Search This Blog

21.6.08

இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை

பக்தியும் - புத்தியும்!

பக்தி இருக்கும் இடத்தில் புத்தி இருக்காது என்பது தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழி. இந்தக் காலத்துக்குப் பொருத்தமாகச் சொல்வதென்றால் பெட்ரோல் மொழி! (பொன்னைவிட இப்போது கச்சா எண்ணெய்க்குத்தானே மதிப்பு அதிகம்)

பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பெரியர் 1920-களிலேயே ஏறத்தாழ 80 வருடங்களுக்கு முன்பே கடவுள் இல்லை என்று முழக்கமிட்டார்.

இன்று பல்வேறு ஆய்வுகளில் புத்திசாலித்தனம் உள்ளோருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை - என்ற உண்மை - அதாவது பெரியார் பொன்மொழி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தினமலர் (19-6-2008) இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்தி வருமாறு:

புத்திசாலிகளும், அதிக நினைவாற்றலும் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உல்ஸ்டர் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தகவல், சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.


புத்திசாலித்தனம் மிக்கவர்கள், அதிக நினைவாற்றல் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இறை நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதாகவும், மத சம்பிரதாயங்களை கைவிட்டு விடுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நூற்றாண்டில், இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் பெரிதும் குறைந்து வருவதற்குக் காரணம், புத்திசாலிகள் மற்றும் நினைவாற்றல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, இதற்கு முன், இனம் மற்றும் பாலின அடிப்படையில் மத நம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் கொண்டோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வும் சர்ச்சை கிளப்பியது.
மற்றவர்களைவிட, புத்திசாலித்தனம் கொண்டவர்கள் குறைந்தளவே இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


புத்திசாலித்தனம் உள்ளவர்களில் 3.3 சதவிகிதத்தினர் மட்டுமே இறை நம்பிக்கை, மத நம்பிக்கை கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால், பிரிட்டனில் ஓர் ஆய்வில், 69 சதவிகிதம் பேர் இறை நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க தேசிய விஞ்ஞான அகடமியில் நடத்தப்பட்ட ஆய்வில், இதில் இடம் பெற்றிருப்போரில் வெறும் 7 சதவிகிதம் பேர் மட்டுமே இறை நம்பிக்கையும், மத நம்பிக்கையும் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர், லின், ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை பெரிய அளவில் உள்ளது. ஆனால், இவர்கள் பருவ வயதுக்கு வரும்போது, புத்திசாலித்தனம் அதிகரித்து, இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.

ஏராளமானோர் கடவுள் இருப்பது உண்மைதானா என்பது உட்பட பல்வேறு சந்தேகங்களுக்கு ஆளாகின்றனர். மற்வர்களைவிட நன்றாகப் படிப்போரும், அதிகம் படித்தோரும் இறை நம்பிக்கையைக் கைவிடுகின்றனர்.

இதற்குக் காரணம், அவர்களுக்கு புத்திசாலித்தனமும், நினைவாற்றலும் அதிகரித்து இருப்பதே. அதேபோல, பொதுமக்கள் மத்தியிலும் புத்திசாலித் தனமானோர் மத்தியிலும் இறை நம்பிக்கை இல்லை என்று விளக்கியுள்ளார்.



- என்பது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுள்ள உண்மை!


"எதற்கெடுத்தாலும், இந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள் ஊன்றிப் படித்து உணர வேண்டிய உண்மை இது!"


--------------- நன்றி: "முரசொலி", 20.6.2008

0 comments: