Search This Blog

19.6.08

கனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்!


பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இன்னொரு குஜராத் மாநிலமாக மாறிவிடும் என்றார். குஜராத் மாநிலத்தில் அப்படி என்ன குறை உள்ளது? - என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்தவரை - வெளியில் அண்ணா தி.மு.க. என்ற முத்திரையைக் குத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான் என்பதைப் பல நேரங்களில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, அந்தப் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்ற ஒரே ஒரு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான்.

அதே நரேந்திரமோடி சென்னை வந்தபோது தன் வீட்டுக்கு அவரை அழைத்து தடபுடலாக விருந்தும் அளித்து தன் இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர். அத்தகைய ஒருவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத் ஆக மாறும் என்று கவிஞர் கனிமொழி கூறியிருப்பதன் பொருள் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

110 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பல இனம், பல மொழி, பல கலாச்சாரம், பல மதம், மதமற்ற தன்மை என்கிற நிலையில், மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
பா.ஜ.க.வின் அணுகுமுறை என்ன? அதனைப் பரீட் சார்த்தமாக நரேந்திரமோடி மூலம் குஜராத்தில் அரங்கேற்றி இருக்கின்றனர்.

2002 இல் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி இரயிலில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் பின்னணியில், நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள ஓர் அரசால், மக்களை மத வாரியாகப் பிரித்து, இந்துக்களை ஏவிவிட்டு, முஸ்லிம் களைப் பூண்டோடு அழிக்கும் குரூர வன்முறை ஏவிவிடப் பட்டது.

இரண்டாயிரம் முசுலிம்கள் கொல்லப்பட்டனர். அவர் களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. பொடா சட்டத்தின்கீழ் 287 பேர் கைது செய்யப்பட் டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள் - ஒருவர் சீக்கியர். எந்த சிறுபான்மை மக்கள் பாதிப்புக்கு ஆளானார்களோ, அவர்களே பொடாவின்கீழ் கைதும் செய்யப் பட்டனர்.

இதன்மூலம் இந்துக்கள் வாக்கு - முசுலிம்கள் வாக்கு என்று மத அடிப்படையில் வாக்கு வங்கி உருவாக்கப்பட்டது.

இந்த முறையை இந்தியா முழுமையும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதனை நரேந்திர மோடி வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதுதான் அவர்களின் வட்டாரத்தில் அவரைத் தூக்கிப் பேசும் காரணமாகும்.

இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கவிஞர் கனிமொழி கடலூர் மாநாட்டில் பேசியதன் கருத்தாகும்.

இதனைப் புரிந்துகொண்டு இருந்தும், திருவாளர் வெங்கைய நாயுடு குஜராத்தில் அப்படி என்ன குறை? என்று வினா எழுப்பியுள்ளார்
.
கனிமொழி அவர்களை நோக்கி திருவாளர் வெங்கையா நாயுடு வினா எழுப்புமுன், அவரை நோக்கி முக்கிய வினா ஒன்று இருக்கிறது.

குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்திற்குப் பின் அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி கூறினாரே நினைவிருக்கிறதா? எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன்? என்றாரே - ஏன் அப்படிச் சொன்னார்? சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற வினாவுக்கு விடை எதுவோ, அதுவேதான் கவிஞர் கனிமொழி கடலூர் தி.மு.க. மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரைக்கான பொருளுமாகும்.

என்ன புரிகிறதா?

-----------நன்றி: "விடுதலை" 19-6-08

0 comments: