Search This Blog

23.5.08

"நான்கு பக்கம் வேடர் சுற்றிட..." -- கலைஞர் கவிதை

எழுத்துக்களை ஏட்டிலே பதிப்பதற்கும்
கருத்துக்களை மேடையில் ஏற்றுதற்கும்
எழுபது ஆண்டுக்கு மேலாக உழைத்துழைத்து
என் தமிழர் தலை நிமிர வேண்டுமே யென்று
எழுதினேன், பேசினேன்; என்ன பயன்?
இந்தக் கேள்விக்கு விடையாகத்தான்
என்னால் ஒரு தமிழன் தன்மானம் பெற்று
இருக்கின்றான் என்றால்; அதுவே எனக்கு மன நிறைவு.
பின் தங்கிய சமுதாயம் மட்டுமல்ல; மிக மிகப்
பின் தங்கிய சமுதாயமும் விழிப்பு கொள்ள - அந்த
இருபது விழுக்காடு ஒதுக்கீடன்றோ ஏணி ஆயிற்று!
இங்கு மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானத் தூண்டுகோலே;
மண்டல் கமிஷன் ஒளிவிடவும் மணிவிளக்கு ஏற்றியது!
வித்தகராம் வி.பி. சிங் வித்திட்டு வளர்த்த தருவன்றோ;
எத்தர்கள் வெட்டிய குழி விட்டு இட ஒதுக்கீடு சமூக நீதி;
உரியவர்க்கெலாம் கிடைத்திட வகை செய்யும் நிழலாக உதவிற்றாம்!
நெஞ்சில் ஓர் முள்ளை வைத்துக் கல்லறையில் புதைக்கின்றோம் - எதற்கும்
அஞ்சாச் சிங்கம் பெரியாரை; என அழுது புலம்பினோம்.
அனைத்து சமூகத்தாரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமலாக்கி;
அந்த முள்ளையெடுத்து முனை முறித்துப் போட்டு விட்டோம்;

எம்மொழிக்கும் குறைவில்லா தமிழ் மொழிக்கு பரிதிமாற் கலைஞர் கனவாம்
செம்மொழி எனும் தகுதியினை அம்மை சோனியாவின் ஆதரவால் வென்றெடுத்தோம்-
அண்ணா கண்ட கழகத்தைக் காப்பதுமன்றி -
அவர் கண்ட அரசியல் அணுப்பொழுதும் ஓய்வின்றி;
அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட
அட்டியின்றி உழைக்கின்ற செய்தி
அன்றாடம் மக்களுக்குச் சாதனையாய்க் கிட்டுதன்றோ!
அரிசி கிலோ இரண்டு ரூபாய்
அதை விளைவிக்கும் உழவர் கடன்;
ஒரு சேர ஏழாயிரம் கோடி ரூபாய் ரத்து -
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் - மகளிர்
வாழ்வின் களைப்பு போக்கி உலகச் செய்திகளை தெரிந்திடவே-
தாய்க்குலத்தோர்; மல்லுக்கு விறகுடனும்
வாயுடனும் மோதிக் கொண்டதைப் போக்கிடத்தான்
இலட்சக்கணக்கில் எரிவாயு அடுப்புகள்
இலவசமாய் வழங்கப்படுவதும் உண்மை நிகழ்ச்சிகளன்றோ?
திருமண நிதி உதவித் திட்டம் என்ற பெயரால் இருபதாயிரமும்
கருவுற்ற மகளிர்க்கு தலா ஆறாயிரமும் எந்த ஆட்சியிலே தரப்பட்டது?
இந்த ஆட்சியிலே தான் அந்தச் சாதனைகளும்!
அமைப்புச் சாரா தொழிலாளர்கள்
அத்தனை பேருக்கும் அரவாணி, நரிக் குறவர் உட்பட; வாரியம்!
அவற்றின் சார்பில் அடுக்கடுக்கான காரியம்!
விவசாயத் தொழிலாளர் - விவசாயிகள் நலம் பெறவே
சமூகப் பாதுகாப்புத் திட்டம்; அதற்காகவே தனியாக ஒரு சட்டம்!
வீட்டுமனைப் பட்டா கிடைக்காது
பூட்டில்லாத வீடுகளாம் சாலைகளில் படுத்துறங்கியோர்க்கு
இலவசமாக 4 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள்
இரண்டு ஆண்டுகளில் மட்டும் தந்திடவே தனியாக அரசாணை!
சத்துணவு சாப்பிட்ட 71 லட்சம் சிறார்க்கு உண்மை
சத்து கிடைத்திடவே வாரம் மூன்று முறை முட்டை உணவு!
நாட்டுப்புரம், நகரங்களில் புதுப்புது தொழிற்சாலைகள் -
நாளும் நாளும் பெருகுது இளைஞர்க்கு வேலை வாய்ப்பு!
படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த
பல்லாயிரம் பட்டதாரிகளுக்கு புதிய புதிய பணிகள் ஏராளமாம்!
பள்ளிக் கல்வி முதல் பட்டம் பெறும் நிலை வரையில்
படிக்கின்ற மாணவர்க்கு கட்டணம் ரத்து, காசில்லாப் பயணம்!
ஆதரவற்ற முதியோருக்கும் அதிக உதவித் தொகை - இந்த
ஆட்சியிலே வாரி வாரி வழங்கப்படுவது உண்மையன்றோ?
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து
குடிநீர் முறையே கிடைத்திட திட்டங்கள் தான் தேடியே வந்துளவாம்!
மேம்பாலங்கள் என்ன? மேடு பள்ளம் போக்க சாலைகள்தான் என்ன?
தாம்பாளத்தில் வைத்துத் தரப்படும் சலுகைகள் தான் என்ன என்ன?
புதிய புதிய மாவட்டங்கள், மாநகராட்சிகள் தான் என்ன?
விடிய விடிய நிறைவேற்றப்படும் சாதனைகள் தான் என்ன? என்ன? என்ன?
தமிழறிஞர்தமைத் தேடிப் பிடித்து அவர்தம் தகுதிபோற்றி
தந்தபடியிருக்கின்றோம்; தக்கதோர் பொற்கிழி -
சாமான்யன் ஆட்சியிலே சாதனைகள் உயர உயர - இனி
ஏமாந்து விடக்கூடாது என எதிரிகள் விழித்துக் கொண்டே
வில்லம்பு தேடுகின்றார் எமை வீழ்த்தி விட வேண்டுமென்று
முளையிலேயே கிள்ளிட வேண்டிய முள்மரம் நாமென்று
முனைகிறார் நாற்புறம் சூழ்ந்து நின்று!
முத்தமிழுக்கு முடி சூட்டிக் களித்திட
எத்தகைய தியாகத்துக்கும் தோள் தட்டும்
முதிரை மரமாய் நாமிருப்பதாலே
``நான்கு பக்கம் வேடர் சுற்றிட
நடுவில் சிக்கிய மான் போல என்றாரே பாவேந்தர்;
அதைப் போல நினைத்துக் கொள்கிறேன் - அந்த
உவமை இன்பத்தில் இதயத்தை நனைத்துக் கொள்கிறேன்.

0 comments: