Search This Blog

1.9.08

தாழ்த்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்! -"இந்து" ஏடே தரும் திடுக்கிடும் தகவல்கள்

மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிகளில்
தாழ்த்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்!

19 பல்கலைக்கழகங்களில் 16 இல் ஒருவர்கூட இல்லை!

"இந்து" ஏடே தரும் திடுக்கிடும் தகவல்கள்


மும்பை, செப். 1- மத்தியப் பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடி மக்கள், ஆசிரியர்ப் பணிகளில் வஞ்சிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களை "இந்து" ஏடு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றைய "இந்து" ஏட்டில் (31.8.2008) ராஹி கெய்க் வார்ட் என்பவர் எழுதியுள்ளதாவது:

இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்த பின்னும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 19 மத்தியப் பல்கலைக் கழகங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 40 விழுக்காட்டிற்கும் மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. பல்கலைக் கழக மானியக் குழு அனுமதித்துள்ள 4,887 பணியிடங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன ஆசிரியர்கள் 629 பேர் மட்டுமே உள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பல்கலைக் கழக மானியக் குழு வட்டாரங்களின் 2007-08க்கான புள்ளிவிவரங்களின் அடிப்படை யில் இத்தகைய பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளன.

பனாரஸ் பல்கலைக்கழகத்தின் நிலை?

155 தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களும், 74 பழங்குடியினப் பேராசிரியர்களும் இருக்க வேண்டிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் முறையே 86 மற்றும் 24 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால் அதில் இட ஒதுக்கீட்டு நடைமுறை இல்லை. என்றாலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பேராசிரியர் கள் 193 பேர் தேவை எனப் பட்டியலிடப்பட்டுள்ள போதும், இந்த இனங்களைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூட இப்பல்கலைக்கழகத்தில் இல்லை.

மத்திய அரசின் விதிப்படி, தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடி இனத்தவருக்கு 7.5 விழுக்காடும் ஆக மொதம் 22.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்த போது இந்த இனங்களைச் சேர்ந்தவர்களிடையே உயர்கல்வி பயின்றவர்கள் இன்னமும் குறைவாகவே உள்ளனர் என்பது தெரிய வந்தது. மத்தியப் பல்கலைக் கழகங்களில் அனுமதிக்கப் பட்டுள்ள 4,887 பணியிடங்களில், தற்போதுள்ள 629 தாழ்த்தப் பட்ட பழங்குடி இன பேராசிரியர்கள் அவர்களின் பிரதிநிதித்து வத்தில் 22.5 விழுக்காட்டை விட மிகக் குறைவாக 12 . 8 விழுக் காடாக மட்டுமே உள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை!

மத்தியப் பல்கலைக்கழகங்களிலும், அரசின் நிதி உதவி பெறும் தன்னிகர் பல்கலைக் கழகங்களிலும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பயன் நிறைந்த வகையில் நடைமுறைப் படுத்த பல்கலைக் கழக மானியக் குழு தவறிவிட்டது என்று பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டும் ஆவணம் தெரிவிக்கிறது.

விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மேலாக பேராசிரியர், ரீடர் பணியிடங்களைக் காணும்போது, இவற்றில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைக் காணலாம். பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இந்த இனங்களைச் சேர்ந்த பேராசிரியர்களோ, ரீடர்களோ எவருமே இல்லை.

19 இல் 16 பழுது!

மொத்தம் உள்ள 19 பல்கலைக் கழகங்களில் 16 பல்கலைக் கழகங்களில் தாழ்த்தப்பட்ட இனப் பேராசிரியர்களும், 17 பல்கலைக் கழகங்களில் பழங்குடியினப் பேராசிரியர்களும் எவருமே இல்லை. இதன் காரணம், அண்மைக் காலம் வரை, இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் பெறுவது விரிவுரையாளர் நிலையில் மட்டுமே அனுமதிக்கப் பட்டு வந்ததும் காரணமாக இருக்கக்கூடும். இட ஒதுக்கீடு பதவி உயர்வுக்கோ, மேல் நிலைப் பணியிடங்களுக்கோ பொருந்தாத தாக இருந்தது. 2006 இல் வெளியிடப்பட்ட பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டும் நெறிமுறைகளில் பேராசிரியர் மற்றும் ரீடர்கள் நிலையிலும் 22 . 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இட ஒதுக்கீடு சரியான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்பதை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்த நிலையிலும், கடந்த சில ஆண்டுகளில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. இந்தப் புள்ளிவிவரங்கள் எனக்கு வியப்பளிக்கவில்லை என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்.கே.காலே கூறுகிறார். இட ஒதுக்கீடு சரியான அளவு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து அவரே கல்விப் பத்திரிகையான யூனிவர்சிடி நியூஸ் இதழில் கேள்வி எழுப்பி யுள்ளார். இது மிகமிக மெதுவான ஒரு நடைமுறையாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அவர், இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்வதில் பல்கலைக் கழக மானியக் குழு ஆர்வம் காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறார்.

மத்தியப் பல்கலைக் கழகங்களுடன் இணைப்புப் பெற்றுள்ள மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் நிலையைக் காணும்போது நிலைமை மேலும் மோசமாக உள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் மாநில அரசு அனுமதித்துள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே பின்பற்றுகின்றன.

53 இல் 50-இன் நிலை

53 மாநில பல்கலைக் கழகங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலான இந்த இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில பல்கலைக்கழகங்களில் இந்த இனங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் கூட இல்லை; பேராசிரியர்கள் ரீடர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இவ்வாறு இத்தகைய இனங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பது கவலை அளிப்பதாக இருப்பதாக கல்வியாளர்கள் ஒப்புக் கொண்டாலும், மத்திய அல்லது தனிப்பட்ட கல்லூரி அளவில் எந்த அதிகாரியும் இதற் காக தண்டனை விதிக்கும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை.

அதிகார மனப்பாங்கு

பல்கலைக்கழக மானியக் குழு இதுபற்றிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிற போதும், நடைமுறைப் படுத்துவதற்கான கால கெடு விதிக் கப்படாதது, சிக்கல் நிறைந்த நியமன நடைமுறைகள், அதிகாரிகளின் அதிகார மனப்பாங்கு, அனைத்திற்கும் மேலாக, மக்களின் மனதில் ஆழப் பதிந்து போன ஜாதிய உணர்வுகள் எந்த விதத் தண்டனையுமின்றி சட்டத்தை மீறிச் செயல்படுவதற்கான பாதைகளை வகுத்துக் கொடுத் துள்ளன.

நொண்டிச் சமாதானங்கள்

இன்றும் கூட, ஒதுங்கி இருக்கும் நகரங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன ஆசிரியர்கள், நியாயமற்ற ஒப்பந்த அடிப்படையிலான நியமன நடைமுறை, திடீரென வேலை நீக்கம் செய்வது, நேர்காணும் குழுவால் காரணமின்றி நிராகரிக்கப் படுவது, வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இத்தகைய தொரு காட்சிக் களத்தில், வழக்கமாகப் பாடும் பல்லவியான, "உரிய தகுதி படைத்தவர்கள் கிடைக்கவில்லை" என்று கூறுவதோ "நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள் தகுதி பெற்றவர்களாக இல்லை" என்று கூறுவதோ சரியானதாகத் தோன்றவில்லை.

-------------------------நன்றி: "தி இந்து" 31.8.2008 - ராஹி கெயிக்வார்ட்

0 comments: