Search This Blog

18.9.08

‘பாரதியின் உயிர் மூச்சு தமிழல்ல, ஆரியமே’




பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா?” என்பதைக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய முற்படுவோம்.

இவருடைய எழுத்துப் பணி (மொழிபெயர்ப்பாளராக) 1904 இல் சுதேசமித்திரன் இதழில் தொடங்குகிறது. இவ்விதழில் “வந்தே மாதரம்” என்னும் தலைப்பில், இவர் எழுதின ஆரியச் சார்பான பாடல்களைக் காணலாம்.

“ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டஎம்
அன்னையின் மீது திகழ்
அன்பெனு மேன்கொடி வாடிய காலை
அதற்குயிர் தந்திருவான்

--- --- --- --- ---

வீரிய ஞானம் அரும்புகழ் மங்கிட
மேவிய நல் ஆரியரை
மிஞ்சி வளைத்திடு புன்மை..

--- --- --- --- ---

வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே” (1)


இவர், இதே சுதேசமித்திரனின் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில்,

“ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே

--- --- --- --- ---

வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய்ப்
பேதக் கதைகள் பிதற்றுவாரிந் நாட்டினிலே” (2)


எனக் கூறி, இங்கு “ஆரியர்கள் வாழ்ந்த நாடு அற்புத நாடென்றும், அவர் எழுதிய வேத உபநிடதங்களெல்லாம் மறைந்து போயினவே” என்றும் மிகவும் வருத்தப்படுகிறார்.

இதே ஆண்டில், இவர் எழுதிய “சத்திரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது” என்ற பாடலில்,

“வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்.

--- --- --- --- ---

பிச்சை வாழ்வுதந்த பிறருடைய ஆட்சியில்
அச்சமுற் றிருப்போன் ஆரியன் அல்லன்,
புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு
அன்பிலா திருப்போன் ஆரியன் அல்லன்.
மாட்டுதீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்
ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்
யாரிவர் ஊர்அவர் யாண்டேனும் ஒழிக!” (3)


என்று சிவாஜி, தன் படைவீரர்களுக்கு இசுலாமியரின் கொடுமையைக் கூறியதாக, பாரதி எடுத்தியம்புகிறார். இங்கு, ‘அன்பிலாதிருப்போன் ஆரியன் அல்லன்’ என்று சிவாஜி கூறியதாகப் பாரதி கூறுகிறார். ஆனால் உண்மையிலேயே ஆரியர்கள் அன்புடையவர்களாக இருந்தால் சிவாஜிக்கு ஏன் முடிசூட்ட முன்வரவில்லை? அவர் சூத்திரன் என்பதால் தானே! சிவாஜி ‘போன்சலே’ என்ற சூத்திர சாதியில் பிறந்ததால், ஆரியப் பார்ப்பனர்கள் சிவாஜி முடிசூட்டிக் கொள்ளப் பெரும் தடையாயிருந்தனர். பிறகு சிவாஜியிடம் பெரும் தொகையாகப் பணமும் செல்வமும் பெற்றுக் கொண்டபின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள ஒப்புதல் தந்தனர். (4) அப்படி இருக்கும்போது ஆரியர்கள் அன்புடையவர்கள் என்று சிவாஜி எப்படிக் கூறியிருப்பார்?

“ஆரிய பூமியில்
நாரியரும் நர
சூரியரும் சொலும்
வீரிய வாசகம் வந்தே மாதரம்”


என்று 1907 இல், சுதேசமித்திரனில் இவர் எழுதிய “வந்தே மாதரம்” பாடலில் கூறுகிறார். இங்கு இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்கிறார்.

“அன்றொரு பாரதம் ஆக்க வந்தோனே
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே
வெற்று தருந்துணை நின்னருள் அன்றோ?

--- --- --- --- ---

ஆரிய நீயும் நின்அற மறந்தாயோ?
வெஞ்செயல் அரக்கரை விரட்டிடுவோனே
வீரசிகாமணி, ஆரியர் கோனே” (5)
(இந்தியா, 1908)


என்று பாரதியார் “ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்” என்னும் பாடலில் கூறுகின்றார். இங்கு யாதவ குலத்தில் பிறந்த சூத்திரக் கடவுளை ஆரியர் கோன் என்கிறார்.

பாரதியார் தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பைச் “செந்தமிழ் நாடு”, “தமிழ்” ஆகிய தலைப்புகளில்

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

--- --- --- --- ---

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்” (6)


என்று தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் புகழ்ந்து பாடியுள்ளார். இப்பாடல்களை இயல்பான தன்னுணர்ச்சியுடன் பாரதி பாடவிலை என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

1915இல் சுதேசமித்திரனில் ‘தமிழ், தமிழ்நாடு’ முதலியவற்றின் சிறப்பைக் குறித்து, எழுதும் சிறந்த கவிதைக்கு மதுரைத் தமிழ்ச்சங்கம் சார்பில் பரிசளிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இதைப் பாரதியார் பார்த்தும் பார்க்காததுபோல் விட்டுவிட்டார். ஆனால் இதைப் பார்த்த பாரதியின் புதுவை நண்பரான வாத்தியார் சுப்பிரமணி அய்யரும் மற்றும் சில நண்பர்களும் விளம்பரத்தைக் கூறி, கவிதை எழுதும்படி வேண்டினர். அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே இப்பாடல்களைப் பாரதியார் எழுதியதாக பாரதியின் நண்பர் எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு கூறியுள்ளார். (7)

இதே கருத்தைப் பாரதிதாசன் அவர்களும் கூறியுள்ளார்.

“தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப் பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார்
தேன்போற் கவியொன்று செப்புகநீர் என்றுபல
நண்பர் வந்து பாரதியாரை நலமாகக் கேட்டார்

--- --- --- --- ---

செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே என்றெழுதித்
தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால் எழுதி முடித்தார்” (8)


என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறுகிறார். இவ்வாறாகப் பாரதி நண்பர்களுடைய வேண்டுதலாலும், கட்டாயத்தாலும் தான், “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலையும், “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலையும் எழுதினார். இந்தப் பாடல்களுக்காக அவருக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 அளித்தது. (9)

பாரதியார் பரிசுப் போட்டிக்காக மேலே கண்ட பாடலை எழுதும்போது மட்டும் தமிழையும் தமிழ்நாட்டையும் மிகவும் உயர்வாக எழுதுகிறார். ஆனால் அதே ஆண்டில் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்” என்னும் தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” (10)


என்று பாரதி கூறுகிறார். இங்குத் தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் அவர் ஆரியம் தான் உயர்ந்த மொழி என்றும் கூறுகின்றார். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதியாருக்குத் தமிழ்மொழி உயர்ந்த மொழி என எழுத மனம் வரவில்லை போலும்.

பாரதியார் எழுதிய கவிதைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், கால வரிசைப்படியாகத் தொகுத்து 700 பக்கங்கள் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றைப் பற்றி 11 பக்கங்கள் மட்டுமே உள்ளன. (11). இந்தப் பதினோரு பக்கங்களிலும் கூடத் தமிழை, தமிழ்நாட்டை உயர்த்திச் சொல்ல மனம் வராமல் ஆரியத்தையே உயர்த்திக் கூறுகிறார் பாரதியார்.

பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.” (12)

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” (13) என்கிறார் பாரதியார்.

இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி - இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் -இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. (14)

இதில் திருக்குறள், சிலப்பதிகாரம், ஆண்டாள் திருமொழி முதலிய தமிழ் இலக்கியங்களை ஆரியச் செல்வம் என்கிறார் பாரதி. மேலும் பவுத்தர்களின் எல்லோரா ஓவியங்கள், தஞ்சை மராட்டியர்களின் தஞ்சை மகால், சாஜகானின் தாஜ்மகால் முதலியவற்றையும் ‘ஆரியச் செல்வம்’ என்கிறார். மற்றவர்களின் உழைப்பில் விளைந்த கலை, இலக்கியம் முதலியவற்றை ஆரியச் செல்வமாகப் பாரதி உரிமை கொண்டாடுவது அவரின் அளவு கடந்த ஆரிய வெறியைக் காட்டுவதாகவே அமைகின்றது.

‘உலகில் உள்ள எல்லா நாகரிகங்களுக்கும் மூலமாக இருப்பது ஆரிய நாகரிகமே’ என்கிறார் பாரதியார்.

“ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், பிற இடங்களிலும் காணப்படும் நாகரிகங்களுக்கெல்லாம் முந்தியதும் பெரும்பான்மை மூலாதாரமுமாக நிற்பது ஆரிய நாகரிகம். அதாவது பழைய சமஸ்கிருத நூல்களிலே சித்தரிக்கப்பட்டு விளங்குவது. இந்த ஆரிய நாகரிகத்துக்குச் சமமான பழமை கொண்டது தமிழருடைய நாகரிகம் என்று கருதுவதற்குப் பலவிதமான சாஷ்யங்களிருக்கின்றன” (15) என்கிறார் பாரதியார். ஆகவே தமிழர் நாகரிகம் ஆரியத்தை விட உயர்ந்த நாகரிகம் என்று கூறுவதற்கு இவருக்கு மனம் வரவில்லை.

தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்தாகும். கால்டுவெல் அவர்களின் ஆய்வு நூலான ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் முதல் பதிப்பு 1856 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பும் பாரதியின் காலத்திலேயே 1915 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பாரதி கால்டுவெல் அவர்களின் நூலைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி போன்ற சமஸ்கிருதப் பற்றுக் கொண்ட பார்ப்பனப் பண்டிதர்களைக் குறித்து கால்டுவெல் கூறுவதைப் பார்ப்போம்.

‘சமஸ்கிருத துணை வேண்டாத திராவிடத் தனித்தன்மை’ என்ற தலைப்பில் கால்டுவெல் கூறுகிறார்: “திராவிட மொழிகள் வட இந்திய மொழிகளிலிருந்து பற்பல இயல்புகளில் வேறுபடுகின்றன. அவ்வாறிருந்தும் அத்திராவிட மொழிகள், வட இந்திய மொழிகளைப் போலவே, சமசுகிருதத்திலிருந்து பிறந்தவையாகச் சமசுகிருதப் பண்டிதர்களால் கருதப்பட்டன. தாங்கள் அறிந்த எப்பொருளுக்கும் பார்ப்பன மூலம் கற்பிக்கும் இயல்பினர் அப்பண்டிதர்கள்.” (16)

1915 இல் சூலைத் திங்களின் ‘ஞானபாநு’ என்னும் இதழில் பாரதியார் தமிழில் எழுத்துக் குறை என்னும் தலைப்பில் “சமஸ்கிருதத்தில் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களுக்கு வர்க்க - எழுத்துகள் இருப்பது போல், தமிழில் வர்க்க எழுத்துகள் இல்லாததால், தமிழில் எழுத்துக் குறையுள்ளது” (17) என்கிறார்.

ஒரு மொழியிலுள்ள ஒலிகள், அதற்குண்டான குறியீடுகள் மற்ற மொழியில் இல்லாதிருந்தால், அது அம்மொழியின் குறைபாடு ஆகாது. ஏனெனில் ஒலிப்பு, ஒலிக்குறியீடு என்பவை அம்மொழிக்கே உரிய இயற்கையான இயல்புகள் ஆகும். ஆகவே சமசுகிருத வர்க்க எழுத்துகள் தமிழில் இல்லை என்று பாரதியார் குறைப்பட்டுக் கொள்வது ஏற்புடையது ஆகாது.

பாரதியின் இக்கூற்றை அறிஞர் வ.உ.சி. அவர்கள் 1915 செப்டம்பர்த் திங்களில் அதே ‘ஞானபாநு’ ஏட்டில் கடுமையாக மறுத்துக் கூறியுள்ளார். “தமிழில் எழுத்துக் குறை என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சமசுகிருதத் சார்புடையவராகவும் தமிழ் இலக்கண இலக்கியங்களைப் படிக்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொல்காப்பியம் என்னும் உன்னத நூலையும், அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் கட்டாயம் படிக்க வேண்டும்” என்கிறார். (18)

தமிழில் எழுத்துப் பற்றாக்குறை என்பதைக் காரணம் காட்டி, அதையே வாய்ப்பாகக் கருதி, வேண்டுமென்றே தமிழில் வடமொழிச் சொற்களை அளவுக்கு அதிகமாகக் கலந்து எழுத ஆரம்பித்தார் பாரதியார். இதை அவருடைய பிற்கால எழுத்துகளில் காணலாம்.

“மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களூர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலீஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்தியா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்தபானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா? இந்த ரிஷிகளெல்லாரும் என்ன பிராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதிப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.” (19)

இது 1917 சூன் 21 இல் சுதேசமித்திரன் ஏட்டில் ‘ப்ராயச் சித்தம்’ என்னும் தலைப்பில் பாரதியார் எழுதிய கதையில் ஒரு பகுதி. (பாரதியார் தன் பெயரைக் கூட ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார்.)

இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

“1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” (20) என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.

பாரதியாருக்குத் தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு இல்லை என்பதைப் பற்றி அவருடைய நண்பர் வ.ரா.குறிப்பிடுவதாவது : “தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த இலட்சணங்கள் விநோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான இலட்சணம் என்றே எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்தச் சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழி மூவிடத்து மாகும்

இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிக்கூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவ்வளவு வெறுப்புக் கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்யோகம் பார்த்தார் என்பது குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.”
(21)

ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் மாலை நேரத்தில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதியாரை அழைத்திருந்தனர். பாரதியாரும் ஒப்புக்கொண்டு பேசவந்தார். அங்கு ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’ என்று மாரியைப் பற்றியே இருபது நிமிடங்கள் கையைக் காலை ஆட்டிப் பாடிக்கொண்டு இருந்தார். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசும்படி கூறினார். “நான் குறள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை” (22) என்று கூறி விட்டு கூட்டம் முடிந்து விட்டதாகப் பாரதியே அறிவித்து விட்டு வெளியேறி விட்டார் என்று சுத்தானந்த பாரதி கூறியுள்ளார்.

இதே காலக்கட்டத்தில் திருக்குறளைப் பற்றி வ.உ.சி. என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதையும் நான் தெரிந்து கொள்ளல் நலம்.

“தமிழர்களெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்தில்லாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை. நேசிப்பதுமில்லை” (23) கோயமுத்தூர் சிறையில் வ.உ.சி. தம்மைச் சந்தித்த பரலி சு.நெல்லையப்பரிடம் இவ்வாறு கூறியுள்ளார். இவருடைய தமிழ்ப் பற்றுதான் என்னே!

இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவர் பாரதியே! 1906லேயே இக்கருத்தை இவர் வலியுறுத்தியுள்ளார். 15.12.1906 இந்தியா வார ஏட்டில், ‘இந்தி பாஷைப் பக்கம்’ என்னும் தலைப்பில் இவர் கூறுவதாவது: “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க ஹிந்திப் பாஷையை அப்பியஸிக்க என்ன அவசியம் இருக்கிறது என்று (என்பதை?) சொல்லுகின்றோம். இந்தியா பலவித பிரிவிகளுடையதாய் இருந்த போதிலும் உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு நாடுகளிலே வெவ்வேறு பாஷைகளிருந்த போதிலும் முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர் தெலுங்கும் ஹிந்தியும், பெங்காளத்தார் பெங்காளியும் இந்தியும் என இவ்வாறே எல்லா வகுப்பினரும் அறிந்திருப்பார்களானால் நமக்குப் பொதுப்பாஷை ஒன்றிருக்கும். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக்கொள்ளலாம்.” (24)

இது அன்றைய காங்கிரசின் கொள்கை. திலகரின் பேச்சைக் கேட்டே பாரதி இவ்வாறு எழுதியுள்ளார். இந்தியைப் பொதுமொழி என்று 1906 இல் கூறிய பாரதி, 1920 இல் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டு, சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று கூறுகிறார். சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி கூறுவதாவது:

“இந்தியாவுக்குப் பொது பாஷையாக ஹிந்தியை வழங்கலாமென்று ஸ்ரீமான் காந்தி முதலிய பல பெரியோர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் பாரத தேச பக்த சிரோ ரத்தினமென்று கூறத்தக்க ஸ்ரீமான் அரவிந்த கோஷ் முதலிய வேறு பலர் ஸமஸ்க்ருத பாஷையே இந்தியாவுக்குப் பொது பாஷையென்றும், நாம் அதைப் புதிதாக அங்ஙனம் சமைக்க வேண்டியதில்லையென்றும், ஏற்கனவே ஆதிகாலந் தொட்டு அதுவே பொதுபாஷையாக இயல் பெற்று வருகிறது என்றும் சொல்லுகிறார்கள்.

--- --- --- --- ---

ஸம்ஸ்கிருத பாஷையில் படித்துத் தேர்ச்சி பெறுதல் கடினமானதால் அதைத் தேச முழுமைக்கும் பொதுப் பாஷையாகச் செய்தல் சவுகரியப்படாதென்று சிலர் சொல்லுகிறார்கள். பழைய வழிப்படி படிப்பதனால் இவர்கள் சொல்வது ஒருவாறு மெய் எனலாம். ஆனால் இக்காலத்தில் அந்நிலைமை கடந்து சென்று விட்டது. இப்போது பண்டாரகர் என்னும் பம்பாய்ப் பண்டிதர் உபாயத்தியாயர் இல்லாமலே ஸம்ஸ்கிருத பாஷையை ஏழெட்டு மாசங்களில் கற்றுக் கொள்ளும்படியான ஆரம்ப நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் முதல் புஸ்தகம் ஏற்கனவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவ்வழியை இன்னும் சுலபமாய்ச் செய்யலாம். பஞ்ச தந்திரத்தை அர்த்தத்துடன் மூன்று முறை உருப்போட்டால் எவனும் தடதடவென்று தட்டில்லாமல் ஸம்ஸ்க்ருதம் பேசக்கூடிய திறமை பெற்று விடுவான்” (25) எனப் பாரதியார் விளக்கம் தந்து சமசுகிருதம் பொதுமொழியாக வேண்டும் என்று கூறுகிறார்.


பாரதியார் சமசுகிருதத்தின் மீது கொண்ட வெறியினால் சப்பானில் சமசுகிருதம் எப்பொழுது எவ்வாறெல்லாம் பரவியது என்பதைத் தன்னுடைய ‘பருந்துப் பார்வை’ என்னும் கட்டுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். (26) உலகில் சுமேரியா, சப்பான், கொரியா, அங்கேரி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் மொழிகளில் தமிழ்மொழிக் கூறுகள் ஏராளமாகக் கலந்துள்ளன. எங்கெல்லாம் தமிழ் பரவியிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், சமசுகிருதம் எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை ஆய்வு செய்கிறார். அறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ் மொழியும் சப்பான் மொழியும் மரபு ரீதியாகவே உறவுள்ளவை என்பதைத் தம் ஆய்வின் (27) மூலம் நிறுவியுள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகாறும் நாம் அறிந்தவற்றில் பாரதியினுடைய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் முதலானவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன. இவருடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், அதைப் பற்றி உயர்த்திப் பேசாமல் ஆரிய மொழியே சிறந்த மொழி, அம்மொழியே இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆகவே ‘பாரதியின் உயிர் மூச்சு தமிழல்ல, ஆரியமே’ என இவ்வாய்வின் மூலம் காண்கிறோம்.


அடிக்குறிப்பு

1. பாரதியார் கவிதைகள், சந்திரகாந்தன் (தொ.ஆ) ப.34, நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை-1994.

2. மேற்படி நூல் ப.31

3. மேற்படி நூல் ப.31

4. மாபெரும் புரட்சி வீரன் சிவாஜி, டென்னிஸ்கின் கெய்டு, நேஷனல் புக் டிரஸ்ட், ப.35, தில்லி 1966

5. பாரதியார் கவிதைகள், ப.57-58

6. பாரதியார் கவிதைகள், ப.110-111

7. ரா.அ.பத்மநாபன் (தொ.ஆ) பாரதியைப் பற்றி நண்பர்கள், ப.262-264, வானதி பதிப்பகம், சென்னை, 1982

8. பாரதிதாசன் கவிதைகள், ப.169, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1991.

9. கோ.கிருட்டிணமூர்த்தி, பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, ப.36, த.நா.ஆய்வுக்கழகம், சென்னை, 1991.

10. பாரதியார் கவிதைகள், ப.113

11. பாரதியார் கவிதைகள், ப.110-120

12. பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981

13. மேற்படி நூல் ப.264

14. மேற்படி நூல் ப.54

15. பாரதியார் கட்டுரைகள் ப.264

16. கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ப.60, தமிழாக்கம் புலவர் கா.கோவிந்தன், வள்ளுவர் பண்ணை, சென்னை, 1959.

17. ஆ.இரா.வேங்கடாசலபதி (தொ.ஆ) வ.உ.சியும் பாரதியும், ப.124 மக்கள் வெளியீடு, சென்னை, 1994.

18. மேற்படி நூல் ப.128, 129

19. பெ.தூரன், பாரதி தமிழ், ப.264, வானதி பதிப்பகம், சென்னை, 1986

20. க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள், ப.180, நி.செ.பு.நி. 1984

21. வ.ரா.மகாகவி பாரதியார், ப.28, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983

22. சுத்தானந்த பாரதி, கவிக்குயில் பாரதியார், ப.74,75, தெ.இ.சை.சி.நூ.ப.க., சென்னை, 1981

23. என்.சம்பத், பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ப.244, பப்ளிகேஷன்ஸ் டிவிசன் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசு, 1995

24. சி.எஸ்.சுப்பிரமணியம், பாரதி தரிசனம், ப.443,444 நி.செ.பு.நி., சென்னை, 1975

25. ரா.அ.பத்மநாபன் (தொ.ஆ.) பாரதி புதையல் பெருந்திரட்டு, ப.274,275

26. பாரதியார் கட்டுரைகள், ப.430, வானதி பதிப்பகம், சென்னை, 1982.

27. Dr.Pon.Kothandaraman ‘A Comparative Study of Tamil and Japanese’, P.53. International Institute of Tamil Studies, Madras, 1994

-----------வாலாசா வல்லவன் எழுதிய ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ நூலின் முதல் அத்தியாயம் பக்கம் 1-12


------------------ நன்றி: கீற்று இணையதளம்

2 comments:

சேராதே said...

எல்லோரையும் ஒதுக்கிவிட்டால் இந்திய சுதந்திர போரில் ஒதுக்கிவிட்டால் கலைஞரும் வீரமணியும் மட்டுமே நமக்கானவர்கள்

தமிழ் ஓவியா said...

பாடதியைப் பற்றி ஆதாரங்களுடன் எழுதியுள்ள இக்கட்டுரைக்கு, பாரதி அப்படியல்ல என்று தங்களிடம் ஆதாரம் இருந்தால் மறுத்து எழுதலாம்.. பொத்தாம் பொதுவாக கருத்துச் சொல்வது என்பது தேவை இல்லாதது. அதில் கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வம்புக்கு இழுப்பது சரியல்ல.