![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuuksQjHCoaPCtTNzCxMZ8-GvqYgD6gbKEKiJz6mJaVjXcxaLWQIbTrxNF57KEQqgzHRJLxT6OecqA1yIy4BwKX90_KkNfvIdoATm9oaHzWRxtiv2VevjLRNkkpJCGP2yEwwyFrDG10fr5/s400/250px-Octopus2.jpg)
ஆர்.எஸ்.எஸ். எனும் ஆக்டோபஸ், அதைப் போன்று சுமார் 4 மடங்கு தன் கொடிய கரங்களை நீட்டி இந்திய மக்கள் சமூகத்தைச் சீரழிக்க முயல்கிறது என்பதை அறிவோம். அண்மையில், ஓர் ஆய்வாளர் அதன் புதிய அவதாரத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
கணினித் துறையிலும் மென்பொருள் துறையிலும் இந்தியர்கள் பெரும் அளவில் பங்கேற்று உலக அளவில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பது பெருமைப்படத் தக்க விசயம். அந்த பெருமைக்குச் சிறுமை தேடும் முயற்சிகளில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு உள்ளது என்பதை ஆய்வாளர் மீரா நந்தா அம்பலப் படுத்தியிருக்கிறார். கடவுள் சந்தை (The God Market) என்ற நூலில் இத் தகவலைத் தந்துள்ளார்.
மென்பொருள் பணியாளர்களின் மத்தியிலும், மனதிலும், இந்துமத வெறியை விதைத்துப் பரப்புவதற்காகப் புதிய கிளை ஒன்றினை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ளது. இக்கிளையின் பொறுப்பாளர்கள் இத்துறையில் இருக்கும் பணியாளர்களுடன் அடிக்கடிச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிகளை உருவாக்கி இருக்கிறார்கள். கீ போர்டையே நாள் முழுவதும் கட்டி அழுது கொண்டிருக்காமல் வேறொன்றைக் கட்டி அழலாம் வாருங்கள் என்று பணியாளர்களைப் பக்தியின் பக்கம் இழுக்கிறார்கள். இதற்கு கர்மா முதலாளித்துவம் (Karma Capitalism) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதன் முக்கிய சூத்திரதாரி, நம் பாபநாசம் பார்ப்பனர் ரவிசங்கரன். ஆம், சிறீ சிறீ ரவிசங்கர்தான். திருடிவிட்டு, உதை வாங்கி, வீட்டை விட்டு ஓடிப் போனஅதே பார்ப்பனர்தான். தொலைக்காட்சி கடவுள் மனிதன் என அவதாரம் எடுத்து வாழும் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆளேதான். நாராயணமூர்த்திப் பார்ப்பனர் முதல் எல்லா முதலாளிகளும் 3 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி வாழும் கலையைக் கற்று வருமாறு தன் அலுவலர்களை இவரிடம்தான் அனுப்புகிறார்கள். ரவிசங்கர் செய்யும் பணி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆள் பிடிக்கும் பணிதான்.
இந்த வகையில் ரவிசங்கரின் சீடர்கள் எண்ணிக்கை 20 மில்லிய-னாம். அதாவது 2 கோடியாம்! விஷம் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, பார்த்தீர்களா! இந்த ரவிசங்கருக்கு 200 கோடி ரூபாய்க்கான சொத்து. இவருடைய ஆசிரமம் நூற்றுக்கணக்கான ஏக்கரில்! நிலம் உபயதாரர், பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலம்!
கடவுள் வியாபாரம்
19 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் விளைவாக விவசாயத்தையும் கிராமங்களையும் விட்டுவிட்டுத் தொழிலாளர்களாக நகரங்களை நாடி வந்தவர்கள் கடவுளைச் சாகடித்துவிட்டார்கள். ஆம், மதம் தன் பிடிப்பை நழுவவிட்டு, கடவுளின் கோயிலுக்குச் செல்வோரின் தொகை படிப்படியாகக் குறைந்து, அற்றே போய்விட்டது. ஆனால், தெற்கு ஆசியாவின் நிலைமை நேர் மாறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதிலும் இந்தியாவின் நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் தற்போது 15 லட்சம் பள்ளிக் கூடங்கள் உள்ளன. 75 ஆயிரம் மருத்துவ மனைகள் உள்ளன. ஆனால் 25 லட்சம் கோயில்கள் உள்ளன.
மக்கள் நிறையப் பேர் சென்று பார்க்கும் இடமாக தாஜ்மகால் இருந்து வந்தது. இப்போது, திருப்பதி கோயிலுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை 230 லட்சம். மலையில் இருக்கும் மற்றொரு கோயிலான வைஷ்ணவிதேவி கோயிலுக்குப் போகும் ஆள்களின் எண்ணிக்கை 172 லட்சம். கடந்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு மத நம்பிக்கை கூடி விட்டதாக ஓர் ஆய்வு 2007 இல் தெரிவித்தது. இந்துஸ்தான் டைம்ஸ் ஏடு நடத்திய ஆய்வு என்கிற காரணத்தால் முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது என்றாலும் ஓரளவு உண்மை இருக்கத்தானே, செய்யும்!
இதற்கு என்ன காரணம்? அரசுகளின் மதப் பிரச்சாரம், மத நடவடிக்கைகள், மதச் சடங்குகள் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மத ஆதரவு, அரசியலில் மதத்தைக் கலப்பது, மத அடிப்படையில் அரசியலை நடத்துவது போன்ற பல காரணங்கள். மதவெறிக் கட்சியான பா.ஜ.க. மட்டுமா இதற்குக் காரணம்? அல்ல, காங்கிரசுக் கட்சியும்தான் காரணம்.
அணைக்கட்டுகளும், தொழிற்சாலைகளும் தான் மக்களுக்கான கோயில்கள் என்றார் நேரு. அவரது கொள்கைகளைத் தூக்கி எறிந்தது போலவே, இதனையும் தூரத் தூக்கிப் போட்டுவிட்டனர் அவரது கட்சியினரும் அவரது குடும்பத்தினரும்!
ராஜஸ்தான் மாநிலத்தில், இந்து மதக் கோயில் பூசாரிகளுக்குப் பயிற்சி தரவும், கோயில்களைப் புதுப்பிக்கவும் ஆண்டுதோறும் 26 கோடி செலவிடப்படுகிறது. அரசு - கோயில் கூட்டுத் தொழில் இந்த மாநிலத்தில் கனஜோராக நடைபெற்று வருகிறது. யாகங்கள், ஜபதபங்கள் ஏராளம் நடத்தப்படுகின்றன. அரசுகளும் அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு நடத்துகின்றன. இவர்களின் கட்சி வளர வேண்டும். மக்கள் பாழாய்ப் போவதைப் பற்றி இவர்களுக்குக்கவலை இல்லை.
சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் போன்ற பெரும் கடவுள்களை வணங்கும் பழக்கம் குறைகிறதாம். சிறுசிறு தெய்வங்களையும், பெண் கடவுளச்சிகளையும் வணங்கும் பழக்கம் பெருகி வருகிறதாம். நாட்டார் வழிபாடு என்று சிலர் இங்கே கூறுவார்கள். சாலை ஓர சிறு தெய்வங்களைக் கண்டு நடுங்கி ஓடினேன் என்பார் வடலூர் ராமலிங்கர். இப்படிப்பட்ட பெண் கடவுளச்சிகளைத் தேடித் தேடிக் காட்டுவதற்கு ஒருவர், கும்பிட்டு வருவதற்கு ஒருவர் என இருவர் உண்டு, அண்ணா பெயரில் நடத்தப்படும் கட்சியில்!
பிறகு ஏன், தெற்கு ஆசியா பின்நோக்கிப் போகாது?
மீண்டும் பேஷ்வா ராஜ்யமா?
பாரதீய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவரைத் தேர்ந்து எடுத்துள்ளார்-கள். எப்பொழுது தேர்தல் நடந்தது என்றெல்லாம் கேட்காதீர்கள். இது என்ன தி.மு.கழகமா தேர்தல் நடத்துவதற்கு? எல்லாம் நியமனம்தான். நியமித்தது ஆர்.எஸ்.எஸ். அல்ல, என்கிறார் கட்காரி. நம்புங்கள்.
இவரைப் பரிந்துரைத்தது அத்வானியாம். சரி. நியமித்தது யார் என்பதுதானே, இங்கே உள்ள கேள்வியே! பரிந்துரைத்தவர் பெயரைச் சொல்லி விட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நெருப்புக் கோழிபோல தலையை மறைத்துக் கொண்டு முழுவதையும் மறைத்துக் கொண்டது போல் பேசுகிறார். இவரின் உடம்பு என்ன சிறியதா, நம் பார்வையில் படாமல் தப்பித்துக் கொள்ள?
சிபாரிசு செய்தவரைப் போலவே இவரும் பான்ட், சட்டை போடுபவராம். பழைய தலைவர் களைப் போல பைஜாமா குர்தா போட மாட்டாராம். இதுவெல்லாமா செய்தி?
பழைய தலைவர் ராஜ்நாத் சிங் உதவியாளர் ஒருவரைப் பக்கத்தி-லேயே வைத்திருப்பாராம். மிகமிக முக்கிய உதவியாளராம். இவர் பார்த்த மிகமிக முக்கிய வேலை என்ன தெரியுமா? ஜோசியம் பார்த்துச் சொல்லு வதுதான். சிறுநீர் கழிக்கக் கூட சிதான்சு திரிவேதிதான் நேரம் பார்த்துக் கூறவேண்டுமா? ஆம், சிதான்சு திரிவேதிதான் அந்த ஜோசியரின் பெயர். மூன்று வேதம் படித்தவர். நான்காம் வேதம் அதர்வண வேதத்தையும் ஏன் படிக்கவில்லை? படித்திருந்தால், மந்திர, தந்திரங்களும் அத்துபடியாயிருக்குமே!
மீண்டும் மராத்திப் பார்ப்பனர் தலைமைப் பொறுப்பில் வந்துள்ளார். பேஷ்வா ராஜ்யம் அமைக்கும் முயற்சியா?
இடஒதுக்கீடு இல்லையாம்!
புதுடில்லியில் இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 149 பேராசிரியர் பணியிடங்க ளுக்கான தெரிவு நடைபெறவேண்டும். இட ஒதுக்கீடு தராமல் இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று 30 பேர் மனு கொடுத்துள்ளார்கள். இவர்கள் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். பல்கலைக் கழக விளம்பரத்தில் இட ஒதுக்கீடு விகிதப்படி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி தந்து தீர வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தரலாம் என்று பல்கலைக் கழகச் செயற்குழு (Executive Council) 2007 ஆம் ஆண்டிலேயே தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. ஆனாலும் சிலர் எதிர்க்கிறார்கள். யார் இந்தச் சிலர்? அந்தச் சிலர்தான்.
தரம் போய்விடுமாம். போய்விட்டால் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள்இங்கு படிக்க வரமாட்டார்களாம். மற்றைய பிள்ளைகள் படிக்க இடம் இல்லாது போய்விடுமாம். என்னென்னவோ காக்கா- நரி கதை விட்டிருக்கிறார்கள். செயற்குழு உறுப்பினரும் நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவருமான பி.சாய்நாத் 30 பேர் முயற்சியை எதிர்க்-கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பாக எதையும் முடிவு செய்யமுடியாது என்று சுட்டிக் காட்டியுள்ளார். 11.1.2010 இல் நடந்த செயற் குழுக் கூட்டத்தில்!
கல்வியாளர் குழு (Academic
Council) என்ற பெயரில் 3 விழுக்காடு இனத்தைச் சேர்ந்த 30 பேர் எதிர்க்க முடியாது என்று பல பேராசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நேரு பல்கலைக் கழகம் முன்பு உலகின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது அந்த இடம் பறிகொடுத்தாகிவிட்டது. இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் நியமிக்கப்பட்ட கல்வியாளர்கள்தான் இருந்தனர்! இருக்கின்றனர்! தரம்தான் காணோம்! இதற்கு யார் காரணம்?
3 விழுக்காடைப் பிரதிபலிக்கும் 30 பேர் கூறுவார்களா?
0 comments:
Post a Comment