Search This Blog

27.10.08

பார்ப்பனப் பத்திரிக்கையின் யோக்கியதையைப் பாரீர்










("நடுநிலை" (!) ஏடுகளின் போக்கைக் கண்டித்துப் பொதுக் கூட்டம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உலகில் நடுநிலையில் செய்திகளை தரவேண்டியதற்குப் பதில், பல பார்ப்பன ஏடுகள் ஒருதலைச் சார்புடன் செய்திகளை வெளியிடுவதையும், தமிழர்களின் நியாயமான இன உணர்வு - மனித நேயத்தையும் கொச்சைப்படுத்துகின்ற இப்போக்கைக் கண்டித்தும்,

தமிழ்நாட்டின் தலைநகரங்களில் நடுநிலை தவறும் பத்திரிகைகளைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டங்கள் நவம்பர் மாதம் நடைபெறும்.

தேதி எதிர்பாருங்கள்.


---------------தலைமை நிலையம், திராவிடர் கழகம்,

மேற்கண்ட அறிவிப்பின் அடைப்படையில் தேடியதில் கிடைத்த செய்தியை அப்படியே தந்துள்ளேன்.)


பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம்
உஷார் ! உஷார்!! உஷார்!!!



பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத் தேசத்தையே ஆண்டவர்களாயும், பராக்கிரமசாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றையத் தினம் 'பிற்பட்டவர்'களாகவும், 'சூத்திரர்'களாகவும் இருப்பது ஏன்? இதற்குப் பொறுப்பாளி யார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகைகளேயாகும்.

தற்காலத்தில் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும் பாலோர் கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத்திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங் களை எழுதியனுப்பும் நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப் பத்திரிகைகளுக்கு ஏஜெண்ட்களாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கிப் படித்து கெட்டுப்போகிறவர்களாகவே பிராமணரல்லாதவர்கள் இருக்கிறார்கள். பிராமணப் பத்திரிகைகள் இதுசமயம் நமது நாட்டில் ஒவ்வொரு பட்டிணங்களிலும், கிராமங்களிலும் பிரவேஷித்திருக்கின்றது. அங்குள்ள படிக்கத் தகுந்த ஒவ்வொருவரும் அப்பத்திரிகைகளைப் படிப்பதும், அவற்றை உண்மை என்று நம்புவதும், மற்றவர்களுக்கு அவற்றை எடுத்துச் சொல்லுவதுமான வழிகளில் பிராமணப் பத்திரிகைகளின் அபிப்ராயத்தை தேசமெல்லாம் பரப்பச் செய்துவிடுகின்றன. சாதாரண மாய் நமது கிராமங்களிலுள்ள பாமர ஜனங்களும் " சுதேசமித்திரன் " என்னும் பிராமணப் பத்திரிகையின் அபிப்பிராயத்தைத்தான் உண்மையான ராஜீய அபிப்ராயமென்றும், அது யார் யாரைத் தலைவர் என்று சொல்லுகிறதோ அவர்களைத் தலைவர்கள் என்றும், அது யார் யாரைத் தேசத் துரோகியென்று சொல்லுகிறதோ அவர்களைத் தேசத் துரோகி என்றும், அது சொல்லுகிற படியெல்லாம் நடப்பதும் நினைப்பதும்தான் தேச கைங்கரியமென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே மற்றும் "சுயராஜ்யா" என்னும் ஒரு தமிழ் தினசரிப் பத்திரிகையும் பிராமணர்களால் நடத்தப்பட்டாலும் பிராமணரல் லாதாரை ஏமாற்றுவதற்காக வேண்டி அதன் உண்மைப் பத்திராதிபர்கள் பெயரை மறைத்து பிராமணரல்லாதார் பெயரைப் போட்டு ஏமாற்றி வருகிறார்கள். உண்மையில் அதன் ஆசிரியர்கள் ஒரு ஐயங்கார் பிராமணரும் ஒரு விபூதிப் பிராமணருமாயிருக்க அது வெளியில் தெரிந்தால் அப்பத்திரிகையைப் பிராமணப் பத்திரிகையென்று பாமர ஜனங்கள் நினைத்து விடுவார்கள் என்று வேண்டு மென்றே மறைத்துவிட்டு, ஒத்துழையாமையில் ஈடுபட்டுத் தங்கள் உத்தியோகங்களை விட்டு கஷ்டப்பட்டதால் செல்வாக்கு ஏற்பட்டிருக் கும் சிறீமான்கள் கிருபாநிதி, திரிகூட சுந்தரம்பிள்ளை ஆகிய இருவர் பெயர்களைக் காட்டித் தங்கள் நன்மைக்கான அபிப்ராயங்களை மேற் படியார்கள் அபிப்ராயமென்று நினைக்கும்படி ஜனங்களுக்குள் புகுத்தி வருகிறார்கள். இந்த பிராமணரல்லாத கனவான்களும் கொஞ்சமும் கவலையில்லாமல் இவ்வித செய்கைக்குத் தங்கள் பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்பத்திரிகைகளுக்கு மூலதனம் ஏறக்குறைய முக்கால் பாகம் பிராமணரல்லாதார்களுடையதே. அதை வாங்கி வாசித்து அவர்களுக்கு லாபம் கொடுக்கிறவர்களும் பிராமணரல்லாதார்களே. இவ்வளவு இருந்தாலும் இப்பத்திரிகைகளைக் கண்டால் பிராமணரல்லாத தலைவர்கள் என்போர்களிலும், பத்திராதிபர்கள் என்போர்களிலும் பெரும்பாலோர் பூனையைக் கண்ட எலி போல் நடுங்குகிறார்கள். தங்கள் ஜாதகத்தையே அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த பிராமணப் பத்திரிகைகளையே தங்களுக்கு பலன் எழுதும்படி பல்லைக் கெஞ்சிக் கொண்டு திரிகிறார்கள். மகாத்மா போன்றவர்களே இப்பிராமணப் பத்திரிகைகளைக் கண்டால் சில சமயங்களில் பயப்பட்டு சமயோசிதமாய் நடக்க வேண்டியிருக்கிற தென்றால் ஐயோ! பாவம் மற்ற ஆகாசக் கோட்டைகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அப்புறம் குட்டித் தலைவர்கள், தொண்டர்கள் என்போர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

இம்மாதிரி ஒரு பெரிய சமூகத்தையே அதன் தலைவர்கள் என்போரையே இப்பத்திரிகைகள் அடக்கி ஆண்டுக்கொண்டு, தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டு வருவதை எத்தனை நாள்களுக்குத்தான் சகித்துக் கொண்டு வருவதென நினைத்து சரியான மனிதர்கள் என்போர் யாராவது துணிந்து இதன் தந்திரத்தை வெளிப்படுத்தக் கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் அவர்களை அடியோடு ஒழிக்க பிராமணப் பத்திரிகைகளும், பிராமணத் தலைவர்களும், பிராமண அதிகாரிகளும் எல்லோரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். அந்த சமயங்களில் ஐயர் - ஐயங்கார் - ஆச்சாரியார் - ராவு என்கிற பேதமே இல்லாமலும் மிதவாதி சுயராஜ்யக் கட்சி - ஒத்துழையாக் கட்சி -காந்தி சிஷ்யக் கட்சி - சர்க்கார் உத்தியோகஸ்தர் என்கிற வித்தியாசமே இல்லாமலும், ஒரே கட்டுப்பாடு - கம்பியில்லாத தந்திபோல் ஒரே அபிப்ராயம், ஆளுக்கொரு வேலை; பத்திரிகைகளில் வைவதொருவர்; பிரசங்கம் மூலம் வைவதொருவர்; பணம் கொடுத்து வையச் சொல்லுவது ஒருவர்; காந்தியிடம் சாடி சொல்லுவது ஒருவர்; சர்க்காருக்குக் காட்டிக் கொடுப்பது ஒருவர்; அதிகாரத்தைக் கொண்டு நசுக்குபவர் ஒருவர்; ஆக ஒவ்வொருவரும் தங்களாலானதை உடனே செய்யப் புறப்படுவதன் மூலம் எப்பேர்ப்பட்டவனையும் நடுங்கச் செய்து விடுகிறார்கள். உதாரணமாக, சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் நிலைமையைப் பார்த்தாலே இதன் உண்மை பொது ஜனங்களுக்கு நன்றாய் விளங்கும். சென்ற வருஷமெல்லாம் சுயராஜ்யக் கட்சியை வைது கொண்டிருந்தவரும், கொஞ்ச நாளைக்கு முன்பெல் லாம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டு இருந்தவரும், செல்வச் செருக்கும் செல்வாக்குப் பெருக்கும் நிலைக்காது என்று சிறீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு சாபம் கொடுத்தவரும் ......

........... தகுந்த இடம் என்று காஞ்சி அக்ராசனப் பிரசாரத்தில் சொன்னவரும், சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானபோது, சிறீமான்கள் வ.வெ.ஸூ. ஐயர், சீனிவாசய்யங்கார் சிஷ்யர்கள் முதலியவர்கள் சிறீமான் நாயக்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காலத்தில் ஒரு பிராமணரல்லாதாரான சிறீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் அக்ராசனம் வகிப்பதைப் பொறுக்க மாட்டாமல் பிராமணர்கள் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்; சட்டசபையில் செய்வது போலவே இங்கும் செய்கிறார்களாவென்று கேட்டவருமான நமது முதலியார், இப்போது தன்னை மாரீசன் என்று சொன்னவரும், காந்தியடிகளுக்குப் புத்தியில்லை என்று சொன்ன வரும், ஒத்துழையாமை சட்டவிரோதமென்று சொன்னவருமான சிறீமான் சீனிவாசய்யங்கார் பின்னால் திரிந்து கொண்டும், அந்த சிறீமான் சீனிவாசய்யங்காரையே தமிழ்நாட்டுக்குத் தலைவராக்கப் பாடுபட்டுக் கொண்டும், சுயராஜ்யக் கட்சி யோக்கியமான கட்சியென்றும், அதனிட மும் அதன் தலைவரிடமும் ஒத்துழையாமை வாசனை அடிக்கின்ற தென்றும், சட்டமறுப்பு அக்கட்சியில் தொக்கியிருக்கின்றதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்றும், முன் தான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டது கூட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற் கென்றும், காங்கிரஸில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கக் கூடாது என்றும், சுயராஜ்யக் கட்சிக்கே வோட்டுக் கொடுங்களென்றும் சொல்லுவதானால், அதன் சக்தி எவ்வளவென்பது ஒருவர் சொல்லாமலே விளங்கும். இவ்வளவு பயமும், மாறுதலும் இப்பேர்பட்டவர் களுக்கெல்லாம் வரக் காரணமென்ன? பாமர ஜனங்கள் பிராமணப் பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதும், பிராமணத் தலைவர்களை கொண்டாடுவதும் அவர்கள் சூழ்ச்சிகளை அறியாமலிருப்பதும், அவர்கள் கையிலிருக்கும் அதிகாரங்களுக்குப் பயப்படுவதுமே அல்லாமல் வேறு என்ன? ஆதலால் ஆங்காங்குள்ள பிராமணரல்லாத பிரமுகர்கள் தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்றிருந்தால், தங்கள் சமூகம் இம்மாதிரி ஏமாறியவர்கள் ஆகாமல் இருக்கவேண்டுமென்று விரும்பினால், ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடிசையிலும் "திராவிடன்", "குடி அரசு" முதலியவைகள் போன்ற உண்மை உரைக்கும் பத்திரிகைகளை செலுத்த வேண்டும். உண்மை உரைப்பதன் மூலம் அதன் ஆசிரியர்கள் பிராமண அதிகாரத்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் தயாராய்த்தான் இருப்பார்கள். ஆதலால் வஞ்சகப் பத்திரிகைகளைப் பார்த்து மோசம் போகாமலிருக்கச் செய்யவேண்டும்.

இந்தக் காரியங்களை நீங்கள் செய்யாமலிருந்தால் வரப்போகும் சட்டசபை எலெக்ஷனில் பிராமணரல்லாதார் கண்டிப்பாய் தோற்கடிக்கப்பட்டு போவார்கள். சிறீமான்கள் டி.எம்.நாயரும், ஸர்.பி.டி. செட்டியாரும் எவ்வளவோ அரும்பாடுபட்டு பிடித்துக் கொடுத்த கோட்டையை மறுபடியும் பிராமணர்கள் சுவாதீனப்படுத்திக் கொண்டு உங்களை வெளியாக்கிவிடப் போகிறார்கள். அப்புறம் 10 வருஷமோ, 100 வருஷமோ கடவுளுக்குத்தான் தெரியும். வீணாய் சர்க்காரை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. சர்க்கார் எந்தக் கை வலுக்குமோ அந்தக் கையில் சேர்ந்து விடுவார்கள். இப்பொழுதே சர்க்காருக்குப் பிராமணர்களிடத்தில் பயம் வந்து விட்டது. அவர்கள்தான் அடுத்த சட்டசபையில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டு அவர்களை இப்பொழுது இருந்தே தடவிக்கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். பிராமணரல்லாதாரே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

----------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதிய கட்டுரை - "குடிஅரசு" -28.2.26

3 comments:

Unknown said...

//வரப்போகும் சட்டசபை எலெக்ஷனில் பிராமணரல்லாதார் கண்டிப்பாய் தோற்கடிக்கப்பட்டு போவார்கள்.//

தமிழ் ஓவியா யாரை ஏமாற்றுகிறீர்கள் இன்று ஆட்சியில் இருப்பது பிராமணர் அல்லாதவர்தான் எத்தனையோ பத்திரிகைகள் நடத்துவது பிராமணர் அல்லாதவர்தான் இன்னும் எத்தனை காலம் தான் பார்ப்பனர் சூழ்ச்சி என்று சொல்லி ஊரை ஏமாற்றுவீர்கள் இன்று தலித்துக்களை சுரண்டுபவர்கள் பார்பனர்கள் அல்ல திராவிடர்களை முன்னேற்றுவோம் என்று சொல்லி சுரண்டும் திராவிட கழகங்கள் தான் .

தமிழ் ஓவியா said...

பெரியார் என்று பெயர் வைத்துக் கொண்டு எழுதும் தோழருக்கு உண்மை புரியாமல் எதை எதையோ எழுதி குழம்பியுள்ளர். குழப்பம் தெளிய கீழ்கண்ட கட்டுரையை வாசிக்கவும்.

பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?



பார்ப்பானாவது தமிழனாவது?

துக்ளக் (20.8.2008 பக்கம் 11) இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் கீழ்க்கண்ட பதிலைத் தந்துள்ளார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீரிலிருந்து வெளியேறி, அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ் நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை? என்று மிகவும் மனம் நொந்து போய் எழுதும் இந்த சோதான். இலங்கைத் தீவிலே, சொந்த நாட்டிலே மூன்று லட்சம் தமிழர்கள் அகதிகளாக அல்லாடிக் கொண்டு இருக்கிறார்களே - அதுபற்றி மூச்சு விடுவதில்லை - அந்நிலைக்கு ஆளாக்கிய ஆளும் ராஜபக்சேக்களுக்கு வெண் சாமரம் வீசுகிறார்.

காஷ்மீரிலிருந்து வெளியேறும் ஹிந்துக்கள் என்று பூடகமாகச் சொல்லுகிறார் அல்லவா - அவர்கள் யாரும் அல்லர் - பண்டிட்கள் என்று கூறப்படும் பார்ப்பனர்கள்தாம்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகும் நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிறது ஏதும் நடக்க வில்லையே என்று கண்ணீர் விடுகிறார். பாதிப்புக்கு ஆளானவர்கள் பார்ப்பனர் என்றால் பாசம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

ஈழத் தமிழர்கள் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கில் அகதிகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்றால் - அதற்குக் காரணமான - அந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் பற்றி எழுத அவருடைய எழுதுகோல் மறுக்கிறது. இதற்குக் காரணம் என்ன? பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?

---------------- நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் 1-11-2008

தமிழ் ஓவியா said...

இன்னொரு கட்டுரையையும் உங்கள் சிந்தனைக்கு வைக்கிறோம். படியுங்கள்! தெளியுங்கள்!

"ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பன ஊடகங்கள் சிண்டை அவிழ்த்து விட்டு நர்த்தனம் ஆடும் கோரம்



சீண்டிடும் சிண்டுகள்



ஈழத் தமிழர்களின் நன்மைக்காக எது நடந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள முடியாத - சீரனிக்கவே இயலாத ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் இருக்கவே செய்கிறது.

ஏற்கா விட்டாலும் பரவாயில்லை; கொச்சைப்படுத்துவது என்பதில்தான் அவர்களின் அசகாய சூரத்தனம் அப்படியே கொப்பளித்துக் கிளம்புகிறது.

ஈழத் தமிழர்களுக்காக தமிழக எம்.பி.க்கள் பதவி விலகத் தீர்மானித்து விட்டார்களாம்.

அதன் நோக்கத்தைப்பற்றி கவலைப்படாத திருவாளர் சோ ராமசாமி, அதைப்பற்றி கேலியும் கிண்டலும் செய்வது என்பது - ஒரு அளவு என்று கிடையாது - விஷத்தில் தோய்த்து எழுதப்பட்ட எழுத்துகள் அவை - துவேஷத்தில் முக்கிக் குளித்த கிறுக்கல்கள்!

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் போடா விட்டால், இந்திய அரசு திமிர் முறித்திருக்காது - கொட்டாவி விட்டுக் கொண்டு, போர்வையை இழுத்து வெளியில் எறிந்து விட்டு, கண் விழித்தும் பார்த்திருக்காது. ராஜபக்சே, பசில் ராஜபக்சே தலைமையில் தூதுக்குழு அனுப்பியிருக்க மாட்டார். பிரணாப் முகர்ஜி டில்லியி லிருந்து கோபாலபுரம் ஓடி வந்திருக்க மாட்டார். கூட்டறிக்கையும் வெளியில் வந்திருக்காது.

அரசியல் தீர்வு காண்போம் என்ற ஒரே ஒரு வாக்கியம் சிங்கள ஹிட்லர்களின் வாயிலிருந்து வெளியே வந்திருக்காது. உணவுப் பொருள்களை அனுப்புகிறோம் - மருந்துப் பொருள்களும் அனுப்பப்படும் என்ற உத்தரவாதம் கிடைத்திருக்காது.

இவையெல்லாம் தெரிந்திருந்தும்கூட துக்ளக் சோவால் கேலி செய்யாமல் இருக்கவே முடியாது - அது அவரின் இரத்தக் குணம்!

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது. பல லட்ச மக்கள் உணர்வோடு கைகோர்த்து நின்றனர். தமிழ்நாட்டில் இத்தகைய இனமான எரிமலை வெடித்துக் கிளம் பினால் பார்ப்பனர்களின் ரத்தம் சூடேறாதா? இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்காதா?

அந்தக் காட்சி அவர்களை இருப்புக் கொள்ள விடவில்லை.

அதனை எப்படியும் கொச்சைப்படுத்தித் தீர வேண்டும் - அதன் மூலம் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கு ஆளாகி விட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் செங்கற்பட்டு வரை 80 கி.மீட்டர் நீளத்துக்கு மனிதச் சங்கிலி இருந்தது என்று எழுதும் தினமணி பல லட்சக்கணக்கில் அணி வகுத்தனர் என்ற உண்மையைச் சொல்ல மனம் வரவில்லை - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனார் என்று சீப்பை ஒளிய வைத்து - கலியாணத்தை நிறுத்துவது என்று சொல்லுவார்களே அந்தப் பாணியில் செய்தியை வெளியிடுகிறது.

ஈழத்திலே அணு அணுவாகத் துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் மீட்சிக்காக கொட்டும் மழையில் நின்றனர் தமிழர்கள். உலகம் பூராவும் அதன் எதிரொலி கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த உன்னதமான மனிதநேயத் தொண்டை தினமணி வகையறா எப்படி பார்க்கிறது?

மனிதச் சங்கிலி - ஸ்தம்பித்தது போக்கு வரத்து என்று தலைப்புப் போடுகிறது (25.10.2008).

தீபாவளிப் பண்டிகையை யொட்டி வெளியூர்களுக்குச் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வாகன நெரிசலால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் நிலையம், ரயில் நிலையம் செல்ல முடியாமல் வாகன நெரிசலால் அவதிப் பட்டனர் என்று செய்தி வெளியிட்ட தினமணி நெரி சலாகவிருந்த வாகனங்களின் படத்தையும் வெளியிட்டு தன் அங்கலாய்ப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது.

வீடுபற்றி எரிந்தபோது சுருட்டுப் பற்ற வைக்க நினைக்கும் குடியர்கள் தினமணி வைத்யநாதய்யர் வடிவத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தினமணி இப்படி என்றால் முற்போக்கு முத்திரை குத்தி கொண்டு அலையும் ஞானி என்ற பார்ப்பனர் குமுதத்தில் தன் கோணங்கித் தனத்தை அரங்கேற்றுகிறார் (29.10.2008)

யுத்தம் செய்யும் இரு தரப்பையும் பேச வைக்க இந்திய அரசால் முடியும் - செய்ய வேண்டும். அதைச் செய்ய வைப்பதற்காக இங்குள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் குற்ற உணர்ச்சியையோ, விரோத உணர்ச்சியையோ எழுப்புவது எனக்கு உடன்பாடில்லை. ஆவேசக் குரல் எழுப்பும் பலர் நறுமண சோப்பில் குளித்து மழுங்க ஷேவ் செய்து, ஆஃப்டர் லோஷன் பூசி, ஃபாரின் ஸ்பிரே அடித்துக் கொண்டு, ஏசி காரில் தான் வந்து இறங்குகிறார்கள் என் கிறார் இந்த அஞ்ஞானி.

கொட்டும் மழையில் தலைவர்களும், தொண்டர்களும் தாய்மார்களும் கை இணைத்து நின்ற காட்சியை இப்படிக் கொச்சைப்படுத்துகிறார்.

ஒவ்வொரு தமிழர் மனத்திலும் குற்ற உணர்ச்சியை, விரோத உணர்ச்சியை எழுப்பத் தான் இது நடக்கிறதாம்.

விஷயம் புரிகிறதா? ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் பார்ப்பனர்கள் நடந்து கொள்ளும் போக்குகள், பார்ப்பன ஊடகங்கள் சிண்டை அவிழ்த்து விட்டு நர்த்தனம் ஆடும் கோரத்தைக் கண்டு, பார்ப்பனர்மீது தமிழர்கள் கொண்டிருக்கும் நியாயமான கோபத்தைத்தான் இவர் இப்படி கொப்பளிக்கிறார். குற்ற உணர்ச்சியோடும், விரோத உணர்ச்சியோடும் ஈழத் தமிழர்களை வஞ்சிக்கும் வருணாசிரமம் கூட்டத்தின் மீது தமிழர் எந்த உணர்ச்சியைக் கொள்ள வேண்டு மாம்?

அவர்களின் மோவாயைத் தடவிக் கொடுத்து சபாஷ் போட வேண்டுமா?

மனிதச் சங்கிலி குற்ற உணர்ச்சியை உண்டாக்குகிறது என்று கூறும் இந்த மேதாவி 1987-இல் மனித சங்கிலி நடைபெற்றதற்குத் நான் தான் முக்கிய காரணம் என்று மார் தட்டுகிறார். அந்த மனிதசங்கிலி எந்த உணர்ச்சியைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்தியதாம்?

பார்ப்பான் செய்தால் மனித உரிமை, தமிழன் செய்தால் வேறு சங்கதியா?

ஒரு கட்டுரையின் ஒரு பத்தியில் கூறப்படும் விஷயம்; இன்னொரு பத்தியில் கூறப்படும் விஷயத்தை உதைத்துத் தள்ளுகிறதே! ஆத்திரம் புரை யேறும்போது முரண்பாடு என்னும் விக்கல் ஏற்பட்டு விடுகிறதே!

பிறவிக் குருடனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததுபோல - இவர்களுக்கு ஞானி என்ற புனை பெயர் வேறு!

சும்மா சொல்லக் கூடாது! மனிதச் சங்கிலி பார்ப்பனர்களைப் படாத பாடுபடுத்தியிருக்கிறது என்பது பார்ப்பனர்களின் ஏடுகளைப் புரட்டும் போது நன்றாகவே தெரிகிறது.

மனிதச் சங்கிலி சில செய்திகள் என்ற தலைப்பில் இவ்வார துக்ளக் (5.11.2008) தன் நச்சுப்பையைத் திறந்து கடித் திருக்கிறது.

நிர்ப்பந்தம்

சென்னை நகரத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெள்ளிக்கிழமையன்று கொட்டும் மழையில் அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழருக்காக நடத்திய மனிதச் சங்கிலியில், நிர்ப்பந்தப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்.

மனிதச் சங்கிலி பல இடங்களில் பிளவுபட்டிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவிகள் சங்கிலி இணைப்பாக நின்றிருந்தனர். அண்ணா சாலையில் மழையினாலும் மனிதச் சங்கிலியால் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடி யினாலும் ஒரே குழப்பமாக இருந்தது. நந்தனம் கலைக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகம் போன்ற அரசு நிறு வனங்களும், எஸ்.அய்.இ.டி., ஓய்.எம்.சி.ஏ., போன்ற கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் மாணவர்களைக் கல்லூரியை விட்டு வெளியே வரச் செய்து, 2.30 மணிக்கே சாலையில் நிறுத்தினர். கொட்டும் மழையில் மாணவர்களும், மாணவிகளும் நனைந்து, நடுங்கிக் கொண்டு நின்றனர். கருணாநிதி அய்ந்து மணிக்குத் தான் வந்தார். அதுவரை மாணவ, மாணவிகள் மழை யில் நடுங்கியவாறு நின்று கொண்டிருந்தனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பின்னால் குடைகளுடன் நின்று கொண்டிருந்ததால், எந்த மாணவரும் வெளியேற அனுமதிக்கப்பட வில்லை. பதற்றத்துடன் காணப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களை மரத்தடியில் நிற்கக்கூட அனுமதிக்க மறுத்தனர். முதல்வர் (கலைஞர்) செல்லும் போது எந்த மாணவரும் இடத்தை விட்டு அகன்று விடுவதை அவர்கள் விரும்பவில்லை.

------------------------டைம்ஸ் ஆஃப் இந்தியா - 25.10.2008

ஏன் என்று தெரியாது?

சும்மா 16 வயதுள்ள ஒரு சிறுமி, பள்ளி யூனிஃபார் முடன் மழையில் நனைந்து நடுங்கி நின்று கொண்டிருந்தாள். அவளிடம் ஏன் நிற்கிறாய்? என்று கேட்ட போது, எனக்குத் தெரியாது. எங்களை நிற்கச் சொன் னார்கள் என்று கூறினாள். பக்கத்தில் நின்றிருந்த அவளது நண்பர்கள் அவளை இடித்த பிறகு, அவள், இலங்கைக்காக நிற்கிறோம். எங்களுக்கு இலங்கை வேண்டும் என்றாள். அடுத்த கேள்வி கேட்பதற்கு முன், சிலர் வந்து நிருபரை விரட்டி அடித்தனர்.

மேலும், மாநகரிலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர் களும், மனிதச் சங்கிலியில் கலந்து கொள்ள குறிப்பிட்ட இடங்களில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் எங்களு டைய பேராசிரியர்கள் வரச் சொன்னார்கள் என்றனர். அவர்கள் மழைக்குத் தயாராகவரவில்லை. அந்த இடத்தை விட்டு நகர முடியாமல், மிகுந்த சங்கடத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

----------------இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.10.2008

இந்தியன் எக்ஸ்பிரசும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தேடிப் பிடித்துக் கொடுத்த செய்தியை, உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே பொறுக்கி எடுத்து தன் இதழில் வெளியிட்டு இடி அமீன் சிரிப்பு சிரிக்கிறது துக்ளக்.

இந்து ராமும், மாலினி பார்த்தசாரதிகளும், இந்தியா டுடே வாசந்தியும், துக்ளக் சோ ராமசாமியும் இந்தியன் எக்ஸ்பிரஸ்சும் நேர்கோடு கிழித்ததுபோல் ஈழத் தமிழர்ப் பிரச்சினையிலும் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதிலும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை கேலி செய்வதிலும் சுருதி பேதம் சிறிதுமின்றிக் கோரஸ் பாடு கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்காக உயிரைத் துச்சமாகக் கருதிப் போராடும் அமைப்புகளுக்கு எதிராகத் துரோகக் குரல் எழுப்பும் ஆனந்தசங்கரி டக்ளஸ் தேவானந்தங்களின் அறிக்கைகளையும், பேட்டி களையும் விரிவாக வெளியிடுவதன் நோக்கம் என்ன?

இலங்கையில் தானே விபீஷணன் இருந்தான்; அண்ணனைக் காட்டிக் கொடுத்ததற்காக அவனுக்கு ஆழ்வார்ப் பட்டம் கொடுக்கவில்லையா?

இராமாயண காலம் முதல் இந்தக் காலம் வரை பார்ப்பனர்களின் அணுகுமுறை மாறவில்லையே!

பார்ப்பானைத் தமிழன் என்று நம்பும் பித்துக்குளிகள் கிறுக்குப் பிடித்த கடைசிப் பார்ப்பானைப் பார்த்து பிறகாவது புத்தி கொள் முதல் பெறக் கூடாதா?


-------------------- 1-11-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் - மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை "