Search This Blog

22.6.08

பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் பெரியார்



நாகம்மையார் உயிரோடு இருக்கும் வரையிலும் ஈ.வெ.ரா.வின் வீடு எப்போழுதும் ஒரு விருந்துக் கூட்டமாகவே விளங்கும். அவர் எத்தனைப் பேரானாலும் முன்னெச்சரிக்கை இல்லாமல் வீட்டுக்குச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போவார். எந்த நேரத்தில் எவர் சென்றாலும் இரவு 12- மணியானாலும் "சாப்பிட வாருங்கள் இலை போட்டாயிற்று என்பது தான் அம்மையாரின் முதல் உபச்சாரம்".

நாகம்மையாரின் கொள்கைகள் இரண்டே. ஒன்று ஈ.வெ.ரா. எக்காரியஞ் செய்தாலும் அதற்குத் தானும் துணை நிற்பது. இரண்டு தன் இல்லத்திற்கு வரும் எல்லோருக்கும் சோறு போடுவது. இந்த இரண்டு கொள்கைகளையும் அவர் இறக்கும் வரையிலும் தவறாமல் பின்பற்றி வந்தார். எவ்வளவு பேர் மிகுதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு மகிழ்ச்சி. அடுத்தபந்திக்கு இன்னும் அதிகமான பேர் வரமாட்டார்களா? என்பதே அவருடைய கவலையாக இருக்கும். ஈ.வெ.ரா.வைச் சதா "வையும்" ஆண்களாலும் வீட்டுக்கு வந்தால் உடனே சாப்பாடு போட்டு விட்டு தான் வேறு வேலை பார்ப்பார்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் நாகம்மையாரைப் பற்றி நன்கறிவார்கள். சீர்திருத்தவாதிகள் அனைவரும் நன்குணர்வார்கள். ஈ.வெ. ரா.வின் அரசியல் சமூக எதிரிகளும் அம்மையாரிடம் மதிப்பும், அன்பும் பாராட்டி வந்தனர். ஈ.வெ.ரா.வின் பொதுவாழ்க்கைக்குக் காரணம் அம்மையாரின் அருங்குணங்களேயென்பதை எவரும் மறுக்க முடியாது.


திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 1933- இல் ஈரோட்டில் நாகம்மையாரின் உருவப் படத்தை திறந்து வைத்த போது கூறியதாவது:
"செல்வச் செருக்கில் மூழ்கிக் கிடந்த அம்மையார்! தேச நலத்தின் பொருட்டு அச்செல்வங்களையெல்லாம் உதறித் தள்ளிவிட்டார். அம்மையார் ஏட்டுக் கல்வி அதிகம் பெறாவிடினும், உலக அறிவில் உயர்ந்து விளங்கினார்.

கணவனுடைய தேசத் தொண்டிற்கும் பின்னர் அவர் புரிந்த சமூகச் சீர்திருத்தத் தொண்டிற்கும் பெருந்துணையாய்த் தம் கணவருடன் ஒத்துழைத்தார். விருந்தோம்பலில் அம்மையாருக்கு இணையானவர் எவருமிரார். தம் இல்லத்திற்கு வருந்தொண்டர்ககட்கு இனிய முகத்துடனும், இன் சொல்லுடனும் இன்னமுது படைத்துவந்ததை எவரும் மறுத்துக் கூற முடியாது.

ஒருசமயம் நானும் நாயக்கரும் திருநெல்வேலிக்குப் பிர்சார நிமித்தம் சென்று விட்டு ஈரோட்டுக்கு இரவு 12-30 மணிக்கு வந்தோம். அன்னம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அய்யப்பாட்டுடனே வந்தோம். அப்பொழுது அம்மையார் அன்புடன் வரவேற்று உடனே அறுசுவையுடன் அமுது படைத்ததை யான் என்றும் மறவேன்.

நாகம்மையாரும், இராமசாமியும் இறுதிவரையிலும் வாழ்ந்த வாழ்வு இன்பகரமானதாகும். அது எல்லோராலும் பாராட்டக் கூடியதாக இருந்தது. பெண்மக்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநாடுகளுக்கு அழைத்து வருவது என்ற வழக்கத்தைத் தமிழ்நாட்டில் புகுத்தியவர் ஈ.வெ.ரா. அவர்களேயாவர்.

"காதலர் இருவர் கருத்தொருமித்து

ஆதரவுபட்டதே இன்பம்"

என்னும் அவ்வையார் சொல்லுக்கு இவர்கள் வாழ்க்கையே எடுத்துக்காட்டாகும்.



----------------------- சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய "தமிழர் தலைவர்" என்ற நூலில் இருந்து..... பக்கம்- 46

0 comments: