Search This Blog

1.4.08

தி.மு.க.அமைச்சர்களுக்கு பெரியாரின் வேண்டுகோள்

பதவிகள் வழங்குவதில், உத்தியோகம் வழங்குவதில் அரசாங்கம் எந்த ஜாதியாருக்கும், எந்த மதத்தினருக்கும் பாராபட்சம் காட்டக்கூடாது.

ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு மதத்திற்கும் அதைச் சேர்ந்த மக்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறதோ, அந்த எண்ணிக்கை விதப்படி உத்தியோகம் முதலியவற்றை வழங்க வேண்டும்.

தகுதி, திறமை என்பதெல்லாம் எல்லா ஜாதி - மத வகுப்பிலும் சமமாக இருந்து வருகின்றன.

ரொம்பவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கள் என்பவற்றிற்குத் தகுதியிலேயே சலுகை காட்டப்பட்டு வருகிறது. அதுவும் சட்டப்படியே காட்டப்பட்டு வருகிறது.

இப்படிக் காட்டப்பட்டு வருவதால் அதன் காரணமாய் நிருவாகம், நாணயம், பண்பு, நேர்மை ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று பேதம் காணும்படியாக எதுவும் தென்படவில்லை.

மேல் ஜாதியாரில், மேல் நிலையில் அய்.சி.எஸ். (I.C.S ) -இல் உள்ளவர்களில் நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, பண்புக் குறைவு இருந்திருக்கிறது என்றால் அது பெருவாரி எண்ணிக்கையுள்ள மற்ற ஜாதி வகுப்பாரை விடச் சிறு எண்ணிக்கையுள்ள பார்ப்பன ஜாதியில் தான் அதிகமாக இருந்து வருகிறது.

அதுபோலவே கூடுதலாக எண்ணிக்கையுள்ள இந்து மதக்காரர்களை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்கின்ற மதஸ்தர்களில் தான் அதிய விகிதாச்சாரப்படி நடந்திருக்கிறது.

சலுகை, சிபாரிசு, அந்தந்த இனத்தாரின் பிரவேசம், மேல் பதவிகளில் - நீதிபதிகளில் அந்த இனத்தார் இருப்பது ஆகிய காரணங்களால் பெரும் அளவு மறைக்கப்பட்டு விடுகிறதானாலும், பெருவாரியாக உள்ள மக்கள் விகிதாச்சாரத்திற்கும் அதிகம் என்று சொல்லலாம். ஆனாலும் தயவாய்க் கொள்வதானால் குறைந்ததல்ல என்றே சொல்லலாம். இவை ஏன் சொல்லப்படுகின்றன என்றால் மொத்த ஜனத்தொகை விகிதத்தில் தகுதி, திறமை, நாணயம், நேர்மை, ஒழுக்கம் காரணமாக எந்த ஜாதி, மத வகுப்பு மக்களும் ஒரு அரை சதவிகிதம் கூட அதிகமாகவோ, குறைவாகவோ பெறத் தக்கவர் யாரும் இல்லை என்பதற்காகவே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மிகச் சிறு எண்ணிக்கை உடைய 100 - க்கு 2-3 என்கின்ற கிறிஸ்தவர்களும், பார்ப்பனர்களும் விகிதாச்சார எண்ணிக்கை மேல், கொள்ளை விகிதத்தில் ஒன்றுக்குப் "பத்தாக", "இருபதாக" என்கின்ற அளவில் சென்றிருப்பதும், அது போலவே முஸ்லிம்களும் தங்கள் எண்ணிக்கை விகிதத்திற்குக் குறை இல்லாமல் அதுவும் உயர்நிலைப் ( TOP) பதவிகளை அடைந்திருப்பதும், ஏற்பாட்டிற்கு உடையவனான அதுவும் மொத்தத்தில்
100 - க்கு 60-70 விகிதத்திற்கு மேற்பட்டவன் தன் விகிதத்திற்குப் பகுதி கூட எட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பது என்றால், பதவி விநியோக முறையில், உத்தியோக விநிநோகத்தில் எவ்வளவு மோசடி, வஞ்சகம், சூது, வாது நடக்கிறது என்று சொல்லவேண்டி இருக்கிறது.

தமிழனே மெஜாரிட்டியாக, பெருவாரியாக பச்சைத் தமிழனாகவே ஆட்சித் தலைமையிலிருக்கும் ஆட்சியில், இப்படி நடக்கிறது என்றால், தமிழனின் இழிதன்மைக்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டியிருக்கிறது?

பதவி, உத்தியோகம் வழங்குவதில் ஜாதி மதம் பார்க்கக்கூடாது என்பதாகச் சட்டம் இருக்கிறது என்றால், அந்தச் சட்டத்தின் கருத்து குறைந்த ஜாதி, மத வகுப்புக்கு அதிக எண்ணிக்கைக்குக் கொடுக்க வேண்டும் என்பதும், ஜாதி, மத வகுப்பில் அதிக எண்ணிக்கை உள்ளவர்களுக்குக் குறைந்த விகித பதவி உத்தியோகம் வழங்க வேண்டும் என்பதும் தான் அர்த்தமா?

அப்படியில்லாவிட்டால் பார்ப்பனர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என்பவர்களுக்கு மாத்திரம் இவ்வளவு அதிகமாகவும், குறைவு இல்லாமலும் எப்படிக் கிடைக்க முடிகிறது?

இது ஆட்சியிலிருப்பவர்களின் கவலையற்றதும், சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்கின்ற தன்மையல்லாமல் வேறு என்ன?

இவற்றையெல்லாம் விடத் தமிழனுக்கு ஒரு பெரும் கேடு என்னவென்றால், தமிழர்களிடையே பாடுபடாத ஒரு வகுப்பு "நாங்கள் மாமிசம் சாப்பிட மாட்டோம், மண்வெட்டித் தொடமாட்டோம், ஆனதால் நாங்கள் சைவர்கள், பார்ப்பனருக்கு அடுத்தவர்கள், நாங்கள் சமுதாயத்தில் 100 க்கு 1/2 (நுhற்றுக்கு அரை) பேராக இருந்தாலும் எங்களுக்கும் பார்ப்பனர் போல் அதிகப் பங்கு இருக்க வேண்டும் என்று உரிமை கொண்டாடி பார்ப்பனருக்கு அடுத்தபடியாகப் பதவி உத்தியோகம் பெற்றிருப்பதாகும்.

இந்தக் காரணத்தால் இந்தக் கூட்டம் இன உணர்ச்சி அற்றிருப்பதோடு, இவர்களுக்கு வாய்ப்பு வந்தால் பார்ப்பனர், கிறிஸ்தவர் கிடைக்கவிட்டால் மலையாளிகள் ஆகியவர்களுக்குப் பதவி வழங்கி உழைப்பாளித் தமிழனை அழுத்தி வைப்பதுமாகும்.

என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு சமுதாயச் சீர்திருத்தத் தொண்டன்.

இன்றல்ல, நேற்றல்ல 60, 70 - ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்பனரை வெறுத்து வருபவன். அதாவது திரு. பி.வி. மாணிக்க நாயக்கர் ஈரோட்டில் இன்ஜினியராயிருந்த 1902 - இல் இருந்தே! இது நாமக்கல் திரு. இராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கே நன்றாய்த் தெரியும்.

நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும், சமூதாயத் துறையில் பார்ப்பானிய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவுவாதியாக ( நாத்திகனாக) ஆக்கியது.

இந்தச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி, உத்தியோகங்களை, விகிதாச்சாரம் கைப்பற்றி வேண்டியது என்பதைத்தான் A.B.C.D. யாகக் கொண்டேன் - கொண்டோம். ஆனதாலேயே தான் நான் "வகுப்புவாதி" என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல், நானும் அந்த வகுப்புவாத உருவமாகவே இருந்து வருகிறேன்.

50 , 60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர், முழுத்தமிழர் ஆட்சி ஏற்படும் வாய்ப்புக் கிடடிய பிறகுங்கூட, தமிழன் தன்னாட்டுப் பதவி, உத்தியோகம் முதலியவற்றில் தமிழன் ஏகபோகமாக, அதிகமாக அனுபவிக்காவிட்டாலும் அவனது விகிதாச்சாரம் கூட அனுபவிக்க முடியவில்லையானால் தமிழன் எதில், எங்கே முன்னேறி இருக்கிறான் என்று கேட்கிறேன்? மான உணர்ச்சி பெற்று இருக்கிறான்?

ஆதலால்,

இன்றைய மந்திரிகள் இதுபற்றிக் கூடிப்பேச வேண்டும்; என்னென்ன முறையை - வழியைக் கண்டால் தமிழன் தன் உரிமை பெற்றவனாக ஆக முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

உண்மையான காங்கிரஸ்காரன் யாராய் இருந்தாலும் அவன் தமிழனாகவே இருக்க முடியாது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பானின் கூலியாகத்தான் இருக்க முடியும்.

இன உணர்ச்சி இல்லாதவனுக்குத் தான் காங்கிரஸ்காரன் என்று பெயர்; தேசபக்தன், தேசியவாதி என்றாலே (என் அகராதிப்படி) இனத்துரோகி என்பது தான் பொருள்.

காங்கிரஸ்காரர்களால், காங்கிரசினால் தமிழன் ஒருநாளும் சமுதாயத்தில் உயர முடியவே முடியாது.

காங்கிரஸ் என்றால் பதவி வேட்டை என்றுதான் சொல்லியாக வேண்டும். அதன் தோற்றத்தில் இருந்து சிந்தித்தால் தான் இது விளங்கும்.

நான் சொல்லுகிறேன் இந்தத் துறையில் தி.மு.க ஆட்சிக்கூட மக்களை ஏய்க்கலாம். ஆனால், அதன் பலனை அடையாமல் இருக்க முடியாது.

ஆதலால்,

தி.மு.க ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையொப்பம் போடும்போதும் பார்ப்பானா, கிறிஸ்தவனா, முஸ்லிமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்துதான் கையொப்பம் போட வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போட்டால் தமிழனைப் பலி கொடுத்ததாகப் தான் பொருள். காமராசர் தமிழனுக்குக் கண் கொடுத்தார். தி.மு.க தமிழனை எழுந்து நடக்கச் செய்ய வேண்டும்.

கண் இருந்து குருடானாய் இருப்பதில் ஜீவனுக்குப் பயன் என்ன?

நான் இவ்வளவு வேண்டுகோள் செய்வது முதல் மந்திரிக்கு மாத்திரமல்ல, முக்கியமாக மற்ற பத்து மந்திரிமார்களுக்குமேயாகும்

ஆகவே,

கவனிக்க வேண்டும்.
கவனிக்க வெணடும்.
கண்டிப்பாய்க் கவனிக்க வேண்டும்.

------ "விடுதலை" 05-03-1969 இதழில் தந்தைபெரியார் எழுதிய தலையங்கம்

0 comments: