Search This Blog

12.12.09

தெலங்கானா போராட்டம் ஏன்?

மொழிவழி தேசியத்தையும்
தாண்டிய தெலங்கானா

‘‘ஒட்டு மொத்த ஆந்திராவின் மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் மட்டுமே கொண்ட ரெட்டிகளும், சவுத்ரிகளும் வளமான தெலங்கானா பகுதிகளில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அடிமையாக்கப்பட்டனர். இந்த ஆதிக்கத்தை எதிர்த்து தான் நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்தோம்.’’

------------------- புரட்சிப் பாடகர் கத்தார்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாக இருந்த தெலங்கானா இன்று புதிய மாநிலமாக உருவெடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வரலாற்றுத்துவம் மிக்க இந்த அறிவிப்பை அடுத்து தெலங்கானா பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.தனி மாநிலமாக தெலங்கானா உருவெடுக்க அது சந்தித்த பிரச்சினைகள் ஏராளம்.-அது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை:-

தெலங்கானா- இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர் அய்தராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திராவின் மாவட்டங்களான வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத்,மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் அய்தராபாத்தும் அடங்கும்.கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன. 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான அய்தராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் ஆங்கிலேய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமஸ்தானமாகவும் இது விளங்கியது.தெலங்கானா எப்போதும் ஆங்கிலேய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.

1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயே அரசிடமிருந்து விடுதலை பெற்றது.ஆனால் அய்தராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு 17.9.1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் அய்தராபாத் நாட்டை கைப்பற்றிக் கொண்டது

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் ‘தெலங்கானா புரட்சி’ என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது.

இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 மாவட்டங்கள் நிசாம் ஆட்சியின் கீழிருந்த அய்தராபாத் சமஸ்தானத்திலும், 12 சென்னை மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி சிறீராமுலு என்றவரின் போராட்டத்தின் விளைவாக சென்னை மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

டிசம்பர் 1953 இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணையத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு அய்தராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் அய்தராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் உடன்பாடு ஒன்றை அளித்தது.

1956ஆம் ஆண்டின் உடன்பாட்டின்படி தெலங்கானாவிற்கு உரிய பகிர்வுகள், உரிமைகள் மற்றும் சலுகைகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவாக பரவி தெலங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.[

1990 களில் பாரதிய ஜனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான ‘தெலுங்குத் தேசம்’ கட்சியினால் அதனைக் கைவிட்டதாகக் கூறிவிட்டது. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர்.அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலங்கானா ராஷ்ட்ர சமிதிஎன்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார். 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் சந்திரசேகரராவ் கட்சியும், (டி.ஆர்.எஸ்) கூட்டணி அமைத்து தனி தெலங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின.மத்திய அரசின் பொது குறைந்தபட்ச திட்டத்திலும் தெலங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.-அவ்வுறுதியின் அடிப்படையில் டி.ஆர்.எஸ். கூட்டணி அரசில் பங்கேற்றது.

இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டி.ஆர்.எஸ். கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு தெலங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது.-மார்ச் 2008இல் அனைத்து டி.ஆர்.எஸ்.சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் டி.ஆர்.எஸ். தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் 7-அய்யும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 அய் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. இதனிடையே தெலங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

நவ தெலங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் தெலங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.

2009 பொதுத் தேர்தல்களின் போது டி.ஆர்.எஸ். மற்ற எதிர்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.

புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய ‘பிரஜா ராஜ்யம்’ கட்சியும் தெலங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டிசம்பர் 29, 2009 முதல் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் தனித் தெலங்கானா கோரிக்கைக்காக சாகும்வரை பட்டினிப் போராட்டம் துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் வெடித்தது.20 க்கும் மேற்பட்டோர் தீக்குளித்தனர்.மாணவர்களின் கொந்தளிப்பு கொழுந்து விட்டு எரிந்தது. கடந்த 11 நாளும் தெலுங்கானா பகுதியே பற்றி எரிந்தது. சந்திரசேரராவின் உடல் நிலை மோசமடைய சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் குலையும் அபாயம் ஏற்பட்டது.இதனை அடுத்து மத்திய அரசு அவசர அவசரமாக 9.12.2009 இரவு கூடியது (அன்றே மூன்று முறை கூடினர்) தனித் தெலங்கானாவுக்கு ஒப்புதல் அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.

ஆந்திர மாநில சட்டப் பேரவையில் தனித் தெலங்கானாவ ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றுமாறு மத்திய அரசு கூறியது.

இதற்கிடையே தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கு ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் 105 பேர் (காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்) ராஜினாமாவை அறிவித்து விட்டனர். 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விலகல் கடிதம் கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில மேலவை உறுப்பினர்களும் (காங்கிரஸ் 34, தெலுங்குதேசம் 120) பதவி விலகியுள்ளனர்.

ஒரு திருப்பம் ஏற்பட்ட ஒரு சில நேரங்களிலேயே வேறு ஒரு மய்யப் புள்ளியை இப்பிரச்சினை எட்டியுள்ளது. தனி தெலங்கானா என்பது ஓர் உரிமைப் போராட்டம். புரட்சிப் பாடகர் கத்தார் தெரிவித்துள்ளதுபோல இது 68 ஆண்டு காலப் போராட்டமாகும். மூன்றரைக்கோடி மக்களுக்கான போராட்டமாகும்.

‘‘ஒட்டு மொத்த ஆந்திராவின் மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் மட்டுமே கொண்ட ரெட்டிகளும், சவுத்ரிகளும் வளமான தெலங்கானா பகுதிகளில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டார்கள். அதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அடிமையாக்கப்பட்டனர். இந்த ஆதிக்கத்தை எதிர்த்து தான் நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்தோம்." (‘நக்கீரன்’ பேட்டி 12.12.2009 பக்கம் 6) என்று ஆந்திர மாநிலப் புரட்சிப் பாடகர் கத்தாரின் கருத்து மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

தெலங்கானா போராட்டம் சில குறிப்பிட்ட உணர்வுகளை, உண்மை-களை வெளிப்படுத்தக் கூடியதாகும்.

திராவிடத் தேசியம் பழுதானது; மொழி வழித் தேசியம் பிரதானமானது என்று கூறி வருபவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்திலும் சரி, தெலங்கானாவிலும் சரி தாய்மொழி தெலுங்குதான். என்றாலும் மொழி வழி தேசியத்தின் அடிப்படையில் அவர்கள் ஒன்றுபடத் தயாராக யில்லை.

ஒரே மொழி பேசினாலும் தாங்கள் ஒடுக்கப்பட்டால், உரிமைகள் நசுக்கப்பட்டால் பொங்கி எழுந்து தனி மாநிலம் கோருவார்கள் என்பதற்கு தனித் தெலங்கானா போராட்டம் ஓர் எடுத்துக்காட்டாகும்.

மத அடிப்படையில் பாகிஸ்தானும், வங்காளதேசமும் ஒன்றுதான் என்றாலும், தாங்கள் ஒதுக்கப்படுகிறோம், உரிமைகள் மறுக்கப்படுகிறோம் என்று உணர்ந்த நேரத்தில் வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

மதத்தையும் தாண்டியது ஒடுக்குமுறையாகும்.

ஒரு மாநிலத்தையே இந்திய அரசு பாரா முகத்துடன் நடத்துகிறது; புறக்கணிக்கிறது என்று அம்மாநில மக்கள் கருதினால் வேறு வகையாகக் கூட சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்திய அரசு கவனிக்கத் தவறக் கூடாது.

இலங்கையில் நடந்தது - நடப்பது என்ன? மக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்கிற நோக்கில் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழர்களை ஒடுக்கிய காரணத்தாலும் புறக்கணித்ததாலும்தானே தனியீழக் கோரிக்க கிளர்ந்து எழுந்தது. வரலாறு தரும் இந்தப் பாடங்களை ஆள வந்தார்கள் சிந்திப்பார்களாக!.


தெலங்கானா போராட்டம் ஏன்?

1. தெலங்கானா பேரியக்கமானது சாரத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம். சாகுந் தருவாயிலுள்ள நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம். நிஜாம் நவாபின் மிகக் கொடுமையான ஆட்சிக்கெதிரான போராட்டம். ஜமீன்தாரர்கள், ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகள், நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான மாபெரும் போராட்டம். கொத்தடிமைத்தனத்திற்கும், மக்களிடமிருந்து பல வழிகளில் நிலங்களை பிடுங்கியதற்கும் எதிராக ஆரம்பித்த போராட்டம், நிலத்துக்கான போராட்டமாகவும் பன்சார், பன்சாரி நிலங்கள், நிலப்பிரபுக்களால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், நிலப்பிரபுக்களினுடைய நிலங்கள் ஆகியவற்றைப் பங்கிடுவதற்கான போராட்டமாகவும் முன்னேறியது.

2. இந்தப் போராட்டம், நிலப்பிரபுக்களுக்கெதிரான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. நிஜாம் அரசின் ஆட்சியிலிருந்தும், நேரு அரசாங்கத்தின் இராணுவ ஆட்சியிலிருந்தும் தெலுங்கானா மக்களை விடுவிக்கும் போராட்டமாகவும் இருந்தது. (நூல்: மாபெரும் தெலங்கானா போராட்டம்.)

-------------------------கலி.பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் -”விடுதலை” 12-12-2009

2 comments:

கிரி said...

தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி

குட்டிபிசாசு said...

//
டிசம்பர் 29, 2009 முதல் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் தனித் தெலங்கானா கோரிக்கைக்காக சாகும்வரை //

டிசம்பர் 29, 2009 ? ... தவற்றை சரி செய்யவும்.