Search This Blog

26.9.08

கன்னிகாஸ்திரிகளை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்துவது எதிர்வினையா?

எதிர்வினையா?

அடுத்த மதத்தினரைத் தாக்குவது இந்து மதத்தினரின் பண்பு இல்லை. ஆனால், இந்து மதத்தினர் பொறுத்தது போதும் என்று தீர்மானித்து விட்டார்கள். அதனால் சில இடங்களில் எதிர்விளைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

எதிர்விளைவுக்கு விமர்சனமும் அரசின் தரப்பிலான நடவடிக்கையும் தீவிரமாகயிருக்கிறது. ஆனால், அடிப்படை விளைவு குறித்து அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இந்துக்களின் மனவுணர்வு பாதிக்கப்படுகிறது.

(தினமணி, 24.9.2008).


- இவ்வாறு கூறியிருப்பவர் தமிழக பா.ஜ.க.வின் தலைவர் திரு. இல. கணேசன்.
அடுத்தவர்களைத் தாக்குவது இந்து மதத்தினரின் பண்பு இல்லையாம்; இதனைப் படிக்கும்போது வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது.

இந்து மதக் கடவுள்களின் கைகளில் இருப்பதே கொலைகாரக் கருவிகளும், சண்டை போடும் ஆயுதங்களும்தான்.
இந்துமதக் கடவுள்கள் சண்டைப் போட்டதாகவும், கொலைகள் செய்ததாகவும் புராணங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இந்துக்களின் புராணங்கள், இதிகாசங்கள் எனப்பட்டவையெல்லாம் முழுக்க முழுக்க சண்டைகளை மய்யப்புள்ளிகளாக வைத்துச் சுழலுபவைதான்.
இந்துக்களின் யாகப் புரட்டுகளையும், வருணாசிரமத்தையும் எதிர்த்துப் புதுப்பாதை காட்டப் புறப்பட்ட புத்த மார்க்கத்தை இதே இந்துக்கள் எந்த வகையில் அழித்தார்கள்? புத்த பிக்குகளைக் கொன்று தீர்த்தனர் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. திருவத்திபுரம் போன்ற கோயில்களில் பவுத்தர்களைக் கழுவில் ஏற்றிய சிற்பங்களை இன்றைக்கும் காணலாம்.
வருண தருமத்தினைக் காப்பாற்ற தண்டத்தை எடுத்துப் போராடலாம் என்கிறது மனு தர்மம்.
அவைகூட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கதைக்கப் படலாம். தற்காலத்தில் இந்துக்கள் என்ற போர்வையில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களின் நடவடிக் கைகள் என்ன?
இந்த வன்முறைக் கும்பலின் மீது விழும் குற்றச்சாற்றிலிருந்து தப்பிக்கொள்ள இந்துக்கள் அனைவருக்கும் இவர்கள்தான் பிரதிநிதிகள்போல முன்னே வந்து நின்று மக்கள் மத்தியில் ஒட்டுமொத்த இந்துக்களையும் இவர்களையும் ஒன்றோடு ஒன்று குழப்பி ஒரு மாயையை உருவாக்குகின்றனர்.
இந்த வன்முறைக் கும்பல்மீது விமர்சனம் வந்தால், அதனை ஒட்டுமொத்தமான இந்துக்கள் மீதான விமர்சனமாக குற்றச்சாற்றாக மாற்ற முயலுகிறார்கள்.

உண்மையில் இந்துத்துவா என்ற போர்வையில் கலவரங்களை, வன்முறைகளை இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் மீது தூண்டுவது இந்த சங் பரிவார்க் கும்பலே தவிர மற்ற இந்துக்கள் அல்லர் என்பதுதான் உண்மை!


இன்றைக்கு நாட்டின் பல மாநிலங்களிலும் கலவரங்கள் வெடிப்பதற்குத் தொடங்கிக் கொடுத்தவர்கள் இந்த சங் பரிவார்க் கும்பல்தானே! 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதியை பட்டப் பகலில் பகிரங்கமாக இடித்து நொறுக்கிய பெருங்குற்றவாளிகள் இவர்கள்தானே!

இவர்களா எதிர்வினைகளைப்பற்றிப் பேசுவது? அந்தக் கொடுஞ்செயல்களின் விளைவாக பல இடங்களில் எதிர்வினைகள் ஏற்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர - இவர்களின் செயல்களை எதிர்வினை என்று சொல்லவே முடியாது.

பொறுத்ததுபோதும் என்று இந்து மதத்தினர் தீர்மானித்து விட்டனர் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. இல. கணேசன் கூறுகிறார். இதன்மூலம் இவர்கள் மேற்கொண்டுவரும் வன்முறைகளுக்கு பகிரங்கமாக வக்காலத்து வாங்குவது மட்டுமல்ல - மறைமுகமாகக் கலவரங்களை, வன்முறையைத் தூண்டும் ஒரு மோசமான வேலையில் இறங்கியுள்ளார். இவரின் இந்த அறிக் கையை காவல்துறை கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க் கிறோம்.
சங் பரிவார்க் கும்பலின் ஒரு பிரிவான விசுவ இந்துபரிசத் என்ன செய்கிறது?

திரிசூலங்களைப் பகிரங்கமாக வழங்குகிறது. அந்தத் திரிசூலத்தில் உள்ள ஒரு முனை கிறித்துவர்களையும், இன்னொரு முனை முசுலிம்களையும், மூன்றாவது முனை மதச்சார்பின்மை பேசும் இந்துக்களையும் கிழிக்கும் என்று பச்சையாக வன்முறை யைத் தூண்டும் வகையில் பேசுகிறார்களே - இதற்குப் பெயர் எதிர்வினையா? வலிந்து போய் தாக்கும் வன்முறையா?

பெண்கள் உள்பட துப்பாக்கிப் பயிற்சியைக் கற்றுத் தருகிறதே - சங் பரிவார். எதற்காக, எந்த நாட்டின்மீது படையெடுக்க?

அப்பாவி கன்னிகாஸ்திரிகளை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்துவது எதிர்வினையா? முஸ்லிம் பெண்களின் கருப்பைகளில் இந்துக்களின் கருக்கள் ஜெனிக்கட்டும் என்று பேசுகிற பெண் பேச்சாளர்கள் திரு. இல. கணேசன் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தானே!

எந்தத் தைரியத்தில் எதிர்வினை என்ற ஆயுதத்தை ஏந்தி வருகிறார்கள்? தமிழின இளைஞர்கள் இவர்களை அடையாளம் காணவேண்டும். பகிரங்கமாக வன்முறைக்கு வக்காலத்து வாங்கும் இத்தகையவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு தயங்கக்கூடாது - கூடவே கூடாது!

-------------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 25-9-2008

0 comments: