Search This Blog

30.10.08

பிராமணரல்லாதார் யாராவது பிராமணர்களை ஏதாவது சொல்லிவிட்டால் அது தேசத் துரோகமாகி விடுகிறது



பி. வரதராஜுலு நாயுடு - பிராமணர்களின் கொடுமையும் குறும்புத் தனமும்


மாயவரம் முனிசிபாலிட்டியில் சிறீமான் வரதராஜுலு நாயுடுவுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்தபொழுது, சில பிராமணர்கள் அதை எதிர்த்தார்கள். இவர்கள் எதிர்ப்பை அலட்சியம் செய்து மற்ற கவுன்சிலர்கள் ஒரேயடியாய் நிறைவேற்றி விட்டார்கள். தங்கள் ஆட்ேசபனை பலிக்கவில்லை என்று நினைத்த மேற்படி பிராமணர்கள் அதோடு சும்மாயிராமல் அரசாங்கத்தாருக்கு அடியிற் கண்டபடி தந்தி கொடுத்தார்கள். அதாவது "மாயவரம் முனிசிபாலிட்டியார் டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மாயவரத்தில் சமாதானத்திற்கு மிகவும் பங்கம் வரும். ஆதலால், அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை நிராகரித்து விடவேண்டும் " என்று கண்டிருந்ததாம். இது எவ்வளவு அயோக்கியத்தனமான காரியம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர் களுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரங்கள் சமாதானத்தை விளைவிக்கும்; டாக்டர் நாயுடுவுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரம் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்றால், ஐயங்கார், ஆச்சாரியார், முதலியார் முதலானவர்களிடம் உள்ள எந்த குணம் டாக்டர் நாயுடுவிடம் இல்லை அல்லது அவர்களிடமில்லாத எந்த குணம் டாக்டர் நாயுடுவிடம் இருக்கிறது. எந்த விதத்தில் அம்மூவருக் கும் டாக்டர் நாயுடு இளைத்தவர். பின்னும் சிற்சில சமயங்களில் டாக்டர் நாயுடு அவர்கள் சில பிராமணர்களின் அயோக்கியத்தனத்தைப் பற்றிச் சொன்ன போதிலும், மறு சமயத்திலேயே அயோக்கியனாயிருந்தாலும் தேசீயவாதியாயிருந்தால் ஓட்டு கொடுங்கள் என்று கூட சொல்லி அயோக்கியர்களுக்கெல்லாம் வேஷம் போட்டுக்கொள்ள ஒரு போக்கிடமும் காட்டி இருக்கிறார். அதோடு சிறீமான் திரு.வி.க. முதலியாரவர்களைப் போலவே இவரும் ஒரு சமயத்தில் ஒரு மகாநாட்டில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் பிரேரேபித்திருந்தாலும் இப்பொழுது பிராமணர்களுக்கு அநுகூலமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாமென்கிறார். இவ்வளவு நன்றி செய்தவர்களிடமும் நமது பிராமணர்கள் இம்மாதிரி நடந்து கொள்வார்களானால் இப்பிராமணர்களின் நன்றியறிதலை என்னென்று சொல்வது?

இதே டாக்டர் நாயுடுவை இந்த பிராமணக் கூட்டத்தார் வண்டியில் வைத்து இழுக்கவில்லையா? தென்னாட்டுத் திலகர் என்று சொல்ல வில்லையா? அவர் படத்தை ஆசாரத்திலும், படுக்கை இடத்திலும், பூஜை இடத்திலும் வைத்திருக்கவில்லையா? இப்பொழுது ஏன் அவர் பேரில் இவ்வளவு வெறுப்பு? எந்தப் பத்திரிகையாவது இப்பிராமணர் களின் நடத்தையைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதினதா? இம்மாதிரி சிறீமான்கள் சீனிவாசய்யங்காருக்கோ, ராஜகோபாலாச் சாரிக்கோ உபசாரப் பத்திரம் கூடாது என்று இரண்டு பிராமணரல்லாத கவுன்சிலர்கள் ஏதாவது வாயைத் திறந்திருந்தால் இந்த தேசீய பத்திரிகைகள் என்று சொல்லும் பித்தலாட்டப் பத்திரிகைகளும், அவர்களால் வயிறு வளர்க்கும் தொண்டர்களும் இப்பிராமணரல்லாதார் குடியை அடியோடு கெடுப்பதற்கல்லவா வகை தேடி இருப்பார்கள்.

வெள்ளைக்காரர்கள் எப்படி தங்கள் இனத்தாரை யாராவது ஒரு இந்தியர் தொட்டுவிட்டால் அதை சர்க்காரோடு யுத்தம் என்று ஆக்கி இராணுவச் சட்டத்தை அமுலில் கொண்டு வந்து விடுவதும், யாராவது ஒரு வெள்ளைக்காரன் இந்தியனைக் கொன்றுவிட்டால் அது அசால்ட்டாகி 10 ரூ. அபராதத்தோடு போய்விடுகிறதோ அது போலவே, பிராமணரல்லாதார் யாராவது பிராமணர்களை ஏதாவது சொல்லிவிட்டால் அது தேசத் துரோகமாகி அவர்களை அடியோடு ஒழிக்கப் பார்ப்பதும், பிராமணரல்லாதாரை பிராமணர் என்ன செய்தாலும் அது தேசச் சேவையாயும் ஆகிவிடுகிறது. இவர்கள் யோக்கிதையைப் பார்த்தால் வெள்ளைக்காரர் ஆயிரம் மடங்கு யோக்கியர்கள் என்று நெருப்பின் மேல் நின்று சொன்னாலும் கால் வேகாது என்று கூட சொல்லலாம். கேவலம் இந்த உபசாரப் பத்திரத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அதற்கு மதிப்பிருந்த முட்டாள் அபிப்ராயம் வெகு நாட்களுக்கு முன்னே போய்விட்டது. மகாத்மாவுக்கும் உபசாரப் பத்திரம், அன்னவரைக் கொலை செய்தவர்களுக்கும் தான் உபசாரப் பத்திரம், யோக்கியனுக்கும் உபசாரப் பத்திரம், திருடனுக்கும் உபசாரப் பத்திரம். உபசாரப் பத்திரம் வாங்க யோக்கியதை யில்லாதவன் இனி நமது இந்தியாவில் இல்லை என்பதே நமது அபிப்ராயம். ஆதலால், அதைப்பற்றி கவலை இல்லை. டாக்டர் நாயுடுவும் இதைப் பிரதானமாய் எண்ணியிருக்க மாட்டார். அவர் வீட்டு சமையலறைச் சுவர்கள் பூராவும் சட்டம் போட்ட உபசாரப் படங்களாலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த பிராமண மனப்பான்மையை இன்னும் நமது பாமர ஜனங்கள் அறியவில்லையே என்றுதான் நாம் விசனிக்கிறோம். தேசத்திற்காக மூன்று முறை ஜெயிலுக்குப் போனார்; கேப்பை மாவு அரைத்தார்; சிறீமான் சீனிவாசய்யங்காரைப் போலவே பதினாயிரக்கணக்காக ரூபாய் சிலவு செய்தார். ஆனால், சீனிவாசய்யங்காராவது கட்சிக்காரன் பணத்தில் கேஸுக்காகப் போய் உபசாரப் பத்திரம் பெற்று வருவார். இவர் தன் சொந்தப் பணத்தையே சிலவு செய்து கொண்டுபோய் உபசாரப் பத்திரம் பெறுவார்.

இதிலிருந்து நாம் நினைக்கவேண்டியது என்ன வென்றால், பிராமணர்களின் பேராசைக்கு விரோதமான ஒரு சிறு காரியத்தையாவது எந்த பிராமணரல்லாதாராயினும் செய்ய நினைத்து விட்டால் அவர் குடியைக் கெடுக்க இப்பிராமணர்களும் கொஞ்சமும் பயப்படமாட்டார்கள் என்பதும், இதற்குப் பயந்து கொண்டேதான் நமது பிராமணரல்லாதார் எவ்வளவு படித்தவர்களாயிருந்தாலும், எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் பிராமணர்களைக் கண்டால் நடுங்குகிறார்களென்பதும், அவர்கள் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள் என்பதும் விளங்குகிறது. படித்தவர்களும் பணக்காரர் களுமே இப்படி இருந்தால் வெறும் ஆசாமிகள் சங்கதியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? பிராமணரல்லாதார் நிலை பரிதாபம் ! பரிதாபம் !! பரிதாபம் !!!

--------------------- -சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - "குடிஅரசு"-21.3.26

0 comments: