Search This Blog

10.6.09

திராவிடர்கழகத்தைப் போல ஒரு தன்னலமறுப்பு இயக்கம்வேறு எங்குமே கிடையாது


திராவிடர் கழகத்தைப் போல தன்னல மறுப்பு நன்றி பாராத இயக்கம் வேறு எங்கும் கிடையாது கலந்துரையாடலில் தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத்தைப் போல தன்னல மறுப்பு இயக்கம் நன்றி எதிர்பார்க்காத இயக்கம் வேறு எங்கும் கிடையாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

என்னைப் பற்றி அந்த மாநிலத்தைச் சார்ந்த அம்மையார் சொன்னார். மிகப்பெரிய இயக் கத்தைச் சார்ந்தவர் என்றெல்லாம் சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார்கள்.

இங்கர்சாலைப் பற்றித் தெரியவில்லை

நான் சொன்னேன். இங்கர்சால் மண்ணுக்கு இங்கர்சால் ஊருக்கு வந்ததற்காக முதலில் நான் பெருமைப்படுகின்றேன் என்று சொன்னேன். இவர்கள் ரொம்ப வரவேற்பார்கள் என்று நினைத்துக் கொண்டு. ஆனால் எல்லோரும் ரொம்ப அமைதியாக இருந்தார்கள். எந்த வித ரியாக்சனும் இல்லை. என்ன காரணம்? இங்கர்சால் யார் என்று அந்த வழக்கறிஞர்கள் உட் பட யாருக்கும் தெரியவில்லை. (கைதட்டல்)

அதாவது அவர் பகுத்தறிவாளர். என்னை பகுத்தறிவாளர் என்று அங்கே அறிமுகப்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த நாட்டைச் சார்ந்த இங்கர்சால் ஒரு பகுத்தறிவா ளர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

பெரியாரை உலகம் முழுவதும்....

தந்தை பெரியாரை உலகம் முழுவதும் இந்த இயக்கம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இரண்டு வகையாக சேர்த்திருக்கிறோம்.

ஒன்று, அமெரிக்கா உட்பட பெரியார் பன்னாட்டு அமைப்பு என்பதன் மூலமாக இணையத்தின் மூலமாக பெரியார் அலைவரிசை மூலமாக பிரச்சாரம் செய்திருக்கிறோம்.

இந்த விடுதலை உங்கள் கையில் மட்டும் கிடைத்திருக்கிறது என்று நினைக்காதீர்கள்
உங்களை விட வெளிநாட்டவர்க்கு சீக்கிரம் உங்களுக்கு கிடைப்பதைவிட அமெரிக்காவில் ரொம்ப சீக்கிரமாகக் கிடைத்து விடுகிறது. உங்களுக்கு கிடைப்பதை விட சில மணி நேரங்களில் சிங்கப்பூருக்கு, மலேசியாவுக்குக் கிடைத்து விடுகின்றது.

இப்பொழுது மின்னணு வசதி வந்தாகி விட்டது. ஆகவே உலகம் பூராவும் பரப்புவதற்கு ஒரு முறை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்தது பெரியார், மணியம்மை பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்கள் மூலம் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

நாகாலாந்தில் இருந்து மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றார்கள். அசாம் மாநிலத்திலிருந்து வந்து படிக்கிறார்கள். பிகாரிலிருந்து வந்து படிக்கிறார்கள். ஆண் பிள்ளை, பெண் பிள்ளைகள் வந்து படிக்கிறார்கள். இங்கு வந்தவர்கள் தமிழ் கற்றுக்கொண்டு செல்கின்றார்கள்.

அதோடு பெரியாரைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்கிறார்கள். வரும் பொழுது கயிறு கட்டிக் கொண்டு வந்தான். போகும் பொழுது கயிறை அறுத்துக்கொண்டு போய் விட்டான்.

இளைஞர் உலகத்திற்கு பெரியார் தேவை

இப்பொழுது இளைஞர் உலகத்திற்குப் பெரியார் போய்ச் சேர வேண்டும். அதுவும் வயதானவர்களுக்குப் போய்ச் சேருவது முக்கியமல்ல. இளைஞர்களுக்குப் போய் சேர்ந் தால்தான் அடுத்த தலை முறைக்குப் போய்ச் சேரும்.

நாம் ஏன் பெரியார் பிஞ்சு என்று ஒரு பத்திரிகையை நடத்து கின்றோம்? பெரியார் பிஞ்சு பத்திரிகையை நடத்தினால்தான் குழந்தைகள் பகுத்தறிவாளர்களாக வருவார்கள்.

இன்றைக்கு நமது இயக்கத்தைச் சார்ந்தவர்தான் புதுச்சேரி நடராஜன். அவருடைய பேரக் குழந்தை, அந்தக் குழந்தையினுடைய அப்பா, அம்மா, அகமதாபாத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் வந்தார்கள். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குப் பணம் கொடுத்துவிட்டு பெரியார் பிஞ்சை வாங்கினார்கள். அதை எடுத்துக் காட்டுகிறார் அந்தப் பையன் பெயர் தமிழ்ச்செல்வன். நான் அகமதாபாத்தில் இருக்கிறேன். பெரியார் பிஞ்சுக்கு நான் எழுதியிருக்கின்றேன். என்னுடைய படம் வந்திருக்கிறது. தாத்தா, இதோ பாருங்கள் என்று எடுத்துக் காட்டுகின்றது. ஆகவே நம்முடைய இயக்கம் இன்றைக்கு இந்தியா முழுக்க உலகம் முழுக்கப் பரவியிருக்கிறதென்று சொன்னால் ஒன்றை நினைவிலே வைத்துக் கொள்ளுங்கள்.

புத்தர் இயக்கம் பரவக் காரணம்

புத்தருடைய இயக்கம் உலகம் பூராவும் பரவியது. புத்தர் கொள்கையைக் கொடுத்தார். புத்தர் காலத்திலே உழைப்பைக் கொடுத்தார்கள். ஆனால் அந்த இயக்கம் வெளியே பரவியது. அது தொண்டர்களால், தோழர்களால்தான் அது பரப்பப்பட்டிருக்கிறது.

அதே மாதிரி இயேசு நாதர் என்று எடுத்துக் கொண்டால், இயேசுவினுடைய கொள்கைகள் அது மதரீதியாக இருக்கலாம். நமக்கு அதிலே மாறுபட்ட கருத்து இருக்கலாம். ஆனால் முறைகளை கவனித்துப் பார்த்தோமேயானால் இயேசுவினுடைய கொள்கைகள் இன்று மதமாக உலகம் பூராவும் பரவியிருக்கிற தென்று சொன்னால் அப்போஸ்தலர்கள் என்று சொல்லக்கூடிய அந்த அப்போஸ்தலர்கள் தான் சீடர்கள்.

செயின்ட் பால் இந்த மாதிரி இருக்கிறவர்கள் தான் உலகம் பூராவும் பரப்பியவர்கள்

ஆயிரம் வருட வரலாறு

அதே மாதிரி அந்த நூல்கள் முதற்கொண்டு பார்த்தீர்களேயானால் - இப்பொழுது புத்தருடைய நூலை ஆயிரம் வருட வரலாற்றை வாயில் சொல்லித்தான் தொகுத்திருக்கின்றார்கள்.
அந்தக் காலத்தில் எழுத்தெல்லாம் கிடையாது. அச்செல்லாம் கிடையாது. ஆகவே அதில் எவ்வளவோ மாறுதல்கள் இருக்கும். இவர் சொன்னார் என்பதை அப்படியே டேப் ரெக்கார்டர் மாதிரி அப்படியே சொல்ல முடியாது.

அவர் காதில் கொஞ்சம் வாங்கி, கொஞ்சம் விட்டு, விட்டுத்தான் சொல்வார். ஆயிரம் வருடத்திற்குப் பிறகு தொகுத்திருக்கிறார்கள் என்றால் பகுத்தறிவு ரீதியாக எவ்வளவு மாறு தல் அடைந்திருக்கும் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஆகவே அய்யா அவர் கள் சொன்னதற்கு நம்மிடம் எல்லா ஆதாரமும் நிறையவே இருக்கின்றன.

எல்லாமே புத்தகங்களாக இருக்கின்றன. அவ்வளவையும் களஞ்சியம் என்று நாம் தொகுக்கிறோம். அய்யா அவர்களுடைய உரைகள் ஒலிப்பதிவு நாடா இருக்கிறது.
அய்யா அவர்களுடைய குரலைக் கேட்காதவர்கள் இன்றைக்கு அதன் மூலம் அவருடைய குரலைக் கேட்கிறார்கள். எல்லாவற்றையும் விட பெரியார் திரைப்படம் ஏற்படுத்திய புரட்சி இருக்கிறதே அது சாதாரணமல்ல.

இனி கிராமங்களில் பெரியார் படம்

பெரியார் இப்படியா இருந்திருக்கிறார்? இப்படியா இருந்திருக்கிறது? என்று கேள்வி கேட்கின்றார்கள். நாம் எடுத்து வெற்றி பெற முடியுமா என்று ஒரு சூழல் இருந்தது. இருந் தாலும் அது கரையேறி வந்துவிட்டது.

இன்னமும் பெரியார் திரைப்படம் நாடு முழுக்க கிராமங்கள் உட்பட இன்னொரு சுற்று சுற்றியாக வேண்டும். எல்லா இடங்களுக்கும் பெரியார் படம் போய்ச் சேரவேண்டும்.
இந்த ஆண்டு பெரியார் படத்திற்குரிய மரியாதையும், சிறப்பும் தானே வரும். நான் சொன்னேன், கடிகாரத்தினுடைய பெண்டுலம் ஓடி வருகிற மாதிரி. ஒரு பக்கம் பிரச்சாரம்; இன்னொரு பக்கம் போராட்டம். அந்தப் போராட்டமே மனித உரிமைப் போராட்டம்.
திராவிடர் கழகத்துக்காரர்கள் போராட்டத்திற்குப் போனால் காலையில் சென்று விட்டு மாலையில் திரும்பிவிடுவோம் என்று யாரும் கருதுவது கிடையாது.

சிறைச்சாலை என்று வந்துவிட்டால்

நாங்கள் சிறைச்சாலைக்குரிய போராட்டம் என்று வந்துவிட்டால் அதற்குரிய விலை கொடுப்பதற்குத் தயாராக இருப்போம்.

சில கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள் சிறைக்குப் போவதற்கு முன்னாலேயே விடுதலை செய் என்று அச்சடித்து வைத்திருப்பார்கள். மாலையில் விடுவதாக இருந்தாலும் மதியம் 12 மணிக்கே விடுதலை செய் போஸ்டர் ஒட்டி விடுவார்கள்.

ஏதோ இந்த போஸ்ட்டரைப் பார்த்து அரசாங்கம் பயந்து போய் விட்டமாதிரி இருக்கட்டும் என்று செயல்படுகிறவர்களும் உண்டு.

நியாயத்தை எடுத்துச்சொல்ல ஒரு வழி

நாம் எப்பொழுதுமே அந்த மாதிரி விடுதலை செய் என்றே கேட்பதில்லை. நாம் நம்முடைய நியாயத்தை எடுத்துச் சொல்லுவதற்கு இதை ஒரு பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்தி யிருக்கின்றோம். நாம் நம்மை வருத்திக் கொண்டு அந்தக் காரியத்தை செய்கின்றோம்.

கருப்பு மெழுகு வத்திகள்

எனவே இந்தமாதிரி கருப்பு மெழுகுவத்திகள் எரிந்து ஒளி கொடுத்து தன்னை அழித்துக் கொண்டிருக்கின்ற இயக்கம் திராவிடர்கழகத்தைப் போல ஒரு தன்னலமறுப்பு இயக்கம், நன்றி எதிர் பார்க்காத இயக்கம் வேறு எங்குமே கிடையாது.

எனவே இந்த இயக்கத்தினுடைய பெருமைகளை எல்லோரும் உணர்ந்தவர்கள். இந்தப் பெரு மையை நினைத்துத் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.

நாம் ஒருவர் தான் யாரிடமும் கெஞ்சாதவர்கள். நாம் தொண்டு செய்வதற்காக கேட்கிறோம். தேர்தலிலே நிற்பவர்கள், காலையில் ஒரு நிலை; மாலையில் ஒரு நிலை. மக்கள் எங்கே அவர்களை மதிக்கிறார்கள்?

ஆனால் அதே நேரத்திலே உண்மையான மதிப்பு மரியாதை என்றால் நமது இயக்கத்தைப் பற்றிச் சொல்லுவார்கள். என்ன சொல்லுவார்கள்? அவர்கள் ஊருக்கு பத்துப் பேர் தானய்யா இருப்பார்கள். இருந்தாலும் அவர்களை மாதிரி ஒரு கொள்கை உறுதி உள்ள ஆள்கள் வேறுயாருமே கிடையாது. தெளிவாக இருப்பார்கள். இராணுவக் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள்.

எண்ணிக்கை முக்கியமல்ல

ஆகவே நமக்கு நிரம்ப எண்ணிக்கை பலம் வேண்டும் என்பதல்ல. ஆனால் நமது கொள் கைகள் நிரம்பப் பரவ வேண்டும். நம்முடைய பிரச்சாரம் பரவ வேண்டும்.
இராணுவத்தில் 105 கோடி, 110 கோடி மக்களுக்கு எவ்வளவு இராணுவ வீரர்கள் இருப் பார்கள்? 105 கோடி இராணுவ வீரர்கள் கிடையாது. மக்களை பாதுகாப்பதற்கு இராணுவ வீரர்கள் ரொம்ப குறைவுதான்.

அதே போலத்தான் நம்மவர்களைப் பொறுத்த வரையிலே நாம் இராணுவ வீரர்களைப் போல இருந்து இந்தச் சமுதாயத்தைப் பாதுகாக்கக்கூடிய இராணுவ வீரர்கள்தான் கருஞ்சட்டை வீரர்கள். இராணுவ வீரர்களுக்குப் பனி தெரியாது. அவர்களுக்கு வெய்யில் தெரியாது. அவன் உயிரை துச்சமென மதித்துதான் மைனஸ் டிகிரியில் காஷ்மீரில் போய் நிற்கின்றான்.
மனிதனுடைய ரத்தமே உறைந்து போய் விடும் அந்த இடத்தில் போய் நிற்கிறான். அவனைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அவன் எடுத்துக்கொண்ட பணி அப்படி. அது மாதிரி நம்முடைய இயக்கம் ரொம்பத் தீவிரமாக இருக்கிற இயக்கம்.அதை எண்ணிப் பெருமைப்படுகிறோம்.

அறிவு ஆசான் சூரியன். அவர் 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் பணியாற்றி 94 வயது வரையிலே இடையறாது பணியாற்றி அவர்கள் மறைந்தது 1973 இல்.

உணர்வோடு கலந்து நாம் பெரியாருடைய தொண்டர்களாக இருக்கிறோம். அது வேறு செய்தி. ஆனால் அய்யா அவர்கள் மறைந்தார் என்பது இயற்கை ரீதியாக ஒப்புக்கொள் ளப்பட்ட செய்தி அது 1973. இன்றைக்கு என்ன ஆண்டு? 2009ஆம் ஆண்டு. அப்படியானால் எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன?
36 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அம்மா அவர்கள் மறைந்து 31 ஆண்டுகள் ஆகியிருக் கின்றன.

------------------தொடரும் ...."விடுதலை" 9-6-2009

1 comments:

அஹோரி said...
This comment has been removed by the author.