Search This Blog

6.5.08

அண்ணா பற்றி பெரியார்

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் இராமாயணத்தைக் கொளுத்தியவர். புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதியவராவார். பத்திரிக்கைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால் நம் கொள்கைகள் - செயல்களை வெளியிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கிறார்கள் என்றாலும் அப்படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30- லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை - வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த 30 - இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே! அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால் கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை தேவையில்லை. ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே!

இது இந்த ஆட்சிக்குக் கடவுள் -மதம்- சஸ்திரங்களில் சாதி, பழமைகளில் நம்பிக்கைகக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த "சாமி படங்களை எல்லாம்" நீக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

----------------தந்தைபெரியார் -"விடுதலை" 9-6-1969

0 comments: