Search This Blog

5.6.08

புத்தரை ஒழிக்கவே - இராமன், கிருஷ்ணன், இராமாயணம், கீதை, புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவைகள் கற்பிக்கப்பட்டன.






தோழர்களே! தாய்மார்களே!

சாதிமுறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக் கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன. பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர் என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாஸ்திரங்களுக்கும் இந்து மதத்திற்கும், வேதாந்தமும் தத்துவார்த்தமும் சொல்லி, இவற்றை ஏற்படுத்தினவர்களுக்கு நல்ல பிள்ளையாக ஆவதற்கு முயற்சிப்பார்கள். இந்த அறிவீனமும் மோசமும் தந்திரமும் ஆன காரியங்களால் தாங்கள் மாத்திரம் மரியாதை அடையலாமே தவிர, சமுதாயத்தின் இழிநிலையைப் போக்க, ஒரு கடுகளவும் பயன்படாது. ஆகையால் உங்களுக்கு முதலாவதாக நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய நிலையைச் சிறிதாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உண்மையாய் ஆசைப்-படுவீர்களானால், இந்துமதம் என்பதையும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாஸ்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி, அவற்றிலிருந்து வெளி வாருங்கள். நீங்கள் அதைச் செய்யவில்லையானால், இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக் கூட நீங்கள் எப்டிப்பட்ட மாநாடுகளும் சங்கங்களும் பிரச்சாரங்களும் கிளர்ச்சிகளும் நடத்தினாலும், எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும் பொருளாதார முன்னேற்றமும் பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள் சமுதாயத்திற்குள்ள இழிவு நீங்கப்போவதில்லை. இது உறுதி, உறுதி!


உங்களுக்கு முன் முயற்சித்தவர்கள் செய்த தவறுகளையே நீங்களும் செய்து கொண்டிருந்-தால், உங்கள் வாழ்நாளும் அவர்களைப்போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய, திருத்தம் காண முடியவே முடியாது. மலைக் காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் ‘கொய்னா’ சாப்பிடுவதையே அதற்குப் பரிகாரம் என்று கருதுவார்களானால், அம் மக்களுக்கு மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு இலாபம் கிடைக்கிற வேலையும்தான் நடைபெறுமே தவிர - அவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும் மலைக் காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்படமாட்டாது.

உண்மையில் மலைக் காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால், மலைக் காய்ச்சலுக்கு ஆதாரமான - அதை உற்பத்தி செய்கிற கொசுப் பூச்சிகள், விஷக் காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும். இவைகள் ஒழிக்கப்பட வேண்டுமானால் மறுபடியும் இவைகள் உற்பத்தி ஆகாவண்ணம் கசுமாலங்களையும் குப்பை கூளங்களையும் நெருப்பு வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர்க் குட்டைகளை மூடியாக வேண்டும். அதுபோலவேதான், நம் சமுதாய இழிவுக்குக் காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட மதத்தையும் கடவுளையும் ஆதாரங்களையும் நாம் அடியோடு அழித்தே தீரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்து மதத்தையோ, அது சம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்திவிடலாம் என்று நினைப்பது வெறும் கனவும் வீண் வேலையும் கடைந்தெடுத்த முட்டாள் தனமுமேயாகும்.


சரியான வழி - புத்திசாலித்தனமான வழி என்னவென்றால் அதிலிருந்து தப்பித்துக் கொள்வது-தான்; அதாவது, இந்துமதத்தை விட்டு நாம் வெளியேறிவிட வேண்டியதுதான்.
அதாவது, இந்து மதம் என்பதற்கு - வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால் ஆரியம், பார்ப்பனீயம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்குச் சந்தேகமிந்தால் அகராதிப் புத்தகங்-களையும், அறிஞர்களால்-ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப் பெற்ற ஆராய்ச்சிக் குறிப்பு-களையும் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் யாவரும் நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்
.

ஆஷாட-பூதிகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள். புத்தர், சங்கரர், இராமானுஜர் போன்றவர்களின் முயற்சிகள் என்ன, என்ன? புத்தரை ஒழிக்கவே - இராமன், கிருஷ்ணன், இராமாயணம், கீதை, புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவைகள் கற்பிக்கப்பட்டன. இவைகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யவே சங்கரர், இராமானுஜர்கள் முயன்றுவந்தார்கள். இவர்களைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும், நாயன்மார்களும், பக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிகளும் தோன்றினர். எனவே, இதை எல்லாம் உணர்ந்தவர்கள்தான் இன்று இந்நாட்டு மனித சமுதாய மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது தகுதியுடையவர்கள் ஆவார்கள்

------------- தந்தை பெரியார் - கான்பூரில், 29, 30, 31.12.1944இல் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட, பார்ப்பனரல்லாதார் மாநாட்டுத் தலைமையுரை, ‘குடிஅரசு’, 13.1.1945

0 comments: