Search This Blog

1.9.08

ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணரல்லாதவர்கள் தீண்டின குளத்து ஜலத்தை ஒருங்கே இறைத்து அதில் ஜனிக்கும் ஊற்று நீரை எடுத்துப் பானஞ்செய்வது அதிக கஷ்டமானதால் அது தீட்டல்லவென்றும் முகந்துவைத்த குடத்தின் ஜலத்தை அச்சூத்திரர். தீண்டின் அதைக் கொட்டிவிட்டு மீண்டும் சுலபத்தில் முகந்து கொள்ளக் கூடுமாதலால் அதைமட்டும் தீட்டெனவும் பிராமணர் கூறுகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

நியாயாதிபதிகளால் குற்றவாளிகளென்று தீர்மானிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படும் பிராமணர்களென்போர் சிறைச்சாலைகளில் தாங்களுண்ட பாத்திரங்களை, நாடோறும் அலம்பி அவற்றிலேயே போஜனமுண்டு வருவதும், அவற்றை யெச்சாதியார்த் தீண்டினும் அவற்றிலேயே போஜன முண்பதும் தீட்டல்லவா? சிறைச் சாலைகளினின்று விடுதலையான பின் அப்பிராமணர் சமையல் செய்யும் பாத்திரங்களைப் பிராமணரல்லாதவர்கள் பார்க்கின், பார்த்த மாத்திரத்தில் அவை தீட்டாயினவெனக் கூறி அவற்றை உடைத்தெறிய வேண்டுமாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணர் தாம் கருதிய விடத்திற்குச் செல்ல இரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட் வாங்கும்போது பறையரென்றும், சக்கிலியரென்றும் பாராமல் ஒருவர் மீதொருவர் நெருக்கவும், ஒருவர் வேர்வை ஒருவர்மீது வடியவும் மிக்க வருத்தத்துடன் நின்று டிக்கட்டு வாங்கிக் கொண்டு வண்டியின் மீது உட்கார்ந்தபின் அப்பிராமணர் தம்பக்கம் உட்கார்ந்துள்ள அப்பறையர் சக்கிலியரை நோக்கி அடா ஈனஜாதிப்பயலே மேலே விழாதடா, தொடாதடா எனத் தமது ஜாதியினை மேம்படுத்திக் கொள்வதை நாம் பன்முறையும் பார்த்து வருகிறோமே. ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

கடவுளைச் சொப்பனத்தில் பார்ப்பவர்களாகிய பிராமணர் தாங்கள் இருப்புப்பாதை மார்க்கமாக நெடுங்தூரஞ் செல்ல நேரிட்டபோது புளியோரை ததியோதனம் முதலிய போஜன வகைகளுடன் வண்டியேறிச் செல்லுகையில் தம் அருகில் உட்கார்ந்திருக்கும் எச்சாதியாரையும் கவனியாமல் தாம் கொண்டு வந்த போஜனத்தை யுண்பதை மற்றெச் சாதியார் தீண்டியும் பார்த்துமிருந்தும் போஜனமுண்டு - தம் மனைக்கு சென்றபின் தாமுண்ணும் போஜனத்தை காவலர்களும் பார்க்கலாகாதென்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணர் தாம் ஸ்நானஞ்செய்தபின் ஸ்நானஞ் செய்யா திருக்கும் தம்மினத்தவரே தம்மைத் தீண்டலாகாதென இதர ஜாதியாரிடத்தும் வாசகம் படித்து தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளும் விவேகிகளாகிய பிராமணரில் திரளான பெயர் எவர்களிலும் இழிகுலத்தாராகிய விலைமாதர் மனைகளிலும் ஓட்டல்களிலும் மது மாமிசாதிகளுடன் போஜனமுண்டு வருகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

சமையல் செய்யும் மட் பாத்திரங்கள் மிகவும் அற்பக்கிரய முடையன ஆதலால், அவை பிராமணரல்லாதவர்களால் பார்க்கப்படுவதினாலேயே தீட்டாயினவென பெருமை சொல்லிக் கொண்டு அவற்றை உடைத்தெறிய வேண்டுமென மொழிகின்றனர். மட்பாத்திரங்களிலும் விலை மிகுந்த செப்புப் பித்தளை பாத்திரங்களோ சூத்திரர் தீண்டத் தீட்டாயினும் அவற்றை உடைத்தெறியாது, புளிசாம்பராதிகளால் தேய்த்து, அலம்புவதே போதுமானதாம். அவற்றிலும் விலையேறப் பெற்ற வெள்ளிப் பாத்திரங்கள் சூத்திரரால் தீண்டப்படினும் புளிசாம்பராதிகளால் தேய்க்கின் தேய்ந்து நஷ்டமாகு மெனக் கருதி ஜலத்தினால் அலம்புவதே போது மெனவும், அதிலும் விலைமிகுந்த பொன் இரத்தினபாணங்கள் ஜலம் படுமாயின் அவற்றின் பளபளப்புப் போய் விடுமென வெண்ணி அவற்றிற்குத் தீட்டில்லையெனவும், வீதிகளிலும் கடைகளிலும் உத்தியோக சாலைகளிலும் ஜலம்தேடி அலம்பி வாங்க அனுகூலிக்கா திருக்கும் ரூபா, அணா, பைசாக்களும் ஜலம் பட்டவுடன் பயன் படாதழிந்துபோகும் நோட்டுகளுக்கும் முத்திரை காகிதங் களுக்கும், தீட்டில்லையாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

பிராமணரல்லாதவர்கள் தீண்டின ஜலத்தையும் தீண்டோ மென்று பெருமை படைத்துக் கொள்ளும் பிராமணரில் அநேகர் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், ஆடு மாடு கோழிகளின் மாமிசங்களால் செய்தனுப்பப்படும்பிஸ்கட் முதலிய தின்பண்டங்களையும், பிராந்தி உஸ்கி முதலிய மயக்கத் திராவகங்களையும் உண்ணுவதே சுகிர்தமாம். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

துரைத்தன வைத்திய கலாசாலையில் வைத்திய சாஸ்திரங் கற்றுப் பரீட்சையில் தேர்ந்து வைத்திய உத்தியோகத்திலமர்ந் திருக்கும் பிராமண வைத்தியர்கள் மூலம், பவுத்திரம், நீரடைப்பு முதலிய வியாதிகளில் வருந்தும் பிராமணரல்லாதவர்கள், பறையர், சக்கிலியர் முதலியவரின் வியாதிகளைப் பரிசோதித்தும், கத்தியால் வகுத்தும், கழுவியும், அவிழ்தப் பிரயோகஞ் செய்தும், பரிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே. ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!


- டி.என். அநுமந்து உபாஸகர் - "திராவிடன்" 17.8.1917

0 comments: