Search This Blog

2.6.08

சீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா?

பெரியார் படப் பாடல்


லட்சுமண பகவான் ஒருநாள்....


அய்யர்: ஆகாயம் படைச்சார் பூமியும் படைச்சார்
வாயு அக்கினி ஜலமும் படைச்சுட்டு...
கடை.சியாகத்தானே மனுஷாளப் படைச்சார்
கடவுள் உலகத்தப் படைச்சார்


ராமசாமி: இருக்கட்டும்
(பெரியார்) கடவுள யாரு ஓய் படைச்சார்?


லட்சுமணன்: கடவுள யாரு படைக்கமுடியும் ஓய்
அவா சுயம்பு
தானா உண்டானவா - தான்தோன்றி


ராமசாமி: கண்காணா உன் கடவுள்
தான்தோன்றி ஆகிறப்போ -
கண் கண்ட பேரண்டம்
தான்தோன்றி ஆகாதோ?


லட்சுமணன்: அசுரகுணம் உள்ளவாதான் - இப்படி
அபஸ்வரமாக் கேள்வி கேப்பா...
தேவகுணம் இருந்தா இப்படிக்
குதர்க்கமாப் பேசமாட்டா
ஒம்ம அசுர குணம் அழிக
நீர் தேவகுணம் பெறுக...


ராமசாமி: இந்திரன் யாரு ஓய்...


லட்சுமணன்: தேவர்குலத் தலைவன்


ராமசாமி: இராவணன் யாரு ஓய்


லட்சுமணன்: அசுரர் குல அரசன்


ராமசாமி: காட்டில் இருந்த முனிவன் மனைவியின்
கற்பைக் கெடுத்தவன் இந்திரன்
கவர்ந்து சென்ற மாற்றான் மனைவியைக்
கற்போடு விட்டவன் இராவணன்
இப்பச் சொல்லும்
குணத்தில் உயர்ந்தவன் யார்?
தேவனா?
அசுரனா?


லட்சுமணன்: அசுரகுலத்திலயும் அப்பப்போ
நல்லவா இருந்திருக்காளே!
நந்தனுக்கு மோட்சம் கொடுக்கலியோ
நடராஜப் பெருமான்?


ராமசாமி: நந்தனுக்கு
மோட்சம் கொடுத்தீரோ
தீயிட்டு எரிமூட்டி
மோசம் புரிந்தீரா?
மோட்சம் தந்தது மோட்சம் தந்தது
முற்றிலும் உண்மையென்றால் - அவன்
சந்ததியெல்லாம் சந்நிதி இழந்து
சந்தியிலே ஏன் நின்றான்?


லட்சுமணன்: மனுஷாளா இருந்தா
மடியா இருக்கணுமோ இல்லியோ?
தீட்டுன்னு பெரியவா
தெரியாமலா சொன்னா?


ராமசாமி: தீட்டு என்னய்யா தீட்டு...
குடிக்கிற தண்ணியத்
தொடப்படாது
குளத்துலயும் கால்
படப்படாது
எப்படிய்யா வரும்
சுத்தம்?
ஒங்க மேலதான்
குத்தம்
குளிக்காத பசுவக்
கும்புடுறீங்க - அதக்
குளிப்பாட்டும் மனுசன ஏனய்யா
கொல்றீங்க?


ராமசாமி: புராணம் இதிகாசம் - வெறும்
பொய் மோசம்
பொய் பேசிப் பேசியே
பொய்யாப் போச்சே தேசம்!!


லட்சுமணன்: புராணம் இதிகாசம்
பொய்யில்லேங்காணும்


ராமசாமி: அப்படியாங்காணும்
ஆதாரம் கூறும்!


லட்சுமணன்: அணில் முதுகில் ஸ்ரீராமர்
போட்டகோடு மூணும்
அப்படியே இருக்குது ஓய்
அழியலையே பாரும்


ராமசாமி: ஓகோ!
முதுகத் தொட்டதும்
மூணுகோடு விழுந்திருச்சோ?
ஏங்காணும்!
சீதையின் முதுகில்
கோடுகள் இல்லையா - இல்ல
சீதையை ஸ்ரீராமன்
தொடவே இல்லையா?

0 comments: