Search This Blog

26.5.08

நான்


மனிதன் தன்னை நான் என்று சொல்லிக்கொள்வது எதனால்? அது எது? என்னும் ஆராய்ச்சியானது இந்து மதம் என்பதின் கடைசி - அதாவது, வேதாந்த தத்துவமாகப் பாவிக்கப்பட்டு, அதைக் கண்டு பிடிப்பதே கடவுளைக் கண்டுபிடித்ததாகும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக, தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனாவான் என்றும், தன்னைத் தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டியதில்லை. தன்னை அறிந்தவரை ஞானி என்றெல்லாம் சொல்லப்படுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

ஆகவே, இந்தப்படி சொன்னவர்கள் எல்லாம் ஒரு மனிதன் தன்னை நான் என்று சொல்லிக் கொள்கின்றானே, அது எது என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் ஏதோ ஒரு பெரிய கஷ்டம் இருப்பதாக நினைத்தே அது சுலபத்தில் மனதுக்கு எட்டாதது என்று கருதியே இப்படிச் சொல்லியிருக்கக்கூடும் என்பதாகவும், மற்றும் நான் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து ஒருவன் அதைக் கண்டுபிடித்து விட்டானேயானால் பிறகு அவன் ஞானியாகவும், துறவியாகவும் அல்லது கடவுளைப்-பற்றிக் கவலைப்பட வேண்டியவனல்லாத - லட்சியம் செய்யப்பட வேண்டியவனல்லாத நாத்திகனாகவும் ஆகிவிடக்கூடும் என்றுக் கருதிச் சொன்னதாகவும் இருக்கக்கூடும் என்பதாக முடிவுசெய்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
எப்படியிருந்தாலும் ஒரு மனிதன் தான் யார்? தனக்குள் இருந்து நான் - என்று வரும் உணர்ச்சி எது? அதெப்படி உண்டாகின்றது? எதுவரையில் அவ்வணர்ச்சி இருக்கின்றது? என்பவை முதலான உண்மையை உணர்ந்தால் அவன் நாத்திக அபிப்பிராயத்தை அதாவது ஆத்மாவோ, கடவுளோ இருக்கின்றது. என்பதை நம்பாத கொள்கையையே கொள்ள வேண்டியவனாகி விடுவான் என்று சொல்லப்படுவதில் உண்மை உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம்.

உலகத்தில் பெயரும் - உருவமும் உள்ள வஸ்துக்கள் எல்லாம் ஒருவித சேர்க்கையாய் அதாவது, பல கூட்டுப் பொருட்களால் சேர்ந்து இருக்கும் வடிவத்தையே பெரிதும் உணர்த்து-வதாகும்.

ஏனெனில், உலகத்தில் உள்ள எந்தப் பெயருக்கும் மாறுதலையடையாத ஒரு தனிப்பொருள் என்பது கிடையவே கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், எந்தப் பெயரும் ஒரு தோற்றத்திற்கு அல்லது ஒரு உருவத்திற்கு அல்லது ஒரு வடிவத்திற்குத் தான் உபயோகப்-பட்டு சொல்லப்பட்டு வருகின்றதேயல்லாமல், பொருளுக்குப் பெயர் சொல்லப்படுவதில்லை என்பதேயாகும்.

உதாரணமாக நாம் ஏதாவது ஒரு பொருள் என்பதை எடுத்துக்கொண்டு அதற்குப் பெயர் என்ன? என்று ஒரு மனிதனைக் கேட்டு, அவன் சொன்ன பெயரையே திருப்பிச் சொல்லி அந்தப் பெயருக்குண்டான பொருளைத் தொட்டுக் காட்டும்படி அம்மனிதனையே கேட்டால், அந்த மனிதன் தொட்டுக்காட்டும் பாகத்தில் இருக்கும் பொருளானது அந்தப் பெயரை அதாவது, அவன் முன்சொன்ன பெயரை உடையதாக அது காணப்படாததை நாம் நன்றாய்ப் பார்க்கலாம். ஒரு விளக்கு என்பது எது என்று தொட்டுக்காட்டச் சொன்னால், விளக்கு என்பதாக அவன் தொட்டுக்காட்டிய பாகம் ஒரு சிமினியையோ, கண்ணாடியையோ, தட்டையோ, கம்பி-யையோ, ஆணியையோதான் தொட்டுக்காட்டப்பட்டதாய் இருக்கும்.

அதுபோலவே, ஒரு மேசையைத் தொட்டுக்காட்டச் சொன்னால், தொட்டுக்காட்டிய பாகம் ஒரு பலகையையோ அல்லது காலையோ, ஆணியையோ, குமிழையோ, கைப்பிடியையோதான் தொட்டுக்காட்டிய தாய்க் காணப்படும்.

மற்றும் அதன் உள்பிரிவு பெயர்களும் அதாவது, மேல் சொல்லப்பட்ட பெயர்களும் சரியானபடி தொட்டுக் காட்டப்பட்டதாகவும் இருக்க முடியாது. ஏனெனில், அவன் விளக்கு என்பதாக காட்டியது கம்பி என்பதானாலும், கம்பி என்பதாக ஒன்றை தொட்டுக் காட்டியதாக இல்லாமல் இரும்பைத் தொட்டுக் காட்டியதாகத்தான் காணப்படும். இரும்பு என்பதை காட்டும்போது ஏதோ ஒருவகையான மண்ணின் சேர்க்கையை காட்டியதாகத்தான் காணப்படும். இப்படியே, நமக்குக் காணப்படும் பொருட்கள் எல்லாம் ஏதோ ஒரு ரூபத்திற்கு - ஒரு உருவத்திற்கு - ஒரு மாதிரியான தோற்றத்திற்கு அந்தப் பெயர் சொல்லப்படுவதாகக் காணப்படுமே அன்றி அந்தப் பெயருக்கு அந்தப் பொருள் கட்டுப்பட்டு அந்தப் பொருட்கள் வேறு எந்த ரூபத்தையடைந்தாலும், வேறு எந்த குணத்தையடைந்தாலும் அந்தப் பெயரையே உடையதாக காணும்படியான ஒரு பொருளும் காணப்பட முடியாது, என்பது இவற்றிலிருந்து நன்றாய் உணரக் கிடைக்கின்றது.

ஆகவே, விளக்கு என்றதும் மற்றும் மேசை, கடிகாரம், புத்தகம் என்றதும் ஒருவித வடிவத்-தில் காணப்படும் ஒரு தோற்றத்தின் பெயரேயல்லாமல் ஒரு பொருளின் பெயர் அல்ல என்பது இதனால் உணரத் தகுந்ததாகும்.

எப்படியெனில், மேசை, நாற்காலி, பெஞ்சு, ஊஞ்சல் என்று சொல்லப்படுவதான பொருட்கள் மரம் என்னும் ஒரே மூலப்பொருளாலும் இரும்பு என்னும் ஒரே உபமூலப் பொருளாலும் செய்யப்பட்டிருந்தாலும் தனித்தனி வடிவத் தோற்றத்தினால் தனித்தனி பெயரை உடையதாகி இருப்பது போலவே உலக பொருட்கள் வடிவம், உருவம், சாயல், குணம், நிலை முதலாகிய பேதத்தால் பலவித பெயர்களை உடையதாயிருந்து பலப்பல காரணங்களால் அதே பொருட்கள் வேறுபல பெயர்களையும் அடைந்தாலும், முடிவில் அவற்றின் மூலப்-பொருட்களின் பெயர் எல்லாவற்றிற்கும் ஒரே பெயருடைய பொருளாகவே தான் இருக்கும்.

இதுபோலவேதான், ஜீவன்கள் என்கின்ற உயிர்ப் பிராணிகள் எல்லாம் கூட உருவத்தில் - தோற்றத்தில் வேறு வேறு வகையாய், பெயராய்ச் சொல்லப்பட்டாலும் அவற்றின் மூலப் பொருட்களும் ஒன்றேயாகும். அதாவது, மரத்தையே மூலப் பொருளாகக் கொண்ட மேசை, நாற்காலி, பெஞ்சு முதலிய பல பெயர்களுக்கு உருவம், தோற்றம் ஆகியவைகளே காரணமாய் இருப்பதுபோல் அணுக்-கிருமி, பூச்சி, புழு, பட்சி, மிருகம், குரங்கு, மனிதன் முதலாகிய பல ஜெந்துக்களுக்கும் உருவம், தோற்றம், குணம் முதலிய காரணமாய் பல பெயர்கள் சொல்லப்பட்டாலும், தொட்டுக் காட்டும் பாகங்களானது எல்லா ஜீவவர்க்-கத்திற்கும் ஒரே மாதிரியான - ஒரே பெயர் கொண்டதான மூலப்பொருளாகத்தான் இருக்கும். ஆகவே, ஜீவவர்கக்கங்கள் என்பனவாகிய சகல ஜீவப்பிராணிகளும் சாயல், உருவம், தோற்றம், குணம், முதலியவை தவிர, அவற்றின் மூலப் பொருட்களும், தத்துவமும் ஒன்றேயாகும்.
எனவே, எத்தனையோ கோடிவித ஜீவப்பிராணிகள் என்பதில் மனிதன் என்பதும் ஒருவித-மான தோற்றமுடைய உருவத்திற்குச் சொல்லப்-படும் பெயரேயொழிய மனிதன் என்கின்ற ஒரு தத்துவத்தனிப்பொருள் இல்லை என்பதை இதனால் ஒருவாறு உணரலாம். ஏனெனில், மனிதன் என்று குறிப்பிடுவதற்கும், தொட்டுக்காட்டக்கூடிய ஒரு பொருள் மனித சரீரத்தின் எந்தப் பாகத்திலும் கிடையாது என்பதாலேயே யாகும். உதாரணமாக, ஒரு மனித உருவத்தைக்காட்டி அவனை மற்ற மனிதனைக் கொண்டு தொட்டுக்காட்டச் சொன்னால், அவன் ஒரு மனிதன் என்பவனின் சரீரம் என்பதில் ஏதாவது ஒரு அவயவத்தைத்தான் தொட்டுக் காட்டுவான். அந்த அவயவமானது கை, கால், வயிறு, மார்பு, முதுகு, தோள் என்பவை போன்ற ஏதாவது ஒரு பெயரையுடைய அவயவமாயத்தான் இருக்க முடியும். அந்தப் பெயருக்குடைய அவயவத்தையும் கவனித்துப் பார்த்தால் அது தசை, தோல் முதலாகிய பெயர்களையுடைய பொருளாகத்தான் காணப்படும். இப்படியெல்லாம் இருந்தாலும் கூட, அப்படிக்காட்டப்பட்ட மனிதனும் - இயங்குதல் அதாவது அசைகின்ற சக்தியிருக்கும் போதுதான் அந்தத் தோற்றத்திற்கு மனிதன் என்கினற பெயரையுடையதாகவும், அதாவது, அசைகின்ற சக்தியில்லாது போய்விட்டால் மனிதன் என்ற பெயரையுடைய அதே தோற்றம் பிணம் என்னும் பெயரையுடையதாக ஆகிவிடுகின்றது.


---------------- 3.5.1931, 17.5.1931 ஆகிய "குடிஅரசு" இதழ்களில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய துணைத் தலையங்கங்கள்.

0 comments: