன் மறுமணம் செய்து கொள்ளலாமென்றும் தன் கணவனை இழந்து மகப் பேறு பெறாத இளமங்கை மறுமணம் செய்து கொள்ளலாகாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச்செயலாகாது.

விதவைகள் மறுமணம் செய்து கொள்ளும் வழக்கம் கற்புக்குப் பங்கம் விளைப்பதாகும் எனக் கூறினால் அது பொருந்தாது. விதவைகளை மறுமணம் செய்விக்காதிருத்தலினாலேயே அவர்கள் கற்பழிந்து மாய்கின்றனர். காமச்சுவை கருதும் இளங் கைம்பெண்கள் படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து, அதனால் கருப்பந் தரித்து இரண்டோர் திங்களுள் சிசுஹித்தி தோஷத்திற்கு உள்ளாகின்றார்கள். இப்பாவம் யாரைச் சாரும்? விதவைகளை மறுமணம் செய்து கொள்ளல் ஆகா தென்று கட்டாயப்படுத்தி வரும் பெற்றோர்களையே சாரும். மறுமணம் விரும்பாத பெண்களைத் தவிர்த்து ஏனைய கைம்பெண்களுக்கு மறுமணம் செய்வித்தலே நன்று.

விதவைகளின் கலியாணத்தைப் பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும் சொல்லளவோடும் ஆதரிக்கின்றேனா அன்றி செய்கையிலும் ஆதரித்துள்ளேனா என்ற ஐயம் அன்பர்களுக்குத் தோன்றலாம். இதன் பொருட்டேனும் எனது கருத்தை பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன்.

நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன். எனது வகுப்பின் பெண்மக்கள் முக்காடுடன் கோஷாவாக இருக்க வேண்டிய வர்களெனவும் விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பின ரெனவும் வழங்கப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும் வைணவ சம்பிரதாயத்தையும் கடுமையாய் ஆதரிக்கும் குடும்பம். இப்படியிருந்த போதிலும் என்னுடைய 7-வது வயதிலிருந்தே மக்களில் உயர்வு, தாழ்வு கற்பித்தலையும் ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு யாரையும் தொடுவதற்கும் எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னை, இளம் போதிலிருந்தே எங்கள் வீட்டு ஆக்குப் புரைக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. நான் தொட்ட சொம்பை எனது தகப்பானர் தவிர மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆச்சார அனுஷ்டானங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் என்னைப் பார்த்து சாந்தியடைந்து விடுவார் கள். "நாயக்கருக்கு அவர்கள் ஆச்சாரத்திற்கேற்றாற் போல்தான் ஒரு பிள்ளை என்றாலும் பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது" என்று சொல்லுவார்கள். என்னுடைய 16-வது வயதிலேயே பெண் மக்களை தனித்த முறையில் பழக்குவதும் அவர்களுக்கென சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்று நினைத்து வந்தேன்.

இவ்வாறாக, என் தங்கை தனது இளம் வயதிலேயே ஓர் பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள். அவற்றுள் ('அம்மாயி' என்றழைக்கப் பெறும்) அப் பெண் குழந்தைக்கு அதன் 10-வது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம். கலியாணம் செய்த 60-ம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 -வயதுள்ள சிறு பையன் பகல் 2 மணிக்கு விஷபேதியால் விண்ணுற்றான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை என்னிடம் ஓடி வந்து, "மாமா! எனக்குக் கலியாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே" என்று ஓவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண் , பெண் உள்பட சுமார் 600,700 பேர்கள் அக்குழந்தையையும் என்னையும் பார்த்த வண்ணமாய் கண்களிலிருந்து தாரை தாரையாய் நீர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்து தூக்கும் போதே அதற்கு மறுபடியும் கலியாணம் செய்து விடுவது என்கிற உறுதியுடனேயே தூக்கினேன்.

பிறகு அந்த பெண் பக்குவமடைந்த ஒரு வருஷத்திற்குப் பின் அதற்கு கலியாணம் செய்ய நானும் எனது மைத்துனரும் முயற்சி செய்தோம். இச் செய்தி எனது பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டவே அவர்கள் இதை தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டது போலக் கருதி பெரிதும் கவலைக்குள்ளானவர்களாகி நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாந்தாரம் மைத்துனரைப் பிடித்து சரிசெய்து, எவரும் அறியாவண்ணம் பெண்ணையும் மாப்பிள்ளையையும் சிதம்பரத்திற்கழைத்துச் சென்று அங்கு கோயிலில் கலியாணம் செய்வித்து ஊருக்குக் கூட்டி வந்தனர். ஆனால் நான் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில், அவர்கள் போயுள்ள செய்தியை சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது மாப்பிள்ளையை தடைசெய்து விடுவார்களோ என்கிற பயத்தால், நான் ஊரிலிருந்தால் கலியாணத்திற்காக வெளியூருக்குப் போயிருக்கிறார்களெனச் சந்தேகமிருக்காது என்கிற எண்ணங் கொண்டேயாகும். இக் கலியாணத்தின் பலனாக இரு, மூன்று வருட காலம் பந்துக்களுக்குள் வேற்றுமையும் பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிபட்டுப் போயின.


பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஓர் ஆண் மகவைப் பெற்றனர். ஆனால் துர்ரதிஷ்டவசமாக கொஞ்ச நாளையில் அந்த இரண்டாவது புருஷனும் இறந்துவிட்டான் . இப்பொழுது தாயும் மகனுமே ட்சேமமாயிருக்கிறார்கள். இன்னமும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர். பாவம் அக் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டாதார் போல் கருதி நடத்துவதை தினமும் பார்க்க பாவமாயிருக்கிறது.

எவ்வளவோ இடருக்குள்ளாக்கப்பட்டு அக் கலியாணத்தை முடித்து வைத்தோம். ஆனால் கடைசியில் அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே விதவா விவாக விஷயத்தில் தீவிரமாகத் தலையிட வேண்டுமென எனக்கிருந்த கருத்துக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று.

விதவைகளின் விஷயம் நினைவிற்கு வரும் போதும் நேரில் காண நேரும் போதும், உலக இயற்கை எளியாரை வலியார் அடக்கி ஆண்டு ஹிம்சிப்பதல்லாமல் வேறல்லவென்றே முடிவு செய்வேன். நமது ஹிந்து சமூகம் எந்தக் காலத்தில் எவருடைய ஆதிக்கத்தில் கட்டப்பட்டதோ, அன்றி மதமில்லாமல் முறையில்லாமலிருந்து இயற்கையாகவே ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்திற்குத் தக்கபடி திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும் பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே ஹிந்து மதமும் ஹிந்து சமூகமும் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து.

அரசியல் என்றும் சமூகவியல் என்றும் ஜனாச்சார சீர்திருத்த வியல் என்றும் பெண்மக்கள் முன்னேற்றமென்றும் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களில் பெரும்பான்மையோர் இவற்றைத் தங்களது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளுவோராக இருக்கிறார்களே தவிர உண்மையில் அக்கருத்துக் கொண்டு உழைப்பவர்கள் அரிதினுமரிதாகிவிட்டனர் என்று சொல்லு வதை மன்னிக்க வேண்டுகிறேன். அன்றியும் இவ்விதத் துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடுபவர்களாய்க் காணப்படுவோரில் பெரும் பாலோர் தாங்கள் செய்வது சரி யென்ற தீர்மானம் தங்களுக்கே யில்லாமல் உலக மெப்புக்குச் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். பெண்மக்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவோர் தங்கள் வீட்டுப் பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக் கொண்டும், விதவா விவாகத் தைப் பற்றி பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளை காவல் போட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு சிறிதும் தாங்கள் நடவடிக் கையில் காட்டுவதில்லை. இதன் காரணம் என்னவெனப் பார்க்கும் போது, பெண்மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமை, நமக்கடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்ச்சி ஏற்படுகிறது என்றே நினைக்கிறோம். இதனாலேயே அவர்களை விலங்குகளைப்போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு சுதந்திரங் கொடுப்பது என்கிற விஷயத்தை நினைக்கும் போது செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையைச் செய்ய நினைக் கிறது போலவே தோன்றுகிறது. அதனால் மனித சமூகத்தில் சரி பகுதியான எண்ணிக்கைக்கு பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பது தானே இதன் பொருள்? ஆடவருக்கு பெண்டிரை விட சிறிது வலிமை அதிகமாக ஏற்பட்ட குற்றந்தானே இம்மாதிரி ஒரு சரிசமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று. இந்தத் தத்துவமே வரிசைக்கிரமமாக மேலோங்கி எளியோரை வலியோரால் அடிமையாக்கச் செய்கிறது.

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம் சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடம்.

உலகிலேயே மிகப் பெரிய சீர்திருத்தக்காரரான மகாத்மா காந்தியடிகள் இந்து விதவைகளைப் பற்றி அநேக சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் சென்ற ஆண்டு 'நவஜீவன்' பத்திரிகையில் மகாத்மா காந்தி எழுதியிருக்கும் விஷயத்தைக் கவனித்தால் விதவைகளின் விடுதலை சம்பந்தமாய் மகாத்மா எவ்வளவு தூரம் உழைக்கிறார் என்பது புலனாகும். அக்கட்டுரையின் ஒரு சில பாகமாவது:-

"பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பது போன்று இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றும் இல்லை என்பது எனது திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகா. பலாத்காரத்தினால் அநுஷ்டிக்கச் செய்யும் எவ்விதச் செயலும் அறமாகாது. பலாத் காரத்தினால் நடத்தும் விதவை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒரு பால்ய விதவை தானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதமாகச் சொல்லுவோரின் கொடூரச் சுபாவத்தையும் அறியாமையையுமே விளக்குகிறது" என்று எழுதிவிட்டு விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதாக தன் உள்ளன்போடும் ஆவேசக் கிளர்ச்சியோடும் மகாத்மா கூறிய மணி வாசகங்களில் ஒரு சிலவற்றைக்

கவனிப்போம்.

".........................அமைதியுடன் தங்களுடைய துக்கத்தைச் சகித்துக் கொண்டு தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதை கவனிக்காவிட்டால் தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் உடனே விவாகம் செய்து கொள்ளட்டும். அதுவரையில் யோக்கியமான புருஷனை அடைய தமயந்தி சாவித்ரி முதலியவர்கள் போல் தவம் செய்வதே ஏற்ற வழியாகும். . . . . . . . விதவைகளின் போஷகர்கள் இவற்றைச் சரிவரக் கவனியாவிடில் பின்னால் பச்சாதாபப்படுவார்கள். ஏனெனில் நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரமே பார்த்துக்கொண்டு வருகிறேன். விதவைகளைப் பலாத்காரமாய் தடுத்து விதவைத் தன்மையை அநுஷ்டிக்கச் செய்வதால் விதவைகளுக்காவது, குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற்காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும் நசித்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறேன். பால்ய விதவைகளே! நீங்களும் உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ புருஷ வர்க்கங்களும் இதை அறியுமாக" இவ்வாறாக, 1921 - ம் வருடத்திய ஜனசங்கியைப்படி ஹிந்து கைம்பெண்களின் தொகையினை நோக்குகையில் ஐயகோ! என் நெஞ்சு துடிக்கிறது!

1 வயதுள்ள விதவைகள் 597

1 முதல் 2 வயதுள்ள விதவைகள் 494

2 முதல் 3 வயதுள்ள விதவைகள் 1,257

3 முதல் 4 வயதுள்ள விதவைகள் 2,837

4 முதல் 5 வயதுள்ள விதவைகள் 6,707

ஆக மொத்தம் 11,892


5 முதல் 10 வயதுள்ள விதவைகள் 85,037

10 முதல் 15 வயதுள்ள விதவைகள் 232,147

15 முதல் 20 வயதுள்ள விதவைகள் 396,172

20 முதல் 25 வயதுள்ள விதவைகள் 742,820

25 முதல் 30 வயதுள்ள விதவைகள் 11,63,720

ஆக மொத்த விதவைகள் 26,31,788


அல்லாமலும் இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்கு பேரிடராயிருக்கிறது. நமது ஹிந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவரை பிற மதத்திற்கு மாற்றப்பட்டால் நம் மக்களுக்கு எவ்வளவோ துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாபப்படுகிறார்கள். இதன் காரணம் நமது மதத்தினரில் இருவர் குறைந்து விட்டதால் ஹிந்து சமூகத்திற்கு கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு விட்டது என்பதினாலேயன்றோ? அந்த இரண்டு நபருக்கு இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலுள்ள இருபத்தாறு லட்சத்து முப்பத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகளும் கலியாணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்துனை குழந்தைகள் பெறக்கூடும். சராசரி மொத்தத்தில் மூன்றில் இரு மடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும் தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் ஒன்றுக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் கெடுத்துக் கொண்டு வருகிறோம். இது இரண்டொருவர் மதமாறுவதால் நஷ்டம் வந்து விட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால் மணமாறாத 5 வயதிற்குட்பட்ட இளங் குழந்தைகள் மட்டிலும் 11,892 பேர் இருக்கிறார்களென்பதையும் தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது, இன்பந் துய்த்தற்கில்லாது, அடங்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்களென் பதையும் கேட்கவே என் குலை நடுங்குகிறது. இத்தகை படு மோசமான விதவைத் தன்மையை எந்த நாகரீக உலகம் ஏற்கும்?

விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யா சாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய அறிஞர்கள் பாடுபட்டு ழைத்தனர். இது போழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பாஞ்சாலத் தலைவர்கள் பலர் இறங்கி உழைத்து வருகின்றனர்.


---------- தந்தைபெரியார் - "குடி அரசு" 22.8.26 - "பெரியார்களஞ்சியம்" தொகுதி - 5 - "பெண்ணுரிமை" பாகம் - 1 பக்கம் 1-11

0 comments: