Search This Blog

24.5.08

கடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை






அநேக ஆயிரம் நூற்றாண்டுகளாக நமது உலகமே பிரபஞ்சமென்றும், வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், சூரிய சந்திரர்களும் நமது உலக நன்மைக்கே உண்டாக்கப்பட்டவைகள் என்றும் நமது முன்னோர்கள் எண்ணி வந்தார்கள். நமக்குப் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கச் சூரியனையும், இரவில் வெளிச்சத்தை கொடுக்கச் சந்திரனையும் நட்சத்திரத்தையும் கடவுள் படைத்தாரெனவும் கிறித்தவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்வுலகில் வாழ்ந்துவந்த பூர்வதான மனிதரும், நமது உலகை நடுவிலும், அதனைச் சுற்றி மற்ற ஆகாயப் பொருள்களாகிய சூரிய சந்திரர்களும், நட்சத்திரங்களும், ஓடிக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள். பாலமி என்று ஓர் பூர்கால வான சாஸ்திரி, நமது உலகம் நடுவிலிருந்து கொண்டிருக்கவும், மற்ற வானத்தில் பிரகாசிக்கும் லோகங்கள் யாவும் வட்டமாகப் பூமியைச் சுற்றி வருகின்றனவென மிகச் சாதுர்யமாக ஏட்டில் காட்டிவந்தார்.
பிரபஞ்சத்தில் நமது உலகந்தான் சிறந்தது. மற்ற உலகங்கள் யாவும் நமது உலக உபயோகத்திற்கென அமைக்கப்பட்டுள்ளதுவென, 2000 வருடமாக நமது முன்னோர்கள் எண்ணி வந்தார்கள்.

ஆனால், 1543-ல் காபர்கனிகஸ் என்ற ஜெர்மன் வான சாஸ்திரி, பண்டைக்கால மதக் கொள்கை தப்பிதமென்றும், பூமி, பல உலகங்களில் ஒன்றென்றும், பூமியும் மற்ற சிறு உலகங்களும் சூரியனைச் சுற்றியோடுகின்றனவென்றும் தெரிவித்தார். இந்த ஞானத்தை வற்புறுத்திய புருனோ என்ற பெரியாரை மதத்திற்கு மாறாக அவர் கூறியதாக மதகுருக்கள், நெருப்பிலிட்டு கொளுத்திவிட்டனர். அதுமுதல் மதக் கற்பனை பின்னடைந்து, அடுத்தடுத்து செய்துவந்த வான ஆராய்ச்சியால் காபர்னிகஸ் பெரியார் சொன்ன விஷயம் நிரூபிக்கப்பட்டு, கோடானுகோடி உலகங்களில் நமது பூமி ஓர் அற்பப் பொருளென எண்ண நேரிட்டது.
நாம் இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்க வேண்டியதென்னவென்றால், கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் ஏதாகிலும் சம்பந்தம் உள்ளதாவென அறியவேண்டிய விஷயங்களே.
நமக்குத் தெரிந்தவரையில் பிரபஞ்சம் என்னென்ன பொருள்களை உடைத்தாயிருக்கின்றதென முதலில் அறிந்து கொள்வோம். அதன்பிறகு அது எவ்விதமாகத் தற்போது காணும் உருவங்களைப் பெற்றுள்ளது என்பதையும் சுருக்கமாக விளக்கிக் கடைசியாக இத்தியாதி ஆதாரங்களைக் கொண்ட பிரபஞ்சத்தில், கடவுளுக்கு எந்தவித சம்பந்தமாகிலும் வைக்கவேண்டுமா என்பதை யோசிப்போம்.

பிரபஞ்சப் பொருள்களில் நமது உலகம் ஒன்று. இந்த உலகை போன்ற நவக்கிரகங்கள் எட்டு. இந்த ஒன்பது உலகங்களும் நடுவிலிருக்கும். சூரியனைச் சுற்றி ஓடிக் கொணடிருக்கின்றன. இந்தக் கூட்டத்தை சூரிய திட்டம் என்று அழைப்பார்கள். இந்த திட்டத்தில் வால்எரி வெள்ளிகள் அந்தந்தக் கிரகத்தைச் சுற்றும் சந்திரர்கள், இவைகள் மத்தியில் கிடக்கும் தூசு, கிரணங்கள் சேர்ந்துள்ளன. இந்தத் திட்டத்திலுள்ள பொருள்கள் யாவும் கவர்ச்சி என்னும் சக்தியால் ஒன்றோடொன்று இழுக்கப்பட்டு ஒரே குடும்பமாக இருந்து வருகின்றன. இந்தக் குடும்பத்தைப் போன்ற வேறு குடும்பங்கள் பிரபஞ்சத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் நட்சத்திரங்கள் இருக்கின்றன. சில நட்சத்திரங்கள் தனித்தும், சில குடும்பமாகவும் ஆகாயத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன. இரட்டை நட்சத்திரங்களாகவும், மூன்று நான்கு சேர்ந்த கூட்டங்களாகவும் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவைகளன்னியில் சில மேகங்களைப் போல் தென்படும் ஆவியும் கலந்து இருக்கின்றன. இவை யாவும் சேர்ந்து நட்சத்திர திட்டமென வழங்குவர். இந்த நட்சத்திரத் திட்டம் அல்லது குடும்பத்தில் நமது சூரியனும், கிரகங்களும், வால் வெள்ளி, எரி வெள்ளி சந்திரர்கள் யாவும் சேர்ந்தவை. இந்த பெரிய குடும்பத்தில் நமது உலகம் எங்கோ ஓர் மூலையில் கிடந்து வருகின்றது. இந்த நட்சத்திரக் குடும்பத்தை காலஸி என்று அழைப்பார்கள். இந்தக் குடும்பத்தில் லட்சம்கோடி நட்சத்திரங்கள் உள்ளவாம்.
இந்தக் காலனி அதாவது நமக்கருகிலுள்ள நட்சத்திரக் குடும்பத்திற்கு அப்பால் மெட காலனி என்று அழைக்கப்படும் பெரிய நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. இந்த மெட காலனியில், கோடானுகோடி நட்சத்திரங்கள் உளவாம்!

இவையாவும், நமது உலகை இருந்த இடத்தில் இருக்கச் செய்யும் கவர்ச்சியில் ஆளப்பட்டு வருகின்றனவாம். இங்கும், அங்கும் எங்கும் கவர்ச்சியால் பிரபஞ்சப் பொருள்கள் சகலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு இருக்கின்றனவாம். இத்தியாதி பொருள்களும் மருந்துகள் எனப்படும்.

இனி அணுக்களை விசாரித்தறிவோம். மகத்துகளெல்லாம் அணுக்களின் சையோகத்தால் கூட்டப்பட்டவை. அணுக்கள் பரமாணுக்களால் கூடியவை. இவைகளுக்கு மேற்பட்ட மாலிகூல்ஸ் என்ற அணுத்திரள்கள் இருக்கின்றன. இந்த அணுத்திரள்களால்தான் நாமும் நமது உலகத்திலுள்ள பல சேதன அசேதனங்களும் உருவடைந்திருக்கின்றோம்.
சென்ற 25 வருடங்களாகச் செய்துவரும் ஆராய்ச்சியில் அணுக்களும், அணுத்திரள்களாகிய நாமும் இழுக்கும் சக்தியால் கட்டுண்டு தனிப்பொருள்களாக இருந்து வருகின்றோம். ஆதலின், நமது தேகமும் அதற்குக் கீழாகவுள்ள அணுக்களும், அணுத்திரள்களும், இவைகளுக்கு மேலாகவுள்ள சூரிய சந்திர நட்சத்திரக் கூட்டங்களும் கவர்ச்சியால் கட்டுண்டு பிரபஞ்சத்தில் உலாவுகின்றன. இதைத் தவிர வேறெந்த அறிவோ, மனமோ, சைதன்யமோ, சத்தோ, சித்தோ, ஆன்மாவோ, கடவுளோ, தெய்வமோ தெரிந்துள்ள பிரபஞ்சத்தையும், அதில் அடங்கியுள்ள நம்மையும், நமக்கு மேலும் கீழுழுள்ள பொருள்களை நடத்துவதை மனிதர்களாகிய நாமறிவோம்.

பிரபஞ்ச உற்பத்தியைபற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இந்தக் கவர்ச்சியே பரமாணுக்களிலிருந்து உண்டாகும் பிரபஞ்ச பொருள்களுக்கு மூல காரணமெனவும் தெரவிக்கின்றார்கள். ஆதலில் பிரபஞ்சம் உண்டாகும்போதும் தற்போதும் கவர்ச்சியால் சகலப் பொருள்களும் ஆளப்பட்டு வைந்திருக்கின்றன. இதுதான் அனுபவஞானம், பிரபஞ்சம் கடவுளால் சிருட்டி என்பதும் மனத்தினால் எண்ணித் தானே வந்ததென்பதும் ஈசுவரனுடைய அருளால் நடைபெறுகிறதென்பதும் கற்பிதங்களென அறிக. இதுதான் விஞ்ஞான ஆராய்ச்சியால் இதுவரையிலும் நமக்குத் தெரிந்துள்ள விஷயமாகும்.

---------------- ம. சிங்காரவேலர் - நூல்:- "கடவுளும் - பிரபஞ்சமும்"

0 comments: