Search This Blog

16.6.09

காங்கிரஸ் கட்சி ஒன்று தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறதா?




அந்த காலத்து விடுதலையில்...

கும்பகோணத்தில் பெரியார் 10,000 பேர்கொண்ட ஊர்வலம்
1000 கருப்புச் சட்டைத் தொண்டர்கள் யானை, கொடி எக்காளம்
உடல்நிலை சரியில்லாத நிலையில் தந்தைபெரியார் துன்பத்திற்கிடையில் ஆற்றிய உரை


பெரியார் ஈ.வெ.ரா. கே.ஏ.மணியம்மை மற்றும் பல திருச்சி தோழர்கள் 30.3.1947 காலை 8 மணிக்கு வரும் வண்டியில் கும்பகோணம் ஸ்டேஷனுக்கு வந்ததும் ஏராளமான கருப்புச் சட்டைத் தொண் டர்களும். தோழர்கள் கே.கே.நீலமேகம், பொன்னுசாமி சேர்வை, லஷி மிபதி, பராங்குசம், எஸ். சுப்ரமண்ய பிள்ளை அய்.குமாரசாமிபிள்ளை, எஸ்.கே.சாமி,எஸ்.ஆர்.சாமி, முதலானவர்கள் பல மாலைகள் இட்டு வெற்றி ஒலியோடு பிளாட் பாரம் நடுங்க வரவேற்று, காரில் தோழர்கள் நீல மேகம் இல்லத்துக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டிக்கு ராஜா டாக்கீஸ் என்னும் பெரிய கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அங்கு தோழர் ராமன் -ஜயலட்சுமி திருணத்திற்கு சுமார் 5000 பேர்கள் வரையில் ஆண் களும், பெண்களும் உள்ளும், வெளியிலுமாய் நிறைந்து கூடி இருந்தார்கள். பல தோழர்கள் பாடிய பின்பு பெரியாரைத் தலைமை வகிக்க கே.கே.என்., கே. எஸ். எஸ். வேண்டிக் கொண்டதற்கிணங்க தலைமை வகித்து. மண மக்கள் தங்கள் வாழ்க்கை ஒப்பந்தங் கூறி ஜில்லா ரிஜிஸ்ட்ராரால் பதிவு செய்து கொள்ளச் செய்து, பின் பல வரவேற்பு வாழ்த்துப் பாக்கள் படிக்கப் பட்டு, மணமக்களுக்கு அன்பளிப்பு நடந்தது. இவை முடிந்ததும், பெரியார் 2 மணிநேரம் திருமண தத்துவம், பெண்கள் உரிமை, சமுதாய முன்னேற்றம், மனித வாழ்க்கையின் பயன், முதலியவை பற்றிப் பேசினார். தோழர் கே.எஸ். சுப்பிரமணிய பிள்ளை அவர்களால் வந்தன உபசாரம் கூறப் பட்டு திருமண நிகழ்ச்சி முடிந்தது.
பகல் உணவு தனிப்பட்ட முறையில் தோழர் நீலமேகம் அவர்கள் இல்லத்தில் வெளியூர்த் தோழர்கள் பலருக்கு நடந்தது.

பிற்பகல்


பிற்பகல் 4 மணிக்கு கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் இருந்து கே.கே.என். அவர்கள் தலைமையில் நீண்டதொரு ஊர்வலம் துவக்கப்பட்டது.

பெரியார் அவர்களும், கும்பகோணம் திராவிடர்கழக கமிட்டித் தலைவர் தோழர் முத்துதனபால் செட்டியார் அவர்களும், காரில் ஊர்வலமாக, சுமார் 2 மைல் தூரம் காங்கேயன் பார்க்குக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

1000 கருப்புச் சட்டைத் தொண்டர் படை இரு மருங்கிலும் வர, பல பெண்களும் காருக்குப் பின்னால் வெற்றி ஒலி ஒலிக்க யானை, கொடி, எக்காள வாத்தியம் முன் செல்ல சுமார் 10000 பேர் சூழ்ந்துவர, வழி நெடுக இந்து முஸ்லிம் மக்களின் மாலை மரியாதைகள் நடக்க ஆறரை மணிக்கு ஊர்வலம் காங்கேயன் பார்க்கை அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை ஆனதினாலும் கடை அடைப்பு ஆனதினா லும் ஏராளமான மக்கள் கூடி இருந்தார்கள். ஜில்லாவின் எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். மொத்தத்தில் கூட்டம் 20000 (இருபது ஆயிரம்) பேர்களுக்கு மேலாகவே இருக்கலாம்.

தோழர் முத்துதனபால் தலைமை வகித்தார். துவக்கத்தில் தோழர் நீலமேகம் அவர்கள் 6,500 ரூபாய் கொண்ட பணமுடிப்பு ஒன்றைத் தஞ்சை ஜில்லா சார்பாக ஜில்லாவின் ஒரு பாகத்துக்கு (மேல் தஞ்சைக்கு ஆக) என்று சொல்லி இதைப் பெரியாரிடம் கொடுக்கும் படி தலைவரிடம் கொடுத்தார். தலைவர் அதைப் பெற்றுப் பெரியார் இடம் கொடுத்தார். பெரியார் வாங்கிக் கொண்டு நன்றியறிதல் தெரிவித்து விட்டு 2.30 மணிநேரம் பேசி சுமார் 20, 30 கேள்விகளுக்குப் பதில் சொல்லி அமர்ந்தார்.

பெரியார் ஈரோட்டிலிருந்து வரும் போது ரயில் பிரயாணத்தில் மழையினால் 2ஆவது வகுப்பு வண்டி முழுவதும் மழை ஒழுகி, இரவெல்லாம் மழையில் நன்றாக நனைந்து தூக்கமில்லாமல் தலைவலி மயக்கம் ஏற்பட்டு மிக்க அசவுகரியமான நிலையில் காலையில் 10 முதல் 12 வரை நல்ல வெய்யிலில் தகரக் கொட்டகையில் பேசியதாலும் ஊர்வலத்தில் வெய்யிலில் 2 மணி நேரம் வந்ததாலும் நிற்கவே சக்தியற்று அடிக்கடி, உட்கார்ந்து உட் கார்ந்து பேசி மிகவும் களைப்புற்று தோழர்களை இருபுறமும் பிடித்துக்கொண்டு நடந்து வண்டியில் ஏற்றப்பட்டு மயக்கத்தோடு அழைத்துவரப்பட்டார். இரவெல்லாம் அவஸ்தைப் பட்டு 31.3.1947ஆம் தேதி காலை 6 மணிக்கு கும்பகோணம் இருந்து ஒரத்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார். (பேச்சின் சுருக்கம் பின்னால் வரும்)

அரக்கோணம் திராவிடர் கழக ஆண்டுவிழா நிதியளிப்பு

9.4.1947 புதன் மாலை 5 மணிக்கு அரக்கோணம் மார்க்கெட் எதிர் மைதானப்பந்தலில் நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் தலைமை வகிப்பார். தோழியர் சத்யவாணிமுத்து அம்மையார் கொடியேற்றுவார்.

பெரியார் ஈ.வெ.ரா, தோழர் என்.வி.நடரா சன் சொற்பொழிவாற்றுவர்.மாலை 3.30 மணிக்கு கருஞ்சட்டைப் படையினர் ஊர்வலம். ஒலிபெருக்கி உண்டு. -அரக்கோணம் திராவிடர் கழகத்தார்

மாணவர் பிரச்சாரம்

வரும் கோடைவிடுமுறையில் நடக்கும் திராவிட மாணவர் சுற்றுப் பயணத்தில் எந்த மாவட்ட கூட்ட அமைப்பாளர் அதிகமான கூட்டங்களை நடத்தித் தருகிறாரோ அவருக்கு முதற் பரிசாக ஒரு வெள்ளிக் கோப்பையும், இரண்டாவதாக வரும் அமைப்பாளருக்கு ஒரு பரிசும் அண்ணாமலை நகர் திராவிட மாணவ கழகச் சார்பில் அளிக்கப்படும்
- நா.இமயவரம்பன், செயலாளர், திராவிட மாணவர் கழகம்,
அண்ணாமலை நகர் (விடுதலை, 2.4.1947)


ஜஸ்டிஸ் கட்சி பொதுக்கூட்டம்
காங்கிரஸ் காலித்தனம்
ஈ.வெ.ரா.வின் சாட்டை


திருச்செங்கோடு: நேற்று மாலை இவ்வூர் 40 கால் மண்டபத்திற்கு முன்னால் ஒரு பிரமாண்ட மான பொதுக்கூட்டம் கூடிற்று. மழை தூரிக்கொண்டிருந்த போதிலும் கூட்டம் கொஞ்சம் கூட கலையாமல் அமைதியாக இருந்தது. கூட்டத்திற்கு கனம் பொப்பிலி ராஜாவும், தோழர்கள், ஈ.வெ.ராமசாமிப் பெரியார், சி.டி. நாயகம், அ.பொன்னம்பலம், எ.வி.அழகர்சாமி முதலியவர்கள் அனைவரும் விஜயம் செய்திருந்தனர். சேலம் தோழர் ஜகதீசசெட்டியார் தலைமை வகித்தார்.

முதன் முதலாக தோழர் பொன்னம் பலம் பேசிக்கொண்டிருக்கும் போது, கூட்டத்தின் ஓரத்திலிருந்த யாரோ ஒரு காங்கிரஸ் வாலா, காங்கிரஸ் கட்சி ஒன்று தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குகிறதா? என்று கத்தவே, கூட்டத்திலிருந்தவர்கள் எழுந்து சத்தம் போட ஆரம்பித்தனர். உடனே சப் இன்ஸ்பெக்டர் அப்படி சத்தம் செய்து கூட்டத்தைக் கலைக்க முயன்ற காங் கிரஸ் வாலாவைக் கூட்டிச் சென்று புத்தி கூறினார். மீண்டும் அமைதி ஏற்பட்ட பின், தோழர் ஈ.வெ.ராமசாமி, ரோஷம் கிளம்ப, துடி துடித்துக் கொண்டு, இவ்வாறு கூட்டத்தின் அமை தியை கலைக்க முயலும் காங்கிரஸ் காலிகளை கண்டித்து, இவ்வாறு செய்வது, அயோக்கி யத்தனம், பில்லத்தனம், முட்டாள்தனம் என்று சரமாரியாகப் பேசினார். ஜனங்கள் உற்சாக மாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். மழை வரவே, கூட்டம் மண்டபத்திற்குள் கூடியது. காங்கிரஸ்காரர்கள், ஜஸ்டிஸ்காரர்களை தூற்றுவதுற்கு பதில் அளிப்பதாகக் கூறி சுமார் 2 மணி நேரம் மிக அருமையான பிரசங்கம் செய்தார்.

இரவு 9 மணிக்குக் கூட்டம் கலைந்தது. அப்போது பொப்பிலி ராஜாவுக்கு ஜே என்ற கோஷம் வானைப் பிளந்தது.

பொப்பிலி ராஜாவுக்கு தேநீர் விருந்து
யூனியன் போர்டு வரவேற்புப் பத்திரம்


நேற்று மாலை மகா நாட்டின் நடவடிக்கைகளின் போது கனம் பொப்பிலி ராஜா விஜயம் செய்திருந்தார். மாலை 5மணிக்கு, போர்டு ஹைஸ்கூல் சென்ட்ரல் ஹாலில் திருச்செங் கோடு வர்த்தகர்கள் ஒரு தேநீர் விருந்தளித்தனர். அது சமயம் முக்கிய மான பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர். விருந்திற்குப் பின்னர், பொப்பிலி ராஜா அவர்கள் நேரரே, பஞ்சாயத்துப் போர்டு வரவேற்புக்கு இணங்கி விஜயம் செய்தார். வெங்கட்ரமணா ஹாலில் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. மரியாதைக்காக யூனியன் போர்டிலிருந்து துண்டுகள் போடப்பட்டன. பின் அங்கிருந்து மாலை நடந்த பொதுக் கூட்டத்திற்கு விஜயம் செய்தார். இன்று கனம் பொப்பிலி ராஜா அவர்கள் மற்ற தலை வர்களுடன் நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

-------------------(விடுதலை, 4.11.1936) தகவல்: சிங்.குணசேகரன்

0 comments: