Search This Blog

15.1.10

மும்பை தாக்குதல் - கர்கரேயைக் கொன்றது யார்? - 7



(முகமூடி அணிந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் ஆயுதமான ஹிந்துத்வத்தை எப்படியெல்லாம் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள மிக அருமையான நூல் கர்கரேயைக் கொன்றது யார்? என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரியும் விருப்ப ஓய்வு பெற்று பதவி விலகிய மகாராஷ்டிர அய்.ஜி.யுமான முஷ்ரப் அவர்கள் எழுதியுள்ள நூல்!

பல திடுக்கிடும் உண்மைகள், மறைக்கப்படும் செய்திகள், இவற்றிற்கெல்லாம் மூல காரணங்கள் பார்ப்பனப் பிடிப்புக்குள் சிறைப்பட்டுள்ள அல்லது பார்ப்பனமயமான இந்திய உளவுத் துறையும், இந்திய ஊடகத்துறையும், கடமை தவறி ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுநீதியின் மறு உருவங்களாகத் திகழ்கின்றன.

இந்நூல் முன்னுரை, மற்றும் முக்கிய சில அத்தியாயங்களை தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் தமிழாக்கம் செய்து தருகிறார்; படியுங்கள்; (பேச்சாளர்கள்) பரப்புங்கள்.

- ஆசிரியர் கி.வீரமணி)




ஆர்.எஸ்.எஸ். பணியில்


ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அய்.பி. அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நேர்த்தியாக நிறை வேற்றி வருகிறது; ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசிய அமைப்பு எனும் பிரச்சாரத்தைச் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது. இடதுசாரிகள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துவோம் என்றும் முசுலிம்கள் மத அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்றும் உண்மையை மறைத்துப் பொய்யைப் பரப்புகிறவர்கள் என்னும் வாசகப்படி அவர்களின் எண்ணத்தை ஈடேற்றி வருகிறது. அதற்கான எடுத்துக்காட்டுகள் இதோ.

1. ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வரும் விதம் குறித்து எதையும் அரசுக்குத் தெரிவிக்காமல், வெளிநாடுகளில் இருந்து அவை பெற்று வரும் ஏராளமான நிதி பற்றியோ, சமூக, கல்வி, கலாச்சார இயக்கங்களிலான அவர்கள் ஊடுருவல் பற்றியோ, அரசு, மின்னணு ஊடகங்களில் அவர்கள் செய்து வரும் மதவாத நச்சுப் பிரச்சாரம் பற்றியோ அறிக்கை அளிக்காமல் இருந்து வருதல். ஆயிரக்கணக்கான கிளை அமைப்புகளில் நாடெங்கும் நடத்தப்பட்டு வரும் ஷாகாக்களின் மூலம் இரவு பகல் பாராது பரப்பப்படும் விஷமங்கள்பற்றிகூட எதுவும் அறிவிக்கப்படுவதில்லை. இதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசியவாத இயக்கம், சமூக கலாச்சார இயக்கம் என்று கூறி அவ்வியக்கத்தை முன்னிலைப்படுத்துதல். கடந்த ஆண்டுகளில் அரசுக்கு அய்.பி. அளித்துள்ள எல்லா அறிக்கைகளையும் பார்வையிட்டாலே, இதன் மெய்த் தன்மை விளங்கிவிடும்.

2. மதச் சார்பற்ற, இடது சாரி அமைப்புகள் விசயத்திலும் முசுலிம் அமைப்புகள் பற்றியும் நேர்மாறான அணுகுமுறையை அய்.பி. கடைப்பிடிக்கிறது. இத்தகு இயக்கங்கள்பற்றி முழுதும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ, சில வேளைகளில் முழுவதும் பொய்ச் செய்திகளையோ அளித்து வருகிறது. இத்தகைய இயக்கங்களும் அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.சைவிட அதன் துணை அமைப்புகளைவிட, நாட்டு நலனுக்குக் குறைந்த அளவே ஊறு விளைவிப்பவையாகவே உள்ளன. அய்.பி. தரும் தகவல்களையே சார்ந்து இருக்க வேண்டியிருக்கும் அரசுகள் தொடர்ந்து அவற்றை நம்பிச் செயல்பட்டு இடதுசாரி, மதச்சார்பற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் செயலிலும் அவற்றைத் தீவிரவாத அல்லது பயங்கரவாத அமைப்புகள் எனவும் கூறி ஓரங்கட்டி வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.சைக் காட்டிலும் பார்ப்பனிய அமைப்பு

இளைய தலைமுறையினரின் அரசியல் ஆசைகளுக்கு வடிவம் தந்திட தன்னுடைய பார்ப்பனிய சிந்த-னைக்கு இந்து முகம் தந்து, சில சமரசங்களைச் செய்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.கட்சியும் பார்ப்பனிய நலனைக் கூட கொஞ்சம் நீர்த்துப்போகச் செய்துவிட்டன. அய்.பி.இல் இருந்த பார்ப்பனியர்கள் நிலை அப்படியல்ல. சங் பரிவாரங்களின் வேலைத் திட்டம் பற்றி அவர்கள் நினைவிற் கொண்டு முழு ஈடுபாட்டுடன் நாளுக்கு நாள் வேகமுடன் பணியாற்றிட முடிந்தது; அரசு அதிகாரிகளுக்கு இவர்களிடமிருந்த பயபக்தியே இதற்குக் காரணமாக இருந்தது. படிப்படியாக ஆர்.எஸ்.எஸ்.சின் சிப்பாயாகவும் மனச்சாட்சியின் பாதுகாவலர் போன்றும் அய்.பி. ஆகிவிட்டது. அய்.பி.இல். உள்ள பார்ப்பனிய அதிகாரிகளின் உணர்வும் ஈடுபாடும் கிடைத்திருக்காவிட்டால், ஆர்.எஸ்.எஸ்.சின் வேகம் மறைந்து போய்விட்டிருக்கும்; சமூகத்தின் மீதான அதன் பிடிப்பும் தளர்ந்து விட்டிருக்கும்.


ஆர்.எஸ்.எஸ்.சும், அய்.பி.யும் எந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கீழ்க் காணும் எடுத்துக்காட்டு மூலம் அறியலாம்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதி மன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, 22-.11-.2008 ஆம் நாளது தெகல்கா ஏட்டில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

இந்த உளவு நிறுவனத்தை மிக நெருக்கத்தில் இருந்து நான் பார்த்தேன். அவர்களுடன் அமர்ந்து இருந்தபோது ஓர் அரசு அலுவலகத்தில் இருப்பதாகவோ, ஒரு ஜனநாயக நாட்டில் வசிப்பதாகவோ என்னால் ஒரு போதும் நினைக்க முடியவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.


அய்.பி.யோடு ராவை ஒப்பிட இயலாது

ரா அமைப்புடன் அய்.பி. அய். ஒப்பிட்டு கூறத் தயாராக இல்லை; ஏனெனில் இரண்டுக்கும் தன்மையில் வேறுபாடுகள் உள்ளன; அதற்கான காரணங்கள் பின் வருமாறு:


1. விடுதலை பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு அன்றையப் பிரதமர் இந்தியா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட ரா அமைப்பு (RAW- ஆராய்ச்சி மற்றும் கூர்ந்தாய்வுப் பிரிவு) என்பதால், அய்.பி. போல அது பார்ப்பனிய மயமாக்கிட முயன்றும் முடியவில்லை. பார்ப்பனிய பாசம் பிடித்த அதிகாரிகள் பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து இதற்காக உழைக்க இயலாதவர்கள். எனவே அய்.பி. இல் உள்ளதைப் போன்று இதில் அவர்களால் சித்தாந்த ரீதியாக உள்ளே புகமுடியவில்லை.

2. முக்கியமாக பாகிஸ்தான், வங்காள தேசம், சீனா, சிறீலங்கா மற்றும் சில வெளி நாடுகள்பற்றி மட்டுமே ரா கவனம் செலுத்தக் கடமைப்பட்டு இருப்பதால், உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாட்டம் காண்பிக்க இயலாத நிலையில், அய்.பி. இல் இருப்பதைப் போல இங்கேயும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை.

3. பல்லாண்டுக் காலமாக இந்த இரு அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டு வளர்ந்துள்ள தொழில் போட்டி உச்சத்தை அடைந்து சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திட முயலும் மனப்பான்மை இருக்கிறது.

இதனால்தான், ராவில் நிறைய அளவுக்குப் பார்ப்பனிய அதிகாரிகள் இருந்தாலும் கூட, ஆர்.எஸ்.எஸ்.சும் மற்றைய அமைப்புகளும் அதனைத் தங்கள் சொந்த அமைப்பாகக் கருதாததால் அதன் மீது நம்பிக்கை வைத்திட முடியவில்லை; என்றாலும் சில சந்தர்ப்பங்களில் அம்மாதிரி நம்பிக்கை கொண்டதுண்டு. எனவே, அய்.பி. மட்டுமே, தனித்த வலுவுள்ள அமைப்பாக வளர்ந்துவிட்டது.

------------------------(தொடரும்) "விடுதலை” 13-1-2010

1 comments:

Unknown said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். அருமையான பதிவு வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை. உலகம் தனது இறுதி காலத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.